வெள்ளி, 7 செப்டம்பர், 2018

வீசுதலும் விசிறியும்.

விசிறி என்ற சொல்லைச் சிந்திப்போம். 

முதலில் நாமறியத்தக்கது இச்சொல்லில் விகுதி உள்ளதா என்பதே. இதில் விகுதி உள்ளது என்றே முடிவு செய்தல் தகும்.

இதன் வினைச்சொல் விசிறுதல் என்பதாகும்.  காற்று வீசச்செய்யும் ஒரு வீச்சுமட்டையைக் கையில் பிடித்துக்கொண்டு அசைத்து இயக்குதலே விசிறுதல் ஆகும்.

வீசு > விசு > விசிறு > விசிறுதல் என்று சொல் வருகிறது.

இங்கு வீ என்ற நெடில் வி என்று குறிலாகிறது.  று என்னும் வினையாக்க விகுதி  சேர்ந்து விசிறு என்பது அமைகிறது.   று என்பதும் பல சொற்களில் உள்ள வினையாக்க விகுதியே ஆகும்.   அறு, இடறு, உளறு,  கூறு என்று பலவாய்ச் சொற்களில் இது வந்துள்ளது. வீசு என்ற சொல்லும் வி என்று குறில்தொடக்கமாகிறது.  இது சொல்லியல்புகளுடன் பொருந்தியதே ஆகும்.

வினையிலும் பெயரிலும் தொடக்க ஒலி குறுகுதல் உண்டு.  எ-டு:  தோண்டு> தொண்டை.  நாக்கு > நக்கு.  அல்லது நக்கு> நாக்கு எனினுமாம். இவை இருபுறமும் அமைவன.  நா> நாவு > நவிலுதல் என்ற அமைப்பையும் அறிக. இவற்றை உணர்ந்தோர் சிலரே.

வீசு என்பது விரிந்து அசைதல் குறிக்கும் சொல். இதனுடன் உறவுடைய சொற்கள் பல.   விசும்பு என்ற சொல்லும் உறவுடையதே.

விசுவநாதன் என்ற பெயரைக் காண்க. இதில் வரும் விசு என்பது விசும்பு என்பதனுடன் நெருங்கிய சொல்லே.  விசுவம் என்னும் உலகப் பொருட்சொல்லும் விசு என்பதனுடன்      நாம் தொடர்பு
காண்பதே  யாகும். விசுவநாதன் விசும்பில் உள்ளவனாய் உணரப்பட்டவன். ஆகவே விசு > விசுவம் பொருத்தமே.  விசு என்பது இச்சொற்கு அடி. நாவினால் போற்றப்படுவோன் நாதன்.

விர்> விரி >  விசி.
விர் > விரு > விசு.
விர் >  விய் > வியன்  (வியனுலகு).
விர் > விய் > வியா  (வியாபாரம் ).
விர் > விய் > வியை > விசை. ( இயக்கம்).

இவற்றின் மூலம் விசி > விசிறு > விசிறியை அறிந்து மகிழ்க.

எல்லாம் சொல்லவும் அவற்றைப் படிக்கும் நாம் இருவரும் நேரம் உடையோமல்லோம்.

கருத்துகள் இல்லை: