செவ்வாய், 25 செப்டம்பர், 2018

சித்திரம் என்பது சரியான சொல்லன்று

சித்திரம் என்ற சொல் அழகானது. இதைப் பயன்படுத்தி பாரதிதாசனின் கவிதை ஒன்று உலவுகிறது.

சித்திரச் சோலைகளே உமை நன் கு
திருத்த இப்  பாரினிலே --- முன்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே.

இந்தப் பாட்டில் சி என்ற எழுத்திற்கு தி என்பது மோனை.  யாம் புத்தகத்தைப் பார்த்து எழுதவில்லை யாகையால் இதில் மூலத்துடன் வேறுபாடுகள் இருந்தால் திருத்திப் படித்துக்கொள்ளுங்கள். யாம் குறிப்பிடுவது சித்திரம் என்ற சொல்லைத்தான்.

சித்திரம் ஓவியம் என்பனவெல்லாம் ஒப்புமைக் கருத்தில் தோன்றி அமைந்த சொற்கள்.

செத்தல் என்றால் ஒத்திருத்தல்.

செ என்பதே அடிச்சொல். திரம் என்பது விகுதி.  இந்தத்  திரம் விகுதி திறம் என்ற சொல்லினின்று அமைக்கப்பட்டது.  திறம் > திரம்.  சில விகுதிகட்குப் பொருளிருக்கலாம்.  பல விகுதிகள் தம் பொருளிழந்து வெறும் சொல்லிறுதிகளாகவே பயன்படுகின்றன.  சொல்லமைப்பில் அவற்றின் வேலை அடியை மிகுத்து இன்னொரு சொல்லுருவை உண்டாக்குவதுதான். அதனால்தான் அவை விகுதி எனப்பட்டன.  மிகுதி > விகுதி.  சொல்லை மிகுத்து உருவாக்குதல். மகர வருக்கச் சொற்கள் வகர வருக்கங்கள் ஆகும்.  வருக்கம் என்றால் வருதல் தன்மை அல்லது உருவம்.  வரு> வரு+கு+ அம்= வருக்கம்.  வருகின்ற கொடிவழி.

 மி>வி:  இப்படித் திரிந்த இன்னொரு கிளவி: மிஞ்சு > விஞ்சு.

செ + திரம் = செத்திரம்.  இதுபின் சித்திரம் என்று திரிந்தது.  அதன்பின் செத்திரம் என்ற  சொல் பேச்சு வழக்கிலிருந்தும் எழுத்திலிருந்தும் காணாமல் போய்விட்டது.  இப்படித் தொலைந்தவை பல. செத்தல் என்ற சொல் இருப்பதால் இதனை நாம் அறியலாகிறது.

ஆய்வின்படி சித்திரம் என்பது சரியான சொல் அன்று.  செத்திரம் என்றே இருந்திருக்கவேண்டும். இருந்தாலும் சித்திரம் என்றால் பின்னை வடிவம் அழகாகவே அமைந்திருத்தலின் அதனையே ஏற்று வைத்திருப்போம்.

இது ஒத்தல் என்ற சொல்லினின்று செத்தல் என்று அமைந்திருக்கவேண்டும். ஒகரச் சொல் எகரத் தொடக்கமாதலும் உண்டு.  எடுத்துக்காட்டாக எழுப்பு என்ற எகரச் சொல் யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் ஒழுப்பு என்று வழங்குகிறது. கந்தனை ஒழுப்பிவிடு என்பர்.  ஆகவே  ஒத்தல் > எத்தல் > செத்தல் என்பது தெளிவு. அகர வருக்கங்கள் சகர வருக்கங்கள் ஆகும்.  எத்தல் என்பது செத்தல் ஆன கதை அதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். எப்போதும் எழுதுகோலும் கையுமாக இருந்து திரிபுகள் காதில் விழும்போதெல்லாம் உடன் பதிவு செய்துகொள்ளவ்ேண்டும்.  இப்போது தொலைப்பேசிகள் மிக்க வசதியைத் தருவனவாய் உள்ளன.

செத்துப்போ என்ற சொல்லில் பகுதி செ என்பதன்று.  சா என்பதே  ஆகும்,  சா> சாதல்.  சா - செத்தல் அன்று.   செத்து என்ற வினை எச்சம்  சா > சத்து என்பதே. ஏனைத் திராவிட மொழிகளில் சத்து என்று சரியாக எச்சம் வழங்குகிறது.  தமிழில் செத்து என்று திரிவடிவம் கொள்கிறது.  இதைக் கொண்டுபோய்  ஒத்தலாகிய செத்தலுடன் ஒப்ப வைத்திடுதல் தவறு.

ஓவியம் என்ற சொல்லிலும்  ஒ என்பதே பகுதி அல்லது அடி.  ஒ > ஒத்தல்.
ஒ+இயம் = ஓவியம்.  ஓ+ அம் =  ஓவம்.   என்றால் சித்திரம்.  ஓவச் செய்தி என்று மு வரதராசனார் ஒரு நூல் எழுதியுள்ளார்.  அதைப் படித்து ஓவம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.  ஆங்கிலத்தில் ஓவம் என்பது கருமுட்டை; அது வேறு சொல் ஆகும்.தமிழில் ஓவம் என்றால் ஓவியம்.  ஒன்று ஓ+ அம்; இன்னொன்று ஓ+இயம் ( இ+அம்).  ஒத்தல் என்பதில் உள்ள குறில் ஒகரம் ஓ என்று நீண்டதால்  முதனிலை திரிந்த ( நீண்ட) தொழிற்பெயர்.  சுடு> சூடம் என்பது போல.

புலிக்கு ஓவியகாயம் என்பதொரு பெயர். அழகிய புலி அடித்துக் கொன்று கடித்துத் தின்றிடும். காய்ந்தொழியும் காயமே உடைத்தாயினும்  ஓவியமாய் உலவுவது புலி.

சித்திரம் ஓவம் ஓவியம் என்பன ஒப்புமைக் கருத்தினவாகும்.  சித்திரம் என்பதன் தகப்பன் செத்திரம்.  அது இப்போது மட்கிவிட்டது.

ஒப்பு நோக்குக:  செந்தூரம் > சிந்தூரம்.
                                  நெட்டூரம் > நிட்டூரம் > நிஷ்டூரம்.  நெடிது ஊர்ந்துவரும் துயர். எ-இ வகைத் திரிபு.  ஊறு என்பதே  ஊறம்> ஊரம் என்றானது எனினும் ஒப்புக.   ஊறு என்பதும் ஒத்த பொருளினைத் தருவதாம்.

நம் பாட்டன் பாட்டிகள் இல்லாமை போலவே சொற்களும் அவற்றின் பாட்டன் பாட்டிகளை இழந்துவிடுகின்றன.  இருப்பின் பொறுப்பு டன் போற்றுவோம்.

பிழை இருப்பினும் புகினும் பின் திருத்தம்.பிழை என்றால் தட்டச்சுப் பிழை. கருத்தில் பிழைகள் இரா.

அறிக; மகிழ்க.

2 கருத்துகள்:

Asanthan சொன்னது…

உங்கள் பதிவு பாராட்டுக்கு உரியது.... ஆயினும் சிறிதொரு ஐயம். எழுப்பு - ஒழுப்பு என புழக்கத்தில் உள்ளதென கூறினீர்கள்.. எனின் ஒத்தல் எவ்வாறு செத்தலாகும். (பின்னிருந்து முன் திரிபடையுமா) ஆதாவது "ஒ" "எ" என்றாகி பின் "செ" என்றாகுமா? ஐயம் களையவும். நன்றி

SIVAMALA சொன்னது…

உங்கள் கேள்வி நன்று. இடர்பாராமல் கேட்டமைக்கு எம் நன்றி உரித்தாகுக.
மெய்யெழுத்துக்கு இன்னொரு பெயர் ஒற்றெழுத்து. இனியும் ஓரு பெயர்: செத்தெழுத்து.
செத்தல் என்பதில் ச்+எ என நின்று செ என்று ஆனாலும், முன்னிருக்கும் ஒற்றினை, கணக்கில் கொள்ளலாகாது. செத்துப்போனவனை மக்கள் தொகைக்கணக்கில் ஏற்காமை போலுமே இது.உயிருக்கே முன்னுரிமை. எனினும் மெய்யெழுத்துக்கு இடம் அறவே இல்லை என்பது இதன் பொருளன்று. உயிர் ஒலிக்குமிடத்து மெய் சென்று கலந்து மாற்றத்திற்கு உதவுகிறது, ஒலியைக் கலந்து வேறாக்குகிறது.

ஒன்று இன்னொன்றுடன் வைக்கப்படும் பொழுதுதான் ஒத்தல் உணரப்படும். ஒன்று குறிக்கும் அடிச்சொல்லாகிய "ஓ" என்பதினின்று ஒத்தல் என்ற் சொல் அமைந்த தென்றாலும் அதே இடத்தை அடைந்தபோதுதான் ஒப்புமை இயலும். ஆகவே அடைதல், சேர்தல் என்பன இதிலுண்மை விளக்காமலே புரிந்துகொள்ளற்குரியதாகும். எத்துதல் என்பதும் அடைதற் கருத்தே. எத்து > எத்துதல். காலால் எத்து என்பர். கால் இன்னொன்றில் சென்று சேர்தல். மலையாளமொழியில் எத்து என்பது பொதுவாக அடைதல் என்று பொருள்படும். ஒத்தல், ஒத்து ( வினைச்சொல்), எத்துதல் என்பவற்றின் தொடர்புகளைச் சிந்திக்கவேண்டும். இனி ஒட்டுதல், எட்டுதல் என்பவும் சென்றுசேர்வுக் கருத்தே ஆகும்.

இவை நுண்பொருள் வேறுபாடுடையன எனினும் ஒரு கருத்துப்பொதுமை உடைய திரிபுகள்.

அமண் > சமண் என்ற திரிபில் அகரம் சகரமாயிற்று. எட்டி ( எட்டிப்பூ சூடியோன்) என்பது செட்டி என்று திரிந்தது. எ - செ திரிபு. ஏண் > சேண் என்பதும் அது. ஏமம் > சேமம் > க்ஷேமம் என்பதும் காண்க. இது பல இடுகைகளில் விரித்து உரைக்கப்பட்டுள்ளது.
மற்றும் அடுதல் (சமைத்தல்) : அடு> சடு > சட்டி ( சமைக்கும் பாத்திரம்) என்பதுமாம்.
அமைத்தல் சமைத்தல்!! அவை > சவை. மேலாடையின்றிச் சவைபுகுந்தால் மேதினியில் நூலாயிரம் கற்றாலு மெண்ணார் ( பாட்டு). ஏடி என்றால் தோழி. திரிந்து சேடி ஆயிற்று. ஏதம் சேதம் தொடர்புடையவை.
ஏறு என்பதற்கு மிகுதி என்பதும் ஒரு பொருள். சேறு என்பது மிகுதி நீர உள்ள மண். மிகுதிக்கருத்து. இவ்வாறு சொல்லிக்கொண்டு போனால் பல சொற்களின் தொடர்புறவு
ஒளிபெறும். இன்னும் இடுகைகளைப் படித்து எழுதுங்கள். நன்றி உரித்தாகுக.
ஐயம் இருப்பின் கேளுங்கள்.