திங்கள், 10 செப்டம்பர், 2018

தூக்கம் கலைந்து வந்த தூக்கமே.



தெய்வத்  தைத்தேடிக் கண்ட தேனுலா---- வான்
தெரியக் காட்டிய தேகுளிர் வான்நிலா
வையத் தழகெலாம் காட்டும் வாரிகள் ---- எல்லும்
வானில் எழுமுன் னர்ஒளி சேரிருள்.

பச்சைப் பசேலென்  றேமரம் தோகைபோல் --- விரிந்து
பார்க்க விழிகட் குள்அழ கேகுமே.
நிச்ச லும்இக் கவின்தனைக் காண்பவர் --- இறை
நேர்ந்த அருள்தனை நன்கு பூண்பவர்.

வெள்ளி உருக்கித் தெளித்த போர்வையோ --- இங்கு
விரித்த ஏரி கொண்டு காட்டும் நீரினில்;
துள்ளி எழுந்து விழும்பெரு மீன்`களைக் ----- கண்டு
தூக்கம் கலைந்தது    பின்வந்த தூக்கமே.

{ ஒரு புகைப்படத்துக்கு ஒரு செய்தி விளக்கமாக எழுத முற்பட்டுப்
பின் ஓர் இசைப்பாடலாக  வெளிப்பட்டு, இப்போது இதை ஒரு கவிதை 
போல் மாற்றியமைத்து இங்கு வெளியிடுகிறோம். இசைப்பாடலாக எம் 
சொந்த மெட்டில் அமைந்தது.  இப்போது வேறுபட்டுள்ளது. } 

தேனுலா :  இனிய உலவுதல்.
வாரிகள்:  ஆறுகள்.
எல்லும் :  சூரியனும்.
ஒளிசேர் இருள்:  உதய  நேரத்தின் முன்.
நிச்சலும் - நித்தமும்; நாள்தோறும்
கவின்:  அழகு
பூண்பவர்:  பெற்றுக்கொண்டவர்.
இறை: கடவுள்
நேர்ந்த : கொடுத்த.
 பின் வந்ததூக்கமே:  பின் வந்தது ஊக்கமே.

கருத்துகள் இல்லை: