சனி, 1 செப்டம்பர், 2018

கொளுத்துதல்,

கொள் என்பது பலபொருளொரு சொல்.  கொள் என்றொரு கூலம் (  தானியம் ) உண்டு, அதைக் குறிப்பிடவில்லை. இந்தக் கொள் என்பது குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படுவதாம்.

கொள் என்று ஒரு துணைவினை உள்ளது. எடுத்துக்கொள் என்ற வினையில் தானே கொள்ளுதலை அது குறித்தது.

கொள் என்பது தல் என்ற விகுதிபெறின் கொள்தல் >  கொள்ளுதல் என்றாகும். முதனிலை திரிந்த தொழிற்பெயராய் கொள்தல் > கோடல் என்றுமாகும்.

கொளுத்து என்பது கொள் என்பதன் பிறவினை.  கொள்ளும்படி செய்தல் என்பது பொருள். கதவில் உள்ள கொண்டி  கொளுத்து என்றும் சொல்வதுண்டு. கதவைப் பிறர் திறக்காமல் அடைக்கும் விதமாகக் கதவில் கொளுத்து இடப்படும். ஒரு நெட்டாணி அதற்குரிய வளையத்தில் ஏற்றப்பட்டுக்  கதவு திறக்க இயலாமல் அடைப்பது  கொளுத்திடுவது என்பர்.

கொளுத்து என்பது தீயேற்றப்படுவதையும் குறிக்கும்.  மடமையைக் கொளுத்து என்று பாரதி பாடியதில்  தீயால் அழிக்கப்படுவதைக் குறித்தது.

இனி  ஓர் இடுகையில் அறிவு கொளுத்துதல் என்று எழுதியிருந்தோம். இங்கு அறிவுபெறுமாறு செய்தல் என்று பொருள்படும்.

ஆனால் பயிர் கொளுத்துதல் என்று சொன்னால் பயிர் நட்டு வளரச் செய்வது என்று பொருள். பயிருக்குத் தீவைப்பது என்று பொருளன்று என்பதை மனத்திலிருத்தவும்.

கொள் > கொள்ளி. இது நெருப்பேற்றிய கோல் குச்சி முதலியவற்றைக் குறிப்பது.  கொள்ளி வைத்தல் : பிணத்துக்குத் தீயிடுதல்.   கொள்ளிப்பேய் : வாயில் நெருப்புக் கக்குவதாகச் சொல்லப்படும் பேய்.

கொள் என்பதில் பிறந்த சொற்கள் பல. சில அறிந்தோம். நன்றி.

கருத்துகள் இல்லை: