வெள்ளி, 11 ஜனவரி, 2019

இராவுத்தர் பட்டப்பெயர்.

தமிழகத்தில் பல  சமயத்தினரும் வாழ்கின்றனர்.  இவர்களிலும் முஸ்லீம்களும் உளரென்பதும் அவர்களில் பலருக்கும்  பட்டப்பெயர்கள் உள்ளன வென்பதும் நீங்கள் அறிந்ததனவே  ஆகும்.  இப்பெயர்களில் இராவுத்தர் என்பதுமொன்று.

இவர்கள் தமிழகத்துட் புகுங்காலை குதிரைகளில் வந்தனரென்று இவர்களில் பலரும் கூறியபடியால் இராவுத்தர் என்ற சொல்லுக்குக் குதிரைவீரன் என்ற பொருளை அகரவரிசை அறிஞர்கள் தரலாயினர்.

ஆனால் இச்சொல்லை ஆய்ந்த வேறு சில அறிஞர்கள் இராவில் வந்து யுத்தம் செய்தபடியினால் இவர்கள் இராயுத்தர் என்று குறிக்கப்பெற்றனர் என்று கூறினர்.  பகலிலும் போரிட்டிருக்கலாம் எனினும் இரவு வேளையில் வந்து போரிடுவதை ஓர் உத்தியாகக் கொண்டிருந்தனர் என்று இவர்கள் கருதினர்; பெரும்பான்மை கருதிய வழக்காகவும்  இது இருக்கலாம்.

இவற்றுள் எது உண்மை ஆயினும்,  நாம் இங்குக் கருதியது  யாதெனின் முருகப் பெருமான்மேல் திருப்புகழ் பாடிய நம் அருணகிரிநாதர் முருகனையே இராவுத்தர் என்றொரு பாட்டினில் வைத்துப் பாடுகிறார்  என்பதுதான்.  இதை யாம் முன் எழுதியதுண்டு:  அந்த இடுகை இங்கு கிட்டவில்லை.

இனி இராவுத்தர் என்ற சொல்லை ஒரு முருகப்பெருமானின் பெயராய்க் கொண்டு இங்கு அதனை நுணுகி ஆராய்வோம்.

இரா  =  இல்லாத.   முருகன்போலும் இறைவன் கண்முன் நிற்பதில்லை.  ஆகவே அவர் கண்முன் இராத ( இல்லாத) வர்.

உது > உத்து:    இல்லாவிடினும் அவர் பற்றனின் முன்னிலையை உடையவர்:  அதாவது முன்னிருப்பவர்.

து என்பது உடைமைப் பொருளில் வருவதை:

விழுப்பத்து :   விழுப்பத்தை உடையது.
அறத்து  :    அறத்தினுடைய
புறத்து :   வெளியிடத்தினது.

என்பவற்றுள் காண்க.

எனவே துவ்விகுதியின் பொருளை இவற்றிலிருந்து கண்டுகொள்ளலாம்.

உ என்பது முன் என்று பொருள் தருவதனால் உத்து என்பது  முன்னது என்று பொருள் படும்.

அர் என்பது பலர்பால் விகுதி.  இங்கு பற்றும் பணிவும் கொண்டு வரும் விகுதி.

இல்லாமலே முன்னிருப்பவர் முருகன் (அல்லது கடவுள்.)  முன் இல்லை என்றால் இல்லை என்று பொருள்படாது.  அவர் இல்லாமலே (கண்ணுக்குப்  புலப்படாமலே)  இருக்கின்றார்.

படைத்தல், காத்தல், அழித்தல்,  மறைத்தல்,  அருளல் என்பன அவர்தம் பண்புகளாகக் கூறப்படும்.

இவற்றுள் மறைத்தல் என்பது இங்கு முன்மொழிவு   ( பிரஸ்தாபம் ) பெறுகிறது.

எனவே அருணகிரியாரின் பாடலில் இப்பண்புகளில் ஒன்றைச் சுட்டுகிறது இப்பெயர் என்று அறிக.  இது நம் முஸ்லீம் நண்பர்களைக் குறிக்கவில்லை.

இராவுத்தர் என்ற இச்சொல் வகர உடம்படுமெய் பெற்றது.


வியாழன், 10 ஜனவரி, 2019

சிங்காரமும் சிருங்காரமும்.

சிருங்காரம் என்ற சொல்லை யாம் முன் விளக்கியிருந்தோம்.

சிருங்காரம் என்ற சொல்லும் இடைக்குறைந்து  "சிங்காரம்"  என்று வரும்.  தொடர்களில் இது:   " சிங்காரச் சென்னை"  " சிங்காரப் புன்னகை"  என வரும்.  சிங்காரம் என்பதும் ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பண்டை மக்கள் எண்ணினர்.   "சிங்கார லகரி " என்ற தொடர் காண்க.   லகரி என்பது முன்னர் விளக்கப்பட்ட சொல்லே:

https://sivamaalaa.blogspot.com/2019/01/blog-post_8.html


ஒரு பொருள் பேரளவில் இருந்தால் ஒரு குறிப்பிட்ட தொலைவிலிருந்து நோக்கினாலே அது முழுமையும் பார்வைக்குள் அடங்கும்.  அடங்கிய ஞான்று அதன் முழு அழகும் வெளிப்பட்டு மகிழ்வுறுத்தும். அதாவது எக்காட்சியும் ஒரு திரையடக்கத் தன்மை உடைத்தாய் இருத்தல் வேண்டும்.

ஒரு சாமிசிலை மிகப்பெரிதாய்  வடிக்கப்படலாம். கண்ணுக்குத் திரையடக்கமான மாதிரியானால் அழகு வெளிப்பட்டு சிங்காரமாகிவிடும். இதுவே இதன் சொல்லமைப்புப் பொருள் என்றாலும் பிற்காலத்தில் இது தன் சிறப்புப்பொருளை இழந்து  பொதுப்பொருள் எய்தி  " அழகு"  என்ற  பொருள்தெரிவிக்கும் சொல்லாகிவிட்டது என்பதுணர்க.

சிறுகுதல் :   குறைதல். சுருங்குதல்.

சிறுகிவிட்ட பொருள் பெரிய பொருளின் மாதிரியே.   மா = அளவு.  திரி : திரிக்கப்பட்டது, செய்யப்பட்டது.  திரியென்பது முதனிலைத் தொழிற்பெயர்.

மா என்பது பல பொருளுடைய சொல்.  அது மாவு என்றும் பொருள்படும்.

சிறுகு + ஆர் + அம் >  சிறுங்காரம்

இதுபோல் அமையும் சொற்களில் ஒரு ஙகர ஒற்றுத் தோன்றும்.  எடுத்துக்காட்டுகள்:

வில >  விலகு > விலக்கு > விலங்கு.  (வில + கு )

மனிதரிலிருந்து விலக்கிய அல்லது வேறான உயிர்வகை.  பிற அணி : பிற வகை:  பிற அணி > பிறாணி > பிராணி என்பதும்  அதுவாகும்.

பிறாணியின் உள்ளிருப்பது பிராணன்.  அது தம்மிலும் உள்ள துணர்ந்தக்கால் பொதுப்பொருளில் விரிந்தது.

அன்றிப் பிறந்தன அனைத்தும் உடையது பிற > பிராணன் எனினும்  அஃதே. இவை விளக்கவேற்றுமைகள் அன்றி அடிப்படை வேற்றுமை அல்ல.

பிற (பிறத்தல் ) > பிற + அணன் =  பிறாணன் > பிராணன்

அணவுதல் :  அணம்  -  அணன்

பிறத்தலை அணவி நிற்பதாகிய உயிர் என்று விரிக்க.

பிற என்பதனுடன் ஆகாரத் தொழிற்பெயர் விகுதி சேர்ந்தால் பிறா என்று வந்து பின் அணன் என்பதனுடன் இணையப் பிறாணன் ஆகி, பின்னர் றகரம் ரகரமாகிப் பிராணன் என்றாகும்.

ஆகார விகுதி பல சொற்களில் வரும்.

நில் > நிலா
பல > பலா  பல சுளைகளை உடைய பழம்.
விழை > விழா

அழ =  அல.
அழ > அல  > அலங்கு + ஆர் + அம் = அலங்காரம்.

பழ என்பது பல என்றும் வரும்.  அதுபோலவே அழ என்பது அல ஆனது,

அலங்காரம் என்பது போலவே சிறுங்காரம் என்பதிலும் ஙகர ஒற்று தோன்றியது.

இ+ கு : இங்கு;   அ+ கு = அங்கு;  எ+ கு =  எங்கு.      -க்கு என்று வலிக்காமல்   - ங்கு என்று மெலித்தனவால் உணர்க.

சிறுங்காரம் :  இதுபின் சிருங்காரம் என்று மாற்றப்பட்டது.   று > ரு.

மொழிவரலாற்றில்  ரகரம் முந்தியது.   றகரம் பிற்பட்டதாகும்.  றகரம் என்பது இரு ரகரங்கள் கொண்ட ஓர் எழுத்து.. நம் முன்னோர் ரகரத்தையும் றகரத்தையும் ஒலிப்பதில் வேறுபாடு தெரிவிக்கும் திறமுடையவர்களாய் இருந்தனர் என்று தெரிகிறது. இன்று இது எழுத்தளவிலான வேறுபாடே ஆகும். ஒலிப்பதில் யாரும் வேறுபாடு காட்டுவதாகத் தெரியவில்லை. திரம் என்று எழுதினாலும் திறம் என்று எழுதினாலும் வாசிப்போர் 1 ஒரே மாதிரியாகவே ஒலிக்கின்றனர்.  அறம் என்பதை ஓரிருவர் அழுத்தி ஒலித்து  அது வல்லின றகரம் என்று தெரிவிக்க முயன்றதுண்டு.  தமிழைப் படிப்பதே ஒரு சுமையாகி, அது வீட்டுமொழியாக  ஆகிவிட்ட இக்காலத்தில் இதை யாரும் பொருட்படுத்தவில்லை.  ரகர றகர வேறுபாடின்றி வழங்கும் பல தமிழ்ச்சொற்கள் பல உள்ளன.  ஒருகாலத்தில் இவை ஒருதன்மையவாய் இருந்தமையையே இது நமக்குத் தெரிவிக்கின்றது.  இரு ரகரங்களை இணைத்து எழுத்தமைத்து  வேறுபடுத்தற்குக் கீழே ஒரு கோடிழுத்துள்ளனர் (ற)  என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

புணர்ச்சி என்பது சிற்றின்பம் எனவும் குறிக்கப்படுவதால்  சிறு என்பதிலிருந்து அமைந்த சிருங்காரமென்பதும் புணர்ச்சி குறிக்கும்.  அல்லால் இன்பச்சுவை, அழகு  அன்பு , சிறிதாகிய பொட்டு எனவும் பொருள்தரும்.

சிராய் என்பது சிறு விறகுத் துண்டு.   இதுவும்  சிறு என்பதனடிப் பிறந்ததே எனினும் றகரம் ரகரமாய் மாறியிருத்தல் காண்க.  சிறு >  சிராந்தி  (  இளைத்தல் )  சிறிதாதல்:   சிறுமைக் கருத்தே  உணர்க. சிராய்தல் :  சிறுகாயம் உண்டாகுதல்.

சிறு என்பதன் முன் அடிச்சொல் சில் என்பதே.  சில் >  சிறு.  எனவே இதைச் சிறு என்பதிலிருந்து காட்டாமல் சில் > சிலுங்காரம் > சிருங்காரம் என்று காட்டின் லகர ரகரத் திரிபாக இதனை உணர்விக்குமாறு காண்க.  அதுவுமிதே.  கல்லினின்று  பெயர்ந்த அல்லது தெரித்த சிறு துண்டும் சில்லு எனப்படும்.

ஓர் இலை மரத்திலிருந்து விழுந்தது எனினும் கொம்பிலிருந்து விழுந்தது எனினும் கிளையிலிருந்து விழுந்தது எனினும்  காம்பிலிருந்து விழுந்தது எனினும் இணுக்கினின்று விழுந்தது எனினும் அதே.

அறிதலே மகிழ்தல். 



அடிக்குறிப்புகள்:

வாய் > வாயித்தல் (  வாய்கொண்டு  ஒலியினால் வெளிக்கொணர்தல் ).  யகர சகரம் போலியால்  வாசித்தல் ஆயிற்று.  இப்படி இன்னொரு சொல்:  நேயம் . > நேசம்.   பாய்> பாயம் > பாசம்.  உணர்வு ஒருவர்பாலிருந்து இன்னொருவர்பால் பாய்வது.  பாயம் வழக்கிறந்தது.  பாய்ச்சல் ( எழுச்சி என்றுமாம்).  உணர்வெழுகை. பசு(மை)+ அம் = பாசம், முதனிலை நீட்சி  எனினுமாம். இருபிறப்பி.  பாய  = பரவ.  ஆதலின் உணர்வின் பரவுதல் எனினுமாம்.  பாய்> பாய்ம்பு > பாம்பு:  இதில் யகர ஒற்று களைவுண்டது.  பாய்தல் நகர்தலாம் அன்றித் தாவுதலெனினும் ஒப்பதே. இவை வெவ்வேறு மாதிரி அசைவுகள்.



இளமை  சிறுமை  அழகு என்பதை வலியுறுத்தும் ஒரு பாட்டு.  எழுதிய கவி யாரென்று தெரியவில்லை: இளமையில்  உருவிற் சிறிதாய் இருப்பதும் ஒரு காரணமாகும்.பொருள்களும் சிறுமையில் அழகு தருபவை.

குட்டியாய் இருக்கையிலே --- கழுதை
குதிரையைக் காட்டிலும் எட்டுமடங்கு' --- ஏழு
எட்டுமாதம் ஆனபின்னே ---  முழங்கால்
முட்டுவிழுந்து மோசமாக விளங்கும்.

பாட்டில் பொருள் தொடர்பு அற்ற வரிகள் விடப்பட்டன ,


திருத்தம் பின்.













செவ்வாய், 8 ஜனவரி, 2019

பூசையின்போது கவனம்.



 ( பூசையில் திருப்புகழ் பாடும்போது
சிலர் சொந்தக் கதைகள் பேசிக்கொண்டிருந்தனர் ).

காணொளியைப் பதிவேற்ற இயலவில்லை.





பத்திசெய்து பரமன்புகழ் பாடுகின்ற  பேர்முன்
பலப்பலவும் பலத்தகுர லால்பேச  லாமோ?

புத்தியுடன்  புடையமர்ந்து  புன்மைஎண  மின்றிப்
பூசைதனைக் கவனமுடன் போற்றுமனப் பான்மை

எத்திசையில் வாழ்வோரும் ஏய்ந்திருந்து செய்தல்
ஏத்துபவர் யார்க்கெனினும் இயல்வதொரு கடனே

மத்தெனிலே பானையதன் மத்தியிலே இட்டு
மகளிர்கடை வார்வெளியில் மாறுவதும் இலதே.  


புடை:  பக்கத்தில்
புன்மை :  தாழ்ந்தவை
எணம்:   எண்ணம்'
ஏய்ந்து :  பொருந்தி'
ஏத்துபவர்:  சாமி கும்பிடுவோர்
இயல்வது:  முடிந்தது
மத்து:  கடைகட்டை
மத்தி  :   நடு

இலதே:  இல்லையே.





இந்தக் காணொளி திருவண்ணாமலைக் கோவிலுள் எடுக்கப்பட்டது. ஆனால் ஓடவில்லை; மாறாகப் படமாக மாறிவிட்டது,



போதையும் லாகிரியும்

போதை தரும் தேறல்களை இலாகிரி வஸ்து (பொருள்) என்பர்.  வஸ்து என்பது விளக்கப்பட்டுள்ளது.

https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_55.html

இதற்கு முன்னும் இதை விளக்கியதுண்டு.   அந்த இடுகைகள் இங்கு இல.

சுருங்கக் கூறின்,  வைத்திருப்பது வஸ்து.   வைத்து > வஸ்து.  வைத்துக்கொள்ளாதது குப்பை,  இங்கு வைத்துக்கொள்ளாதது எனின் வேண்டாதது.

இலாகிரிப் பொருளின் வேலை அல்லது பயன்பாடு என்ன?   மனிதனின் கடுமையான நிலையையும் போக்கையும் மாற்றி இலகுவாக இருக்கச்செய்வது.  இங்கு இலகு எனின் சற்று நெகிழ்வான நிலை.

இலகு + இரு + இ=   இலகிரி.  இதில் இரு என்பதிலுள்ள உகரம் கெட்டு இகரமேறி  இரி ஆனது.   இலக்கணத்தின் பொருட்டு இவ்வாறு கூறினும்  இரு என்பதும் ஏனைத் திராவிட மொழிகளில் இரி என்று திரிதலை உடையதே ஆகும்.   ஆகவே இலக்கண விளக்கங்கள் இல்லாமலே இரி என்பதை இரு என்பதின் மறுவடிவமாக ஏற்றுக்கொள்ளலாம்.

இலகிரி >  இலாகிரி >  லாகிரி.

லகரத்தின் முன்னுள்ள உயிரெழுத்து மறைதல் சொன்னூலில் இயல்பு ஆகும்.

உலகம் >  லோகம்   இங்கு உயிர் மறைவுடன் லகரம் லோகாரமாயிற்று.
இலக்குவன் >  லக்குமணன்.  ( இலக்கு அல்லது கோடு போட்டவன்;  ஆதலின் காரணப்பெயர்.

https://sivamaalaa.blogspot.com/2018/10/blog-post_14.html

லகர ரகரப் போலியும் உளது.  லகரம் போலவே ரகரமும் இவ்வாறு தன்முன் நின்ற உயிரை இழக்கும்.


எ-டு:   அரங்கன்  >   ரங்கன் 
              அரத்தம் >  ரத்தம் >(  இரத்தம். )

அர் எனின் சிவப்பு.  அடிச்சொல்.

இலாகிரி கொண்டேன்   =  மயக்கம் கொண்டேன்.

இலகு   என்பது    இளகு என்பதன் போலியே.

இந்த மயக்கத் தேறல்களைக் கண்டுபிடித்த காலத்தில் அவற்றைக் குடித்து மயங்குவது வியப்பாகவே மக்களுக்குத் தென்பட்டது.  பிற்காலத்து இவ்வியப்பு ஒழிந்து  குடிப்போன் மேலான நிலையை அடைகிறான் என்று எண்ணப்பட்டது.  இந்த வியப்பு, மேன்மை என்ற பொருளெல்லாம் அடங்கியது  ஐ என்ற ஓரெழுத்துச் சொல்.  குடித்தபோது " ஐ" நிலை அடைவதால் போது + ஐ = போதை ஆகி, அச்சொல் அமைந்தது அறிக.

பிழைத்திருத்தம்  பின்.

பொழுது > போது > போதை.

குடித்த மாத்திரத்தில் ஐ தருவது எனினும் ஆம்.

மயங்குவது என்பது  ம~து என்று சுருங்கிற்று:   மது.

அறிந்து மகிழ்க.


       

திங்கள், 7 ஜனவரி, 2019

தூது

தூதன் என்ற சொல்லைக்  கவனிப்போம்.

தூ என்பது ஓரெழுத்துச் சொல்.

தூ என்றால்:

சீழ்.
பகை
பற்றுக்கோடு. SUPPORT
சிறகு
வெண்மை "தூவெண் மதி சூடி" (சைவத் திருமுறை)
சுத்தம். ( உத்தம் > சுத்தம்: தூய்மை முதன்மை என்று பண்டையர் கருதினர்).
தசை ( தசை> சதை. ச>த)
வலிமை.

இத்தனை பொருள்களும் உள்ள சொல்தான் இந்த ஓரெழுத்துச் சொல்.

தூதனாய் இருப்போன் மன்னன்பால் பற்றன்பு ( விசுவாசம்)   உடையவனாய் இருத்தல் முதன்மையாகும். ஐந்தாம்படைச்செயல்பாடுகள் உடையவன் தூதன் ஆதல் இயலாது.ஆகவே, தூய்மை குறிக்கும் தூ என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து   தூதன் என்ற சொல் பிறந்தது.  முன்செல்லுதலும் தூய்மையும் ஆகிய இரு கருத்துகளையும் அடக்கிய சொல்லாக இது முன்னைத் தமிழில் உருத்து எழுந்துள்ளது.   உருத்து =  தோன்றி.  இஃது ஓர் அரிய நற்சொல்.


மேலும் தூது செல்பவன் அரசுக்கு என்றும்பற்றுக்கோடு தருவோனாக , உடையவனாக செயல்படவேண்டும்  ஒற்றன் என்பவன் ஒன்றியிருந்து இரகசியங்களை    அறிந்துவருபவன்.

ஒன்று(தல்) > ஒன்று > ஒற்று (வலித்தல்) > ஒற்றன்.

தூதன், தூது : இத்தமிழ்ச்சொல் பலமொழிகளையும்
அளாவி நிற்பது பெருமைக்குரித்தேயாம்.

தூ ( அடிச்சொல்)

தூது ( து விகுதி) 
இவ்விகுதி பெற்ற பிற சொற்கள்
: மாது, கைது. விழுது தோது  வாது  சூது.
என்பன  காண்க)

தூது + அன்.

இது இருவகையாகவும் புணரும் சொல்.  தூதுவன் என்பதில் வகர உடம்படு மெய் வந்தது.   தூதன் என்பதில் துகரத்தில் நின்ற உகரம் கெட்டு , தூத்+ அன் என்ற இடைத்தோற்றம் அடைந்து விகுதி சேரத் தூதன் என்றானது.

பெரும்பாலும் ஆடவரே இத்தொழிலில் ஈடுபட்டமையால் பெண்பாற் சொல் வழக்கில் இல்லை.


தூதுவை, தூதினி எனலாம்!

தூ என்ற சொல்லின் மூலச்சொல் ஊ என்பது.  இது அ, இ. உ என்ற
முச்சுட்டுக்களில் ஒன்றான  உ என்பதன் நெடில் வடிவம்.  உ என்றால் முன்னிருப்பது, முன்செல்வது என்ற இவைபோலும் பல
முன்னிகழ்வுகளைக் குறிக்கும். தூதன் என்பவன் முன் செல்பவன்.
அரசன் ஒரு நாட்டிடம் தொடர்பு கொள்ள நினைக்கையில்
தூதனையே முன்  அனுப்புவான்.  எனவே தூது என்ற சொல்
முறையாக அமைந்துள்ளது.  ஒரு காதலி ஒரு தோழியைத் தூது
அனுப்புகிறாள்.  அதாவது உ > ஊ :  முன் சென்று அறிந்துவர
அனுப்புகிறாள் என்று பொருள்.

ஊ என்ற நெடிற்சுட்டில் தோன்றி முன்செலவைக் குறித்து, தூய்மை பற்றுக்கோடு ஆகிய நற்குண நற்செயல்களையும் குறித்து,
முன்னணியில் கருதற்குரிய இனிய அமைப்பை இது
வெளிப்படுத்துவதை பகுத்தறிந்துகொள்க.

ஒற்றன் என்பவன் ஒன்றி இருந்து உண்மை அறிந்து வந்து சொல்பவன். தூதன் ஒற்றன் என்ற இவ்விரண்டு சொற்களையும் ஒருபொருளன என்று எழுதுவோர் / பேசுவோர் கருதினும் இவற்றின் அமைப்புப் பொருள் வேறு என்பதுணர்க.  ஒற்றன் ஒன்றி இருந்து யாரையும் பார்க்காமலும் பேசாமலும்  ( அதாவது பேச்சுவார்த்தைகள் நடத்தாமலே ) திரும்பவந்து   கண்ட உண்மை சொல்பவன்.  ஆகவே அம்பாசடர் என்ற ஆங்கிலச் சொல்லை ஒற்றர் என்று மொழிபெயர்த்தல் பொருத்தமன்று.

தூதன் என்ற சொல்லும் பல மொழிகளில் பரவியுள்ளது.   பண்டைத் தமிழரசர் சீனா,  உரோமாபுரி வரை தம் தூதர்களை அனுப்பியுள்ளனர்.  ஆகவே பரவியதில் வியப்பு ஒன்றுமில்லை.  தமிழரின் உலகு அவாவிய   அரசியல் நட்புறவையே இது காட்டுகிறது.  நாம் பெருமிதம் கொள்வதற்குரிய சொல்.

ஊ ( முற்செலவு என்பது இதன் பொருள்களில் ஒன்று).
ஊ > ஊது > தூது > தூதன்.  தூதுவன்.

முன் சொன்னபடி,   தூது என்பதில் து  என்பது விகுதி.

இதுபோல் து விகுதி பெற்றவை   இன்னும் சில:  கை > கைது;  பழ > பழுது;  விழு > விழுது. மரு > மருந்து;   விரு > விருந்து. கழுத்து.

இது வினையிலும் பிறவகைச் சொற்களிலும் வரும்.

டுத்தா என்ற மலாய்ச் சொல் தூதர் என்பதுதான்.  (ஜாலான் டுத்தா).

அறிந்து இன்புறுவீர்.

திருத்தம் பின்.  உலாவியில் சிறிய கோளாறு உள்ளது.  பின் சரிசெய்யப்படும்.












ஞாயிறு, 6 ஜனவரி, 2019

குரங்கு விலங்குச் சொற்களும் பிறசொற்களும்( திரிபுகள்.)

குரங்கு என்ற சொல்லைப் பற்றி இன்று உரையாடுவோம். பிறவும் அறிவோம்.

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது டார்வின் என்னும் அறிஞரின் ஆய்வு முடிவு. பல்வேறு சமய நூல்களில்  எவையும் இம்முடிபினை ஒத்துக்கொள்ளவில்லை.  எனினும் அஃது அறிவியல்  தெரிவியற் கருத்தாகத் தொடர்கிறது.  தெரிவியல் எனின் இன்னும் மெய்ப்பிக்கப்படாத முடிபு.  மெய்ப்பிக்கப் பட்டுவிடுமாயின் அது புரிவியல் எனப்படும்.

குரங்கு என்பது   ஓர் ஒப்பொலிச் சொல் என்று சொன்னூல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.   குரங்கு குர் என்ற ஒலியை ஏற்படுத்துவது.  இந்த "குர்" என்ற ஒலியை ஒத்தபடி,   சொல்லமைந்துள்ள படியினால் அது ஒப்பொலிச் சொல்.

வேறு ஒப்பொலிச் சொற்கள் சில:

மா    -  மாடு.
காழ்காழ்  -  கழுதை.
கொக்கொக்  -   கோழி
கா  கா  -    காக்கை  காகம்

குரங்கு என்ற சொல்  குர் + அங்கு என்று பிரிக்க  அங்கு என்ற இறுதி பெற்றிருப்பதைக் காணலாம்.    அங்கு என்பதை  அங்கு என்னும் இடச்சுட்டு என்பதினும்   அம்  - இடைநிலை,  கு  - விகுதி என்பதே ஏய்வான கருத்துமுடிபு ஆகும்.  ஏய்தல் - பொருந்துதல்.  (  "ஏய உணர்விக்கும் என்னம்மை"  என்ற பாட்டுச் சொற்றொடரை நினைத்துக்கொள்க.  )

மந்தி என்ற இன்னொரு சொல்- பெரிய குரங்கு வகை.  மனிதன்போலப் பெரிதாக இருப்பதனால்  அதற்கு இடப்பட்ட பெயர் :  மன் என்ற அடிச்சொல்லைக் கொண்டே அமைந்துள்ளது.    மன் + தி :  மந்தி.   மன் என்ற அடிச்சொல்லே  மனிதன் என்பதிலும் உள்ளது.  மன்+ இது + அன்.  இது தகரச் சகரப் போலியினால்  மனுசன் என்று பேச்சில் வரும்.   மனிதன் >  மனுசன்.  இது மனுஷன்,  மனுஷ்ய என்று மெருகு பெறும்.  மலாய் மொழியில் மனுசியா என்று திரியும்.

மந்தி என்பது புணரியல் முறையில் மன்றி என்று வராமல் மன்-தி என்றே ஒலித்து மந்தி என்று எழுதப்பெறும்.   முந்தி  பிந்தி என்ற சொற்களில் போல இச்சொல்லிலும் அமையும்.

அன்று என்பது முடிந்த நாள் என்று பொருள்படும்.   அன்றுதல் என்பது முடிதல் என்னும் இதன் வினைச்சொல்.   அன்று என்பதிலிருந்தே  அந்து என்று துணிகட்கு முடிவு கட்டும் ஒரு சிறு பூச்சியும் குறிக்கப்பெறும்.  அதற்குப் போடும் ஓர் மருந்துருண்டை " அந்துருண்டை"  எனப்படும்.   ஒரு பகலின் முடிவு  அந்தி எனப்படும்.     அன்+து =  அன்று.   சுட்டடிச் சொல்.   அன்+தி = அந்தி.  பகலின் முடிதல்.  முந்தி என்பது முன்றி என்று அமையாததுபோலவே அன் தி என்பதும் அன்றி என்று அமைந்திலது.

அன்றை -  அற்றை.  இன்றை - இற்றை என்ற வடிவங்களும் நீங்கள் அறிந்தவையே.

அந்தி என்பது பகலின் இறுதி ஆகும்.  அப்போது   இருளும் ஒளியும் மயங்கும்.  மயங்குதலாவது கலத்தல்.

அந்தி மயங்குதடி  ஆசை பெருகுதடி
கந்தன் வரக்காணேனே

என்பதைப் பாடுங்கள்.

கந்தன் என்பதும்:

கன் > கனல்.
கன் >  கனலி ( சூரியன்)
கன் + து =  கந்து.
கன் > கனல்தல்  ( கனறல் ).  ல்+த=  ற.
கன்  >  கனற்பு  :  அடுப்பு.
கன்  > கனற்று.  கனற்றுதல்.
கன் >  கன்றல்..   கன்>  கன் து  > கன்று >  கன்றல்  ( கன்று அல்)
கன் >  கன்றுதல் :  கருகுதல்.

கன் > கன் து > கந்து அன் > கந்தன்.

இன்னொரு சொல்:  அன் > அன் து > அந்து  >  அந்தி.

அரியது கேட்கின் எரிதவழ் வேலோய் -   ஒளவையார்.

கந்தன் என்ற  முருகன் பெயரும் கனல் என்பதனுடன் தொடர்புடையது.  அடிச்சொல் கன்.

பல சொற்களை விளக்கவில்லை. பின்னொரு நாள் அதை நிறைவேற்றுவோம்.

திருத்தம் பின்

சனி, 5 ஜனவரி, 2019

மனத்தில் கொஞ்சிய முகில்

முன்னர் ஓர் ஏரியைப் பற்றிப் பாடிய போது:

வெள்ளி உருக்கித்  தெளித்த போர்வையோ ----  இங்கு
விரிந்த ஏரி காட்டும் நீரினில்,
துள்ளி எழுந்து விழும்  மீன்`களைக் ----- கண்டு
தூக்கம் கலைந்து வந்த(து)  ஊக்கமே.

என்ற வரிகளில் கருத்து வெளிப்பட்டது.


நேற்றுக் காலையில் சிங்கப்பூரில் கொஞ்சம் மழை. அது கண்டு ஒரு
கவிதை தோன்றியது.  அதுவே இது:

எங்கிருந்தோ எடுத்து நீரை 
இங்கு வந்து தெளித்திவ் வூரை
நுங்குட் கொண்ட  நாவுபோலச்
சிங்கலின்றிக் குளிர வைத்தாய்.

சிங்கலின்றி -  குறைவின்றி.

ஊர்கள் மேலே அலைந்தலைந்தே
ஒவ்வோர் துளியாய் விழுங்கிப்
பாரை வள    மிக்கதாக்கி
யாரைக்   காதல்கொண்ு  செய்தாய்.

உன்மனத்துள் மீட்டும் வீணை 
ஊர்க்குள் ஒருத்தி இருக்கிறாளே
என்மனத்துள் மேகம் நீயே
இணைந்துகொஞ்சி இருப்பதென்ன?

 

சிற்பி என்ற சொல்.

ஒரு பெரிய பொருள் மாதிரியிலே சிறியதாய்ச் செய்யப்படுவதே சின்னம்.

இங்கு இதில் உள்ள அடிச்சொல் சின்-  என்பதுதான்.   சின்னப் பையன், சின்னப்பா,  சின்னராசா, சின்னக்குட்டி எனப் பல கூட்டுக்கிளவிகள் உள்ளன காண்க.

எம் நெருங்கிய உறவினர் வளர்த்த நாய்க்குச் சின்னக்குட்டி என்ற பெயரைக் கொடுத்திருந்தேம்.   பெரியவகைப் பொன்மீட்பி நாய்   (  கோல்டன் ரிற்றீவர்) என்றாலும் ஒரு சின்ன உருவினதாய்த் தன்னைப் பாவித்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடும் -  எம்மைக் கண்டவுடன்.  தாரா என்ற பெயர் இருந்தாலும் சின்னக்குட்டி என்றவுடன் நாலுகால் பாய்ச்சலில் வந்து மோதி நிற்கும்.  அண்மையில்தான் இறந்துபோயிற்று.

சின்ன என்ற சொல் அன்புகலந்த சொல் என்பது எம் நினைப்பு.  அது உண்மை என்பதையே மேலே யாம் தந்துள்ள வழக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

சின் என்பதன் அடிச்சொல் சில்  என்பதாகும்.

சில் > சில   ( பன்மை விகுதி  அ  )
சில் > சின்

புணரியல் அமைப்புகள்:

சில்+ நாள் =  சின்னாள்   (சின்னாட்கள் )    =  சில நாட்கள்.
(  எதிர்ச்சொல்:   பன்னாள்)

சில் + மயம்,  சில் + மையம்:   உலகாகிய பெரிய மயத்தில்  எது  உள் நிற்கிறதோ அதுவே சிறிய மயத்திலும் நிற்கின்றதென்பதால்,  சின்மயம் என்பது .  ஆன்மாவையும் அதன் சுற்றியக்கச் சார்புகளையும் உட்படுத்தும்.

௳யம்   - மையம்:   முன்னது ஐகாரக் குறுக்கம்.

சின்மதி,  சின்முத்திரை என்ற வழக்குகளும் உள.

சில் >  சிறு.
சில் > சின் > சின்னம். ( மாதிரி சிறியது)
சில் > சின் >  சின்ன
சில் < சின் >  சின்னம்  ( சிறுமை என்றும் பொருள்.)
சின் >  சின்னா   (  சிறிய குருவி).   சின்னா என்ற கோழிக்குஞ்சு -   கதை.

சின் > சின்னா பின்னம்.    இங்கு ஆ என்பது ஆகும் என்ற சொல்லின் தொகை.

இங்குள்ள மற்ற தொடர்புள்ள இடுகைகளையும் நோக்குக.

https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_49.html

https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_25.html

https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_25.html

சிற்றம்பலம்.

சிற்பரை   :  சில் + பர + ஐ.    அம்மன்.  { பரன் > பரை ( ஐ) }   ஐ = கடவுள்.  இது
பெண்பால் விகுதியுமாகும்.

சில் என்பது ஏராளமான சொற்களில் கலந்துள்ளது.

முன் காலத்தில் சிலைகள் சிறிதாகவே செய்து வலவர்களான பின் பெரிய சிலைகளை அவர்கள் வடித்தனர்.   இது திறன் பெருக்கம் ஆகும்.

சில் >  சிற்பு > சிற்பம் > சிற்பி .
சிற்பன்,   சிற்பரன் என்பவும் காண்க,

சிற்பி என்ற சொல் பின் பெரிய உருவங்களை வடிப்போனையும் குறிக்க விரிந்தது.

ஒப்பீடு செய்து உணர்க.


திருத்தம் வேண்டின் பின்.

அடிக்குறி:

பொன்மீட்பி :  பொன்போலும் பொருட்களை மீட்கும் நாய்.  இவை பொன் நிறத்தினவாய் உள்ளன. பிற நிறத்தன உளவா என்பது தெரியவில்லை.
 

வெள்ளி, 4 ஜனவரி, 2019

நிவர்த்தி சொல்லமைப்பு.

நிவர்த்தி :  பெயர்ச்சொல்
நிவர்த்தித்தல்  -  பெயர்ச்சொல்.

நிவர்த்தி என்பதொரு புலவர் புனைவாகும்.  இது அமைந்த விதம் உரைப்போம்.

நில்  :  நிற்றல். இதில்  லகரம் போய்,  நி என்று கடைக்குறை ஆனது.

வரு :  வருதல்.   வருத்தி :  வரும்படி செய்தல்.

இது   வர்த்தி ஆனது.

வருந்துதல் குறித்த சொல்லின் வேற்றுமை

இது வருந்து என்ற சொல்லின் வேறானது,  வருந்து,  வருத்து என்பன இதனின்று போந்தவை.

நிவர்த்தி: 

ஒரு சாமி கும்பிடுமிடத்தில் பெண் போகக்கூடாது என்று  என்று விதி உள்ளது.  அங்கு ஒரு பெண் தெரியாமல் போய்விட்டதனால் சாமிக்குற்றம் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் அங்கு தொழுமிடம் மாசுற்றது என்று பூசாரி கூறுகிறான்.  அந்த மாசை அகற்றிப் பழைய நிலையை வரும்படியாக அவன் சில சடங்குகளை நடத்துகிறான்.

மாசுற்றது தொடராமல் நிற்கவும்   ( நி  )
பழைய தூய்நிலை வருமாறு செய்யவும் :   ( வரு > வருத்தி > வர்த்தி,   அல்லது வர் > வரத்தி >  வர்த்தி ,   அல்லது வரு>  வர் > வர்த்தி  )  ( வர் )

தி : தொழிற்பெயர் விகுதி.

இப்போது இணைக்க:   நி + வர் + தி :  நிவர்த்தி.

எப்படிச் சொன்னாலும் அதுவே.

இந்தத் திரிபுகளைக் கவனிக்கவும்:

வா   -   ஏவல் வினை
வரு -   வினைப்பகுதி     (  வரு > வருகிறான். வருவான் ).
வ  -   வரு> வ:    ( வ >  வந்தான் ).  ( இங்கு வா என்றபாலது வ என்று குறுகிற்று).
வ  >  வர்:   பேச்சுத் திரிபு..    வர்றான், வர்ரியா
வரு > வார்:   வாராய்,  (விளி )
வார்  :   வாரான், வாரார்  (எதிர்மறை ).
வா > வார் > வாரி :   நீர்வரத்து.  நீரலைகள் வரத்து உடைய இடம்:  கடல்.
வரு +  உடு + அம் =  வருடம்.  கணக்கில் மீண்டும் மீண்டும்  வருதலை உடுத்த அல்லது கொண்ட கால அளவு.   உடு என்ற சொற்பயன்பாடு இலக்கியத் தமிழினைக் கொணர்ந்து முற்படுத்தும் அழகினது ஆம்.  இரண்டு உயிர்கள் வரின் ஒன்று தொலையும்.  ஆக ஓர் உகரம் தொலைந்தது காண்க.
வரு > வர்ஷ:  குறித்த காலத்தில் வருவதாகிய மழை.
வரு >  வரத்து:   து தொழிற்பெயர் விகுதி.    (போக்குவரத்து ).(  நீர்வரத்து  ).

நில் நி:  இது நின்றுபோனதையும் நிலையானதையும் தனித்தனியாகவோ இணைத்தோ  குறிக்கும் கடைக்குறை. நிறுத்துதலையும் சுட்டவல்லது.

வர்த்தி :   வருவித்தல்.

அதுவே நிவர்த்தி என்றறிக.





அடிக்குறிப்பு


விதத்தல்,  விதந்துரைத்தல்  என்பன பண்டைத் தமிழில் நன் `கு  வழங்கிய சொல்.   விதம் என்பது அதனின்று அமைந்த சொல்லாகும்.

வித +  அம் =  விதம்.  வித என்ற  வினையில் இறுதி அகரம்.   அம் என்ற விகுதியில் துவக்கம் அகரம்.  இவற்றுள் அகரத்தின் இரு முளைப்பில் ஒன்று அகற்றப்படும்.    வித் + அம் =  விதம் ஆகு.    விதந்து கூறுதலாவது சிறப்பாக எடுத்துரைத்தல்.

விதம் என்பது சிறப்பான ஒரு அல்லது இன்னொரு தோற்றம்.

தட்டெழுத்துப் பிழைகள் இருப்பின் பின் திருத்தம் பெறும்.

வியாழன், 3 ஜனவரி, 2019

அவசரம் ஒரு விளக்கம்

இப்போது அவசரம் என்ற சொல்லைப் புரிந்துகொள்வோம்.
இச்சொல்லில் அவம்  எனற்பால தொரு சொல்லும் சரம் எனற்பாலதொரு சொல்லும் இணைந்துள்ளன.  ஆகவே இதைக் கூட்டுச் சொல் என்று கூறலாம். அதாவது இருசொல்லொட்டுக் கிளவி ஆகும்.  ( ஆங்கிலம்:   compound word             ).

அவம் என்ற சொல்லை நுணித்துப்  பார்க்கின்  ( focus செய்யின்)  அதன் பகுதி  அவி என்பது புரியும்.

அவி + அம்   =   அவம்.

சில சமயங்களில் நெருப்பில் இடாமலே சில இலைகள், கீரைகள் காய்கறிகள் வெம்மையினால் அவிந்து விடுதல் காணலாம்.   அவிதலின் பின் பயன்பாட்டுக்கு ஒத்துவராதனவாகிவிடும்.   ஆகவே  நாம் வைத்திருந்தவை அவமாகிவிட்டன.

அவி அம் > அவம் என்பதில் அவி என்பதன் இகரம் கெட்டது அல்லது தொலைந்தது.    அதனால் அது அவ் என்ற தற்காலிக உருவைஅடைகிறது.  வ்+ அ =  வ ஆதலால் அ (வ் + அ ) ம் =  அவம்   ஆகிறது.

அவல் (  அவி + அல் ) என்பதும் இத்தகு அமைப்பினதே.   அவியல் என்ற சொல் இகரம் கெடாது நின்று இன்னொரு சொல்லைத் தந்தது அறிக.

மனோன்மணீயம் சுந்தரனார் ஒரு வெண்பாவில்:

" நாடகமே செய்தற் கிசைந்தாய்  அதற்கிசைய
ஆடுவம்வா நாணம் அவம் "  என்பார்.

இதற்கு நாணம் கெடுதல் தரும்,   வேண்டா என்று பொருள்.

இனிச்  சரம் என்பதென்ன?

ஒரு மலையிலிருந்து நீர் சரிந்து விழுந்து அருவியாகிறது.  நீர் சரமாக ஒழுகுகின்றது.   சரம் என்பது சரி+ அம். இதுவும் ரிகரத்தில் நின்ற இகரம் கெட்டு அம் என்னும் விகுதி பெற்று அமைந்த சொல்லே ஆகும்.  திருமண வீட்டில் சரமாக அலங்கார விளக்குகள் ஒளிர்கின்றன.   வரிசையாக இருத்தலால்   சரம் என்று சொல்கிறோம்.  சரஞ்சரமாய்க் கோத்து வைத்தேன் என்று பேசுவதைக் கேட்டிருக்கலாம்.  நீர் போன்றவை சரமாகவே ஒழுகும் ( சரியும்). இதனாலே சரம் என்பது வரிசை என்ற பொருண்மை பெற்றது.

அவசரம் அல்லது விரைவில் சரம் கெட்டுப்போகிறது.  வரிசை ஒழுங்கு இல்லையாகிறது. இதன் காரணம் விரைதல் அல்லது வேகமாதல்தான்.

விரைவும் அதன் காரணமாகிய வரிசைக் கேட்டிலும்  இது வரிசைக்கேடு என்ற சொல்லமைப்புப் பொருளைக் கொண்டு, அதைக் குறிக்காமல் அதன் காரணத்தைக் குறித்துப்    பொருள்தாவல் மேவிய சொல்.

இதன் அமைப்புப் பொருளில் இது இல்லையாதலின் இது திரிசொல் ஆகும்.
தொடர்புடைய வேறுபொருள் மேய நிகழ்வினால் என்றுணர்க.

இப்படி அமைப்புப் பொருளில் விலகி நின்று தொடர்புடைய வேறுபொருள் சுட்டிய சொற்கள் மொழியில் மிகப்பல.  அவ்வப்போது வந்துழிக் காண்க.

மறுபார்வை பின்.

புதன், 2 ஜனவரி, 2019

இடைக்குறை தொகுத்தல் முதலிய அணுகும் விதம்

கண் என்பது இடம் என்றும் பொருள்தரும் என்பதை அறிவீர்கள். இங்கு முன் இடுகைகளிலும் இது கூறப்பட்டிருக்கிறது.

உரைநடையில் முக்கண்ணன் என்று தான் வரும்.  சிலர் செய்யுள் நடையில் உரை நடையை எழுத முற்பட்டு முக்கணன் என்று கட்டுரையிலோ கதையிலோ எழுதியிருக்கலாம்.  இவ்வாசிரியர்கள் தாம் செய்யுளில் மிக்க ஆர்வமும் பட்டறிவும் உடையராய் இருக்கலாம்.  இப்படிக் கட்டுரைகளில் எழுதவேண்டியதில்லை.  ஆனால் செய்யுளில் நீட்டம் குறைக்கவேண்டின் வேறுவழியில்லை.  எடுத்துக்காட்டு:

முக்கணா போற்றி   ( தேவாரம் 968.10 ).

பெண்பாலிலும்  முக்கணி என்று வரும்.

என்னுதல் ( என்று சொல்லுதல் ) என்பதும்  குறுகி  எனுதல்,  எனல் என்று எழுதப்படக்கூடும். முதலாம் இரண்டாம் செய்யுளடிகளில் மனுவை என்று தொடங்கி இருந்தால் அடுத்த அடியில் எனுதல் என்று போடுவதற்குத் தடை ஏதும் இல்லை.  ஆனால் அண்மையில் இவ்வாறு எழுதி யாம் அறியவில்லை.

 தெக்கணி -  தக்கணி என்ற மொழிப்பெயரில் கணி என்பதும் இவ்வாறு குறைந்ததே.  இந்தச் செய்யுள் வசதியை மொழிப்பெயர் அமைக்கவும் பயன்படுத்தியுள்ளனர் என்று அறிந்து, ஒருவகையில் பெயரமைத்தவர்களைப் பாராட்டவேண்டியுள்ளது.

கணம் என்ற சொல் கண்ணிமைக்கும் காலத்தைக் குறிப்பது. இது வெகுகாலமாய்த் தமிழில் வழக்கில் உள்ள சொல்லாகும்.

குணமெனும் குன்றேறி நின்றார் வெகுளி ..... கணமேயும் என்ற குறளில் கணமென்பது வந்துள்ளதென்பது நீங்கள் அறிந்ததொன்றே.   கண் + அம் =  கண்ணம் என்று இரட்டிக்காமல் கணமென்றே வந்துள்ளது காண்க.  இதிலொரு வசதி என்னவென்றால் பொருந்தியவிடத்து கண்ணம் என்ற  புத்தமைப்பை வேறொரு பொருளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.  ஒரே அடிப்பிறந்த சொற்கள் இரட்டித்து ஒரு பொருளையும் இரட்டிக்காமல் இன்னொரு பொருளையும் ஏற்றமைதல் உளது.   இதற்கு எடுத்துக்காட்டு:

அறு + அம் = அறம்  (  வாழ்க்கை நெறி விதிகள் அல்லது ஆலோசனைகள் ).
அறு + அம் =  அற்றம்.  ( தருணம் )
தருணமாவது சூழ்நிலைகள் தருமொரு செயல்பாட்டு வசதி ,  நல்வேளை .

தமிழா உனக்கிது தருணமே வாய்த்தது
தாரணிக்கெல்லாம் வழி காட்ட   ( ஒரு பாடல் வரி ).

கோபம் வந்தால் பலர் கத்துவர்.  கத்துவதன்மூலம் தன் ஏற்றுக்கொள்ளா மனப்பான்மையைக் காட்டுவர். 

கத்து >  கது   > கதம் .

கழுதைக்கு ஏற்பட்ட பெயர்களில் ஒன்று காழ் காழ் என்று அது கத்துவதால் ஏற்பட்ட பெயர்.   காழ் என்பது கழு என்று மாறி  ( முதனிலை குறுகித் திரிந்து ) தை விகுதி பெற்றுக் கழுதை என்று அமைந்தது.  ஒப்பொலிச் சொல்.

எப்படிக் கத்துகிறது என்பதைக் குறிக்காமல்,  வெறுமனே அதன் கத்தும் குணத்தைக் குறித்து எழுந்த சொல் கத்து > கத்தை என்பதாகும்.  கத்து > கது > கதை என்பது இதிலிருந்து அமையினும் வேறு பொருள் தருவதுவாம். . இடைக்குறையால் குறிக்கும்பொருள் வேறானது.

அறிந்து மகிழ்க.

திருத்தம் பின்

 

திங்கள், 31 டிசம்பர், 2018

நாம் ஒன்றானோம்.




இது ஹோங்கோங் நகரின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது
எடுக்கப்பட்ட படம்.



எந்நாட்டில் வாழ்ந்தாலும் எல்லோ  ரும்தாம்
இணைநின்று பாசமிடும் ஏற்ற   நண்பர்.
உன்னாட்டில் நீயிங்கு என்னாட்   டில் நான்
ஒதுங்கிவிடு வோமென்றும் எண்ண லாமோ?
பன்னாடும்  பன்மொழியும் பண்ணே போல
பாய்ந்தினிக்கும் நெஞ்சினிலே எண்ணுங்காலே.
இந்நாளில் சுருங்காதீர் விரிந்து செல்வீர்
இகந்தன்னில் அகத்தெண்ணி ஒன்றானோமே.

சுரங்கம்: அங்கு ஆங்கு இடைநிலைகள்.

இன்று புத்தாண்டில் சுரங்கம் என்ற சொல்லின் அமைப்பைத் தெரிந்துகொள்வோம்.

நிலத்தில் பள்ளம் தோண்டினால் பல இடங்களில் நீர் சுரந்து மேல் வருகிறது. இரண்டாம் உலகப்போரின்போது  பலவிடங்களில் சுரங்கங்கள் தோண்டி அங்கு மக்கள் வான்படைத் தாக்குதலிலிருந்து தப்பிக்க ஒளிந்திருந்தனர் என்று அறிகிறோம்.  கீழே நீர் சுரந்து நிற்குமாதலின் பலகை அடித்து ஒரு போலித்தரையை ஏற்படுத்தி அதன்மீது மக்கள் ஒளிந்திருந்தனர். நிலத்தடி நீர் அருகில் இல்லாதவிடங்களில் நீர்மட்டம் தொல்லைதராது. பலகை இல்லாமல் அமர்ந்திருக்கலாம் என்பர்.

நிலத்தைத் தோண்டினால் நீர்சுரக்கும்.  ஆதலால் இத்தகைய நிலக்குடைவுகளைச் சுரங்கம் என்று குறிப்பிட்டனர்.

சுரத்தல் :  வினைச்சொல்.

சுர +  அங்கு  + அம் =  சுரங்கம்.

இச்சொல்லில் அங்கு என்பது சொல்லாக்க இடைநிலை.

இப்படிச் சொற்களை நன்றாக அமைத்தவர்கள் யாரோ  அவர்களைப் பாராட்ட வேண்டும்.

அங்கு என்பதை   அ=  சுட்டடிச் சொல் என்றும்  கு  என்பது சேர்விடம் குறிக்கும் சொல் ( அதாவது இப்போது பெரிதும் வேற்றுமை உருபாகப் பயன்படுகிறது )
என்று அறிக.  இவை இரண்டும் இணைந்தே இடைநிலையாக நிற்கின்ற தென்பதை உணர்க. எளிதினுணர்தல் பொருட்டு அங்கு என்பது இடைநிலை என்றோம்.

கூடாங்கு.  மூடாங்கி ( மூடி )., நாதாங்கி என்ற சொற்களும் உள்ளன. இவற்றிலும் இவ்விடைநிலை உள்ளதென்றறிக.

கூடாங்கு:  கூடுபோல் கட்டிப் பொருள்களை இட்டுவைக்குமிடம்.

கூடு + அங்கு. இந்தச் சொல் அம் விகுதி பெறவில்லை. அங்கு என்பது ஆங்கு என்றும் நிலவுமென்று அறிக.

மூடாங்கி :  இது மூடி என்பதற்கு மாற்றாகப் பேச்சு வழக்கில் உள்ளது.  பானை மூடி போன்றவை.  சில சட்டி பானைகளில் மூடி பானையுடன் பட்டையில் திருகாணி கொண்டு இணைக்கப்பட்டிருக்கும்.  ஒருபுறம் தூக்கித் திறக்கலாம்.  இப்போது அரிசிவேவிப்புப் பானைகள் இவ்வாறு வருகின்றன. இவை மூடாங்கிகள்.  மூடி அங்கே இருக்கும்; அகற்ற முடியாது.

மூடு + ஆங்கு + இ =  மூடாங்கி.   இதில் இகரம் விகுதியாகிறது.

நாதாங்கி :  கதவில் இருபுறமும் தள்ளுதற்குரிய வசதியுடன்  ஒரு நாக்கைப் போல் இருப்பது நாதாங்கி. கதவின் சட்டத்தில் பக்கம் தள்ளினால் இது ஒரு வளையத்தில் போய் மாட்டிக்கொண்டு கதவைத் திறக்க முடியாதபடி அடைத்துக்கொள்ளும். இந்த நாவைத் தாங்கி இருக்கும் இரும்புக் கூடு நாதாங்கி எனப்படும்.  நாதாங்கி கூடு, வளையம்,  அதிலாடும் தள்ளுகோல் முதலிய முழுப்பொறியையும் குறிக்கும்.

நா + து  + அங்கு  + இ:    நாவை உடையது  இப்பொறி.
து : உடையது.   அங்கு / ஆங்கு  என்பது விளக்கப்பட்டது.   இகரம் விகுதி.

நாவைத் தாங்குவது எனினும் ஆம்.

இலக்கணம் கூறுவதாயின்  நாத்தாங்கி எனற்பாலதில் தகர ஒற்று இடைக்குறை என்லாகும்.

இத்தமிழ்ச் சொற்கள் இக்காலத்தில் மறக்கப்பட்டு வருகின்றன.

இவற்றைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்கள் பெருவழக்கினவாதலே காரணம்.

அடிக்குறிப்பு:

அங்கம்:  உடல் குறிப்பது.   இது அடங்கம் என்பதன் இடைக்குறை.  டகரம் வீழ்ந்தது.  பல உள்ளுறுப்புகளும் அடங்கியதே அங்கம்.


பிழைத்திருத்தம் பின்.

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

கள் என்ற அடியிலிருந்து சில சொற்கள்.

கள் என்ற சொல் பல பொருள் உடைய சொல்லாகும்.

ஆனால் இற்றைநாள் அகரவரிசைகள் இச்சொல்லின் எல்லாப் பொருள்களையும் தருதல் அரிது.

கள் என்ற தென்னைத் தேறல் வெள்ளை நிறமானாலும்,  கள்வன் என்பவன் இத்தேறலுக்கு உரியவன் அல்லன்.  யாரேனும் அருந்துவதுபோல் அவனும் அருந்தலாமேயன்றி   அச்சொல்லுக்குக் கள்குடிப்போன் என்ற பொருளில்லை.

கள் என்பதற்கு உள்ள அடிச்சொல் பொருள்களில் கருப்பு என்பது மிக்க முன்மைவாய்ந்தது ஆகும்.

கள் = கருப்பு.
கள்ளர் -  கருப்பு நிறமானவர்கள். இது  அறிஞர்  பண்டித நா. மு. வேங்கடசாமி நாட்டாரின் முடிபு.

கள் > காள்:  இது முதனிலை (முதலெழுத்து ) நீட்சி.

காள் > காளி:   கருப்பம்மை.
காளமேகம் :  கருமேகம்.  சூல் கொண்ட முகில்.

சூல் கொண்ட முகில் கருப்பு நிறமாதலின்  கருப்பம்மைக்குச் சூலி என்பதும்
இவ்வகையில் பொருத்தமான பெயர்.   சூலம் என்னும் ஆயுதமுடையாள் என்பது இன்னொரு பொருள்.

களர் =   கருப்பு.    கள்+ அர் =  களர்.

கள் என்பதனுடன் அர் விகுதி புணர்க்க,  கள்ளர் என்று மனிதரைக் குறிக்க இரட்டிக்கும்;  களர் என்று நிறம் மட்டும் குறிக்கும்.  இரட்டிக்காது.

களரி =  கருப்பு.

கள் என்பது கறு என்று திரியும்.    கறு > கறுத்தல்.

கறுப்பு   -  கருப்பு,  இது இருவகையாகவும் எழுதப்பெறும்.

கறு >  கறை  :  கரும்புள்ளி  அல்லது கருமை பிடித்தல்.


கள் என்ற அடியிலிருந்து சில:

கள் > கட்டு  - கட்டுதல்.   (கள்+து ).
கள் + சி :  கட்சி.  ( கட்டுக்கோப்புடன் இயங்கும் ஒரு மனிதக் கூட்டம்).
கள் > கட்டு > கட்டி:   திரட்சி ஏற்படுதல்.  ( மூளையில் கட்டி போல).
இன்னொரு உ-ம்:   கட்டித்தயிர்.  திரண்ட தயிர்.

கள் + து என்பது கண்டு என்றும் வரும். இது மெலித்தல். கட்டி என்பது வலித்தல்.

கண்டு:   நூல் கண்டு.  இது நூல் திரட்சி.

கண்டி:  திரட்சிகளை உடையது;  உருத்திராட்சம்.

உருத்திராட்சம் :  உருத் திரட்சி அம்.  இதில் அம் விகுதி.

கண்டி என்பது கட்டுருவான ஒன்று.

மரகத கண்டி :  மரகதத்தால் ஆன உருத்திராட்ச மாலை.

கண்டி > கண்டிகை.

அறிவீர் மகிழ்வீர்.
 

வருக புத்தாண்டே

ஆங்கில ஆண்டாம்  இருபதொன் றொன்பது
வீங்கிள வேனிலாய் விருந்து படைத்திடும்
ஓங்கிய மேனிலை உளத்தே  ஒழுகிசை
பாங்குறத் தாவென வாவெனப் பணிவோம்.  1

நல்லன விளைத்தோர்  நலமே தொடர்கென
அல்லன குழைத்தோர்  அறவழி செல்கென
இல்லென உள்ளன அனைத்தும் செழிக்கென
சொல்லுயர் தமிழால் சுவைக்கவி படைப்போம்.  2

இனியது புதியது  வருமிது சிறந்தது
கனியிது  களிப்பினில் தனியிதென்    றொளிர
இனியிதை வருகென அனைவரும் இணைந்து
பனிகுளிர் இன்புற நனிவிழ   வெடுப்போம். 3

 

அரும்பொருள்:


இருபதொன் றொன்பது  :   இருபது ஒன்று ஒன்பது
(2019)

வீங்கு  இளவேனிலாய் =  விரிந்த வசந்த காலமாய்.

விருந்து -   புதுமை.

ஓங்கிய மேனிலை உளம் :  உயர்ந்த மேலான பண்புள்ளம்.

ஒழுகிசை பாங்குறத்  தா = நீரொழுகுதல் போன்ற
இனிய இசையைத் தருக.

2

அல்லன  -  தீயவை
குழைத்தவர் -  கலந்து ஆக்கியோர்

இல்லென -  வீடென்று அல்லது குடும்பமென்று.

சொல்லுயர் -  புகழ் உயர்ந்த.


3

தனியிதென்    றொளிர  -  தனி இது என்று ஒளிர
ஒளிர -  ஒளிவீச

பனி குளிர் இன்பம் =  மிகக் குளிர்ந்த இன்பம்.
பனியானது  குளிர்தல் போல்   (குளிர்ந்த) இன்பம்.
வல்லெழுத்து மிகாமல் புனையப்பெற்றது இவ்வரி.

குளிர் இன்பம்: வினைத்தொகை.

நனி -  நன்றாக

விழவு =  விழா , கொண்டாட்டம்.


புணரியல் திரிபுகள்:

தொடர்கென :  தொடர்க என.
செல்கென -  செல்க என
செழிக்கென -  செழிக்க என
வருகென-   வருக என


பிழைகள் தோன்றின் திருத்தம் பின்.
திருத்திய நாள் 31.12.2018

வெள்ளி, 28 டிசம்பர், 2018

முக்கம் என்ற பேச்சுமொழிச் சொல்

முக்கம் என்றொரு சொல் தமிழில் உண்டு எனினும் பேச்சு வழக்கில் உள்ள முக்கமென்னும் இன்னொரு சொல்லின் பொருள் அகரவரிசைகளில் காணப்படவில்லை.

முக்கம் என்பது முற்கம் என்பதன் திரிபாகும்போது:

பல்லி செய்யும் ஒலி
நாவு கொட்டும் ஒலி
ஒவ்வாமைக் குறிப்பு ஒலி

என்று பொருள்படுகிறது.

இச்சொல்லின் இன்னொரு பொருள் பயறு வகைகளைக் குறிக்கிறது, இது திவாகர நிகண்டில் காணப்படுவதும் ஆகும்.


ஆனால் பேச்சு வழக்கில் முக்கம் என்பது  வழியில் உள்ள திருப்புமுனை அல்லது தெருச்சந்திப்பு என்று பொருளாகிறது,   இதை இப்பொருளில் பேச்சில் யாம் கேட்டதுண்டு.  எழுத்தில் இப்பொருளில் இதைச் சந்தித்ததில்லை.

அகரவரிசைக்காரர்கள் விடுபாட்டில் இதுவும் ஒன்று என்று தெரிகிறது.

கடத்தற்கு அரிய அல்லது கடக்கு  மிடம் கடம் எனப்படும்.   வேங்கடம் என்னும் சொல்லில் இஃது உள்ளது.  வெம்மை மிக்கக் கடப்பிடம் என்னும் பொருளது இதுவாம்.  தாம் கடத்தற்கரிய இடையூறு சங்கடம் ஆகிறது.  இது தம் கடம் > சங்கடம் என்னும் திரிபு.   கடு> கடம்;  கடு>காடு.   இவ்வாறு கடு என்ற உரிச்சொல்லினின்று போந்து கடிய காட்டினையும் குறிக்கும்.  இன்னும் கயிறு, பாலைநிலத்துவழி,  சுடுகாடு, கும்ப இராசி,  யானை மதம் ( கட யானை ),  ஒரு நிறுவை, உடம்பு என்றெல்லாம் பொருள் பல. இன்னும் உள.   கடத்தற்கரியது என்னும் கருத்திலே கடல் என்ற சொல்லுமமைந்தது.

முக்கம் என்பது   சாலைகளில் முக்கடப்புகளைக் குறித்த சொல்.  மூன்று என்று பொருள்தரும் மு என்பது முன் நிற்றலால்.   இது மற்ற முக்கம் என்னும் சொற்களினின்று வேறான சொல் ஆகும்.

முக்கடம் > முக்கம்.  இங்கு டகரம் இடைக்குறைந்தது.

டகரங்கள் குறைந்த சொற்கள் பல நம் பழைய இடுகைகளில் அவ்வப்போது காட்டப்பெற்றுள்ளன.  நினைவுகூர:

பீடுமன் >  பீமன்.  டுகரம் குறைந்தது.   பீடுடைய மன்னன் என்பது பொருள்.
பீடுமன் > பீஷ்மன்.    பீமன் > வீமன் என்பதும் திரிபு.  ப-வ.

பேச்சில் முக்கம் நிலைத்தபின் முக்கடம் மறைந்தது.  இத்தகைய சொல் இறுபுகள் இயல்பே ஆகும்.   இறுபு - ஒழிதல்,

அறிந்து மகிழ்க.

பிழை : திருத்தம் பின்.


பூரா என்ற சொல்.

எங்கும் அல்லது எல்லாம் என்று பொருள்தரும் பேச்சுவழக்குச் சொல்லே பூரா என்பது.

"வீடு பூரா தூசியாய் இருக்கிறதே"  என்ற வாக்கியத்தில் இது எங்கும் என்று பொருள்படுகிறது.

புகுந்து உறுவதே பூரா.   புகுதல் என்பது உட்செல்லுகை.

இது  புகு>  பூ  என்று சொல்லின் முதனிலையில் திரியும்.


இதற்கு ஓர் உதாரணம் தருவோம்.

தொகு ( தொகுதல். தொகுத்தல் )  என்ற வினைச்சொல் தோ என்று சொல்லில் திரியும்.

தொகு >  தொகுப்பு > தோப்பு.  (வாழைத் தோப்பு முதலியவை).

இதுவுமது:

(திகை > திகைதி >) திகதி > தேதி.   " உறுதிபெற்ற நாள்,  குறிக்கப்பெற்ற நாள்"

திகைதல் : உறுதியாதல்.

ஆகவே,   புகு+ உறு + ஆ =  பூறா > பூரா  ஆனது.

சொல்லாக்கத்தில் றகரம் ரகரமாகிவிடும்.  பல சொற்களில்:  பழைய இடுகைகளைப் படித்துக் கண்டுணர்க.

வெளியாட்கள் புகப்பார்க்கிறார்கள் என்பது பேச்சில் பூரப்பார்க்கிறார்கள் என்று வரும்.

எதுவும் அல்லது யாரும் எங்கு புகுந்தனரோ அதுவே அவர்களின் தொடக்கம். ஆகவே பூர்தல் -  என்பதிலிருந்து பூர்வு> பூர்வம் என்ற சொல் அமைந்தது. பூர்வம் =  தொடக்கம்.  பூர்வு + ஈகு + அம =  பூர்வீகம்:  ஈகு என்பது ஈங்கு என்பதன் இடைக்குறை.  எங்கே முதலில் புகுந்தீர் அல்லது தோன்றினீர் அதுவே உம் பழைய இருப்பிடம். பிறத்தலும் இவ்வுலகில் புகுதலே.

எரியும் நெருப்பிலிருந்து வெளியில் புகுவதே புகை.   புகு+ ஐ  = புகை.  வெளிவரலைப் புகுதல் என்றது ஒப்புமையாக்கம். வெளியி டங்களில் புகுதல் அல்லது பரவுதல்.

பூரம் = புகைவரும் எரியும் பொருள்.

கருப்பூரம் :  கற்பூரம்.   ( எரியும் கல்போலும் பொருளிலிருந்து புகை வரும்.  அதனால் கற்பூரம் ஆனது ).

கருப்பூரம் -  கர்ப்பூரம்
கல் பூரம் -  கற்பூரம்.

இறுதியில் இவை ஒருபொருள் குறித்தன.   

அடிக்குறிப்பு:

புகு ஊர்தல் எனினும் அமைதலின் இதை இருபிறப்பி எனலாம்.

பிழை காணின் திருத்தம் பின்,

செவ்வாய், 25 டிசம்பர், 2018

திமிங்கலம் : கலங்களுடன் திமிருங்கலம்.

திமிங்கலம் என்ற சொல்லோ தமிழில் அழகுற அமைந்த தாகும். இஃது அமைக்கப்பட்ட விதம் காண்போம்.

இந்த வகை நீர்வாழுயிரிக்கு ஆங்கில மொழியில் "வேல்"(           )  என்பரென்பது நீங்கள் அறிந்ததே.

திமிங்கலங்கள் படகுகளை எதிர்கொண்டு கவிழச் செய்துவிடும் என்பது நம்பிக்கை ஆகும். இதுபோல் சில நடந்துள்ளனவாகவும் தெரிகிறது.

https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=26&cad=rja&uact=8&ved=2ahUKEwj855ORx7zfAhVQat4KHTZjD9sQFjAZegQIBxAB&url=https%3A%2F%2Fwww.canadiangeographic.ca%2Farticle%2Fhow-often-do-whales-attack-ships&usg=AOvVaw2bPOVekcDxIdBKBo0SrUvv

இவற்றுள் ஒன்று மேலே தரப்படுகிறது.


இவ் வுயிரிகள் கலங்களுடன் வலிமை காட்டவல்லவை ஆகும்.  திமிருதல் என்றால் வலிமை காட்டுதல். சிலர் இது சிறுபான்மை நடப்பு என்றாலும் அச்சம் இருக்கவே செய்கிறது.

திமிரும் + கலம் = திமிருங்கலம் > திமிங்கலம்.

இதில் ரு என்ற எழுத்து இடைக்குறைந்தது.

இவ் விலங்கும் ஒரு கலம் போன்ற பெரிய (பரிய )  உருவினதே.


காவலன் பிடிக்கத் திருடன் திமிரிக்கொண்டு ஓடிவிட்டான்  என்ற வாக்கியம் காண்க. திமிருதல் - வன்மைகாட்டுதல்.

(புறநா. 258):   ஈர்ங்கை விற்புறந் திமிரி.
உராய்ந்து,  தடவி  என்று பொருள்.

(நற். 360).  மெய்யிடைத் திமிரும்.


கலங்களைத் திமிர்கின்ற   கலம் போலும் உருவினதாகிய மீன் எனல்.


திமிர் என்பது திமி என்று கடைக்குறைந்துள்ளது.

திமிர்தல்
திமிர்த்தல்
 திமிர்ப்பு
திமிர்ச்சி
திமிரன்:  மெதுவான துடிப்புக்குறைந்த விலங்குமாம்.
திமிராளி
திமிரம் - இருள்
திமிதம் -  நிலைநிற்றல்

திமிதமிடுதல் :  களித்தல்

வலிமை ஒத்த நிலையில்  நிலைநிற்றல் கூடுமாகின்றது.

 பேருந்துக்குள் திமுதிமு என்று கூட்டம் புகுந்துவிட்டது எனல் காண்க.

திமுதிமு எனல் விரைவுக் குறிப்புமாம்.

திமி, திமிர் என்பன இலக்கிய வழக்கிலும் உள்ளவை.

குடிமகன் மற்றும் இணையமான் ( நெட்டிசன்)

ஜகம் என்ற சொல்லின் தொடர்பில்  நாம் பகவொட்டுச் சொற்களை அறிந்துகொண்டோம்.

அதனை இங்குக் காண்க:

https://sivamaalaa.blogspot.com/2015/10/etc.html

மேலும் இது:

https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_23.html

ஆங்கில மொழியில் புதிய பகவொட்டுச் சொற்கள் பல வந்தவண்ணம் உள்ளன.  விரிந்த பயன்பாட்டின் காரணமாக இவ்வகைச் சொற்களின் தொகுதி வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.  இவற்றில் சிலவற்றையாவது நீங்கள் நாடோறும் எதிர்கொள்ள நேர்த்திருக்கும் என்னில் மிகையன்று.

சிட்டிஸன் என்னும்  - குடிமகன்/ள்  என்று பொருடரும் சொல் சில காலமாக ஆங்கிலத்தில் வழக்கில் இருந்துவருகிறது.  இதன் சொல்லமைப்புப் பொருள் நகரவாணன் என்பதே.   நகரவாணன் என்பது உண்மையில் நகரவாழ்நன் என்பதன் திரிபு என்பதை அறிவீர்கள். வாழ்நாள் என்பது வாணாள் என்று திரிந்தமைபோலுமே  நகர வாழ்நர் என்பது நகரவாணர் என்று திரிந்தது.

வாண் என்பது புணரியல் வடிவமேயன்றி ஒரு தனிச்சொல்லாய்த் தமிழ்மொழியில் கிட்டுவதில்லை.  எனவே வாண்+ அர் =  வாணர் என்று காட்டற்கியலாமை அறிக.  திரிசொல்லின் பாதிவடிவ மாதலின்  வாழ்நர் என்பதினின்றே இதை விளக்கற்கியலும்.

கலைவாணர் :  கலையினால் பெருவாழ்வு உடையார்.
மதிவாணர்  :   அறிவினால் பெருவாழ்வு உடையார்.

இதனால் வாழ்நர் என்ற சொல்லின் ஆட்சியை  அறியலாகும்.

ஆதிப்பொருள் சிட்டிஸன் என்பதற்கு  an inhabitant of a particular town or city என்பதே ஆனாலும் ஆங்கிலத்தில் அப்பொருள் இன்று விரிந்துள்ளது.   ஒரு நாட்டின் குடியாண்மை யுரியோன் என்பதே இற்றை விரிபொருள் ஆகின்றது.  காரண இடுகுறி என்பது தனிவிளக்கமாகத் தரப்படவில்லையேனும் அவ்வமைவு ஆங்கிலத்திலும் ஏனை மொழிகளிலும்  உள்ளதென்று அறிக.

சிட்டிஸன் என்பதிலிருந்து பகவொட்டாக நெட்டிஸன் என்ற சொல் அமைத்து அதனை வழங்கிவருகின்றனர். இது போர்ட்மென்டோ எனப்படும் வகைச்சொல்.   குடிமகன் என்பதிலிருந்து இணையமகன் என்று அமைக்கலாம் என்றாலும் மகன் என்பதன் திரிபாகிய மான்  ( பெருமகன் > பெருமான்)   என்ற பின்னொட்டினை இணைத்து இணையமான் என்பதையே நெட்டிஸன் என்பதற்கு நேராய் வழங்கலாம் என்பது எம் துணிபு ஆகும்.  மகன் என்பது பிறப்புப் பொருளினின்று நீங்காது நிற்கின்றது என்பதை நோக்க மான் என்ற திரிபின்னொட்டே பொருத்தமாகிறது. மான் என்று சொல்லும்போது பிறப்பு பற்றி எண்ணம் வரவில்லை; ஒருவேளை மான் என்னும் விலங்குபற்றி எண்ணம் எழலாம் எனின் அதை அறிவு நீக்கித்தரும் என்பதை அறிக. சிட்டிஸன் என்பதற்குக் குடிமகன் என்பது ஒருவாறு பழகிப்போய்விட்டபடியால் மகன் எனற்பாலதன் தனிப்பொருண்மை இங்கு போதரவில்லை எனக் கருத்துக்கொள்க.

குடிமகன் என்பது குடிமான் என்று திரியவில்லை;  இவ் வடிவம் காணப்படாமையின். 

இணையவாணர் எனினும் நன்றேபோல் உணர்கிறோம்.

அதியமான்
மலையமான்
நெடுமான்
புத்திமான்
கருமான்
செம்மான்
பெம்மான்  ( பெருமான் என்பது பின்னும் திரிந்தது )
எம்மான்     (எம் + (பெரு) மான் )

இயற்பெயர்களிலும் பிற பொதுப்பெயர்களிலும் மான் இறுதி காணப்படும். இவற்றில் ம் இடைநிலை; ஆன் என்பதே விகுதி.  புத்தி+ ம் + ஆன்.

பிறவா வரம் தாரும் பெம்மானே :  பாட்டு.
எம்மான் எல்லோரும் இன்புற்றிருக்கத் தன் உயிர் வாழ்ந்த  : பாட்டு. பாபநாசன் சிவன்.

திங்கள், 24 டிசம்பர், 2018

கிறிஸ்துமஸ் வாழ்த்து.


ஏசுபிரான் இறங்கிமன மிரங்கி வந்தார்
இன்றதனைப் பண்டிகையாய்க் கொண்ட மக்கள்
மாசிலராய் மகிழ்ச்சியிலே திளைத்து நிற்பார்
மாநிலமேல் தானிவர்கள் அருளை  அன்பால்
நேசமழை பொழிந்தபடி அணைத்துக் கொள்வார்
நிற்புடைய அற்புத்தளை பொற்பில் மிஞ்சும்
பாசமொடு நேசிபிறர் தம்மை உம்போல்
பார்க்குமிதே ஏற்குநலம்  வாழ்க  பண்பே .


நிற்புடைய  -  நிலைத்தன்மை உடைய;
அற்புத்தளை -   அன்பென்னும் பிணைப்பு
பொற்பில் -  அழகில், மின்னும் காட்சியில்.
பாசமொடு நேசிபிறர் தம்மை உம்போல் : இது ஏசுவின் போதனை.
பார்க்கும் :  உலகத்துக்கும்  ( எல்லாச் சமயத்தினருக்கும் )
ஏற்குநலம் :  ஏற்கும் நலம்.  மகர ஒற்று தொக்கது.
தான்:  இது அசை ( இசை நிறைவு)

உன்னைப்போல் பிறனை நேசி. என்பது ஏசுவின் அன்புக்கட்டளை.


ஞாயிறு, 23 டிசம்பர், 2018

Tsunami Indonesia,

Condolences to the people in Indonesia:   Our thoughts are with the  survivors who have lost
their beloved ones in the Tsunami now. We pray that those injured recover speedily, We praise the rescue workers there.

பிள்ளைகளும் மகத்துவமும்.

மகத்துவம் என்ற  சொல்லின் பொருண்மை இன்னும் சரியாக அறிந்துகொள்ளாதார் பலர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

மகத்துவமென்பது பெருமைக்குரிய  ஒரு நிலையையே நம்முன் கொணர்ந்து வைக்கின்றது.  இங்குக் கூறும் பெருமை யாதெனின்,  ஒவ்வொரு குடும்பத்திலும் பிள்ளைகள் இருக்கவேண்டும். குழந்தைகளின் மழலையை வள்ளுவம் பெரிதும் புகழ்கின்றது.   "குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்  " என்பர் திருவள்ளுவ நாயனார்.  தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவ ரென்பது  பிள்ளை இல்லாதவர் எனற் பொருட்டாகவு மிருத்தல் கூடும்.

பிள்ளைகள் இருத்தலே மகத்துவம் ஆகும்.

மக:   பிள்ளை என்று பொருள்.

து :  இது உடையது ( உடையராய் இருத்தல் ) என்னும் பொருளது.

அம்:  என்பது விகுதி.

இவற்றை இணைப்பின் "  மகத்துவம் " என்னும் சொல் கிடைக்கிறது.

மகத்துவம் எனில்  மாட்சிமை அல்லது பெருமை என்று பொருள்கூறலாம்.

இதன் ஆதிப்பொருள் குழந்தையுடைமை என்பதே.  பழங்காலத்தில் பிள்ளை இல்லாதவர்கள் மன்பதைக்குள் மதிக்கப்படவில்லை.  பிள்ளைகள் உடைமையானது ஒரு மனைமாட்சி ஆகும்.  இதுவே இச்சொல்லினுள் அடங்கி யிருக்கும் அமைப்புப் பொருளாகும்.  இதைத் தமிழால் விளக்கினாலே இவ் வரலாற்றுண்மை தெரியவருகிறது.

அமைப்புப் பொருள் மறைந்து இன்று மாட்சிமை என்ற பொருளே வழக்கில் உள்ளது.

அறிந்து மகிழ்க.

திருத்தம் பின்

வெள்ளி, 21 டிசம்பர், 2018

பெருவுடையார் பிருகதீஸ்வரர் கோயில் சொல் பொருள்.

பிருகதீஸ்வரர் சொல்லமைப்பு.

இந்தச் சொல்லை இப்போது கணித்தறிவோம்.

இக்கோயில் ராஜராஜ சோழனால் கட்டப்பெற்றதென்பது நாம் அறிந்ததே, இதைக் கட்டும்போது அம்மன்னன் என்ன பெயரிட்டான் என்பதை நாம் அறியோம்.   ஆதிப் பெயர் எதுவாகவேனும் இருக்கட்டுமே.  இச்சொல் எப்படிப் புனையப்பட்டதென்பதை மட்டும் பற்றி இங்கே உரையாடுவோம்.

கோயிலின் பெயர்களிலொன்று பெருவுடையார் கோயிலென்பது.  உடையவர்கள் உலகில் பலர் எனினும் உண்மையில் யாவையும் உடையான் என்போன் கடவுளாகிய சிவபெருமானே ஆவான். ஆகவே பெரு உடையார் என்பது பொருத்தனமான பெயர்.

உடையார் என்ற சொல்லின்முன் பெருமை குறிக்கும் பெரு என்னும் உரிச்சொல் வருவதாயின் அது பேர் என்று திரியவேண்டுமென்பது இலக்கணம்.   ஒரு ஊர் என்பது ஓர் ஊர் அல்லது ஓரூர் என்று மாறும்.  அதுபோலவே இச்சொல்லும்.  கவிதையில் மட்டும் இசை முறிவு ஏற்படுமாயின் இசையைத் தக்கவைத்துக்கொள்ள இவ்விதியைக் கவிஞர் புறந்தள்ளலாம்.  கவிதைக்கு ஓசையே முதன்மை. இலக்கணத்தில் மாற்றம் செய்துகொள்ளத்தக்க இடங்களும் உள்ளன.

இந்தப் பெயரில் அப்படி வராமல் பெரு உடையார் -  பெருவுடையார் என்று வருகிறது.  எனவே பெருவு உடையார் என்பதுதான் இதுவோ என்று எண்ணத் தோன்றும்.  பெருவு என்ற சொல் பெரியது என்ற பொருளில் தனிச்சொல்லாய்க் கிடைக்கவில்லை.  ஆனால் நமச்சிவாய என்ற மந்திரம் பெருவெழுத்து என்று கூறப்படும்.  இச்சொல்லும் பேரெழுத்து என்று திரிபு கொள்ளாமல் பெருவெழுத்து என்றே கிடைக்கின்றது.  பேரெழுத்து என்ற சொல்லும் பெருவெழுத்து என்பதும் ஒன்றென்று கூறுவதற்கில்லை. இவை பொருள் வேறுபாடு உள்ளவை.  ஆதலின் பெருவு என்ற ஒருசொல் இருந்து அது பெரியோன் சிவன் என்ற பொருளில் வழங்கிற்று என்று கொள்க. அச்சொல் வழக்கிறந்துவிட்ட தென்பதை இவ் வடிவங்கள் காட்டுகின்றன.  பெருவு உடையார் - பெருவுடையார் எனின் பெரு என்பது   பேர் என்று மாறத் தக்கதன்று.  நிலைமொழி ஈற்று வுகரம் உகரம் வர,  வந்த உகரம் ஒழியும்.
இப்போது இலக்கணம் சரியாய் உள்ளது.

பின்னாளில் பெருவுடையார் என்ற சொல் இப்படி மாறிற்று.

பெருவு  -  பிருக.  (பெ >  பி;  வு > வ > க )
அது  -   து. (  இவை இரண்டும் மூலச் சொல் முதனிலையிலும்  மற்றும் இடைநிலையிலும்  ஏற்பட்ட திரிபு )
உடையார்:  ஈஸ்வரர்.  ( இது உடையார் என்பதன் பொருளைத் தருகிறது ).

(பெருமான் > பிரமன் என்று சிலர் கூறுவர்; இதிலும் பெ> பி திரிபு வருகிறது )

(பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்ற பழமொழியிலும் பெ-பி மோனையாக நிற்றல் காண்க ).

இத்தமிழ்த் திரிசொற்களையும் உன்னுக:

பெருமான் > பிரான்.   சிவபிரான்.  ஏசுபிரான்.
பெருமாட்டி > பிராட்டி.  சீதாபிராட்டி.

மேற்கூறிய பிருக து ஈஸ்வரர்:

இவற்றை எல்லாம் சேர்த்துப் புணர்த்தினால்  பிருக து ஈஸ்வரர் என்று ஆகி,
புணர்த்தப்பெற்று,   பிருகதீஸ்வரர் என்று சரியாக வருகிறது.   இது ஒரு விளக்க வரலாற்றையும் தெரிவிக்கிறது.  அதாவது பெருவு என்னும் உடையாரே ஈஸ்வரர் என்பதாம் என்பதறிக.  பெருவு என்றால் அது ஈஸ்வரர் என்பதே இதன் பொருள்.  அதாவது சிவன்.


ஆகவே பெருவுடையார் எனின் பிரகதீஸ்வரர்.

பெருவுடையார் என்பதற்குச் சமஸ்கிருதத்தில் பொருளாக்கம் தந்து அதையே ஒரு பெயராக வைக்கப்பட்டிருக்கிறது. திரிபுப் பெயராயினும் மூலப்பெயர் அது; அதன் விளக்கம் இது என்-கின்றது இப்பிற்புனைவுப் பெயர்.

அடிக்குறிப்பு:

பெருவுதல்:  வினைச்சொல்.  பெருவு:  தூக்கத்திற் பிதற்றுதல்.


A new year lunch புத்தாண்டு வாழ்த்து

இன்னும்சில நாட்களிலே இவ்வாண்டு  தீர்ந்துவிடும்
மின்னுமொரு  புத்தொளியாய்ப் புத்தாண்டு மலர்ந்துவிடும்
மன்னுபெரு நலங்களெலாம்  மா நிலத்தீர் நீர் பெறுவீர்

தம்மிருகால் தாங்குவபோல் தாம் நிமிர்ந்த வாழ்வுறுவீர்

துயர்தொடரா நிலைத்தூய்மை  தோன்றியுமை மகிழ்விக்கும்
அயர்வடையா உடல் நலமே  அன்றாட  வளமுரைக்கும்
பயிர்செழித்து நானிலமேல் பஞசமின்றிப் பயன்மிகுக்கும்
தயிர் நிறைத்த ஊணயின்று தாரணியில் வாழ்வுறுவீர்.

புத்தாண்டு வருவதை முன்னிட்டு எமக்கு ஒரு குடும்பத்தினர்
இன்று பகல் விருந்தளித்தனர்.  யாம் உண்டது நல்ல தயிரும் சோறும்தான். என்னே எம் மகிழ்வு.  இதுபோல் யாவருக்கும் கிட்டுமாக. எமது புத்தாண்டு வாழ்த்து உரித்தாகுக.

நீங்கள் விரும்பிய அனைத்தும் கிட்டி மகிழ்வுடன் வாழ்வீர்களாகுக




புதன், 19 டிசம்பர், 2018

தியாகம் என்னும் சொல்

இன்று தியாகம் என்ற சொல்லைச் சிறிது ஆய்வு செய்வோம்.  தியாகம் என்பது தமிழில் வழக்கில் உள்ள சொல் தான்.   அப்படிச் சொல்ல விரும்பாவிடின் செந்தமிழில் " ஈகம் " என்று சொல்லலாம்.  அதே பொருளைச் இச்சொல்லும் தருமென்பதறிக.

தியாகத்தில் மனிதன் உயிரை மட்டுமா கொடுத்துவிடுகிறான்?  இல்லை.  தன் பொருள்களையும் சமயத்தில் நெருப்பிலிட்டு எரித்துவிடுவான்.  காதல் தியாகம் என்ற ஒரு புதிய தியாகத்தைக் கொஞ்ச காலத்தின் முன் வந்த திரைப்படங்கள் போதித்தன. யாம்  பெரும்பாலும் இப்போது கதைகளைப் படிப்பதும் திரைப்படங்கள் பார்ப்பதும் மிகமிகக் குறைவு. இன்னும் இதுபற்றிக் கதை-   நாடக எழுத்தாளர்கள் எழுதுகிறார்களா  என்று தெரியவில்லை.

பழங்காலத்தில் தியாகம் செய்தவர்கள் பெரும்பாலும் தம் வாழ்க்கையை ஏதேனும் ஓர் உயர்ந்த குறிக்கோளுக்காக அர்ப்பணித்தனர்.1 இத்தகைய செயல்கள் அரியவாகவே நடைபெற்றன. இதை அர்ப்பணித்தல் என்ற சொல்லினின்றே தெரிந்துகொள்ளலாம்.  இது அருமை + பணித்தல் என்ற இருசொற்களின் திரிபு.   அருப் பணித்தல் >  அர்ப்பணித்தல் என்று திரிபு பெற்றது. ஆகவே இவை அரிய செயல்களே:  அதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றன.  அருமையாகத் தன்னையோ தன் பொருளையோ ஒரு குறிக்கோளுக்காகப் பணித்துவிடுதல் என்பதே இச்சொல்லமைப்பின் வரையறவு ஆகும்.

தியாகம் என்ற சொல்லோ தீயாகுதல் என்ற சொல்லினின்று வருகிறது.  தீயாகு + அம் = தீயாகம் > தியாகம் என்று குறுக்கிச் சொல் புனையப் பட்டுள்ளது.  இது இயல்பாக  அதாவது நாளாவட்டத்தில் அமைந்த சொல்லாகவோ , புனைவுச் சொல்லாகவோ  இருக்கலாம்.   தன்னை எரித்துக்கொள்வது ஒரு தியாகம். தன் பொருள்களை எரித்துவிடுவதும் ஒருதியாகம்   என்ற  அர்த்தத்தில் இது அமைந்துள்ளது.  இப்படி எரியூட்டிவிடுவதால் அப்பொருளோ அவ்வுயிரோ உலகிலில்லாது ஒழிந்துவிடுதலின்  சேவை தொடர இயலாமையினால் அத்தகு செயல் ஒரு நல்ல தியாகம் என்று சொல்வதற்கில்லை.  தியாகம் என்ற சொல் அமைந்தபின் அது தீயிலிடாத தியாகங்களையும் உள்ளடக்கப் பொருள்விரிவு கொண்டது என்பதை நன் கறியலாம்.  எனவே நாம் அடிக்கடி கூறும் நாற்காலி உதாரணத்தைப் போல்,  இது ஒரு காரண இடுகுறிச்சொல் ஆனதென்பதை உணர்ந்தின்புறலாம்.

பொருள் விரிந்து இது  1 பிறர்பொருட்டுத் தன்னலம் இழக்கும் தன்மை;  2 கொடை ;  3  பிறர் நலத்தினுக்குக் கைவிடுகை என்று காரண இடுகுறிச் சொல் ஆகும் என்று பேரகராதி தெரிவிக்கின்றது.

தியாகம் செய் பொருளானது அதைச் செய்தவுடன் செய்தோன்பால் தீர்ந்துவிடுவதால்  அல்லது அழிந்து அல்லது விட்டுப் போவதனால்  இது தீ ர் + ஆகம் >  தீ + ஆகம் > தியாகம்  என்று வந்ததெனினும் அமைவதே.  ஆதலின் தீ என்பது எரியாகவும் இருக்கக்கூடும்;  தீர் என்பதன் கடைக்குறையாகவும் இருத்தல் கூடும்.  யாகத்திலும் இடுபொருள் தீர்ந்தழிவதால் தீர் > தீ யாகம் > தியாகம் என்றும் அமையும் என்று கூறலாம்.  எவ்வாறாயினும் தீ என்பது தீயையோ அல்லது தீர்வு என்பதையோ குறித்தல் பொருத்தமே.  யாகமாவது யாத்தல் அல்லது கட்டுதல் என்ற சொல்லடிப் பிறந்ததென்பது அறிக. இவ்வாறு இது தீர்வுடன் கட்டுறுவதாகிய செயல் என்று பொருள்படும்.

இருவகைகளிலும் இது நீக்கப் பொருண்மையே காட்டுகிறது.  உயிரினின்றோ பொருளினின்றோ நீங்கிவிடுதல் என்பதே இறுதிப்பொருளாகிறது.

இச்சொல் நீண்ட நாட்களாகத் தமிழில் வழங்கி வந்துள்ளது என்பது தெளிவு. இது ஒரு திரிசொல். சொற்கள் குறுகி அமைவதும் திரிபியல்பே ஆகும்.

அடிக்குறிப்பு:

அர்ப்பணித்தல்:   இதுபோல் அமைந்த இன்னொரு சொல்:  வர்த்தகம்.  இது முன்னாளில் பொருள்கள் வரத்து  ஆவதையே  (  வரு > வரத்து > வரத்தகம் > வர்த்தகம்  ) குறித்து ப்  பின் பொருள் விரிவாகி பொருள் ஏற்றுமதியையும் குறித்தது.

நிர்ப்பந்தம் என்ற சொல்லும் ஒன்று வலியுறுத்தி நிறுத்தப்படுவதையே குறிக்கப் பின் நாளில் வலியுறுத்தி நடத்தப்படுவதையும் குறிக்குமாறு விரிந்தது.  நிறு > நிறுத்து;   நிறு + பந்தம் >  நிறுப்பந்தம் > நிர்ப்பந்தம்.  பந்தம் என்பது:  பல் + து + அம்;  பல்  + து >  பந்து.  கயிற்றினால் முன் காலத்தில் கட்டப்பெற்றுக் கயிறு பின்னிப் பற்றிக்கொள்வதால் பந்து எனப்பட்டது. பந்து பந்தம் என்பன மெலித்தல் விகாரம். எயிற்றில் பற்றிக் கொண்டிருப்பதால் பல்> பல் ஆனது.  பல் > பற்று;  பல் > பல்+ து > பந்து என்பது விளக்கம்.
பத்து :  படை பத்து என்ற அரிப்புத்தடிப்பு வகையிலும் பற்றிக்கொள்ளும் தோல் நோய்தான் பத்து.  பத்து = பற்று.

2   தீர் என்ற சொல் வந்த வேறு சொற்கள்:

தீர்வு >  தீவு;  நாற்புறத்தும் நிலத்தொடர்பு தீர்ந்த நிலம்.

தீபகற்பம்:  என்பதும்  தீர் என்பது முன் நிற்கும் சொல்லே. தீவகம் அல்லாதது. தீவக(ம்) + அல் + பு + அம்.  பு அம் விகுதிகள்.  அல் அன்மை உணர்த்தும். இங்கு தீவ என்பது தீப ஆனது:  வ > ப போலி.  இன்னொரு காட்டு:  வசந்தம் பசந்த.
இதுவுமது:   வகு > பகு

எழுத்துப்பிழைகள் தோன்றின் பின் திருத்தப்பெறும்.
 

திங்கள், 17 டிசம்பர், 2018

இகரச் சுட்டில் இறுதலும் இறங்குதலும். (ஈ~/தல்/னம்)

தலைப்பில் உள்ள இரு சொற்களையும் இப்போது அலசுவோம்.

இகரச் சுட்டு என்பது இங்கு என்ற கருத்தை  ( இவ்விடம் என்னும் சுட்டுக் கருத்தை ) ஒருவகையில் அடிப்படையாகக் கொண்டது எனில் அத்துணைப் பிழையாகிவிடாது.

இங்கு இருப்பது -  அதாவது இவ்விடம் என்பது - எப்போது அங்கு அல்லது அவ்விடமாக மாறுகிறது. இது பெரிதும் வரையறவு செய்யப்படாத ஒன்றாகும். இது பேசுவோனின் அல்லது குறிப்போனின் கருத்தெல்லைக்கே மொழி விட்டுவிடுகின்றது.

அங்கு என்பது முன்னிலை இடமாகவும் கூட இருக்கலாம். ஆனால் சற்றுத் தொலைவு இருக்கவேண்டும் என்று தெரிகிறது.  பத்து அடிக்கு அப்பால் இருக்கிறாரே அவர்தாம் எங்கள் அண்ணன். என்று சொல்லாமல் அங்கு இருக்கிறாரே அவர்தாம் அண்ணன் என்றாலும் சரியென்றே சொல்லலாம்.

ஒரு மலையில் நீர் ஓடிவருகின்றது.  அந்த மலைமுகடு எங்கே முடிகிறதோ, அப்போது நீர் இறங்கி விழுகின்றது.


இ  >  இங்கு;
இ > இறு   (முடிதல் வினை).   இறு + தி = இறுதி.

இற்று, இற்ற என்பன எச்சவினைகள்.

இறு விகுதி பெறாமல் முதனிலை (முதலெழுத்து ) நீண்டு  ஈறு  என்றாகும்.
இது சுடு > சூடு என்பது போலவே.

மலை முகட்டின் தரை எங்கு இறுகின்றதோ ( முடிகின்றதோ )  அங்கிலிருந்து நீர் இறங்குகிறது.  இச்சொல் இறு+ அங்கு என்ற துண்டுகளால் ஆனது ஆகும்.
இறு > இறு+ அ+ கு = இறங்கு என்று காட்டி  இறு என்பதில் உகரம் கெட்டது; பின் அகரம் ஏறி சேர்விடம் குறிக்கும் கு வந்து இணைந்து புணர்ச்சியில் ஙகர ஒற்று தோன்றிற்று என்று விளக்கலாம்.

இந்த இலக்கணம் கூறாமல் இறு + அங்கு = இறங்கு என்று சுருங்க உரைப்பின் எளிதாகிவிடும்.

இ : இங்கு.   ஈ :  இங்கு.    எ-டு:  இறு  என்பதிலிருந்து ஈறு வந்தமை காண்க.  இங்கு என்பதும்

ஈங்கு என்று வரும்.  அங்கு > ஆங்கு ;;  உங்கு > ஊங்கு போல.

அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை;
ஈங்கிருந்து ஊங்கு போயின் விட என்பது பொருள்.

இ எனற்பாலது ஈ என வருதலின், இறங்குதல் கருத்தும் உளதாகலின்,  இறங்குதலென்பது மதிப்பின் அல்லது கணிப்பின் இறக்கமும் குறிக்கும்.

இ >  இழி;    இ> இழு > இழி.
இ > ஈ.  ஈ  :  இழி  ( இழிவு ).  இ> ஈ> ஈ+ ( ன் ) + அம் = ஈனம்.  (  மதிப்பு இறங்கிய நிலை ).  இன் என்ற இடைச்சொல் இகரமிழந்து   0ன் என்று நின்றது.  இது ஒரு தலைக்குறை ஆகும்.

ஈனம் = ஹீனம்.

ஈ > ஈகை ( ஈதல் ).   ஈதல் இசைபட வாழ்தல்.

ஈதலின் வருவது பெருமை;  அதிலும் ஈனமுண்டோ?  ஒருநாள் உரையாடுவோம்.

உரையாடுவோம் என்று சொல்லி அவற்றுள் விடுபாடு இருப்பின் தெரிவிக்கவும். மறந்திருக்கலாம்.  நன்றி.

பிழைத் திருத்தம் பின்.

ஐயப்ப பூசை உணவுப் பந்தல்






ஐயப்ப  பூசைக்  குணவுப்பந்தல்
அதோ தெரிகு  தலங்காரமே
பையப் பற்றுடன் அதையணுகிப்
பணிந்தவ் வையன் ஒளிபெறுவீர்.
நையப் பலதுயர் வாழ்விதிலே
நாடவும் கூடுமோ ஓடிவிடும்
செய்யப் புகுவதும்  உய்யுவண்ணம்
மெய்யொடு மேன்மை வளர்பெறுமே

சனி, 15 டிசம்பர், 2018

அனுபவம் என்பது அமைந்தவிதம்.

அனுபவம் என்பது நுகர்வு.

அனுபவம் என்ற சொல்லின் அமைப்பினை அறிந்துகொள்வோம்.

எதையும் நுகர்வதற்கு அதை அணுகினாலே இயலும்.   அணுகு என்ற சொல்லே அனு என்று திரிந்தது.  அண்,  அண்மை, அணுக்கம், அணுகு என்பன தொடர்புடைய சொற்கள்.

பாவித்தல் என்பது பயன்படுத்துதலைக் குறிக்கும் சொல். இது பாவி ( சொற்பகுதி) + அம் = பவம் என்றான சொல்.  முதனிலை குறுகித் தொழிற்பெயராய் அமைந்தது.  இது தோண்டு+ ஐ = தொண்டை என்பதுபோலும் குறுக்கமாகும்.   சா+ (வ்) + அம் =  சவம் என்பது போலுமாம்.

பயன்பாட்டுப் பொருள் வழக்கில் உள்ளதாகும்.

அனுபவம் என்பதன் சொல்லமைப்புப் பொருள்:  அணுகிப் பாவித்தல் என்பதே.

இதை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்றாலும் பாவித்தலென்பதையும் இங்கு விளக்குவோம்.

பாவுதல் என்பது :தாண்டுதல், நடுதல்,  பரப்புதல்,  பரம்புதல்,  பற்றுதல், வேர்வைத்தல், விரித்தல், பரவுதல், வியன்படுதல், படர்தல்,  விதைத்தல், தளவரிசை இடுதல் எனப் பல்பொருளொரு சொல்.

இச்சொயல்களிலே ஒரு பொருளை நுகர்தலின்றி அல்லது அறிதலின்றி ஒன்றும் செய்ய இயலாதென்பதை அறிக.

பாவுதல் என்பது உழவுத்துறை சார்ந்த சொல்லென்று தெரிகிறது.

இதன் மூலவடிவம் பர என்பதாகும்.   பர > பார் > பா> பாவு.

சொல்லும் கருத்தும் பரவி நிற்கும் நிலையிலுள்ள ஆக்கமே பா, பாடல், பாட்டு என்பவை எல்லாம்.  தொடுத்தலில் சொல்லும் பொருளும் பரப்பி வைக்கப்படுகிறது.

பார் என்பது பரந்த இவ்வுலகம்.  விரிநீர் வியனுலகு.

பாவுதல் என்பது தன்வினை வடிவச் சொல். இதனை பிறவினைப்படுத்தினால்
பாவு+ வி + தல் =  பாவுவித்தல் என்றாகும். இதில் வுவி என்பன ஒலித்தடையை ஏற்படுத்துவதால் ஒரு வுகரம் விலக்கப்படும்.  விலக்கவே பாவித்தல் என்ற சொல் அமைகிறது. பின் முதலெழுத்து குறுகி அம் விகுதி பெற்று அனுபவம் ஆயது.

இஃது ஒ ரு பேச்சு வழக்குச்சொல்.  அயல்தொண்டும் செய்கிறது.

பிறவினையின் பிறவினையும் உளது அறிக:  பரவு ( தன்வினை);  பரப்பு ( பிறவினை ).

பரப்பு > பரப்புவித்தல்.  தானே போய்ப் பரப்பாமல் இன்னொருவனை ஈடுபடுத்திப் பரப்பும்படி செய்தல்.  தாண்டு> தாண்டுவித்தல். ( ஒரு நாய் எரியும் வளையத்தினுள் தாண்டி ஓடும்படி செய்தல் என்பது ஓர் எடுத்துக்காட்டு).

சிற்றூரில் அமைந்து சீருலகில் உலவும் இச்சொல்லைக் கண்டு நாம்
மகிழ்வோமாக.

குறிப்பு:

விதந்து அமைவது விதம்.


MODI: பக்கத்து நாடு அட்டாகாசம் பாரதப் பிரதமர் பறத்தல்

பதவிக்கு வந்தவுடன் பாகிஸ்தானுடன் அமைதி உடன்பாடு காணலாம் என்றுதான் மோடி அங்கு சென்று அளவளாவினார்.  தமது பதவியேற்புக்கு அந்நாட்டுப் பிரதமரையும் அழைத்து மரியாதை செய்தார்.  ஆனால் எல்லை தாண்டிய பயங்கரவாதம் நின்றபாடில்லை.

அறுவைத் தாக்குதல்  ( சர்ஜிக்கல் ஸ்டிரைக்) கூட செய்துபார்த்தார்.  அப்போதும் ஓயவில்லை.

படையணிகள் போதுமான தயார்நிலையிலும் இல்லை.  வட எல்லையில் ஒழுங்கான விமான ஓடுபாதைகளும் இல்லை.  இந்திய வான்படையில் மட்டும் 29 வானவூர்தி அணிகள் குறைபாடாக இருந்தன.  வாங்க வேண்டிய வானூர்திகளை முன்னைய அரசும் வாங்கவில்லை.   மற்ற நாடுகளின் ஆதரவும் குறைவாகவே இருந்தன.

இந்த நிலையில் மோடி ஓடினார், ஓடினார்,  உலகின் ஓரங்களுக்கெல்லாம் ஓடி ஒப்பந்தங்கள் பல செய்துகொண்டு ஆயுதங்களையும் வாங்கினார்.  தோட்டா இல்லாத தரைப்படைத் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு என்ன தான் செய்வது.   அவர் நினைத்தது போல் நாட்டு வளர்ச்சியில் முழுமையாக ஈடுபட் முடியாவிட்டாலும் பல செய்துள்ளார்.

41 வெளி நாட்டு ஓட்டங்களுக்கு  கிட்டத் தட்ட 52 மில்லியன் அமெரிக்க  டாலர்கள் செலவு செய்யவேண்டியதாயிற்று.  இந்தியக் கடற்படைக் கப்பல்கள் சிங்கப்பூரில் வந்து சேவைகள் பெறுவதற்கும் இங்கு வந்து பேசி வெற்றி கண்டுள்ளார்.

மோடி வெளிநாட்டுக் காரர் அல்லர்.  அதனால் போர் வந்துவிட்டால் வெளியில் ஓடித் தப்பித்துக்கொள்ளவும் முடியாது.   வேறு சில தலைவர்களுக்கு அத்தகைய வசதி வாய்ப்புகள் இருந்தன.

போரில் இந்தியா தோல்வி அடைந்தாலும் வெட்கக் கேடு தான்.

இவ்வளவு செலவு செய்யலாமா என்பது ஞாயமான கேள்வியாகத் தெரியலாம்.  எண்ணெய் ( பெற்றோல்)  உள்பட வெளிநாட்டிலிருந்துதான் கிடைக்கிறது .  (ஈரான்).  எல்லாவற்றிலும் குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது எளிதன்று.

உதைக்க வருவான் எதிரி என்றால் பதைக்க வேண்டுமே நெஞ்சம்.

அப்படிச் சண்டை ஏற்பட்டிருந்தால் இன்னும் பல கோடி வெள்ளிகள் செலவும் உயிருடற் சேதமும் பெரிதாய் இருந்திருக்கும். அதை நோக்க இந்தச் செலவு சுண்டைக்காய்தான்.  ஒரு எறிபடையின் (ப்ராமோஸ்)  விலை என்ன தெரியுமா?  ஒரு போருக்கு என்ன செலவாகியிருக்கும்?  வலிமைச் சமநிலையை ஒருவாறு காத்து இந்த ஓட்டங்களின் மூலம் அமைதியை நிலைநாட்டியுள்ளார் மோடி.

அவர் மிதிவண்டியில் போய் இந்த உலகத் தலைவர்களையெல்லாம் சந்தித் திருக்க முடியாது.  என்ன செய்வது!

https://newsin.asia/modis-41-jaunts-abroad-in-four-years-have-cost-the-indian-tax-payer-us-51-6-million/

வயிற்றுவலி வந்து மருத்துவமனைக்குப் போனால் செலவுதான்.  செலவு வருகிறதே என்று செத்துப்போகவா முடியும்?

https://www.republicworld.com/india-news/politics/whose-foreign-visits-were-more-expensive-pm-modis-or-former-pm-manmohan-singhs-here-are-the-numbers

மன்மோகனின் செலவும் மோடியின் செலவும் ஏறத்தாழ அணுக்கமாகவே
இருக்கின்றன என்பதை அறிக.

மோடியும் தேவையற்ற செலவுகள் ஏதும் செய்பவர் அல்லர்.  யோகப் பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் உடையவர்.


வியாழன், 13 டிசம்பர், 2018

வாகன நெரிசலுக்கொரு வண்ணக்கவி

தம்பிமாரே  அக்காமாரே பாருங்கோ  ----- வண்டி
ததிகிணதோம் போடுதிங்கே கேளுங்கோ!
தும்பிகூடப் பறந்தப்பாலே கூறுங்கோ ---- போக
தோதுகிட்டு மோவுங்காலம் நீளுங்கோ!

வாகனத்து  நெரிசலிலே பாதிநாள் --- நீங்கள்
படுக்கைபோட்டுத் தூங்கலாம்ே  போதுமோ?
வேகமாகப் போகலாமென் றெண்ணினீர் ----மாவு
வேகவைத்துப் பக்கொடாக்கள் பண்ணுவீர்.

காலம்நேரம் மூளைகழன்று போகுமே---- எந்தக்
காலமிந்த இடர்கள்நல்ல  தாகுமோ?
நீலவானை நெஞ்சில்வைக்கும் கவியிலே -----கெட்ட
நெரிசல்தன்னை வண்ணிக்கின்றேன் புவியிலே.


இன்று மலேசியாவிற்குப் போக எண்ணினால் வாகன
நெரிசல் வான்முட்டிக் கிடக்கிறது.  இங்கு நீங்களே சொடுக்கிப்
பாருங்கள்

https://www.onemotoring.com.sg/content/onemotoring/home/driving/traffic_information/traffic-cameras/woodlands.html 

விடமும் விரதமும்

சில சொற்களின் அமைப்பை  நாம் மறத்தலாகாது.  அவற்றை ஈண்டு காண்போம்:


விடு என்பதன் அடியாகப் பிறந்ததே விடம் என்ற சொல். இதன்  அயல் திரிபு: விஷம் என்பது.  ட என்ற எழுத்துக்கு அயலில் ஷ என்பது ஈடாக நிற்கும். இதற்கான சொல்லமைப்புப் பொருள்:  நம் அன்றாட உணவில் விடத்தக்கது; அதாவது உண்ணக்கூடாதது.  இனி, பாம்பு முதலியன மனிதனின் உடலுள் விட்டு மரணம் விளைவிப்பது என்றும் பொருளாம்.

விடு > விடம்.  இதில் அம் விகுதி.

இனி விரதம் என்ற சொல்லை ஆராய்வோம்.

 இதுவும் விடு என்ற அடிச்சொல்லினின்று தோன்றியதே.  விரதமாய் இருப்போர் சில உணவுகளை விட்டு ஏற்புடையதை உண்பர்..  மாமிசம் என்பதை விட்டு மரக்கறி யுணவு உண்பது ஒரு விரதமே. சிலர் செவ்வாய் வெள்ளி ஆகிய நாட்களில் கோழி மீன் முதலியவை உண்ணார். இது வொரு விரதம் ஆகும்.  எப்போதும் சைவ உணவே உண்பது விரதம் என்று சொல்வதில்லை.  இவர்களைச் சைவ உணவினிகள் என்பர்.

விடு >  விடு + து + அம் =  விடதம். விடு என்பதிலுள்ள உகரம் நீங்கியது, ஓர் அகரம் தோன்றியது.  து என்பதில் உகரம் நீங்கியது,

விடதம் என்பதை விரதம் எனின், டகரம் ரகரமாயிற்று என்பதாம்.

வேறு சொற்களிலும் இவ்வாறு நிகழ்வதுண்டு:

மடி > மரி.
குடம்பை > குரம்பை.
அட >  அர > அரே.-  ஹரே.
சூடு> சூடியன் > சூரியன். சூடு தரும் ஒரு பெரிய உடு.
கொள் > கோடல் (கொள்+தல் ) > (கோரல்) > கோருதல்.  ஒன்றை கொள்ள விழைந்து கேட்பதுதான் கோருதல்.  

கொள்> கோரு  ஒ.நோ:  மாள் > மரி. குறில் நெடில் மாற்றமும் ளகர ரகரத்
திரிபும்,  கோருதல் என்பது கொள்ள விழைதல்.

பிழைத்திருத்தம் பின்,

விடை > விடையம் > விடயம் > விஷயம்.  இதன் அடிச்சொல்லும் விடு
என்பதே. விடுக்கப்பெறும் செய்தியே விஷயம்.

அறிக மகிழ்க.


வினையிலிருந்து இன்னொரு வினைச்சொல் உருவாக்கம்

தமிழ்மொழி தனக்கு வேண்டிய சொற்களைத் தானே படைத்துக்கொண்டது. இதனை சொல்லித் தெரிந்துகொண்டதில்லை.  ஆய்வே ஆசிரியன். இப்போது இதனைச் சில சொற்களைக் கொண்டு நிலைநாட்டுவோம்.  பிறரும் கூறியிருத்தல் கூடும். சொல்லாய்ந்த யாவருடைய நூல்களும் நமக்குக் கிடைக்கவில்லை; சிலவே கிட்டின.  ஆகவே எங்காவது யாம் படிக்காத நூலொன்றில் கூறப்பட்டிருக்கலாம். எமக்கும் படித்தவை சில இப்போது நினைவிலில்லை.

ஒரு பொருள் இன்னொரு பொருளை அடுத்துச் செல்கிறது.

அடு >  அடுத்தல். (வினைச்சொல்).

அடுத்த பொருள் நின்ற பொருளைப் போய் அடைக்கிறது.

அடு >  அடு+ ஐ >  அடை

அடை > அடைத்தல்.   அடைதலுமாம்.

இவ்வாறு வினையினின்று இன்னொரு வினைச்சொல் தோன்றுகிறது.

சில பொருள்கள் தண்ணீரை இழுத்துக்கொள்கின்றன.  துணி காகிதம் முதலியன அத்தகையவை.  ஈர்த்தல் என்பது இழுத்துக்கொள்ளுதல் என்று பொருள்படும்.  இழுக்கப்பட்டு உள்ளிருக்கும் நீர்ப்பதம் ஈரம் எனப்படும்.  இது
ஈர்+ அம் என்று பகுதி விகுதிகள் புணர்த்த சொல்லாகும்.

ஈர் ( வினை ) > ஈரித்தல்.  (  நீரால் ஈரம் கொள்ளுதல் ). (  இன்னொரு வினைச்சொல்).

வேண்டின் ஈர்ப்பித்தல் என்றொரு சொல்லையும் உண்டாக்கலாம்.  இது இழுக்கச் செய்தல் என்று பொருள்படும். பிறவினை என்பர்.  ஈர் என்பது தன்வினை.

அறிந்து மகிழ்வீர்.

எழுத்துப்பிழைகள் திருத்தம் பின்.

புதன், 12 டிசம்பர், 2018

அரசன் என்ற சொல்

அரசன்  என்ற சொல்லினைப் பற்றிச் சிந்திப்போம்.  இன்று பல நாடுகளிலும் அரசன் என்ற சொல் பெரிதும்  வழங்கவில்லை என்றாலும் அரசு என்பது வழங்கி வருகிறது.  ஒரு நூறு  ஆண்டுகளின் முன்  அரசு என்பது பெரிதும் வழங்கவில்லை என்று தோன்றினாலும் அதற்கான ஆதாரங்கள் எமக்கு கிடைத்தில.  பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளை நோக்கினால் "அரசாங்கம் "  என்ற சொல் வழக்கில் இருந்தது தெரிகிறது.  "அரசாங்கத்துக்  கோழிமுட்டை அம்மிக் கல்லை உடைக்கும் " என்பது தமிழ்ப் பழமொழிகளில் ஒன்றாகும்.

அரசு அல்லது அரசாங்கம் என்பதென்ன?  அதன் வரையறவு என்ன? என்பதை பல அறிஞர்கள் ஆய்ந்துள்ளனர்.  இவர்களில் லெனின் முதல் செயின்ட் தாமஸ் அக்குவினாஸ் வரை அறியப் படுகின்றனர். பிறப்பினால் பட்டம் சூட்டிக் கொண்டு நாட்டை ஆள்பவன் அரசன் என்று நாம் குறித்துக் கொள்ளலாம். நம் பயன்பாட்டுக்கு இது போதுமானது ஆகும்.

அரசன் இன்றியோ இருந்தோ  ஆட்சிக் குழுவினால் ஆளுதல் நடைபெறுமாயின்  அது அரசு என்னலாம் .

அரசு என்ற சொல்லுக்கு வருவோம்.

அரட்டு என்ற சொல்  தமிழ்ச் சொல். அது ஒலி எழுப்பி அச்சுறுத்தல்  என்ற \பொருளில்  இன்றும் வழங்குவதாகும் .  ஒரு பத்துப் பேரை வைத்து இயக்குபவன் வலிமை உடையவனாக இருக்க வேண்டும். அவன் பலமாக எதையும் அவர்கள் முன் சொல்வோனாக இருக்க வேண்டும். கத்தி அதட்டுதல்
தேவைப்படும் ஓர் அமைப்பெனல் தெளிவு.  பலர் அச்சத்தின் காரணமாகப்  கீழ்ப்படிதல் உண்மை.  அத - அர என்பன தொடர்புடைய சொற்கள்.

கட்டளை இடும் வலிமை உடையவனே அரசன்.  அவன்றன்  அதிகாரம் நிலைநாட்டப்பெற்ற பின்புதான் இயல்பாகக் கீழ்ப்படிதல் பின்பற்றுதல் முதலியவை தொடங்கும்,  நடைபெறும்.  அர என்ற அடிச்சொல் முன்மை வாய்ந்த சொல் ஆகும்.

அர > அரசு.   இதில் சு என்பது விகுதி.  இதுபோல் சு விகுதி பெற்ற சொற்கள் பல. எடுத்துக்காட்டாக ஒன்று:  பரி > பரிசு.  பரிந்து வழங்குவது பரிசு.   பரிதலுக்குப் பின் காரணங்கள் இருக்கலாம்.  அவை வேறு.

இப்போது அர என்ற அடிச்சொல்லை அறிந்துகொண்டோம்.



 

செவ்வாய், 11 டிசம்பர், 2018

பூச்சியம்

தமிழிலுள்ள எண்ணுப்பெயர்கள்  அடிப்படையாக ஒன்றுமுதல் ஒன்பது வரை. ஒன்றுமின்மையைக் குறிக்க இப்போது ஒரு சுழியம் இடப்படுகிறது.  இதற்குப் பூச்சியம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப் பூச்சியத்திற்கு வேறு பெயர்களும் உண்டு. சுன்னம், சுழி, சோகி ( சோதிடக்கலையில் ) என்பனவும் இதைக் குறிக்கவரும் என்று தெரிகிறது.

பூசுதல் என்பதொரு வினைச்சொல். இதற்குச் சித்திரமெழுதுதல் என்றொரு பொருளும் உண்டெனினும் வரியை இழுத்தல், வரி உண்டாக்கிக் கோடுகளைத் தொடர்புறுத்தல் என்றும் பொருளாகும்.

ஒரே கோட்டினைத் தொடர்புறுத்துவதாயின் அக்கோடு சுற்றிவந்து தொடங்கிய இடத்தையே தொடவேண்டும். இதுவே எளிதான தொடக்கம் தொடுதலாகும்.  இன்னும் கோழிமுட்டை என்றொரு பொருளும் உள்ளது.

இவற்றை நோக்க பூசுதல் என்ற வினைச்சொல்லிலிருந்து பூச்சியம் தோன்றியதை உணரலாம்.

பூசு > பூச்சு > பூச்சியம்.

பூசு + உ :  பூசுதலில் முன் செல்லுதல்.  இது பூச்சு என்று உருக்கொள்ளும்.

பூச்சு+  இ  :  பூச்சு இங்கே ( தொடக்கத்துக்கே) வந்துவிடுதல்.

எனவே இதிலுள்ள துண்டுச்சொற்கள்:

பூசு  ( வினைச்சொல்)

உ:   ( முன் செல்லுதல் )  சுட்டுச்சொல்.

இ  (  திரும்பி இங்கே வந்துவிடுதல் )  சுட்டுச்சொல்.

அம் என்பது அமைவு காட்டும் விகுதி.

இவை அனைத்தும் இணைக்க பூச்சியம் என்ற சொல் கிடைக்கிறது.

இது பூச்சுவேலை செய்தவர்களால் அல்லது வண்ணம் தீட்டுவோரால் அமைக்கப்பட்ட சொல் என்பதில் ஐயமில்லை.  ஆனால் நன் கு அமைக்கப்பட்டுள்ளது. சுட்டுக்களைப் பயன்படுத்தியதும் திறமை ஆகும்.a

அட்க்குறிப்பு:

பூஜை ( பூசை) என்பதிலிருந்து பூஜ்யம் வந்ததென்பது முன்னையோர் கருத்து.
பூஜை மதிப்பிற்குரியது ஆதலின் பூஜ்யமுன் மதிதக்கது என்பது அவர்கள் கருந்து. இதனினும் வரைந்து இணைத்தல் என்ற பூசுதல் என்ற சொல்லிலிருந்து வந்ததென்பது இன்னும் மிக்கப் பொருத்தமானது ஆகும். முன்னையோர் பூசுதல் என்னும் சொல்லைஆயவில்லை.





தேர்தலில் யாருக்கும் வாக்கு.......

விளைத்திட்ட பூண்டு மூட்டை
விற்றுத்தான் பணமாய்ப் பைக்குள்

நுழைத்திட்ட பின்னர் வாழ்க்கை
நோவதும்  இன்றித் தோன்றும்

நலத்திட்டம் இன்மை தன்னால்
நாட்டுழ வோர்தம் துன்பம்

நிலைத்திட்ட அரசை மாற்றக்
கழுதைக்கும் கிட்டும் வாக்கே.


சில நாடுகளில் இது தெளிவாகியுள்ளது. அரசின்மேல்
கோபம் மேலிட்ட போது கழுதை வேட்பாளராகி 
அரசை எதிர்த்து நின்றாலும் அதுவும்
வெற்றி பெற்றுவிடும்.

மக்கள் கோபம் அத்தகையது.  




திங்கள், 10 டிசம்பர், 2018

ச த ஒலித்தொடர்பு மோனைகளிலும் தெரிகிறது.

நீங்கள் தமிழ்ப்பாடல்களைப் பாடும்போதோ அல்லது சிறந்த கவிகளின் பாடல்களைப் படிக்கும்போதோ ( வாசிக்கும்போதோ ) 1 தகர சகர ஒலித்தொடர்பினைக் கூரிந்து கவனிக்கவேண்டும்.

சகரத்திற்கு தகரமும் தகரத்திற்குச் சகரமும் மோனைகளாக வரும்.

கீழே தரப்படுவது ஒரு திரைப்பாடல்தான் என்றாலும் அதை எழுதிய கவி பட்டுக்கோட்டை மோனையில் நல்லபடி கவனம் செலுத்தியுள்ளார்.

தூங்காதே தம்பி தூங்காதே ---- நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே.

இங்கு தூ என்பது சூ என்பதுபோலவே சோ என்ற அடுத்த அடி முதலெழுத்துக்கு  மோனையாய் வருவது காண்க.

இந்தக் கர்நாடக சங்கீதப் பாடலையும் நோக்குவீர்:

சுந்தர மன்மத மோன நிலை கண்டு
தொண்டு செய்வாய் மனமே.

சந்ததம் என்றும் சிவகாமி பங்கனார்
ஆனந்தமாகிய ஆனந்த நாடக.....

என்பவை நினைவிலுள்ள வரிகள்.

மோனை: சு > தொ.  இது சு > சொ என்பது போலவே ஆகும்.

---------------------------------------

அடிக்குறிப்பு:

வாய் > வாயித்தல் > வாசித்தல்.  யகர சகரப் போலி.

இன்னொன்று: நேயம் > நேசம்.

நெய் + அம் =  நேயம். முதனிலை நீட்சிப் பெயர்.
நெய்போல் உருகிக்கொள்ளும் நட்பு என்பது இதன் பொருள்.

நேயம் > நேகம் > ஸ்நேகம் .  ( அயலாக்கத் திரிபு ).
யகர ககரத் திரிபும் காண்க.

தங்கு>  சங்கு > சங்கம்.  த ச ஒலித்தொடர்பே.

ஓர் உயிரி தங்கி இருப்பது சங்கு.
புலவர்கள் தங்கிக் கவிபாடிச் சென்ற இடம் சங்கம்.


சின்மயம் சொல்லமைப்பு.

உலகம் என்பது ஒரு மேடை என்று ஒப்பிட்டுக் கூறிய அறிஞரும் உள்ளனர்.

நம் மனம் ஒரு மேடை என்றும் அதில் இறைவன் ஆடுகின்றான் என்றோரும்
இருக்கின்றனர்.

இறைவன் உலகம் முழுவதையும் தன்  நடமாடும் அல்லது நடமிடும் இடமாகக் கொண்டவன் என்றும் ஓர் அறிஞர் கூறுவார்.

இறைவன் ஒரு பெரிய ( உலகம் போன்ற )  இடத்திலும் நிறைந்து உள்ளான். மனம் போன்ற சிற்றிடத்திலும் நிறைந்து உள்ளான்.

உலகம் சிவ மயம் .

நம் உள்ளமும் சிவ   ம யமே.

He prevails in the entire world; he also prevails in our hearts.

உலகம் பெரிய மயம் ;  உள்ளம் சின்ன மயம்.

உள்ளம் அவனுக்குச் சிற்றம்பலமும் ஆகும்.  

அம்பலமாவது   ஆடுமிடம் 

கோவிலும் சின்ன மயமே .  உலகமே பெரிய மயம் ,

மயம்  =  கலந்திருத்தல்.

மயங்குதல் :  ஒன்றுபட்டுக் கலந்து நிற்றல்.  இதற்கு வேறு பொருள்களும் உள்ளன.

மய   >மயர்வு   (மயக்கம் ).
மய  > மயங்கு .
மய  >  மயம்
மய >  மயிந்துதல் > ஒன்றில் இன்னொன்று புகுந்து அடங்குதல்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின் ( தொல்காப்பியத் தொடர்).

மல் > மய் .
மல்  > மலைதல்  (மயக்கம் )   மல் > மலைவு  (மயக்கம் ). மலைத்தல் ( மயக்கம் , தடுமாறுதல் )
மல் > மர் > மருள் :  மயக்கம்.
மல் > மால் ( மயக்கம் ).   " உன்பால்  மாலாகினேன் மாதவா " ( கர்நாடக இசைப்பாட்டு ).  "  மாலும் என் நெஞ்சு"  ( திருக்குறள் தொடர்).
 
ஒரு சிறிய இடத்தில் நிறைந்து நிற்றலே சின்ன மயம்  =  சின்மயம் 

ஒரு மயத்தைப் பிற மயங்களும் தொட்டு நிற்கின்றன.

பிற மயங்கள் தொட்டு நிற்கும் ஒரு மயம் மையம் ஆகிறது.

மய > மை.

மையல் : காதல் மயக்கம்   மையல் > < மயல்.
மை>  மைத்து :  மயக்கம்.  ( து : தொழிற்பெயர் விகுதி:  விழு > விழுது: கை > கைது ).
"  மையாத்தி நெஞ்சே "  ( திருக்குறள் தொடர் ).
மையாத்தல் > மயங்குதல்; ஒளிமழுங்கிய் நிலையில் மயக்கம்.
மை > மைனா :  அலகில் மஞ்சள் நிறம் கலந்த சிறு பறவை. கருவலானது; வெள்ளைச் சிறகும் உண்டு. (   நிறங்கள் மயங்கிய பறவை). பார்த்து மயங்கச் செய்வது எனினும் ஆம்.
மையா  ( மை+ ஆ ) =  மை நிறத்துக் காட்டுப் பசு அல்லது கலந்த நிறமுடைய பசு.
மைமா > கரும்பன்றி.  (  மா = விலங்கு).

அந்த மையத்திலும் இறைவன் உள்ளபடியால், அது சின்ன மையமும் ஆவதால் அதுவும் சின்மயமே;  அதாவது  "சின்மை."


சிவமயம் என்றால் சிவம் யாவிலும் கலந்துள்ளவர்,  அவரில்லாத இடமில்லை என்பது கருத்து.   ஒரு சிறு இடத்தில் ( உள்ளம், கோவில் ) அவர் கலந்து வெளிப்படுபவர்.  அது சின்மயம் என்பது உணர்த்தப்பெற்றது.

ஞானி என்பவன்,  இறைவனோடு சிந்தனைமூலமாக ஒன்றித்து நிற்பவன்.  ஞான் (  நான் )  + நீ (  நீ  )(கடவுள் )  =  ஞானி.  ஞான்+ நீ + அம்  =  ஞானம்.  ஆன்மாவும் இறைவனும்  ஒருபண்புடைமையால், ஆன்மா ( சிறியது ) சின்மயம் ஆகும்.  ஞான் நீயுடன் ஒன்றிய பின் ஞான் மறைந்துவிடுகிறது,

கருதுக:  நகர ஞகரத் திரிபுகள்.

நான் > ஞான்
நயம் > ஞயம்   ( ஞயம் பட வுரை - ஒளவை )
நாயம் ( நய+ அம் )  > ஞாயம்.  ( நயமுடைய தீர்மானம் அல்லது குதிர்வு ) திரிபு: நியாயம்.  நய+ அம்=  நாயமென்பது  முதனிலை திரிந்த தொழிற்பெயர். வினைச்சொல்: நயத்தல். ( நலமாக்குதல்,  நயம்படுத்துதல் ).
பாவாணர்:  நி( ல் ) + ஆ(ய) + அம் = நியாயம்:  நிற்பதுடையது,  இவ்வாறாயின் நியாயம் வேறுசொல்.


கருத்துகட்கு ஏற்ப அமைந்த சொற்கள் இவை. மயம் சின்மயம் என்பன. அறிந்து மகிழ்க.

திருத்தம் பின்.

எழுந்தபின் நலமே



(தாழிசைகள்.)


இந்தவேலை அந்தவேலை எந்தவேலை
 தானும்,
இருந்துவிட்டால் எழுதுவது நானுமேதான்
எதை?

சொந்தவேலை வந்தவேலை செய்துகொண்டி-
ருந்து,
சூரியெனக் கூரியதோர் விரைவதனிற்
பதை!

உந்துமன வேலைகளை ஓய்வுனவே
தள்ளி
ஒன்றுகூடச் செய்யேனேல்  நன்றலாத
விதை,

வெந்துலகில் மேலெழுமோர் வெதும்புகிற
துயர்,
வீழ்ந்துவிட்டேன் உறங்கியதால் எழுந்திடநன்
னிலை.

அரும்பொருள்:

ஓய்வுனவே  =  ஓய்வு உன்ன ( ஓய்வு கருதி )
பதை :  நெஞ்சு பதைத்தல் கொள்.

உந்துமன  மனம் உந்துகிற.
விதை :  தொடக்கம் என்னும் கருத்தில்.

நன்றலாத:  நன்மை இல்லாத.

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

அயல் திரிபுகள் சில

சில அயற்றிரிபுகளைத் தெரிந்துகொள்வோம்.

(தமிழ்)    >   ( அயல் திரிபு)

கரு  >   கிரு.    ( கருப்பு )
மத >  மிருத.   (  மதங்கம் > மிருதங்கம்).
புற >  பிர அல்லது ப்ர  (  புறச்சாற்று  > பிரசாரம் ).  வெளியிற் பேசுதல்.
குறு >  கிரி. (  சிறு மலை).   குன்று > குறு (  இடைக்குறை).  வேதகிரி.
( குன்று + அம் = குன்றம் ),
மக >  மிருக. ( பிறத்தல் உடையது ).
கத > கிருத  ( ஒலி ).
முத > ம்ருத   (  அம்ருத ).
சுதி  >   சுருதி.
நிறு >  நிர்   (  நிறுவாகம் ( நிறுவப்பட்டது )  > நிர்வாகம் ).

சனி, 8 டிசம்பர், 2018

ராஜஸ்தான் தேர்தல்: விவசாயிகள் இடர்வாழ்வு,

விவசாயம் என்பதே மிக்க விழுமியது:  அதாவது மிகவும் சிறந்தது,  இந்தச் சொல்லின் அமைப்பிலே அந்தத் தொழில்தான் சிறந்த சாதனை என்ற கருத்து அடங்கி இருக்கின்றது.  வி = விழுமிய; வ= வாழ்கைக்கு, சா = சார்வான,  அம்: விகுதி,  தொழில்முறை என்று குறிக்கும்.  இது ஒரு முதனிலைக் கோவைச் சொல்  acronym ஆகும். முற்கூட்டுச் சொல் எனினும் ஆம்.

https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_54.html

 வாழ் என்ற தமிழ்ச்சொல் பல மொழிகளிலும் பரவிய சொல்லே. இலத்தீன் மொழியில் விவா என்றால் உயிர்வாழ்க்கை .   வாழ்வு என்பதும் விவோஸ் ( வைவோஸ் என்பர் )  என்று இலத்தீனில் வரும்.  "இன்றர் வைவோஸ் கிஃப்ட்"  என்றால் உயிருடன் உள்ளபோதே சொத்துமாற்றி வழங்குதல் " என்பதாகும். இதற்கு எதிரான நிலை: "டெஸ்டமென்டரி கிஃப்ட்" என்பது:  விருப்ப  ஆவணமூலம் மாற்றிவிடுவதாகும். இந்த ஆவணம் இறந்தபின் நடப்புக்கு வருவது.

ஆனால் விவசாயிகளுக்கு உள்ள பிரச்சினைகள் பல.  பிரச்சினை என்ற சொல்லில் உள்ள பிரச்சினையைக் கீழே தரப்படும் இடுகையில் கண்டுகொள்ளலாம்,

பிரச்சினை:  https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_21.html

வசுந்தரா ராஜே அம்மையார் முதலமைச்சராக வீற்றிருக்கும் ராஜஸ்தானில் பூண்டு விளச்சல் நல்லபடி அமைந்தாலும் அதற்கான நல்ல விலை கிடைக்காத படியினாலும் இன்னும் வேறு பல விளைச்சல்களில் உண்டான விலைக் கோளாறுகளாலும் சில பல விவசாயிகள் இறந்துவிட்டனர் என்பது நமக்கு எட்டும் செய்தி அல்லது வதந்தி.  இவற்றுள் எதுவானாலும் இப்போது இது தேர்தல் முடிவுகளிலும் ஒரு பிரச்சினை ஆகிவிட்டது.

விவசாயம் ஒரு விழுமிய வாழ்க்கை முறை அன்று என்றும் கூறவியலாது. ஏனென்றால் நமக்கு உணவு என்பது விவசாயத்திலிருந்துதான் கிடைக்கிறது.

விவசாய நெருக்கடிகளினால் தாய்லாந்து தலைமையமைச்சர் ஒருவரும் பதவி நீக்கத்துக்கு உள்ளானது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

விவசாயம் என்பது ஓர் இடர்வளர் தொடர்வாழ்வாக அன்றோ இருக்கின்றது.


அடிக்குறிப்புகள்:

இவற்றையும் வாசிக்கலாமே:

பலவகைச் சொல்லாக்கம்:  https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_99.html

நஞ்சை புஞ்சை முதலியன https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_27.html

ஆட்சேபம் :   https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_4.html 

மொழிப்பெயர்: தக்காணி, தெக்காணி

மொழிகளைப் பிறர் உருவாக்கிக்கொண்டது போலவே  முஸ்லீம்களும் சொந்தப்பேச்சைப் பண்படுத்திக்கொண்டதில் வியப்பில்லை.  ஆங்கிலோ இந்தியர்கள் கூட அவர்களுக்குள் பேசிக்கொள்ள ஒரு மொழியைப் பயன்படுத்திக்கொண்டனர் என்று தெரிகிறது.  இதைப் பேசும் ஒரு குடும்பத்தினரையும் அறிந்து  அளவளாவியதுண்டு. இப்போது அவர்கள் எங்கு சென்றனர் என்று தெரியவில்லை.

முஸ்லீம் பரம்பரையினர் நண்ணிலக் கிழக்கு  (  மத்தியக் கிழக்கு )  நாடுகளின் மொழிகளைக் கலந்து பேசுவதும்  கிறிஸ்துவ வழியினர் போர்த்துக்கீசிய மொழியைப் பெரிதும் விரும்பிக் கலப்பதும் காணலாம்.

இது நிற்க.

தக்காணி என்பது தக்கு+ அணி என்பதன் திரிபு என்பர்.    தக்கு என்பது தாழ்ந்து செல்லும் நிலப்பகுதி. ( வடக்கிலிருந்து தெற்கு செல்லச்செல்ல நிலம் தாழ்ந்து போகும்,  ( கன்னியாகுமரிக்கு அப்பால் நிலம் கடலுள் ஆழ்கிறது ).  இலங்கையை அடைய மேலெழுந்து மீண்டும் இந்துமாவாரிக்குள் ஆழ்ந்துவிடுகிறது.

கிழக்கு என்ற திசைப்பெயர்  ( தென் கிழக்கு)    கீழ் என்ற சொல்லினின்று வரும்.
நிலம் கீழாகி இறுதியில் கடலுள் இறக்கமாகச் செல்வதையும் அறியலாம்.

இனி தென்+ கண் + இ என்பதும் தெற்கணி > தெக்கணி என்று வருமென்பதை உணர்க.   தென் என்பது தென் திசை.  கண் என்பது இடம்.  இச்சொல் மிகப் பழைய தமிழில் உள்ளதுதான்.

கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடியாள் கண்ணே உள என்ற குறளில் கண்ணே என்பது இடத்திலே என்று பொருள்படும்.

இக்கண் வருக :  இங்கே வருக.

கண் விழி என்றும் பொருள்தரும்.

தெக்கணி என்பதே "டெக்கான்" என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்டு நிலநூலில் விளக்கப்படுகிறது.

தக்காணி, தெக்காணி என்பது தமிழ் முஸ்லீம்கள் கொடுத்த பெயர் என்று அறியலாம்.

இம்மொழிகளில் தமிழ் மூலங்கள் காணப்படுவது வியத்தற்குரியதன்று.

திருத்தம் பின்

வெள்ளி, 7 டிசம்பர், 2018

ஆசிரியர், வாத்தியார் , உபாத்தியாயர் - வேறுபாடுகள்.

உபாத்தியாயர்,  வாத்தியார்,  ஆசிரியர் எல்லாம் ஒரே பொருளுடைய சொற்கள் போல் தோன்றுகின்றன.  ஒரு வகுப்பில் மாணவனிடம் ஒரே பொருளுடைய சொற்களைத் தேர்ந்தெடு என்று ஒரு பயிற்சி தரப்படுகிறது.  மாணவன் ஆசிரியர் என்றால் உபாத்தியாயர் என்று தெரிவிக்கிறான். அப்போது சொல்லிக்கொடுப்பவர் அது சரியென்று அவனுக்கு மதிப்பெண்கள் தருகிறார்.

இது சரிதான்.  தொடக்க நிலையில் சிந்திப்பவர்க்கு இவை எல்லாம் ஒரே பொருளுடையவைதாம்.  மேல் வகுப்பில் அதே மாணவனுக்கு இன்னோர் ஆசிரியர்: இவை பொருள் வேறுபாடு உடைய சொற்கள் என்று சொல்கிறார். இப்போது  இது சரியா என்றால் இதுவும் சரிதான்.

ஒரே பொருண்மை காட்டும் பல சொற்கள் இருக்கலாம். ஆனால் அவை ஒன்றுக்கு ஒன்று நுண்பொருள் வேறுபாடு உடையவை.  ஏரி  குளம்-  இவை இரண்டும் நீர்நிலைகள்தாம்.  ஆனால் ஏரி குளமன்று; குளமும் ஏரியன்று: இவை இரண்டும் கிணறு என்பதில் அடங்குபவையும் அல்ல.

பருப்பொருள் ஒற்றுமை; நுண்பொருள் வேறுபாடு.

வாத்தி:  இது வாய்த்தி என்று வழக்குச் சொல்லால் சிற்றூர்களில் வழங்கி தன் யகர ஒற்றை இழந்து  வாத்தி  ஆனது.  சொல்லமைப்புப் பொருள் கொண்டு நோக்கினால், வாய்ப்பாடம் சொல்லிக்கொடுப்பவன் என்று பொருள்.  வாத்தியார் என்பதில் இறுதி ஆர் பணிவுப்பன்மை அல்லது மரியாதைப் பன்மை ஆகும்.

உபாத்தியாயர் என்ற வடசொல்  உப அத்தியாயி என்று பிரியும். இலக்கணம் சொல்லிக்கொடுப்பவர் என்று பொருள். சமஸ்கிருதத்தில் இது பெண்ணையும் குறிக்கும்;  இலக்கணம் சொல்லிக்கொடுப்பவரின் மனைவியையும் குறிக்கும். சமஸ்கிருதத்தில் இடம்நோக்கிப் பொருள் கொள்ளவேண்டும்.தமிழில் இந்தத் தொல்லை இப்போது இல்லை. கற்பிப்போன் எவனும் உபாத்தியாயர் தாம். இதன் நுண்பொருள் தமிழில் இல்லையாயிற்று.

ஆசிரியன் என்போன் பெரும்புலமை வாய்ந்த வல்லோன். மொழியில் இதை இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று புலவர்க்கும் அறிவுறுத்தும் பெரும்புலமை வாய்ந்தவன்.  எடுத்துக்காட்டு:  தொல்காப்பியனார்.  வடசொல் என்பது வருங்கால் வட எழுத்துக்களை நீக்கி எழுது என்று சூத்திரம் செய்தார். கடல்போலும் பெருங்கல்வியால் இதை இப்படித்தான் செய்க என்று புலவர்க்குக் கட்டளையிடும் அதிகாரம் படைத்தவர்.  கற்றோருலகு அவரைப் பின்பற்றும். மன்னரும் பின்செல்வர்.  இன்று இத்தகைய ஆசிரியர்களைப் பொருளியல் துறையிலும் பிற துறைகளிலும் அவ்வப்போது கண்டுணர்கிறோம்.  பொருளிய நெருக்கடி காலத்திலும் அரசு செலவுகளை மேற்கொள்ளவேண்டு மென்பார். இன்னொருவர் அவ்வாறு செய்யக்கூடாது என்பார். இவர்களுக்குள் கொள்கை வேறுபாடுகளும் இருக்கும். இவர்களை  பொருளியல் ஆசிரியர் எனலாம்.  ஆசு என்பது பற்றுக்கோடு. பற்றி நிற்பது.  ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பற்றி நிற்பார்.   ஐயனாரிதனாரும் தொல்காப்பியனாரும் தம்முள் சில வேளைகளில் வேறுபட்டுச் சூத்திரம் செய்துள்ளனர்.  இருவரும் ஆசிரியர்கள். ஒருவருக்கு இது சரி; இன்னொருவருக்கு இன்னொன்று சரி.  இப்படிப் பட்டவர்கள் ஆசிரியர்கள்.

மக்கள்தொகை பற்றிய தெரிவியலில் ( தியரி )  மால்தஸ் பிள்ளைகள் அதிகம் பெறக்கூடாது என்பதையும் அதற்கான காரணங்களையும் கூறியுள்ளார் ..இப்போது உள்ள ஆசிரியர்கள் பிள்ளைகள் வேண்டும், அதனால் அதிகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கொள்கை வகுக்கின்றனர்.
ஆள்பலம் பற்றிய கொள்கையில் அரசுகளிடையே வேறுபாடுகள் உள்ளன. ஒரு நாட்டுக்கு நல்லது இன்னொரு நாட்டுக்கு ஏலாதது ஆகிவிடுகிறது.

ஆனால் இன்று இந்த நுண்பொருள் வழக்கிறந்துவிட்டது.  வாத்தியார் என்பதும் ஆசிரியர் என்பதும் ஒருபொருண்மைபோல் வழங்குகின்றன என்பதறிக.