திங்கள், 24 டிசம்பர், 2018

கிறிஸ்துமஸ் வாழ்த்து.


ஏசுபிரான் இறங்கிமன மிரங்கி வந்தார்
இன்றதனைப் பண்டிகையாய்க் கொண்ட மக்கள்
மாசிலராய் மகிழ்ச்சியிலே திளைத்து நிற்பார்
மாநிலமேல் தானிவர்கள் அருளை  அன்பால்
நேசமழை பொழிந்தபடி அணைத்துக் கொள்வார்
நிற்புடைய அற்புத்தளை பொற்பில் மிஞ்சும்
பாசமொடு நேசிபிறர் தம்மை உம்போல்
பார்க்குமிதே ஏற்குநலம்  வாழ்க  பண்பே .


நிற்புடைய  -  நிலைத்தன்மை உடைய;
அற்புத்தளை -   அன்பென்னும் பிணைப்பு
பொற்பில் -  அழகில், மின்னும் காட்சியில்.
பாசமொடு நேசிபிறர் தம்மை உம்போல் : இது ஏசுவின் போதனை.
பார்க்கும் :  உலகத்துக்கும்  ( எல்லாச் சமயத்தினருக்கும் )
ஏற்குநலம் :  ஏற்கும் நலம்.  மகர ஒற்று தொக்கது.
தான்:  இது அசை ( இசை நிறைவு)

உன்னைப்போல் பிறனை நேசி. என்பது ஏசுவின் அன்புக்கட்டளை.


கருத்துகள் இல்லை: