வெள்ளி, 28 டிசம்பர், 2018

பூரா என்ற சொல்.

எங்கும் அல்லது எல்லாம் என்று பொருள்தரும் பேச்சுவழக்குச் சொல்லே பூரா என்பது.

"வீடு பூரா தூசியாய் இருக்கிறதே"  என்ற வாக்கியத்தில் இது எங்கும் என்று பொருள்படுகிறது.

புகுந்து உறுவதே பூரா.   புகுதல் என்பது உட்செல்லுகை.

இது  புகு>  பூ  என்று சொல்லின் முதனிலையில் திரியும்.


இதற்கு ஓர் உதாரணம் தருவோம்.

தொகு ( தொகுதல். தொகுத்தல் )  என்ற வினைச்சொல் தோ என்று சொல்லில் திரியும்.

தொகு >  தொகுப்பு > தோப்பு.  (வாழைத் தோப்பு முதலியவை).

இதுவுமது:

(திகை > திகைதி >) திகதி > தேதி.   " உறுதிபெற்ற நாள்,  குறிக்கப்பெற்ற நாள்"

திகைதல் : உறுதியாதல்.

ஆகவே,   புகு+ உறு + ஆ =  பூறா > பூரா  ஆனது.

சொல்லாக்கத்தில் றகரம் ரகரமாகிவிடும்.  பல சொற்களில்:  பழைய இடுகைகளைப் படித்துக் கண்டுணர்க.

வெளியாட்கள் புகப்பார்க்கிறார்கள் என்பது பேச்சில் பூரப்பார்க்கிறார்கள் என்று வரும்.

எதுவும் அல்லது யாரும் எங்கு புகுந்தனரோ அதுவே அவர்களின் தொடக்கம். ஆகவே பூர்தல் -  என்பதிலிருந்து பூர்வு> பூர்வம் என்ற சொல் அமைந்தது. பூர்வம் =  தொடக்கம்.  பூர்வு + ஈகு + அம =  பூர்வீகம்:  ஈகு என்பது ஈங்கு என்பதன் இடைக்குறை.  எங்கே முதலில் புகுந்தீர் அல்லது தோன்றினீர் அதுவே உம் பழைய இருப்பிடம். பிறத்தலும் இவ்வுலகில் புகுதலே.

எரியும் நெருப்பிலிருந்து வெளியில் புகுவதே புகை.   புகு+ ஐ  = புகை.  வெளிவரலைப் புகுதல் என்றது ஒப்புமையாக்கம். வெளியி டங்களில் புகுதல் அல்லது பரவுதல்.

பூரம் = புகைவரும் எரியும் பொருள்.

கருப்பூரம் :  கற்பூரம்.   ( எரியும் கல்போலும் பொருளிலிருந்து புகை வரும்.  அதனால் கற்பூரம் ஆனது ).

கருப்பூரம் -  கர்ப்பூரம்
கல் பூரம் -  கற்பூரம்.

இறுதியில் இவை ஒருபொருள் குறித்தன.   

அடிக்குறிப்பு:

புகு ஊர்தல் எனினும் அமைதலின் இதை இருபிறப்பி எனலாம்.

பிழை காணின் திருத்தம் பின்,

கருத்துகள் இல்லை: