புதன், 17 ஆகஸ்ட், 2016

"குருப்பத்தி" - குருபக்தி.

ஆசிரியரைப் போற்றுதல் ("குருப்பத்தி")( குருபக்தி.)


அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம். அதற்கடுத்து ஆசிரியர் வருகிறார், அவரிடமும் நம் வாழ்நாள் முழுவதும் நன்றியுடனிருக்கவேண்டும். நாம் தெய்வத்தை அறிந்தது இறுதியாகவே.

இவ்வுலகை நாம் முதலில் அறிந்துகொண்டது பெற்றோரின் வாயிலாகவும் அடுத்து ஆசிரியரின் வாயிலாகவுமே என்பது இதன் பொருள். பண்டை நாட்களில் காவியம் புனைந்தோர் எத்தனை பாடல்களுக்கு ஒருமுறை ஆசிரியனைப் புகழவேண்டும் என்றொரு முறை வைத்துக்கொண்டிருந்தனர் என்று தெரிகிறது. மாணவன் தன் ஆசிரியனை மறந்தானில்லை என்பதை உணர்த்த இது சான்றாகத் திகழ்ந்தது.

தமிழ்ப் புலவோர்தம் ஒழுக்கம் இவ்வாறிருக்க, தமிழரல்லாத பெரியோரும் இவ்வாறே ஆசிரியப் பற்று உடையோராய், இப்புதுமை அறிவியல் நாட்களிலும் திகழ்கின்றனர் என்பதை நம்மில் பலர் அறிந்திருத்தல்கூடுமென்று நினையாநின்றோம். இதற்கோர் எடுத்துக்காட்டு
அண்மையில் காணும் மக்களைக் களிப்பிலாழ்த்தும் வண்ணமாய் மேலெழுந்துள்ளது. அதனை இஞ்ஞான்று நினைவுகூர்வோம்.

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்து இற்றை முடியரசர் முன்னைய ஆங்கில மொழிக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்தவர். ‍ இது இப்போது ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியாகிவிட்டது. இங்கு இதன் தலைமை ஆசிரியராய் 1971 முதல் 1975 வரை இருந்து பணிபுரிந்தவர் சியு முன்  என்னும் பண்பாளர். இவரை மறவாத முடியரசர் (சுல்தான் ) பினாங்குத் தீவுக்குச் சென்று சியு முன் அவர்களைக் கண்டு இருபது நிமிடங்கள் உரையாடி மகிழ்ந்ததுடன் குடும்பத்துடன் மதிய உணவிற்கும் அழைத்துச் சென்று கொண்டாடினார்.

தம் ஆசிரியரைப் பிரியுமுன், தமது நினைவாகத்  தம் முடிசூட்டுச் சின்னம் கொண்ட மணிப்பொறி நாணயத்தையும் வழங்கி, சிறப்புச்செய்தார்.

ஆசிரியரைப் போற்றும் பண்பாடு பெரியோரிடமும் எம்மக்களிடமும் காணப்படுவதொன்றாம் என்பதை இது தெளியக்காட்டுகின்றது.

யாமறிந்த ஒரு பெரிய பதவியிலுள்ள சீன நண்பரொருவர், தமிழரான தம் ஆசிரியரின் அறிவுரையை அடிக்கடி நினைவு கூர்வார். "வானமே உன் குறியாக இருந்தால், மரத்துனுச்சி உனக்குக் கிட்டும்; மரத்தினுச்சி உன் குறியாகவிருந்தால் ஒருவேளை உனக்குத் தரையே கிட்டக்கூடும்" என்பாராம். இதைப் பின்பற்றித் தாம் பயனடைந்ததாக இவர் பலரிடமும் கூறுவார்.


கம்பநாடன் தன் ஆசிரியர் சடையப்ப வள்ளலை இராமயாணத்தில் அவ்வப்போது நினைவுகூர்ந்த பெருந்தகவினன். தானிறக்கும் வேளையிலும்:

"ஆன்பாலும் தேனும் அரம்பைமுதல் முக்கனியும்
தேம்பாய உண்டு தெவிட்டுமனம் ‍=== தீம்பாய்
மறக்குமோ வெண்ணெய் வருசடையா கம்பன்
இறக்கும்போ தேனு மினி"

என்று இறுதிவணக்கம் செலுத்தினன் என்ப.

பெருங் கவிஞன்  கம்பனின் பாடற் பொருள் :-

 http://sivamaalaa.blogspot.com/2016/08/forgetting-ones-guru.html



==============================
1   (thA. 30.5.2016)





‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍





கருத்துகள் இல்லை: