செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

KASI; காசி ‍ இறையுணர்வினரைக் காக்கும்....

குசிநகர் அல்லது அரம்பா என்னுமிடத்தில் இறந்தவன் நேரே நரகம் செல்வான்; இறப்பதாயின் காசியிலே இறக்கவேண்டும்; அப்போதுதான் அவனுக்கு மேலுலகம் கிட்டுமென்பது ஒரு நம்பிக்கை. இஃது உண்மை ஆயினும் அன்றாயினும் காசி இறையுணர்வின் மக்களைக் காக்கும் நகரென்பது இன்றும் பல்லாயிரவரின் உறுதியான கொள்கையாகும். பெற்றோரை அவர்கள் வாழுங்காலத்து ஒழுங்காகப் பார்க்காத பிள்ளைகள்கூட, அவர்கள் இறந்தபின் தம் பாவத்தைக் கழித்துக்கொள்ளக் காசியிற் சென்று கைங்கரியங்கள் செய்து அவர்களையும் தெய்வத்தினையும் வணங்கினால் நன்மை விளையும் என்றே நினைக்கிறார்கள்.

காக்கும் இந்நகரின் பெயர் இந்த நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்தது
ஆகும். கா என்பது காத்தல்; சி என்பது விகுதி.

இதற்கு வருணா அசி என்ற ஆறுகளின் இணைப்புக்  காரணமாக வாரணாசி என்றும் பெயர்.

காசி என்ற சொல், காய்தல் ‍ (ஒளிசெய்தல்) என்ற சொல்லிலிருந்து தோன்றியிருத்தல் கூடுமென்பதும் கவனத்தில் கொள்க.     எனின் காய்> காயி > காசி என்றாகும். யகர சகரப் பரிமாற்றம். இதுவும் தமிழ் மூலங்களையுடைய சொல்லே ஆகும். நேயம்> நேசம், வாயில்> வாசல் என்பது போன்ற திரிபு இதுவாகும்.

இந்த வட்டாரத்தில் பல பழந்திராவிட மொழிகள் பேசப்பட்டன. அவை இப்போது மறைந்தன. இசினே என்ற தொல்காப்பியச் சொல்லுக்கு இங்கு
வழங்கிய பழந்திராவிட எழுத்தில்லா மொழியிலிருந்து பொருள் விளக்கம்
கிடைப்பதாக ஆய்வாளர் சிலர் தெரிவித்திருந்தனர். இப் பழைய மொழிச் சொற்கள் பாகதங்களில் கலந்து மறைந்திருக்கலாம் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை: