வியாழன், 8 மே, 2014

வாக்களித்து..............

தேர்தலிலே நின்றுமக்கள் திறமுடையோன் 
என்றெண்ணி வாக்களித்து 
பார்புகழ நாடாளு மன்றுள் நீர்   
பாய்ந்துவிடின் அதற்கீடேது?
யார்புகழ்வார் என்றுபிறர் வாய்நோக்கி 
நின்றநிலை யாண்டும் மாறி  
நேர் புகழும்  ஒரு கூட்டம் உம்மருகில் 
நிற்குமதன் பயன்உகப்பீர் . 


வெற்றி யெனின்  கேட்டதனை மகிழ வேண்டாம் 
வேலைஇவை தாமெனநீர் விரித்த வற்றை
உற்றவொரு பாதையிலே உகந்து செல்வீர்  
உற்றதுவோர்   தோல்வியெனின் துவளல் வேண்டாம் 
சொற்றிறம்பா நன்னெறியில்  சுருண்டி டாமல் 
சூழ்வினையை ஆள்வினையால்  சுமந்து சென்றால்
வற்றிவிடா வளம் சார்ந்த உலகம் சொந்த 
வள மனைக்குள் வந்து தொழில் புரிதல் காண்பீர்.  


குறிப்புகள் 

மன்றுள்  --- மன்றத்துக்குள் ;       நீர் =  நீ என்பதன் பன்மை;
பாய்ந்து -  புகுந்து;   உகப்பீர் =  தேர்ந்தெடுத்துக் கொள்வீர்.
சொற்றிறம்பா -  சொன்ன சொல்  மாறாத .
சூழ் வினை -  சுற்றியுள்ள வேலைகளை அல்லது ஆய்ந்து  மேற்கொண்டவற்றை ; ஆள்வினை -  செயல் திறன் .




கருத்துகள் இல்லை: