வியாழன், 15 மே, 2014

another council name

இனி, அம்பலம் என்பதை ஆய்வு செய்வோம்.

இந்தச் சொல்லில் இறுதியாய் நிற்பது "அம்" என்னும் விகுதி.  இதைப் பிரித்து எடுத்துவிட்டால், மீதமிருப்பது அம்பல் என்பது.

அம்பல் என்று ஒரு சொல் உண்டெனினும், அது மலரும் நிலையில் அல்லது அதற்குச் சற்று முந்திய நிலையில் உள்ள  மொட்டினைக் குறிக்கிறது.  அது வேறு சொல்.

இங்கு நாம் கருதும் சொல், அம்+ பல் என்று பிரியும்.

இவற்றுள் பல் என்பதைப் பார்ப்போம். பல் என்பது பன்மை அல்லது பலர் என்று பொருள்தரும் சொல்.

கூடுவோர்  பலர் என்பதே இதனால் பெறப்படுவது. ஆகவே ஊருக்குள் பலர் கூடும் இடமாயிற்று. அறையில் நடந்தது அம்பலத்துக்கு வருவதா என்று கேட்கப்படுவதிலிருந்தும்,  "அம்பலமாயிற்று" என்ற வழக்கிலிருந்தும் பலர் கூடி ஒன்றை அறியுமிடம் என்ற பொருள் அறியப்படும்.

முன் நிற்கும் அம் என்பதில்  "அ" என்ற சுட்டு உள்ளது. "அந்தப் பலர்கூடும் இடம்"  என்பது பொருள்.  அப் பல் என்று வல்லெழுத்தாக வரற்பாலது அம்பல்  என்று மெலிவுற்றது. சித்து> சித்தன், சித்து > சிந்தனை என்று மெலிதல்போன்றதே இது. இப்ப்டி மெலிந்து வரும் சொற்களின் பட்டியல் ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள் .

அன்றியும் முன் நிற்றல் உரிய  "அம்" என்பது அழகும் குறிக்குமாதலின், அம் இருபொருள் தருவதென்பதும்  ஆம்.

இறுதி அம், சொல்லாக்க விகுதி.

அவை என்பது சுட்டில் வளர்ந்த சொல்லாதல் போலும் இதுவும் சுட்டடிப் பிறப்புச் சொல்லே. 

இதற்குப் பிற பொருள் பின் வளர்ந்தவை.  அவற்றுள் "கோயில் " என்பதும் அடங்கும்.

கருத்துகள் இல்லை: