புதன், 5 ஜனவரி, 2022

இந்திரனும் ஐந்திரமும் ஒரு விளக்கம்.

 ஐந்திரம் என்பதைப் பலவகையாகப் பகுத்து ஆய்வாளர் என்று சொல்லப்படுவோர் தங்கள் கருத்துக்களை வைத்துள்ளனர்.  ஐ+ திரம் = ஐந்திரம் என்றும்,  திரம்> திறம் என்ற போலியின் காரணமாக, ஐந்திறம் <> ஐந்திரம் என்றும் கருத்துக்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்திரன் என்பவன், இருந்த ஐந்துக்கும் ஆட்சியாளன். இருந்த ஐந்து என்பவை, நிலம் தீ ,வளி விசும்பு, நீர் என்பவை.  இவையே ஐந்திரம் எனப்பட்டன.

ஐந்து + இரு + அம் -  ஐந்திரம் ஆகும்.

ஐந்திரம் என்ற சொல்லே பின் இந்திரன் என்று திரிந்து வழங்கியது.  இந்த ஐந்தையும் இயக்கும் இயற்கை ஆற்றல் அல்லது அவற்றினை ஆளும் பேரான்ம ஆற்றலை  ஆண்பாலில் குறிக்கும் சொல்லாகிவிட்டது.

ஐந்திரு+ அம் என்று பிரித்தால்,  திறம் >< திரம் என்ற மாறுபாட்டில் விளையும் மயக்கம் இராது.  ஐ+ திரு+ அம் அல்லது ஐந்து + இரு+ அம் என்ற இரண்டும் புணர்வில் ஒரு முடிபு கொள்ளுமென்பது அறிக.  திரு என்பதைத் தெய்வ ஆற்றலென்றும் இரு எனின் உள்ளிருக்கும் ஆற்றலென்றும் பொருண்மை கொள்ள இதனால் இயலும்.

இருந்த இருக்கின்ற ஐந்தையும் ஆள்பவன், இவன் தேவனாக உணரப்பட்டவன். விண்ணையும் கடலையும் ஆள்பவன் நாராயணன்.  இவன் உண்மையில் நீரின் அம்சம் அல்லது அமைப்பு.  இவனும் ஒரு தேவன்.  இவன் நீராயினன் என்றிருந்த பெயர் மாறி நாராயணன் என்று அறியப்பட்டான்.  இவன் நிறம் கருமை. வானும் கடலும் கருமை ( நீலம்).

இவ்வைந்தும் கலந்ததே உலகம் என்று தொல்காப்பியர் கூறுவதால்,  ஐந்திரம் என்றது உலகம் என்பதே.  எனவே, உலகுநிறை தொல்காப்பியனே ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன். " உலகுநிறை "  என்றால் உலகில் மிகுபுகழ் உடையோன் என்று பொருள். இது உயர்வு நவிற்சி என்று செய்யுளில் கூறப்படுவதாகும்.  

ஐந்திரம் என்பதை இன்னொரு வகையில் கூறவேண்டுமாயின், பிரபஞ்சம் என்று கூறலாம்.  பிறப்பு அஞ்சு அம் >பிறப்பஞ்சம் > பிரபஞ்சம்..

படைப்புக் கடவுளுக்கு அடுத்த நிலையில் ஐந்திடங்களைக் கவனித்துக்கொண்ட ஐந்திரத்து அதிபதி, இலக்கண ஆசிரியன் அல்லன். அவன் தேவன். ஐந்திரம் அவன் ஆட்சியிடம் ஆகும். ஓர் இலக்கண ஆசிரியனுக்கு அருள்தந்த தெய்வமாகலாம். இவ்வாறு பல கொள்கையினரும் ஒத்துப் போற்று மொரு விளக்கமாய் இது விளையும்.

"ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத்தன் பெயர் தோற்றி" என்று கூறுவது ஏனென்றால், தொல்காப்பியன் உலகு புகழ் பெயரினன் என்று கூறுவதற்காகவே  ஆகும்.

பிரபஞ்சம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி...

உலகம் புகழும் தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி...

ஐந்திரம் என்ற பெயரில் ஓர் இலக்கணநூல் இல்லை...தமிழிலும் இல்லை; சமத்கிருதத்திலும் இல்லை. ஐந்திரம் ஓர் இலக்கணமென்பது ஊகமே. பனம்பாரனார் அதை இலக்கணநுல் என்று குறிக்கவில்லை. சங்கதவாணரும் பிறரும் அஃது இலக்கணமென்று மயங்கியிருக்கக்  கூடும்.

ஐந்திரம் - உலகம் என்ற விளக்கத்துக்கு ஆதரவாக அச்சொல்லே திகழும். புறச்சான்று தேவையில்லை. குறித்த ஐந்தும் இருக்கும் இயற்கை நிலைகள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

சிறு விளக்கங்கள் சேர்க்கப்பட்டன. 06012022

கருத்துகள் இல்லை: