செவ்வாய், 4 ஜனவரி, 2022

திறமும் திரமும் ( ர - ற வேறுபாடு)

 எம் சொந்த ஆய்வில்,  திறம் என்பதும் திரம் என்பதும் பழைய நூல்களில் காணப்படும்போது, ஒன்றுக்கு மற்றொன்று மாற்றீடாக முற்காலத்தில்  வந்திருத்தலை ஒதுக்கித் தள்ளிவிடுதல் இயலாததே ஆகும். இவ்வாறு முடிவு செய்வதற்குக் காரணங்கள் உள்ளன. சில கூறுவோம்.

  • ரகரம், றகரம் இரண்டிலும் ரகரம் காலத்தால் முற்பட்டது ஆகும். எழுத்துருவில், ரகரம் என்பது ஒற்றை ரகரம் என்றால் றகரம் என்பது இரட்டை ரகரம் அல்லது றகரம் எனல் வேண்டும். ஒற்றை ரகரம் : (  ர  ). இரட்டை ரகரம் ( ரர அல்லது ற).  றகரத்தில் இரு ரகரங்கள் ஒட்டி உள்ளன.
  • முற்காலத்தில் ற என்பது ரர என்று எழுதப்பட்டிருக்கவேண்டும்.
  • அழுத்தி ஒலித்தால், ரகரம் றகரமாகிவிட்டதென்பதே உண்மை நிலை. அதனால்தான் ஒன்று ( ர ) இடையினமாகவும் மற்றொன்று ( ற) வல்லினமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.  இதைத் தமிழர் நாளடைவில அறிந்த பின்புதான் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர் என்னலாம்.
  • றகரம் தோன்றுமுன் சற்று மென்மையுடன் ஒலிப்புற்ற ரகரமும் நன் கு அழுத்தி ஒலிக்கப்பட்ட றகரமும்  ஒரு மாதிரியாகவே எழுதப்பட்டிருந்தன. அதனால்தான் இவ்வேறுபாடின்றி எழுதப்பட்ட சொற்கள், இன்றும் வேறுபாடின்றியே எழுதப்படுகின்றன.
  • பிற்காலத்தில் நூல்களை ஓர் ஓலைச்சுவடியிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிப் புதுவரைவு செய்தவர்கள்,  இவை மக்களால் எவ்வாறு ஒலிக்கப்பட்டன என்பதைத் தம் புலமையின் மூலமாகக் கண்டறிந்து வேறுபடுத்தி எழுதி நமக்கு அளித்துள்ளனர் என்பதே உண்மை.
  • மலையாளத்தில் றகரம் வரக்கூடிய இடங்களில்,  ரர என்பதற்கீடான முறையிலேதான் எழுதுகிறார்கள்.
  • ஆகவே திறம் - திரம்,  பறை(யன்) - பரை(யன் ) முதலியவையும் இவைபோல் பிறவும் வேறுபாடற்றவையாய் இருந்தன.
திறம், திரம் இரண்டுமே திரட்சிக்கருத்தினடிப்படையில் எழுந்த சொற்கள் தாம்.  ஐந்திரம் என்ற சொல்லில் ஐந்து பகுப்புகளின் திரட்சி குறிக்கப்படுகிறது.   திறம் ( அல்லது திறமை என்பதுகூட,)  வலிமை, செயலூக்கம் ஆகியவற்றின் திரட்சிதான்.   திரட்சி என்பது காண்பொருளிலும் காணாப்பொருளிலும் அறியப்படுவது. இதுபோல் பிற சொற்களிலும் வேறுபாடுகளை உணரவழி உள்ளது.  எ-டு:  பரவுதல்  ( பர ) என்பது தரையிலும் வானிலும் நிகழ்வது.  பற என்பது வானில் மட்டும் நிகழ்வது.

ஆகவே, ஐந்திரம் என்றால் ஐந்தின் திரட்சி என்பதே.  திரளுதல் என்ற வினைச்சொல்லும் திர> திரள் என்றே வருகிறது.  கையாளப்படும் முறையிலிருந்து திறம் என்பது பொருள்களின் தொகுப்பைக் குறிக்க வல்லது என்பது தெளிவு.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்பு.

கருத்துகள் இல்லை: