ஞாயிறு, 30 ஜனவரி, 2022

இழந்துவிட்ட புரிதலை மீட்டுக்கொள்வது எப்படி?

 மீட்டுருவாக்கத்தின் தந்திரங்கள்.


கொஞ்ச நாட்களுக்கு முன்,  வீட்டு வேலைக்கு ஆள் இல்லாமற் போனதால், ஒரு மியன்மார்ப் பெண்ணை முகவர் அனுப்பிவைத்தார்.  அந்தப் பெண்ணுடன் பேசியபோது அவளுக்குத் தமிழ் நன்றாகத் தெரியுமென்றாள். சரி, பேசிக்காட்டு என்றபோது,  அவள் " இராகத்துடன்" ஒரு பாடலைப் பாடினாள்.

அந்தப் பாடல் வருமாறு:

ஏனா  பூனா தாம் பாரூ

ஏனா பூனா தாம் பாரூ

ஏவா  லாவூ சோக்கூ  வாரூ

ஏவா லாவூ சோக்கூ வாரூ

------  என்று பாடினாள். சற்று உறக்கத்தில் வீழ இருந்த எனக்கு,  வந்த தூக்கம் போய்விட்டது. கண்மூட முடியாமல் விழித்துக்கொண்டேன்.

அவள் பாட்டில் பூனை வருவதுபோல் எனக்குத் தோன்றியது.  "பூனைப் பாட்டா?" என்றேன்.  (   Cat song? )

இல்லை. It means,  how beautiful,  how beautiful.  என்று பொருள் சொன்னாள். எனக்குத்தான் விளங்கவில்லை என்ற எண்ணம் மேலிட்டது.  ஐ.நா. பொதுச்செயலாளராக  இருந்த ஊதாண்ட்  போன்ற அறிவாளிகள் இருந்த நாடாயிற்றே  அவள் நாடு ---- என்பதால், அவளை மிகவும் மதித்திருந்தேன்.

மீண்டும் பாடச்சொல்லிக் கேட்டபோது, இந்த வரிகள் தோன்றின.

" என்ன உன்னதம் பார்.

என்ன உன்னதம் பார்,

எவ்வளவு ஷோக்குப் பார்.

எவ்வளவு ஷோக்குப் பார்."

இதுதான் அவள் பாடிய பாட்டு.

அவளுக்குத் தமிழ் தெரியும் என்பது இப்போதுதான் எனக்குப் புரிந்தது.


கருத்துகள் இல்லை: