செவ்வாய், 4 ஜனவரி, 2022

பிச்சுவா என்ற கத்தி

 பிச்சைக்காரர்கள் கத்தி வைத்துக்கொண்டு திரிவதாகத் தெரியவில்லை.  வாங்கிய பிச்சையை வைத்துத் தின்பதற்கு ஓர் ஏனம் அல்லது பாத்திரம் வேண்டுமாதலால் அதைத்தான் பிச்சை எடுப்பவன் வைத்திருப்பான்.  கத்தி வைத்திருப்பதென்பது பெரும்பாலும் கள்ளர்கள் வீடுடைப்பவர்கள் வைத்திருப்பார்கள்.

பிச்சை என்ற சொல்,  பைத்தியம் உடையாரின் தன்மையையும் குறிக்கக் கூடும் பித்து > பிச்சு என்று திரியக்கூடியது. பித்தை என்பதும் பிச்சை என்று திரியும்.  ஆதலின் பிச்சை என்ற சொல்லைக் கவனமாகவே ஆய்வு செய்தல் வேண்டும்.

எல்லாப் பிச்சைக்காரர்களும் பைத்தியகாரர்கள் அல்லர். ஏழ்மையினால் வாங்கி உண்பவர்கள் ஒருசாரார்;  பைத்தியமாகத் திரிவோர் மற்றொரு சாரார் ஆவர்.

பைத்தியம் என்ற சொல், அறிவு முதிராமையைக் குறித்த தமிழ்ச்சொல்.  பை - பைம்மை,  முதிர்ச்சி இன்மை.  பையன் - இளையவன்.

பை அடிச்சொல்.

பைத்து -  என்றால் பைம்மை உடையது என்று பொருள்.

பைத்து  + இ = பைத்தி.  பைம்மை உடையோன், உடையோள்.

அம் என்பது அமைந்தமை குறிக்கும் விகுதி. 

எல்லாம் இணைக்க, பைத்தியம் ஆகிறது.  பைத்து இ அம் > பைத்தியம்.

பைத்தியம் என்பது பையன்மை.  "பையலோ டிணங்கேல்" என்பதும் கருதுக. நாளடைவில் பைம்மைக் கருத்திலிருந்து மூளைக்கோளாறு குறிக்கக் கருத்து வளர்ச்சியுற்றது.

இது முதிராமை - அதாவது அகவை (வயது) இருந்தும் அதற்குரிய அறிதன்மை உடையனாயிருந்து சரிப்படுத்திக்கொண்டு செல்லாதவன், பைத்தியம் உடையவன்.  An insane person  cannot adjust himself to situations. Normal persons too sometimes fail to adjust but in an insane person, the failure to adjust is  to a much greater extent.  இதைப்பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிக.  தமிழ்மொழியில் இந்தச்சொல், பைம்மையிலிருந்து தான் வருகிறது.  ஆதலால் இங்கு உரைத்தவாறு உணர்ந்து சொல்லை அமைத்திருக்கிறார்கள்.  இது சரியாகவே உள்ளது.

பிச்சுவா என்ற சொல்லுக்கும் பித்துடைமைக்கும் பைத்தியத்துக்கும் ஏதும் தொடர்பு இருப்பதாகக் கருதுவதற்கில்லை.  இச்சொல் வந்த விதம்:

பிள்  -  ( பிள்> பிள > பிளத்தல் ).

பிள் > பிள் + சு > பிட்சு > பிச்சு.

வாள் என்ற சொல், வா என்று பேச்சு வழக்கில் திரிந்துள்ளது.

சொல்லமைப்புப் பொருள்:  பிளக்கும் நீள்கத்தி.

வா என்ற வினைச்சொல் அன்று; இது வாள் என்பதன் கடைக்குறை. இலக்கணம் பொருந்துகிறது.

பிள் > பிட்சு> பிட்சுவாள் > பிச்சுவா.

அறுவாள் என்னாமல் " அறுவாக்கத்தி" என்று பேச்சில் சொல்வது கேட்டிருக்கிறோம்.  "ள்" குன்றுதல் தமிழில் இயல்பு.   அவள் > அவ,  வந்தவள்> வந்தவ எனற்பால திரிபுகள் உணர்க.

வளைந்த வாயுள்ள மீன்,  கொடுவா என்று குறிக்கப்படுவது காண்க.  கொடு - வளைந்த,  வா - வாயுடைமை.  யகர ஒற்று கடைக்குறை.  கொடுவாய் என்ற மூலம் வழக்கில் இல்லை. ஆகவே உணர்பொருட்டு மீட்டுருவாக்கம்.

அறிக மகிழ்க.

பெய்ப்பு பின்.

கருத்துகள் இல்லை: