வெள்ளி, 14 ஜனவரி, 2022

சிலமுறை திருத்திய கொரனாக் கவிதை

 கொரனாத் தொற்று ஏற்படுத்திய இன்னலை விவரித்துச் சில வரிகள் எழுதலாம் என்று நினைத்தேன்.  அதன் தொடக்கத்திலே "கொரனா" என்ற சொல் வந்துவிட்டது. எழுதிமுடித்தபின் மனநிறைவில்லாமல், திருத்தங்கள் செய்தேன். பின்வந்தது இங்கு இரண்டாவதாகத் தரப்பட்டுள்ளது  . எதுநன்று, பிடிக்கிறது என்பதைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்:


கொரனாவின் பிடியினிலே விடியல் இன்றி, 

கொலைப்பட்ட பெருமக்கள் தொகையைக் கூற,

ஒருநாளில்  இயலாதே சரியாய் நாமும்

ஒளிந்தாளும் முறையன்றி வேறொன் றில்லை.

திருநாளும் வேண்டாத தியாகம் செய்து

தினந்தோறும் சேவைசெயும் தாதி மாரை

அருஞ்செயற்குப் போற்றுதலே அன்றி வேறே

பெரிதென்று நாமவர்க்குச் செய்வ தென்னே.


கொரனா என்பதையும் சில பிறவும் அகற்றி எழுதியது இப்படி:


முடிநோயின் பிடியினிலே விடியல் இன்றி

முடிந்தோய்ந்த பெருமக்கள் தொகையைக் கூற,

முடியாதே ஒருநாளும் சரியாய் நாம்காண்

மூடறைவாழ்  முறையன்றி முன்னொன் றில்லை! 

விடுநாட்கள் வேண்டாத  வெல்லீ    கத்தால்

வேறுபடாச் சேவைசெயும் தாதி மாரை

அருஞ்செயற்குப் போற்றுதலே அன்றி வேறே

ஆனபெரி தவர்க்கேநாம் செயலும் யாதோ.


எது பிடிக்கிறது என்பதைப் பின்னூட்டம் செய்து தெரிவியுங்கள்.


அருஞ்சொற்பொருள் பின் வெளியிடுவோம்.


வெளியிடப்பட்டது. பொருளை காண இங்குச் சொடுக்கவும்

https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_51.html 


மெய்ப்பு பின்.


கருத்துகள் இல்லை: