திங்கள், 3 ஜனவரி, 2022

இலங்கை - சொற்பொருள் ஐயப்பாடு

 இலங்கை என்னும் சொல் எவ்வாறு அமைந்தது என்பதை அந்நாட்டு அறிஞர்கள்  மற்றும் பிறரும் வெகுவாக ஆய்வு செய்துள்ளனர். இவற்றுள் ஒருமுகமான முடிவுகள் இல்லை என்றுதான் முடிவுகட்ட வேண்டியுள்ளது. இவற்றை இணையத்தின்வழித் தேடி நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

இலங்கை என்ற பெயர், ( லங்கா)  ,  இராமாயணம் முதலிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.  கம்பனிலும் உள்ளது.  இராவணன் எவ்வாறு கலங்கினான் என்பதைத் தெரிவிக்க, " கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான்  இலங்கை வேந்தன்"  என்பான் அக்கவிப் பெரியோன்.

இலங்கை என்ற சொல்லை  இல் + அங்கை என்று பிரிப்போமானால்,

இல்  =  இடம்,

அங்கை -  உள்ளங்கை.

என்று பொருள் போதரும்.  ஆகவே உள்ளங்கை வடிவில் உள்ள நாடு என்று தமிழின் மூலமாகப் பொருள் கிட்டும்.  இதுதவிர, வேறு பொருளும் பிறர்தம் ஆய்வினால் கிட்டுகிறது.  அவற்றை இங்கு விளக்கிற்றிலம்.

இல் + அங்கை என்பது லகர இரட்டிப்புக் காணும் புணர்ச்சியை உடைத்தாகும்  என்று கூறுதல் கூடுமெனினும், ( இல் + அங்கை = இல்லங்கை),  இவ்வாறு இரட்டித்தால் பின் இடைக்குறையாகிக் குறுகுதலும் கூடுமாதலால், தமிழிலக்கணத்தின்படி குழப்பமில்லை எனினும்,  இந்தப் பெயர் ஏற்பட்ட காலத்தில் நாம் இல்லையாதலின், இதனால்தான் இப்பெயர் வந்தது என்று முடிவு செய்யக் காரணம் யாதும் அறியோம் என்பதறிக. ஆயினும் பெயர் பொருந்துகிறது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்



கருத்துகள் இல்லை: