திங்கள், 21 மே, 2018

ஆத்மா ஒரு நுட்ப விளக்கம்.

எல்லாவற்றிலும் ஓர் ஆன்மா இருக்கின்றது என்பது மிகப் பழைய இறைக்கொள்கை ஆகும்.  அக்கொள்கை சரியானதா, தவறானதா என்பதன்று நாம் அறிந்துகொள்ளவேண்டியது.  அப்படி ஒரு கொள்கை பண்டைக் காலத்தில் இருந்தது என்பதுதான். ஒரு நதியிலும் ஆன்மா இருந்தது.  ஒரு கடலிலும் ஆன்மா இருந்தது. விண்ணிலும் ஓர் ஆத்மா இருந்தது. ஒளியிலும் ஆன்மா இருந்தது. அது இருந்திருந்தால் அதற்கு என்ன முடியும் என்ன முடியாது என்பதன்று நாம் அறிதற்குரியது. வெளியில் போன கழுதை வீடுதிரும்பும்வரை கத்திக்கொண்டிருந்தாலும் ஒரு காலத்துக்கொள்கை அந்தக் காலத்துக்கு உரியது; அப்போது அது சரியாகத் தெரிந்தது; நாம் அதை ஒன்றும் செய்யமுடியாது; இப்போது வேண்டுமானால் வேறு விதமாக நீங்கள் நம்புவதை யாரும் தடுக்கவும் இயலாது.

This belief system as you know is called ANIMISM, in anthropology.

ஆனால் பழைய கொள்கைகளின் அடிப்படையில் சொற்கள் அமைந்துவிடுகின்றன.  அவை அமைந்த பல ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன. நாம் செய்தக்கவை யாவுமில்லை.

ஒரு பொருளின், ஆளின் அல்லது விலங்கின் அகத்து இருப்பதே ஆன்மா.  யாரும் ஆன்மாவைப் பார்க்க இயலாது.  உயிராய் இருப்பவனில் தேடினாலும் கிடைப்பதில்லை; செத்துப்போனவனில்  தேடினாலும் கிடைப்பதில்லை.  ஆனால் நம்பிக்கையின் அடிப்படையில் ஆன்மா அறியப்படுகிறது.

அகத்து இருப்பதே ஆத்மா.

அகத்து  மா.

அகத்து  என்றால் உள்ளிருப்பது.

உம் என்பது உம்மைச் சொல்.

அது  - ஆன்மா-   அகத்தும் இருக்கும்.  சாகும்போது போய்விடவும் செய்யும்.  வெளியில் சென்றுவிட்டால் எங்கோ வெளியில் இருக்கும்.

அகத்தும்  ஆ.

ஆ என்பது ஆங்கு.  அங்கே.  இது சுட்டடிச் சொல்.

ஆ   ஈ  ஊ என்ற முச்சுட்டுக்களும் முதலில் அவ்வாறு நீட்சியுடன் இருந்து பின் அ, இ, உ என்று குறுக்கம் பெற்றன.  மொழிவரலாற்றில் நீட்சியுடைய ஓரெழுத்து ஒரு சொற்களே பலுக்குதற்கு எளியவையும் முந்தியல் மாந்தனுக்கு பயன்பாட்டு எளிமை உடையவையுமாய் இருந்தன என்று உணர்க.

இது அகத்து உம் ஆ என்று தோற்றம் காணாமல் அகத்து மா என்றும் தோன்றியிருத்தல் கூடும்.  முந்தியல் மாந்தன் இதை நமக்கு எழுதிவைக்கவில்லை ஆதலால்,  எந்தக் கொம்பனும் பகுத்தறிவின் துணைகொண்டே ஆய்தல் கூடும்.   அகத்தில் இருக்கும் பெரியது என்று இது பொருள்தரும்.  அப்படியாயின், உடலினும் பெரியது ஆன்மா என்பதை இக்காலக் கட்டத்தில் மனிதன் உணர்ந்துகொண்டான் என்று பொருள். நிகழ்வு அதுவாயின் அகத்து மா என்பது இசைந்து ஏற்கத்தக்கதொன்றாய் ஆகும்.

சொல்லிறுதி எதுவாயினும் அது அகத்து இருப்பதாய் உணரப்பட்டதேயாம்.1

அகத்துமா என்பது பின் ஆத்துமா என்றானது.  அதிலிருந்து ஆத்மா என்று பிறமொழித் திரிபு அமைந்தது.

அகத்து இருக்கும் காற்றுப்போனற அதற்கு அகவி >  ஆவி என்று பெயர் அமைந்ததும் மிகப்பொருத்தமே.  அகம்+ இ =  அக+இ  > ஆவி.

அகம் என்பது அ+கு+அம் என்ற சிறுசொற்கள் கொண்டுஅமைந்ததால், உண்மையில் இதை அ+கு+ இ =  அகு+இ  =  அகவி > ஆவி என்று கண்டு  கொள்ளலாம்.

அவி என்பது அவித்தல்.  வினைச்சொல். அது முதனிலை நீண்டு  ஆவி என்ற தொழிற்பெயராகும் என்பது எளிமையாகத் தரும் விளக்கம்.

அவி (வினை) >  ஆவி. (தொழிற்பெயர்).

ஒரு சட்டியில் வைத்து நீரைச் சூடேற்றுகையில் அங்கிருந்து இங்கு வெளியாவது ஆவி.

அ + இ  (சுட்டடிகள் ) >  அவி.  இப்படித்தான் அவித்தல் சொல் அமைந்தது.

எல்லாவற்றையும் சொல்லிமுடித்தால் தமிழ் தானே உருவாகித் தோன்றி வளர்ந்த மொழி என்பது தெற்றெனப் புலப்படும். அறிந்தோன் அறிவான். பிறன் அறியான்.

அகத்திலிருந்து உயிர்போலும்  வாழ்ந்து வெளிப்பட்டுச் சாவினை உண்டாக்கும் ஆவி    :  அகவி >  ஆவி.

அவிக்கையில் வெளிப்படுவது:   அவி >  ஆவி.

அகத்திலிருக்கும் மனம்  " அகம்".  நாம் அங்கு போய் அதை அறியலாகும்,  அது வெளியில் இல்லை.  ஆகவே  அ( அங்கு) + கு( சென்று சேர்வது  )+ அம் (விகுதி)  =  அகம்.

இந்த நுண்மை உணர்க.

முடிவு:  அகத்திருப்பது  அகத்துமா >  ஆத்துமா >  ஆத்மா.

இவற்றை விளக்கும் இறைநூல்கள் இருந்திருக்கலாம்.  அவை அழிந்தன,
சமஸ்கிருத நூல்களும் பல அழிந்தன.

அடிக்குறிப்பு .

1.  அகத்துமன்  >  ஆத்துமன் >  ஆத்மன்  என்றும்  வரும்.    மன்னுதலாவது  நிலை நிற்றல்.    மன்னும்  இமயமலை  எங்கள் மலையே  என்ற பாரதி பாட்டைப் பாருங்கள்.   அகத்து  நிற்பது  அகத்துமன் .


திருத்தம் பின்




கருத்துகள் இல்லை: