ஞாயிறு, 13 மே, 2018

விகுதியும் மிகுதியும். விக்ருதி மிக்குறுத்தி.

விகுதி என்ற சொல்லை நாம் பல இடுகைகளில் சந்தித்திருக்கிறோம். இதைப்பற்றி யாம் முன்பு எழுதி விளக்கியதுண்டு.

விகுதி என்ற சொல்லில் தி இறுதியில் உள்ளது.  இதைப் பிரித்து எடுத்துவிட்டால் மீதமிருப்பது விகு என்பதே.  ஆனால் விகு என்ற ஒரு வினைச்சொல் இல்லை.   எனவே விகுதி என்பது நாம் நினைப்பதுபோல்  ஓர் இயற்சொல் அன்று.   அது திரிசொல்லே.

மிஞ்சு என்ற சொல் விஞ்சு என்று திரிகிறது.   இதுவேபோல் சில மகர வருக்கத் தொடக்கத்துச் சொல் வகர  வருக்கத் தொடக்கமாகத் திரிந்துவிடுகின்றன. இத்தகைய திரிபு சொல்லின் தொடக்கத்தில்மட்டுமே வரும் என்பதில்லை. சொல்லின் இடையிலும் வரக்கூடும்.  எடுத்துக்காட்டு: அம்மை >  அவ்வை.( ஔவை).

எனவே  மிகு > மிகுதி என்ற சொல்லே  விகுதி என்று திரிந்தது.  விகுதி என்பதற்குத் தமிழிலக்கணத்தில் இறுதிநிலை என்றும் கூறுப.

உகத்தல் என்ற சொல்லை எடுத்துக்கொண்டால்,   உக என்பது சொல்லின் பகுதி.   தல் என்பதே விகுதி.   தல் என்பதைக் கொண்டு கூட்டியபடியால் சொல் மிகுந்தது.

மிகுதி  என்பது  சொல்லின் மிகுதியே.  விகுதியைக் கண்டுணர்ந்த காலை சொல் மிகுதலையே உணர்ந்தனர்.  பின்னர் சில விகுதிகளின் சேர்க்கையில் சொல்லின் பொருளும் சற்று மாறுதலை அடைந்தது.  அப்போதும் அதை விகுதி என்றே அழைத்தனர்.

ஆனால் இதை விக்ருதி என்ற சமத்கிருதச் சொல்லுடன் தொடர்புபடுத்தினர் சில புலவர்கள்.   விக்ருதி என்பது சமத்கிருதத்தில் ஓர் இலக்கணக் குறியீடு அன்று, அது பொதுவான மாற்றம் குறிக்கும் ஒரு இயல்பான சொல்.  ஆதலால் விக்ருதி வேறு. விகுதி வேறாகும், பிரத்யாய என்பது விகுதி என்று பொருள்படுவதால்,  விகுதியை ஏன் பிரத்தியாயம் என்று அழைக்கவில்லை?

மேலும் விக்ருதி என்பது மிக்குறுத்தி என்பதுபோல் ஒலிக்கிறது.  ஆனால் அது வேறு எனப்படுகிறது. மிக்கு உறுத்தும் எதுவும் வேறாகுமன்றோ?


கருத்துகள் இல்லை: