வெள்ளி, 25 மே, 2018

தொந்தரவு என்ற சொல்.

தொல்லை என்ற சொல்லை நன்`கு கவனித்தால்,  அது "தொல்" என்னும்  அடியினின்று தோன்றியது என்பதை உணரலாம்.

தொல் > தொல்லை.    இதில் வந்த விகுதி:  ஐ என்பது.

முன்செய்த செயலெதுவும் ஒரு பின்விளைவை ஏற்படுத்தி இடர்விளைக்குமாயின் அதுவே தொல்லை ஆகும்.

கடந்த காலத்தைக் குறிப்பது "தொல்"   என்னும் சொல்.

தொல்லை என்பது பல்பொருளுடைய சொல்லாகும்.  அவற்றின் பொருள்களில் பழமை என்பதுமொன்றாகும்.பழமை என்றே பொருள்தரும் ஒரு சொல்,  அப்பழமையினின்று போதரும் ஓர் இடரையும் குறிக்குமாயின் அஃது  ஆகுபெயர் ஆனது.

தொல், தொல்லை என்பன காலப்பெயர்கள். அதாவது காலத்தைக் காட்டும் பெயர்ச்சொல்.  அது காலத்தினின்று வரும் இடரைக் குறித்தமையின்,  காலவாகு பெயர் எனப்படும். பொருள், இடம், காலம்,  சினை, பண்பு, தொழில் என்னும் ஆறு நிலைகளிலிருந்தும்  பிறவற்றுக்குப் பெயராகிவருவது ஆகுபெயர்.

இன்றுள்ள மொழி நிலைமையில்  தொல்லை என்று சொன்னால் அது இடரையே குறிக்கும்.  பழமையைக் குறிக்கவில்லை.  அதன் பழமைப்பொருள் எங்காவது பழைய நூல்களிலே காணலாமேயன்றி வழக்கில் இருப்பதாக யாம் அறியவில்லை.  ஆகவே தொல்லை= பழமை  என்பது ஒரு வரலாற்றுப்பொருள் ஆகிவிட்டது.

ஆகவே தொல்லை என்பது ஒரு பண்பு  என்று கருதி அதைப் பண்புப்பெயர் என்று சில ஆசிரியர் துணிவர்.    ஆகுபெயர் அன்று என்று கருதுவர்.

எதுவாயினும்  தொந்தரவு என்பது அமைந்த விதம் காணுவோம்.

தொல் >  தொன்.   இது லகர   0னகரத் திரிபு.

தொன் + தரவு =  தொந்தரவு ஆகும்.

தரவு என்பது தருதல் விளைதல் என்று பொருள்படும்.

முன்+தி =  முந்தி என்று புணர்ந்தது போன்றது இது.

இதனால் தொல்லை என்பதும் தொந்தரவு என்பதும் பொருள் ஒன்றான சொற்கள் என்று அறிக.

சிலர் தொந்தரு என்பார்கள்.

கருத்துகள் இல்லை: