புதன், 16 மே, 2018

வேலைக்காரன் என்பதில் காரன் பின்னொட்டு.

இக்காலத்தில் காரன் காரர் காரி என்று முடியும் பல மெல்ல வழக்கிழந்து வருகின்றன. மாட்டுவண்டிகள் ஓடிக்கொண்டிருந்த காலத்தில் "வண்டிக்காரன் வந்துவிட்டானா? இல்லையா?"  என்று கேட்கும் ஒலி காதில்விழலாம்.  இன்று இல்லை.   ஆட்டோக்காரன் என்ற சொல் பேச்சிலும்  திரைப்பாட்டிலும் வழக்குப் பெற்றுள்ளது.  மலேசியா சிங்கப்பூர் முதலிய தெங்கிழக்காசிய நாடுகளிலும் அமெரிக்கா ஐரோப்பா முதலிய கண்டங்களிலும் ஆட்டோ என்று இந்தியாவில் வழங்கப்படும் தானி இல்லையாதலால்,  இச்சொற்கள் எம் காதுகளை எட்டக் காரணமில்லை.

ஆனால் காரன் என்ற தமிழ்ப்பின்னொட்டு இந்தியாவெங்கிலும் பரவியுள்ளது.  கர் என்று முடியும் இயற்பெயர்களிலும் சாதிப்பெயர்களிலும் அது  இந்தியாவில் பெரிதும் பயின்று வழங்குகின்றது.  இதுமட்டுமின்றி ~ஆர், ~அர் என்பனவும் பயின்று வழங்குகின்றன.  கர் என்பதற்கு வேறு பொருளும் காணப்பட்டு, மக்கள் மகிழ்ச்சியாய் உள்ளனர்.

காரன், கார், கர் என்பவெல்லாம் பரவியுள்ளமையைச் சில ஆண்டுகளில் ஆய்ந்து அறிந்துகொள்ளலாம்.  இல்லாவிட்டால் ஆய்வுசெய்த அறிஞர்பால் சென்று ஓரிரு நாட்களில் உணர்ந்துகொள்ளலாம்.

ஐலேகர், ரபானிகர் என்றும் இன்னும் பல பெயர்களிலும் வரும்.

வண்டிக்காரன் என்ற சொல் வண்டி என்ற சொல்லுடன் ~காரன் என்ற பின்னொட்டு இணைந்து அமைந்ததாகக் கொள்ளலாம்.  அப்படியே பிள்ளைகட்கும் கற்பிப்பதிலும் தவறொன்றுமில்லை.

ஆனால் உண்மையை அறிந்துகொள்வதும் இன்றியமையாதது ஆகும்.

வேலைக்கு  ஆர்  அன்.

ஆர்தல்:  பொருந்துதல்.  அடைதல்  (வந்து சேர்தல்),  ஒத்தல்,  தங்குதல்,
இவைதவிர இன்னும் பல பொருள் உள. அப் பலவற்றுள்ளும் இங்குக் குறித்தவை ஏற்றவை.

அன் என்பது அவன் என்னும் பொருளில் வரும் ஆண்பால் விகுதி.

எனவே:

வேலைக்கு + ஆர் + அன்

=  வேலைக்காரன் என்றால்,  வேலைக்குப் பொருந்தியவன் என்பதே பொருள்.

இப்படிப் பல சொற்களிலும் வந்துள்ளதால் ~காரன் என்பதைத் தனியாகப் பிரித்து எடுத்து ஒரு முன்னொட்டாகக் கொண்டு விரைவாகச் சொல்லுடன் ஒட்டிக்கொள்ளலாம். மோசம்  ஒன்றுமில்லை.

ஆர் என்பதைப் பன்மை விகுதியாகக் கொண்டு  வேலைக்கு ஆர்  > வேலைக்கார் ஆக்கி, பின் அதில் அன் என்றும் ஆண்பால் ஒருமை சேர்த்து வழுவமைதி என்றும் இலக்கணம் கூறலாம்.  மரியாதைப் பன்மை விகுதி புகுத்தி இறுதியில் அன் ஒருமை சேர்க்க, அது பணிவு இழிபு காட்டுவதாய் வரும்.   இது ஆர் என்ற சொல்லின் பொருள் மறக்கப்பட்டமையால் தோன்றுவதாய்க் கொள்ளவேண்டும்.

வள்ளுவனார் :  இதில் அன் விகுதி புணர்த்துப் பின் ஆர் என்னும் பணிவுப் பன்மை சேர்க்கப்பட்டது.  இது முன் கூறிய பணிவு>இழிபுக்கு எதிர்மாறானது ஆகும்.  ஒருமையிலிருந்து பணிவுப் பன்மையிற் சென்றது காண்க.

எப்படிப் பார்த்தாலும் விளக்கத்தில் குறைவில்லை.

கருத்துகள் இல்லை: