சனி, 12 மே, 2018

சிறிதாவதும் கூம்புவதும் குறிக்கும் சொற்கள்

நாம்  இன்று சொற்களைப் பற்றிய ஒரு  சிந்தனையில் ஈடுபடுவோம்.  சிந்தனை என்றாலே துளிதுளியாக மழைநீரைப்போலச் சொட்டிச் சிந்துவது என்றுதான் பொருள்.  எதை என்றால் மூளையில் எழும் எண்ணங்களை.  அதனால்தான் சிந்தித்தல் என்று சொல்கிறோம்.  சிந்துதல் > சிந்தித்தல். எண்ணங்கள் சிறிது சிறிதாக  வெளிவரச் செய்தல்.  இதுதான் இதன் சொல்லமைப்புப் பொருள் என்றாலும் இந்தச் சொல் அமைந்து வெகுகாலம் ஆகிவிட்டபடியால்,  அப்பொருளை இன்று நாம் உடனடியாகக் கண்டுகொள்ள முடியவில்லை.

சிந்து என்றால் அதன் பொருள் உங்களுக்குத் தெரியும்.  ஆனால் அதன் அடிச் சொல் சின் என்பது.  சின் து =  சிந்து ஆகிறது.  முந்து பிந்து என்பதுபோல் அமைந்ததே இச்சொல்லும்.   முன்+து என்பது முந்து ஆனது.  பின்+து என்பது பிந்து ஆனது.  பந்திக்குப் முந்திப்போ; படைக்குப் பிந்திப்போ என்பார்கள்.  பந்தி என்பதும் பலர் இருந்து உண்ணும் நிகழ்வு.  பல் > பன் > பன் தி  என அது பந்தி ஆயிற்று.  வெந்து  என்ற வினை எச்சத்தில்  வே> வெம்> வெம்+து =  வெந்து ஆனது தெளிவு.   வென் என்பது அடிச்சொல் அன்று.

சிந்து என்பது அடிக்கு மூன்று சீர்களே உள்ள பாட்டில் வரும்.

செந்தமிழ் நாடென்னும் போதினிலே~

இவ்வடியில் மூன்று சீர்களே உள்ளமையினால் அது சிந்தடி எனப்படும்.

நூல்களில் சிறிய நூலுக்கும் சிந்து என்று பெயராம். இது விற்பனையான
இடமே சிந்து நதிக்கரை.   அது அங்குள்ள நதிக்கும்   உள்ளவர்கள் பேசிய மொழிக்கும்கூடப் பெயராகி விட்டது.   

சிலர் மீன் சினையைக் குழம்பு வைத்துத் தின் கிறார்கள்.    சிறு சிறு முட்டைகள் ஒட்டிக்கொண்டிருப்பதால் அது  சின் >  சினை எனப்பட்டது.    சின் என்பது சில் என்பதிலிருந்து தோன்றிய சொல்லே.

கோபத்தைச் சினம் என்பர்.   பழங்காலத்தில் சினத்தை ஒரு சிறு செயலாகக் கருதினர் என்று தெரிகிறது.  அதைப் போற்றத் தக்கதாகக் கருதவில்லை. கோபமே பாபங்களுக்கெல்லாம் தாய் தந்தை என்றனர்.  சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்றும் கூறினர்.    ஆறுவது சினம் என்றனர்.  சின் என்ற அடியினின்று தோன்றிய இச்சொல்லுக்குப் பெருமைக்குரிய செயல் அல்லாதது என்பதுதான் சொல்லமைப்புப் பொருள்.  கோபம் என்ற சொல்லும் கூம்புதலைக் குறிப்பது;  கூம்புதலாவது குறுகுவது.

கூ > கூம்பு.  கூம்புதல்
கூ > கூபு > கோபு > கோபம்.  கோபு> கோபித்தல்.
மனச் சுருக்கத்தைக் குறிக்கிறது. 
இங்கு கூ என்பது கோ என்று திரிந்தது.    மகர ஒற்று மறைந்தது இடைக்குறை.

கூகூ என்று கூவும் பறவை கோகிலம் என்று பெயரிடப்பட்டுள்ளது காணலாம்.

 திருத்தம் பின்

கருத்துகள் இல்லை: