வெள்ளி, 4 மே, 2018

பேதி என்ற சொல்லமைப்பில அறியத்தக்கவை


பேதி என்ற சொல்லை ஆராய்ந்து அதைப் பகுதி வேறு விகுதி வேறாகப் பிரிக்கலாம்.   தி என்பது விகுதி என்றபடி பல சொற்களை ஆராய்ந்து வாத்தியார் மூலமும் கேட்டு உணர்ந்துகொண்டிருக்கிறோம்.  அந்த விகுதியாகிய தி என்பதை எடுத்துவிட்டால் மிச்சமிருப்பது பே.   இந்தப் "பே" என்ற பகுதிக்கு எருவாயால் வெளிப்படுதல் என்ற பொருளில்லை.  பே என்று யாரிடமாவது சொன்னால் அவர்கள் பேயைத்தான் சொல்கிறாள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்வார்கள். 

பே என்பது ஒரு சொல்தான்.  நிகண்டிலும் இருக்கலாம். ஆனால் வேறுபொருள் குறிக்கிறது.  நாம் ஈண்டுத் துணியும் பொருளைக் குறிக்கவில்லை.  ஆகவே அதை வினைச்சொல்லாக ஏற்றுக்கொள்ள இயலாது.

பே என்பது பேயைக் குறித்தாலோபேபே என்று உளறுவதைக் குறித்தாலோ நாம் நினைக்கும் பொருள் வரும்.  ஆனால் பேதி என்ற சொல்லில் அதற்கான சுவடு எதுவுமில்லை.

மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா.  உடனே தெரியவில்லை. காரணம் அது ஒரு திரிசொல். அதன் உண்மையான பகுதி பெய் என்பது.  பெய்தலாவது  நீர் அல்லது நீர்வடிவில் கீழிறங்குதல்.  

மழை பெய்கிறது.   குழந்தை  மூத்திரம் பெய்கிறான்.   கூரிய சீரிய சொற்களைப்  பெய்து அவர்தம் கட்டுரையை வரைந்துள்ளார்.

மழை தூறுகிறது என்றும் சொல்வோம். ஆனால் கேரளத்தில் அவன் தூறி என்றால் மலம் கழித்தான் என்று பொருள்.

எனவே இச்சொற்கள் பலவாறு பயன்படுபவை.

நீராகப்  பின்வழியால் பெய்தல் நிகழுமாயின் அதுவே பெய்தி ஆகிறது. இதிலுள்ள பெய் என்பது பே என்று திரிந்து  "பேதி" ஆகிவிட்டது.

செய் என்பது சே என்று திரிந்து சேதி வடிவம் கொண்டதுபோலுமிது.

ஆகவே பே என்பது வேறுபொருள் குறித்த ஒரு சொல். அது பெய் என்பதன் திரிபு.

பெய் > பே > பேதி.  கழிச்சல் என்பது பொருள்.

முதனிலை நீண்டாலும் நீளாவிட்டாலும் இடையில் வந்த ஒற்றுக்கள் கெடுதல் 
நடைபெறும்.  எடுத்துக்காட்டு:

காய்+கு+இது+அம் =  காய்கிதம் > காகிதம். யகரஒற்றுக் கெட்டது.  கு இது என்பன இடைநிலைகள், சொல்லமைப்புக்காக வந்தவை. இவற்றை எடுத்துவிட்டால் காய்+அம் என்று வந்து வேறு சொல்லாகிவிடும். இதைச் சொல் ஆய்ந்தவனறிப் பிறன் அறியான்.
காயவைத்த மரக்குழம்பு கொண்டு ஆன தாள்.  காய்தல் வினை.

வாய்ப்பாடம் சொல்பவன் வாத்தி.   வாய்> வாய்த்தி > வாத்தி.  வாய் - சினை.
பேர் உடையவள் பேர்த்தி.  பேத்தி.  யாருடைய பெயரை.?  ரகர ஒற்றுக் கெட்டது.


படித்துத் தெளிவாகவில்லை எனில்முதலில் தெரியாத வாத்தியிடம் கேட்டுக் குழப்பம் அடைந்து அப்புறம் தெரிந்த வாத்தியிடம் கேட்டுச் சென்மமுழுதும் குழப்பம் தீர்ந்த நிலையை அடைக.  கசடறக் கற்க அதுவே சரியான வழி.  

திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை: