வெள்ளி, 21 செப்டம்பர், 2018

தாது என்றால் என்ன

தாது என்ற சொல், தருதல் என்ற வினையடியாகப் பிறந்ததே.  இதன் பொருள் ஒன்றிலிருந்து பெறப்பட்டது என்றாலும் அத்தகு பொருள்கள் ஒருவாறு வரையறுக்கப்பட்டுள்ளன.

தாது :

மண்ணால் தரப்பட்ட  பொன் இரும்பு புட்பராகம் முதலியன.

பூவினால் தரப்படுவது:  பூந்தாது.

நரம்பினால் தரப்படும் துடிப்பு.  அதனின்று நோயறியும் நிலை.

காலத்தினால் தரப்படும் ஆண்டுக்கணக்கு.

மாற்றித் தரப்படும் பொருள்.

மலர்மொட்டு வாயவிழ்தல்

எரிப்பில் தரப்படுவது.   சாம்பல்.

இயற்கையினால் தரப்படும்  நிலம், வளி, நீர், விசும்பு, தீ முதலியன.

உடலினால் தரப்படுவது:  பிணிகள் முதலியவை.

இவ்வாறு தாது என்பது தரப்பெறும் பல பொருள்களைக் குறித்தன,


பேச்சு வழக்கில் சிலவே உள்ளன. பிற இலக்கிய வழக்கு உடையவை.   தா என்ற ஏவல் வினையிலிருந்து இதனை அமைத்துக்கொண்டுள்ளனர்.  பிற காரணங்கள்  மற்றும் மூலங்கள் கூறிக் குழப்பத் தேவையில்லாத சொல் இது.

து என்னும் தொழிற்பெயர் பிற பெயர்கள் வேறு சொற்களிலும் வந்துள்ளன:

கைது --  கையிற் பிடிபட்டது.  கையும் களவுமாய்ப் பிடிபட்டான் என்பது ஒருவகைக் கைது.

விழுது

பழுது.

மாது    (  அம்மா>  மா > மாது )

கோது.

சூது   ( சூழ்து என்பதில் ழகர ஒற்று கெட்டது) விளையாடும் போது சூழ்ந்து ஆடுதற் குரியது; இன்னும் விளையாடுவோர் வட்டமாக இருந்து ஆடுவது ஒரு காரணமாகும்.

தூது  (  தூய்து என்பதில் யகர ஒற்று கெட்டது,  தூதன் அனுப்பிய அரசனுக்குத் தீது எண்ணாத நேரியனாய் இருக்கவேண்டும் ).

சேது  ( சே:  செம்மை,  சிவம் ).

ஏது  ( ஏ என்னும் வினா)

வேது  ( வேது பிடித்தல்:  போர்வைகளால் போர்த்தி வியர்க்கச் செய்தல்)

இது  ( பொருட் சுட்டு)  

அது

கேது   இடுகையில் முன் விளக்கப்பட்டது.

வாக்கியம்}

ஒரு சித்தவைத்தியர் கூறியது:  முட்டையின் சிவப்புப் தாதை எடுத்து அதில்
இந்தச் சாதிலிங்கத்தை உரைத்துக் கலக்கி முழங்காலில் தடவவேண்டும், இப்படி 48 நாள் செய்யுங்கள்.


தா என்பது ஏவல் வினை.  எடுத்துக்காட்டு:

சங்கத் தமிழ்மூன்றும் தா.

செம்மாதுளை பிளந்து தா.

இனித் தாகம் என்ற சொல்:

தாகம்:  நீர் தருவதற்கு உள்ள நிலை. உடலுக்கு நீர் தருவதற்கு நேரம் வந்துவிட்டதைக் குறிப்பது.

தா:   தருதல் குறிக்கும்.

கு:    வந்து சேர்தல் அதாவது சேர்விடக் குறிப்பு.

அம்:  விகுதி (< மிகுதி).

தா+கு+ அம் =  தாகம்.

தவித்தல் என்ற சொல்:

தா+இ.   > தாவி > தவி.  (  இது முதனிலைக் குறுக்கம் ).

இங்கு வந்த இகரம் ஒரு  வினையாக்க விகுதி.  ஒரு வினையினின்று இன்னொரு வினை தோன்றல்.

நீர் தருக என்பது  தா+இ = தவி ஆனது.

தா என்ற ஏவல் வினை,  தரு, தந்து, தந்தான்/ள், தரமாட்டான் ,  ---- இவ்வாறு பல சொற்களில் குறுகுதல் இயல்பு.  தா>த.

இந்தா என்ற சொல்லில் குறுகவில்லை.

தா என்று கேட்குமுன் இந்தா என்று கொடுத்துவிடு (வாக்கியம்).

தா > தா இ > தவி >  தவி+ அம் = தாவம்   =  தாகம்

இவை தோற்றுவாய் ஒன்றான சொற்கள்.

வகரம் பகரமாகும்.  எ-டு:  வசந்தம் > பசந்த்.   இது  பல மொழிகட்கும் உரிய
திரிபு.

தாவம்> தாபம்.  ( நீர் விடாய்;  பொதுவாக விடாய் ).

தவித்த நாவுக்குத் தண்ணீர் கொடு.  (வாக்கியம்).  நீர் கொடு - நீர் தா இரண்டும் ஒன்றுதான்.


தாது மற்றும் தாவில் பிறந்த பிறவற்றின் உறவு விளக்கப்பட்டது.

இன்னும் பல பழைய இடுகைகளில் உள.




கருத்துகள் இல்லை: