வியாழன், 2 ஆகஸ்ட், 2018

சால நித்தியமான சானித்திய நிலை: பொருள்

இன்று அடிக்கடி வழங்காத ஒரு சொல்லை அறிந்து இன்புறுவோம்.  எப்போதும் நம் புழக்கத்திலும் பழக்கத்திலும் உள்ள சொற்களை மட்டும் அறிந்துகொண்டு உறக்கம் மேற்கொள்வதிலிருந்து இது சற்று வேறுபட்டுக் கேட்பாரை மகிழ்வுறுத்தும் என்று எண்ணுகிறோம்.

நாம் தெரிந்தெடுத்துள்ள சொல்:  சானித்தியம் என்பது.  இது செந்தமிழ்போல் இல்லை அன்றோ?

இதில் இரண்டு துண்டுச் சொற்கள் உள்ளன.  இவற்றுள் இறுதித் துண்டினைப் பார்ப்போம்.

இறுதி:  நித்தியம் என்பது.  ஒன்றை நித்தியமென்றால் அது என்றுமுள்ளது என்று பொருள்படும்.

ஒன்று உள்ளது என்றால் உள்ளிருக்கிறது என்பதே அதன் பருப்பொருள். ஒரு பொருளாய் அகத்திருந்தால் அங்கு உள்ளே இருக்கிறது என்போம்.  சுருக்கமாக, அது உள்ளது  என்றும் சொல்வோம்.  அது உண்டு என்பதும் வழக்காகும்.

இப்போது உள்ளது என்பதில் " உள்" என்பதன் பொருள் வலிவற்று நிற்கிறது. ஒரு கடையில் போய் அரிசி உள்ளதா என்றால் :  கடைக்காரனும் உள்ளது என்றால்,  அது உள்ளே எங்கோ இல்லாமல் வெளியிலே ஒரு பெரும் பாத்திரத்தில் இருந்தால்,  " என்ன உள்ளது என்கிறாய், அது வெளியதாய் இருக்கிறதே!"  என்றால்  பொருட்கேடு விளைந்ததுபோல் தோன்றுமே.  உள்ளது என்று நாம் சொல்லும் ஒரு பொருள் உள்ளே இல்லாமல் வெளியிலும் இருக்கலாம்.  ஆகவே உள் எனில் இருக்கின்றது என்றே பொருள்.  இஃது இவ்வாறாக  'என்றும் உள்ளது' என்பதற்கு என்றும் உள்ளிருப்பது என்பது பொருளன்று.

அகடுற யார்மாட்டும் நில்லாது ---- என்றால் நித்தியமானது அன்று,   நிலையானது அன்று என்று பொருள் கூறுவோம்.  நித்தியம் என்றால் நிற்பது என்பது.  நிற்காமல் வீழ்வது, நிற்காமல் ஓடிப்போவது, நிற்காமல் கரைந்துவிடுவது, நிற்கும்போதே ஆவியாகிவிடுவது ----- என்பவெல்லாம் நித்தியம் அற்றவை  ஆகலாம். நிற்கவேண்டும்; அதுவே நித்தியம்.  நில் > நி > நித்து> நித்தியம்  அல்லது நில் > நிற்று > நிற்றியம் > நித்தியம்.  எப்படியானாலும் நிற்பதே நித்தியம். ஓடிப்போவதும் கரைந்துவிடுவதும் சாம்பலாவதும் நித்தியமன்று.

நித்தியம் என்றால் நிற்பது; நித்தியம் என்றால் நிலையானது,

நிலை என்றாலும் நில் என்ற அதே அடியிலிருந்தே சொல் வருகிறது.

நிற்றல் > நித்தல்;  நிற்றம் >  நித்தம்.

ற்ற எனற் பாலதை த்த என்று மாற்றி அழகு கண்டுள்ளனர்,  எனினும் இவையாவும் கிருதப்புதுமை ஒன்றையும் வெளிக்கொணரவில்லை,

நித்தியம் என்றபடி சொல்லமைக்காமல்:  உள் என்பதிலிருந்து தொடங்கி,  உள்> உள்ளி > உள்ளியம் என்றும் அமைத்திருக்கலாம் எனினும் அமைக்கவில்லை. இரு என்பதிலிருந்து தொடங்கி  இரு > இருத்து > இருத்தியம் என்று வந்திருக்கலாம். வரவில்லை. அமைவுறாதன வேறு சுற்றுச்சார்புகளில் எழும் புதிய கருத்துகளுக்குச் சொல்லமைக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்,

நித்தியமென்ற சொல்லினழகும் அமைப்பும் அறிந்தின்புற்ற நாம், முழுச்சொல்லையும் அறியத் தயாராய்விட்டோம்.

தயார் என்றாலே தயக்கத்தின் நிறைநிலை என்று பொருள்.  ஒரு படை உடனே போருக்குள் இறங்கிவிடாமல் தயக்க நிறைநிலையில் நின்றிருத்தலே தாயார் நிலை. படைகளும் தமிழரசும் தொலைந்த பின், தயார் என்ற சொல்லிருந்தது; ஆனால் அது எங்கிருந்து வந்தது என்று புரியாத நிலையில் தயார் தமிழா என்று ஐயம் ஏற்பட்டுவிட்டது.  தய:  தயக்கம் அல்லது தயங்கிடுதல்;   ஆர்:  நிறைவு;  ஆர்தல் -  நிறைதலே.  தய+ ஆர் . =தயார்.  இது உருதுமில்லை; கிருதுமில்லை,  இந்தோனேசியாவின் பாலிம்பாங்க்  வரை படைநடத்தி, சிங்கப்பூருக்குள்ளும் புகுந்தான், நீல உத்தம் சோழன் என்னும் இராஜ ராஜனின் தளபதி.  அவன் படைகட்கு உத்தரவுகளை உரக்கக் கூவினான்.  எங்கே அவன் பயன்படுத்திய சொற்களெல்லாம்?

யாம் இப்போது தயார்.

நித்தம் என்பதறிந்தோம்.  நித்தியம் என்பதுமறிந்தோம். இனிச் சானித்தியம் அறிவோம்.

சா+ நித்தியம் என்று பிரிப்போமானால் --- சாவு நித்தியம் என்று பொருள்பட்டுப்
பிழைக்கும் என்பதறிக.

சாலவும் நித்தியமானதே சால நித்தியம்; சால் நித்தியம்:  > சானித்தியம்.
சாலுதல்: நிறைதல் சான்றோர்: நிறைந்தோர். 

இது சான்னித்தியம் என்றும் எழுதப்படுவதுண்டு.  தெய்வத்தின்முன்  என்பது இதன் வழக்குப் பொருளாகும்.  சொல்லமைப்புப் பொருள்: மிகுந்த நிறைவு அடைந்த நிலை என்பதாகும். திருமுன் என்பதும் பொருள்.

தெய்வம் தோன்றி நிறைவு தந்த நிலை. மாறாத இன்ப நிலை.

பிசகுகள் தோன்றின் திருத்தம் பின்பு.

பிழைகளை உண்டாக்கும் மென்பொருள் கொண்டு
சில பிழைகள்வெளியாரால் உண்டாக்கப் பட்டன. திருத்தியுள்ளோம்.
மீண்டும் தோன்றின் மறுபார்வை செய்வதுதவிர வழியில்லை. 
தெரியப்படுத்துங்கள்.












கருத்துகள் இல்லை: