செவ்வாய், 28 செப்டம்பர், 2021

ஆலிங்கனம் சொல்லாக்கம்

 ஆலிங்கனம் என்ற சொல்லை இன்று ஆய்வு செய்வோம்.  பார்ப்பதற்கு இது கடிக்கமுடியாத கடலைபோலத் தோன்றினாலும் உண்மையில் மிக்க எளிதாக அறியக்கூடிய தமிழ் மூலங்களை உடைய சொல்லே ஆகும்.  ஆலிங்க்,  ஆலிங்கன, ஆலிங்கித என்ற சொற்கள் சமத்கிருத  அகரவரிசையில் உள்ளன.  இதே மாதிரியான  சொற்கள்  தமிழ் அகரவரிசைகளிலும் உள்ளன.  இன்னும் கூறினால், இந்திய மொழிகளிலும் திரிபுகளுடன் இல்லாமல் போகாது.  செந்தமிழில் அணைத்தல் என்பது இவற்றுக்கு ஈடான சொல் ஆகும். தமிழிலும் இப்பொருளுடைய சொற்கள் பல கிடைக்கும்.  சிற்றூரில் கட்டிப்பிடித்தல் என்பர்.

இதன் உள்ளுறைவுகள் யாவை:

அகல் என்பது ஆல் என்று திரிந்துள்ளது.  அகல இடங்கொண்டு விழுதுகளுடன் நிற்கும் மரத்தின் பெயரும் அகல் > ஆல் என்றே திரிந்துள்ளது.  இதுபோலவே பகு> பகு அல் > பகல் > பால்  ( பிரிவு) என்ற சொல்லும் இதே பாணியில் திரிந்துள்ளது. இன்னும் பல காணலாம்.  எல்லாம் ஈண்டு பட்டியலிட வேண்டியதில்லை. ஒன்றிரண்டு போதும்.

தகல் > தால்  என்பவற்றின் தொடர்பினை இன்னோர் இடுகையில் கூறுவது நலம்..  தகல் ( தகு அல் ) > தால் > தாலாட்டு என்பது தக்கபடி பாடிக்கொண்டு தொட்டிலாட்டுவதையும்  தொங்கும் தொட்டிலை ஆட்டுவதால்  "தால் ஆட்டுதல்" என்று வந்த இருவகை அமைப்பையும் குறிக்கும்.  மறக்காமல் பின்னூட்டம் மூலம் நினைவுபடுத்திடுவது உதவியாய் இருக்கும். அப்போது அவ்விடுகையை விரைவில் எழுதலாம்.

ஆலி~~ என்பதில் வரும்  இகரம் இங்கு என்று பொருள்படும்.  அதில் வரும் கு அகல விரிந்த இருகைகள் அடுத்துள்ள உடலின்மேல் சேர்த்து இடுதலைக் குறிக்கும்.  கு என்பது சேர்விடம் குறிக்கும் பண்டைத்தமிழின் சொல்.  சென்னைக்கு, மதுரைக்கு, கோட்டைக்கு என்று வரும் அந்தக் கு தான் இங்கு வந்துள்ளது.  அன் என்ற இடைநிலையான சொன் அண் என்பதன் திரிபு.  இது அன்பு என்ற சொல்லில் இன்னும் இருக்கிறது.  ஆக்ககாலத் தமிழில் அண் - அன் எல்லாம் ஒன்றுதான்.  அம் என்ற விகுதி,   (மிகுதி - விகுதி:  சொல் இறுதித் துண்டு வந்திணைதலைக் குறிக்கும்)  ஒ.நோ:  விஞ்சு ><மிஞ்சு.   போலி. )  அமைவு குறிக்கும் இறுதிநிலை ஆகும்.

அகல் + இ +  கு +  அன் + அம்.

எல்லா  உள்ளுறைவுகளையும் திரிபோடு புணர்க்க,   ஆலிங்கனம் ஆகிவிட்டது.

கையை அகட்டித் தான் தழுவ முடியுமாதலால் அகல் >  ஆல் முன்மைத் திரிபு.

எந்த நூலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆலிங்கனம் தமிழ்தான்.

முந்தை நாட்களில், பரந்து ஐயர் வேலை பார்த்தவர்கள் பர ஐயர்களாகிய  பரையர்களே.  அவர்களின் மேலான கவி  வால்மிகி.  ( வலிமை மிக்கவர் அல்லது தூய்மை மிக்கவர் என்று பொருள் ).  இராமாயணம் பாடியவர்.  பாணன் - பாணினி இலக்கணம் எழுதினான்.  மீனவன் பாரதம் பாடினான்.  அவன் பரதவன்.  பரவை என்றால் பரந்ததாகிய கடல்.  இந்தப் புலவர்களால் இச்சொல் அமைக்கப்பட்டது என்பது அதன் துண்டுகளைப் பார்த்தால் தெளிவாய் இருக்கிறது.

அறிக மகிழ.

மெய்ப்பு பின்னர்.




கருத்துகள் இல்லை: