வெள்ளி, 24 செப்டம்பர், 2021

மூதாதையர் என்பது தமிழா?

 [இப்போது சிங்கப்பூர் மணி 3.47 மாலை.   மலேசிய நேரமும் இதுவே. இந்த இடுகை இட்டபின் உங்களுக்கு உங்கள் ஊரின் நேரம் தெரிவிக்கப்படுதல் கூடும்.  அது உங்கள் கணினி காட்டும் நேரம்.  அது எமக்குத் தெரியாது.] 

நாமெடுத்துக்கொண்ட தலைப்பு மேல் குறித்தபடி மூதாதை என்ற சொல்லாகும். 

மூதாதை என்பதில் தாதை என்பது தாதா அல்லது தாத்தா என்ற சொல் ,   மூ என்பதோடு சேர்க்கப்பட்டுள்ளது.  மூ என்பது மூப்புக் காட்டுவது.  ஆகவே இதைத் தாத்தாவுக்கு  தலைமுறைகள்  முன்னுள்ள தாத்தாமார் என்று  எடுத்துக்கொள்ளவேண்டும்.  நம் கண்ணுக்குத் தெரிந்த தாத்தாவினும் தெரியாத தாத்தாக்கள் பலர்.  அவர்களை நாம் அறியோம்.  நாம் அறிய முடிந்தது அவ்வாளவுதான்.  நம் உடலிலுள்ள அணுக்களுக்கும் அணுத்திரள்களுக்கும்  [ atoms, molecules ] இதுபற்றித் தெரிந்திருந்தாலும் நாம் இதை அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை.

தாத்தா என்பது ஆண்முன்னோரைக் குறித்தாலும்,  இதுபோலும் வாக்கியங்கள் சொற்றொடர்களில் ஆண் என்பது  பொருள்நீட்சி காரணமாகப் பெண்முன்னோரையும் உளப்படுத்தும்.

தாத்தா >  தாதா>  தாதா+ஐ >  தாதை,   தாதை+ அர் >  தாதையர்.
தாதை > தாதையர்,  தாதை > தாதா> தாத்தா   எனினுமாம் 
இவற்றை எப்படித் திருப்பிப் போட்டுக் காட்டினும், அடிச்சொல் தை என்பதே.
தம்+ தை > தந்தை,  எம் + தை > எந்தை,   நும்  + தை > நுந்தை  என்றெல்லாம் வரும்.

தை >  தா என்பது விளிவடிவம்.  தாதா என்பது இரு விளிகள் கோவை.
தந்தாய என்பது தந்தை ஆய என்பதன் ஒட்டு.
தந்தை  -  தம் + தை > தம் +  த் + ஆய > தந்தாய.   இங்கு வந்த த் என்பது  த்+ஐ என்பவற்றில் ஐ கெட்டது.

தாதை என்பது தந்தைக்குத் தந்தை.,  அதாவது தை தை.   அல்லது தைக்குத் தை.  (  அதாவது தந்தைக்குத் தந்தை).

அர் என்ற பன்மை விகுதியாலும்,  மூ என்ற மூப்புணர்த்தும் முன்னொட்டினாலும் இது   ஆண்முன்னோர் என்று பொருள்பட்டது.

தந்தையர் என்ற சொல்லும் இதுபோல்வதே.  இன்று இதை "முன்னோர்" என்றே சொல்லி நிறுத்திவிடலாம். எல்லாம் தமிழ்தான்.

அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்


கருத்துகள் இல்லை: