ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

கிருதம் - தமிழ் தோற்றமயக்குச் சொற்கள்: இருபொருள் கொள்பவை முதலாயின.

 சில சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் உருப்பெற்று, ஒரே பொருளையோ இருவேறுபட்ட பொருளையோ குறிக்கக்கூடும். ஒன்றுக்கு  மேற்பட்ட பொருள்தரும் சொற்களைச் சிலேடை என்பர்.   பொருள் சிலவாக எடுத்துக்கொள்ளத் தக்க சொற்களைக் கவிதைகளில் பயன்படுத்தி புலவர்களையும் மக்களையும் அசத்திய பெரும்புலவர்களும் உளர்.  சீவக சிந்தாமணியில் இத்தகு வியக்கத்தக்க செய்யுள்கள் உள்ளன.   கவி காளமேகத்தின் பாடல்களும்  இத்தகு சிறப்புகள் உடையவை.  "ஓரு காலடி நாலிலைப் பந்தலடி" என்று அவ்வையைப் பார்த்துக் கம்பன் கவி கூறியதாகவும், அதற்குப் பாட்டி, " ஆரையடா சொன்னாய் அது" என்று முடியும் ஒரு வெண்பாவைப் பாடியதாகவும் தமிழ்ப் பண்டைப் புலவர்களின் கதைக்கொத்து எடுத்துக்கூறும்.  இவற்றைப் பலர் மறந்திருக்க மாட்டீர்கள்.  சில + எடு + ஐ = சிலேடை எனவாகும் =  சிலவாகப் (ஒன்றுக்கு மேற்பட்டனவாகப் ) பொருள் எடுத்துக்கொள்ளத்தக்கவை என்பதாம்.

சில >சில்.    எடு+ஐ>ஏடை. முதனிலை நீ ண்டு அமைந்த தொ -பெ.  எனவே சிலேடை ஆயிற்று.


சொற்களிலும் வெவ்வேறு வகைகளில் புனைவு பெற்று, ஓர் உருக்கொள்ளுதல்  உடையவை  தமிழில் பற்பல கிட்டுகின்றன.  இவற்றுள் அவுடதம் (ஓளடதம். ஔஷதம் ),  அவிடதம், அவிழதம் என்பவையும் உள்ளன.  சொல்லாக்கத்திலும் இவ்வாறு பல்பொருள் அமைதல் உண்டு.

புலவர் என்ற சொல் கேட்க இயல்பான சொல்லாகவே தோன்றினும் அதுவும் 1.புலவு + அர் >  புலவர் என்று வந்து புலால் உண்பவர் என்று பொருள்படுவதும், 2.  புலம் + அர் >  புல + அர்>  புலவர் என்று வந்து,  காட்சி உடையவர் என்று பொருள்படுவதும் உண்டு.  3. வடபுலவர் என்று வந்து,  வடபுலத்து வாழ்நர்  ( வடக்குத் திசை வாழ்வோர்) என்று பொருள்தருவதும் அறியலாம்.  இதன் காரணமாக,  உரையாசிரியன்மார் திணறுவதும் உண்டு.  பொருள்கொள்வோர் அலமருதலும் காணலாம்.

ஔடதம் என்ற சொல்லும் ஈண்டு இருவகையில் எழுந்ததாக  நம் இடுகைகள் காட்டும்.  இரண்டில் இரண்டும் சரியே ஆகும்.  நீங்கள் பொருத்தம் என்று எண்ணுவதை அல்லது உங்கள் பயன்பாட்டுக்குப் பொருந்துவதை நீங்கள் மேற்கொள்ளலாம்.

இருவேறு மொழிகட்கு இடையிலும் இவ்வாறு இருபிறப்பிகள் ( அல்லது பல்பிறப்பிகள் )

 உருவாதல் உண்டு.  எடுத்துக்காட்டு:

பேக்கட்  ( ஆங்கிலம் )

பைக்கட்டு  ( தமிழ்).

பார்லிமென்ட்  ( பிரஞ்சு )

பாராளுமன்று  ( தமிழ் )

நீர் என்ற தண்ணீர்  குறிக்கும் சொல் இவ்வாறு உருக்கொண்டதற்குக் காரணம்,  நிரந்து நிற்பதனால்.    அது மண்குவியல் போல் மேடு பள்ளமாக நிற்பதில்லை.  ஒரு குவளைக்குள் நீர் மட்டமுற்று நிற்கும்.  மாவு அவ்வாறு நிற்கவேண்டுமானால் அதை மட்டமுறச் செய்யவேண்டும்.   நீர் என்ற சொல் சமத்கிருதத்திலும் உள்ளது.  ஆனால் அது வேறு உருவாக்க விளக்கம் உள்ளதாகத் தோன்றவில்லை.  அதனால் அது தமிழே ஆகும்.

நிர >  நீர்.  முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

ஒநோ:  பர >  பார்.    பொரு >  போர்.

ஐந்திரம் என்ற இலக்கண நூல்:   இந்திரன் > ஐந்திரம் என்றும் வந்திருக்கலாம்.  ஐ+ திறம் > ஐந்திறம் > ஐந்திரம் என்றும் வந்திருக்கலாம்.   இந்திரன் எழுதியதாகச் சொல்லப்படும் இலக்கணம் கிடைக்கவில்லை.   ஆனால் தமிழ் இலக்கணத்தில் எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி என்ற பகுப்புகள் உள்ளன,  ஆகவே இவை அறிந்தவர் தொல்காப்பியர் என்று பனம்பாரனார் சுட்டுவதாகக் கொள்வது பொருத்தமானது.  இது Balance of Probabilities அடிப்படையில் செய்யும் முடிவாகும்.  மற்றபடி இது தமிழ்மொழியாளருக்கும் சமஸ்கிருதமொழியாளருக்கும் ஏற்படும் சண்டையோ அல்லது அடமோ அன்று. இந்திரன் என்று ஒரு புலவர் இருந்து அவர் அப்படி இலக்கணமொன்று எழுதியிருப்பதற்கான சான்றுகள் மிகுந்தால், தொல்காப்பியர் சமஸ்கிருத மொழி வல்லவர் என்று முடிவு செய்யலாம்.  ஆனால் தொல்காப்பியர் காலத்தில் சமஸ்கிருதத்துக்கு வழங்கிய மொழிப்பெயர் யாது என்று அறியோம்.  ஒருவேளை " சந்தாசா" என்பதாக இருக்கலாம்.  சமஸ்கிருதம் என்பது "வடமொழியா"  என்பதிலும் ஐயமுண்டு.  ~கிருதம்  தென்னாட்டில் எழுந்து வடபுலம் மேவியதாகச் சிலர் சொல்வர்.  அதன் ஒலிமுறை தமிழைப் போன்றதே ஆகும்..  (சுனில்குமார் சட்டர்ஜி).  அடிச்சொற்கள் ஒற்றுமையும் காணப்படலாம். சமஸ்கிருதம் சிரியாவில் வழங்கியது என்று சொன்னவர்களும் ஆய்வாளர்கள் சிலர் உளர். நண்ணில( மத்திய)க் கிழக்கில் தமிழ் வழங்கியதற்கான சான்றுகளும் உள.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

Edited 30092021 0418

கருத்துகள் இல்லை: