வெள்ளி, 29 டிசம்பர், 2017

பணம் பிடுங்கிய மஞ்சள்வேட்டிச் சாமியார்,



கிழவி  வனாவுக்கு சாமி கும்பிடவும் பூசைகள் செய்யவும் கொள்ளை ஆசை. ஒவ்வொரு பூசை நிகழ்ச்சியிலும் கடவுள் ஆங்கு வீற்றிருப்பதாகவே வனா நம்புவாள். யாரும் வீட்டில் பூசை செய்வதாகக் கூறி அழைத்தாலும் புடவை, வேட்டி. துண்டு சிங்கப்பூர் வெள்ளி ஐம்பது அல்லது நூறு மஞ்சள் குங்குமம் என்று அனைத்தும் வைத்து அந்த வீட்டு அம்மனுக்கோ மற்ற சாமிக்கோ சாத்துவாள்.  அதை சாமியின் முன்வைத்து அப்புறம் வீட்டுக்கார்ர்கள் எடுத்துக்கொள்வார்கள்..

சிங்குச்சாமி வீட்டில் நடந்த அம்மன் பூசைக்கும் வனா அதே மாதிரி செலுத்தினாள். சிங்குச்சாமிக்குப் பெரிய மகிழ்ச்சியாகப் போய்விட்டது. இது நல்ல பசையுள்ள கிழவி என்று வனாவைப் பின் தொடர்ந்தார்.

ஓரிரண்டு மாதங்களிலேயே சிங்கு இன்னொரு பூசை வைத்தார்.  அன்று வனாவை அழைத்திருந்தார். ஆனால் வனா போகவில்லை.  வேறு ஓர் அழைப்புக்குப் போய்விட்டாள். அன்று ஆக்கி வைத்ததெல்லாம் ஒரு வகையில் வீணாகிவிட்ட்தென்ற கவலை சிங்குச்சாமிக்கு.  போனமுறை போல காசும் காஞ்சிப் பட்டும் யாரும் கொடுக்கவில்லை.  வந்தவர்கள் பிரசாதம் (படையல்) சாப்பிட்டுவிட்டு கைவீசிக்கொண்டு போய்விட்டனர். ஒரு நூறாவது கிடைக்கும் என்று பார்த்தால் அதற்கு வழியில்லாமல் போய்விட்டது. பத்துக்காசு இருபதுகாசு தட்டில் வந்து என்ன பயன்?

இந்த நிலையில் இன்னொரு வீட்டில் ஒரு பூசை நடந்தது. அதற்கு வனாவை அழைத்திருந்தார்கள். வனா அங்கு போய் எப்போதும்போல் சாமிக்குக் கொடை அளித்தாள். பூசை முடிந்தது வாடகைக் வண்டிக்குக் காத்திருந்தபோது சிங்குச்சாமியும் அங்கு வந்து, நானும் வருகிறேன் என்று வந்த வண்டியில் ஏறிக்கொண்டார்.

வண்டி முதலில் வனாவின் வீட்டுக்குப் போயிற்று. வனா இறங்கிக்கொண்டு பயணத்துக்குக் காசு செலுத்த எண்ணி, சிங்குச்சாமியிடம் ஐம்பது வெள்ளியை நீட்டினாள்.  அந்தப் பயணத்துக்கு 15 வெள்ளிதான் வாடகை, அதுவும் சிங்குச்சாமி வீடு போகும்வரை அவ்வளவுதான் வரும்.  மீதம் 35 வெள்ளியை எதிரிபார்த்து வனா வண்டிக்கு வெளியில் இறங்கி நின்றாள். சிங்குச்சாமி (பைபை  என்று ) கையசைத்துவிட்டு, வாடகைவண்டியைத் தம் வீட்டுக்கு ஓட்டும்படி ஓட்டுநரிடம்  ஏவினார்.  வண்டியை ஓட்டிய சீனரும் அப்படியே ஓட்டிச் சென்றுவிட்டார்.

நான் கூப்பிட்ட பூசைக்கு வராமல் ஏமாற்றினாய் அல்லவா?  உனக்கு ஆப்பு என்ற படி சிரித்துக்கொண்டே  வீடுபோய்ச் சேர்ந்தார்.

எழுபது தாண்டிய கிழவி வனா பிள்ளைகளை வற்புறுத்திக் குடும்பத்துக்கு நல்லது நடக்கும் என்று நினைத்து, பணம் அவர்களிடமிருந்து பெற்று ,  இத்தகைய பூசைகளிலெல்லாம் கலந்துகொள்பவள். அவளுக்கு வேண்டிய பணம் எல்லாம் பிள்ளைகளைக் கசக்கிப் பிழிந்து பெற்றுக்கொள்பவை. ஒவ்வொரு பூசைக்கும் இவள் செலவு மட்டும் 200 வெள்ளிக்குமேல் போகும். கொடைவள்ளல் போல் வாரி வழங்குவாள். என்றாலும் சிங்குச்சாமி இப்படி நடந்துகொண்டது, இவன் காசுபிடுங்கி என்பதை அவளுக்கு நன்`கு அறிவுறுத்தியது.    

இன்னொரு சாமிக்குக் கைப்பேசியில் அழைத்து விவரத்தைத் தெரிவித்து  இப்படிச் சிங்குச்சாமி செய்துவிட்டான் என்றாள்.  அந்தச் சாமி,  நான் அவனைக் கேட்கிறேன் என்றார்.  வேண்டாம். இத்துடன் விட்டுவிடு என்று வனா சொல்லிவிட்டுக் கவலையாக இருந்தாள். உண்மையாகவே கேட்கத் தீர்மானித்து அப்படி சொன்னாரா?  அது சாமிகளுக்குத் தாம் தெரியும்.

சிங்குச்சாமியும் வீட்டில் பூசைகள் செய்து வருமானம் பெறுபவர். பக்திமான் போல் மஞ்சள் துண்டு வேட்டியுடன் எப்போதும் இருப்பவர்.
இப்படியெல்லாமா காசு பிடுங்குவது?  நன்`கொடை வாங்குவது மட்டுமின்றி, பூசைக்கு வருவதை எடுப்பது மட்டுமின்றி, வழியில் வருவது வராதது எல்லாவற்றையுமா பிடுங்குவது?

உலகம் பொல்லாதது.  அதில் சாமியார் வேடமிட்ட சிங்குச்சாமி சரியான காரியக்காரன் என்று உணர்ந்து அசந்துபோனாள் கிழவி வனா.

பதினைந்து வெள்ளிப் பயணத்துக்கு ஐம்பது வெள்ளி எடுப்பது எப்படி? அதிலும் சிங்குச்சாமி இலவசப் பயணி..... 

வேண்டாம் அம்மா! நான் பணத்தைக் கட்டிவிடுகிறேன்,  நீங்கள் போ`ங்கள் என்று சொல்வார் என்று வனா எதிர்பார்த்தாள். அது நடக்கவில்லை.  மீதம் கொடுப்பார் என்று எதிர்பார்த்தாள். அதுவும் நடக்கவில்லை. இப்படியா ஆசை வைப்பது பணத்தின்மேல்?

யாரைத்தான் நம்புவது இந்த அறியாத நெஞ்சம்?  என்று உலகத்தை அறிய முனைந்தாள் வனா.

(பிழைகள் தோன்றின் பின் திருத்தம் பெறும். )




கருத்துகள் இல்லை: