வெள்ளி, 15 டிசம்பர், 2017

போதித்தல், போதம், போதனை



இன்று போதித்தல் என்ற சொல் எப்படி அமைந்தது என்பதை அறிந்துகொள்வோம்.

போதித்தல் என்ற சொல்லுக்குக் கற்பித்தல் என்பது பொருள்.
இதில் போ என்பதே பகுதி. தி என்பதும் தல் என்பதும் சொல்லின் பொருளை மிகுத்துக் காட்டுவதற்காகச் சேர்க்கப்பட்ட துண்டுச் சொற்கள்.

போ என்ற அடிச்சொல் தமிழில் உண்டாகிப் பயன்பாடு கண்டு பல நூற்றாண்டுகளோ ஆயிரம் ஆண்டுகளோ ஆயின பின்புதான் போதி என்ற சொல் புனையப்பட்டிருக்க வேண்டும். இதைப் புனைந்த அறிஞன் யாரென்பதை அறிந்துகொள்ள இயலவில்லை.

ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் செல்லும் காரியத்தைச் செய் என்பதே போ என்ற சொல்லின் பொருள். இது ஏவல் வினையாகும். ஏவல் என்றால் ஒன்றைச் செய்யச் சொல்வது.

நாம் எண்ணிய கருத்தை இன்னொருவனிடம் செல்லும்படி செய்வதே போதித்தல் ஆகும்.  மனிதனும் விலங்கும் ஓரிடத்தினின்றும் பிறிதோரிடத்திற்குச் செல்வதுபோன்றே ஒரு கருத்தும் ஒருவனிடமிருந்து பிறனுக்குச் சென்று சேர்கிறது.  

போதித்தல்- (  கருத்து பிறனிடம்)   போகும்படி செய்தல். ஆகவே கற்பித்தல்.
கருத்து பிறனுக்குச் செல்வதால் அவன் அதைப் புரிந்துகொள்வான் என்பது ஊகம் (யூகம்).

கருத்துக்கள் போய்ச்சேர்ந்தாலும் புரியாத மரமண்டைகளைப்  பற்றிப் போதித்தல் என்ற சொல்லுக்குள் ஒரு கவலையைத் திணித்தல் இயலாது.

சொல்லால் நாம் அறியும் பொருளிற் பல தோற்றங்கள் சொல்லின் புறத்து இணைந்து நிற்பவை. சொற்கள் பல இவ்வாறே இயல்கின்றன.  ஆதலின் அதுவே இயல்பு ஆகும்.

பின் போதி என்பது வினைப்பகுதியாகவும், முதனிலைப் பெயராகவும் ஓர் விகுதிபெற்றும் இயன்றது.

போதி + அம் = போதம்.
எ-டு:  சிவஞான போதம்.  சைவ சித்தாந்த ஞான போதம்.

போதமாவது போதிக்கப்பட்ட கருத்துக்களின்  தொகுப்பியைபு.

தமிழில் வீட்டுச் செல்லாகிய போ என்பது இத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்று பொருள்தந்து நிற்பது நமக்குப் பெருமையே ஆகும்.

போதனை - போதி + அன் + ஐ.

இத்தகைய அமைப்புகளிலெல்லாம்  போதி என்ற சொல்லின் இகர இறுதி கெடும் அல்லது ஒழியும். இல்லாவிட்டால் போதி + அன் + ஐ = போதியனை என்றாகிச் சொல் நீட்டமாகிவிடும்.  அத்தகைய நீட்டத்தினால் ஊதியமில்லை. ஆனதொரு பயனும் இல்லை.

போதியனை என்றால் அதில் வரும் யகர உடம்படு மெய் சொல்லுக்குப் புறத்திருந்து புகுவதே ஆகும். அஃது இன்றியே சொல் இனிது புணர்க்கப்படுதலின் அது தேவையின்றாயிற்று என்`க.

இப்போது கவனியுங்கள்:

1.அறு + அம் = அறம்.
(அறுத்து அல்லது அறுதிசெய்து இயற்றிய நெறியமைப்பு.)

அறு + அம் = அற்றம்  (தருணம்).

2. சிறு + அர் =  சிறுவர்.
இங்கு ஓர் வகர உடம்படு மெய் வந்து  இரு துண்டுகளையும் இணைத்த்து.

சிறு + அர் =  சிறார்.
இங்கு று என்பதிலுள்ள உகரம் கெட்டபின் சொல் அமைந்த்து.

அர் எனினும் ஆர் எனினும் ஒன்றே.

அன் விகுதியும் ஆன் என்று வரும்.  அள் விகுதியும் ஆள் ஆகும்.  These are  variations... Not substantially different.

இருவகையாகப் புணர்ந்து இருசொற்கள் கிடைத்தன. போதியனை என்று ஒரு புதிய சொல் தேவையாயின் அப்படி ஒன்றை உருவாக்க வசதியுள்ளது காண்க.

கருத்துகள் இல்லை: