புதன், 20 டிசம்பர், 2017

சாட்சி

சாட்சி என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

ஒரு திருட்டைப்பற்றிய வழக்கில்,  ஆங்குப் பொருளைப் பறிகொடுத்தவனே திருடியவன்மேல் குற்றம் சாட்டுபவன். அவன் சொல்வதை நம்பி, ஓர் அரசின் காவலன் திருடனெனப்பட்டவனைக்  கைது செய்கிறான். கைது என்றால் கையில் எடுத்துக்கொள்ளுதல். மனிதனைக் கையிலெடுத்தல் இயலாதெனினும் இது ஓர் அணிவகையான சொல்வழக்கு என்று அறிக. ஒரு பொருள் கைவயப் படுவதுபோலவே திருடனும் கைவசப் படுகிறான்.

கை என்பது மனிதனின் கையாகிய உறுப்பையும் குறிக்கும்.  பக்கம் என்றும் பொருள்தரும்.  வீதியின் அந்தக்கையில் அவர் வீடு உள்ளது என்று பேசுவது கேட்டிருக்கலாம். கைது என்ற சொல்லில் காவலனின் பக்கமாய் வந்து திருடன் மாட்டிக்கொண்டான் என்ற பொருளும் கொள்ள வழியுள்ளது.
து என்பது விகுதி. து என்பது அஃறிணை விகுதியாகவும் வரும்.  உடையது என்றும் பொருள்படும்.  எனவே  திருடனைக் காவலனின் கை உடையதாய் உள்ளது என்றும் பொருள் கூறலாம்.

அது என்பதில் அங்கு உள்ளது என்பது பொருளாதல் போலவே கைது என்பதில் கையில் உள்ளது என்றும் பொருளாம்.

குற்றம் சாட்டுபவன் பொருளைப் பறிகொடுத்தவன், அவனே காவல் நிலையத்தில் போய் சாட்சியும் சொல்லவேண்டும்; பின் நீதிமன்றத்திற்கும் போகவேண்டும்.  அவன் கடமை, அவன் சாட்டுகிற குற்றத்திற்கொப்ப விளக்கங்களை அளிப்பது. சாட்டுதல் என்பதில் இதுவும் அடங்கும்.

சாட்டுதல்  என்பது சாடுதல் என்பதன் பிறவினை. சாடச் செய்தலே சாட்டுதல்.
திருடியவனை உடைமைக்காரன் அடிப்பதே ஆதியில் மனிதக் குலங்களிடை நிகழ்ந்தது. கையால் அடிக்காமல் வாய்ச்சொற்களால் அதைச் செய்யப் பின்னர் அவன் நாகரிகம் அடைந்து கற்றுக்கொண்டான். இவ்வாய்ச் சொற்கள் பெரிதும் அதிகாரமுடைய பெரியவனிடமோ  குழுவினிடமோ விடுக்கப்பட்டன.

உடமைக்காரனே தண்டிக்காமல் பெரியவன்  அல்லது குழு திருடனைத் தண்டித்தது. ஆகவே முன்போல் சாடாமல்  குற்றத்தைச் சாட்டினான்.
சாடுதல் சாட்டுதல் என்பவற்றின் தமிழ்ப்பொருள் அனைத்தும் இணைத்துக்கூறப் பொருத்தமானவை. அதை நிகண்டுகள் மூலம் நீங்கள் அறியலாம். நானே சொல்ல வேண்டினும் அதைப் பின்னோர் இடுகையில் தருவேன். இதன் நீட்டம் குறைக்க இத்துடன் இவ்விளக்கத்தை நிறுத்துவோம்.  சொல்லுக்குள் செல்வோம்.

இதன் அடிச்சொல் சாள் என்பது.  சார், சால், சாள் என்ற மூன்றும் பொருந்துதல் சென்றுசேர்தல் என்ற அடிப்படைக் கருத்தை உடையவை.

சாடு என்பது சாள்+து என்று பிரியும்.

சாட்டு என்பது டகர ஒற்றுத் தோன்றிப் பிறவினை வடிவம் கொண்டது.  ஓடு > ஓட்டு என்பதனுடன் ஒப்பு நோக்குக.

சாள்+ சி = சாட்சி.
சாள் என்பது அடிப்படைப்  பொருந்துதல் கருத்தாதலின்  சாட்சி என்பவன் சாட்டுதலுடன் அல்லது வழக்கினுடன் பொருந்தி நிற்பவன். ஒன்றை இன்னொன்று பொருந்துவதில், வகை பலவாகும். கடினப் போக்கில் பொருந்துபவை; மெல்லப் பொருந்துபவை; நீர்ப்பொருள்போல் கலந்துபொருந்துபவை. பொருந்தி உடைபவை; பொருந்தும்போது துகள் ஆகுபவை இன்னும் பல.

பல்லாயிரம் ஆண்டுகளாய் மனிதனின் மொழி வளர்ந்துள்ளபடியால் அதை உணர நன்கு ஆழ்ந்து கற்கவேண்டும். இதை இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.  மிக நீண்டால் கேட்போன் உறங்கிவிடுதல் கூடுமாதலின். இன்னொரு கால் சற்று விரிப்போம்.

சாள்+ சி. இதில் சி விகுதி. சாட்சி.

சாள்> சாடு.
சாள் > சாட்டு.
சாள் > சாட்சி.

சாள் என்பது சாய் என்றும் திரியும்.
சாள் > சாய்.  ஓப்பு:  மாள் > மாய்.  மாள்தல் – மாய்தல்.

முடிவு:  சாட்டுகிறவனே சாட்சி. 


அவன் அதைப் பிறனுக்குத் தெரிவிக்கும் வழிகள் மேம்பாடு அடைந்துள்ளன.  அது குமுகத்தின் வளர்ச்சி.  மனித வளர்ச்சி.
 


பின் செப்பம் செய்யப்படும்.

கருத்துகள் இல்லை: