திங்கள், 13 ஜூன், 2016

ஐம்பதின் மேற் கொன்றவன் -- பைத்திய உலகமே

தமிழ் எழுதிகள் ஏன் இன்று தத்தளிக்கின்றன என்று  தெரியவில்லை. எழுத்துக்கள் வரவில்லை ஆகையினால் வேறு உருமாற்றிகளைக் கைக்கொள்ள வேண்டியதாயிற்று,

பைத்தியம் என்ற சொல்லினை மீண்டும் ஆய்ந்து அதைப்பற்றிப் பேசலாம் என்று நினைத்தேன். விரிவாக்காமல், சுருக்கமாகவே எழுதிவிடுகிறேன்.

பண்டைத் தமிழர் பைம்மையே மனக்கோளாற்றுக்குக்  ஒரு காரணமாய் இருக்கலாம் என்று நினைத்தனர்.  பைம்மையாவது முதிர்ச்சி இன்மை.
பைம்மையும் பசுமையும் தொடர்புடைய சொற்கள். பைந்தமிழ் என்றால்
பசுமையான தமிழ். அதாவது என்றும் இளமையான தமிழ்.

இப்போது பைத்தியம் என்ற சொல்லைக் காண்போம்.


பை  >  பைத்து.

து என்பது உடையது என்று பொருள்.  குறியெதிர்ப்பை நீர துடைத்து
என்ற குறள் தொடரில் உடைத்து என்பதன் பொருள்   உடையது என்பதுபோல‌
பைத்து என்பது முதிர்ச்சியின்மை உடையது என்று பொருள்.

இயம் என்பது பெரும்பாலும் இயங்குதல் குறிக்கும் ஒரு விகுதி அல்லது பின்னொட்டு. இதைப் பின் தனியாக ஆய்வு செய்யலாம்.
இப்போது பின்னொட்டு என்று மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்.  தொல் காப்பு இயம் என்பதில் இயம் ஒரு பின்னொட்டு ஆவது காண்க,  தொன்மை காக்க இயங்குவது  தொல்காப்பிய இலக்கணம் .

ஆகவே பைத்தியம் என்பது முதிர்ச்சியின்மையினால் வரும் ஒரு நோய் என்று பண்டையர் கருதினர்.  அவர்கள் கருதியது மனமுதிர்ச்சி
இன்மை அல்லது மனப்பைம்மை. பையன் என்ற சொல்லும் பைம்மைக் கருத்தே. ஆனால் அகவை முதிர்ச்சி இன்மை குறித்தது.

அமெரிக்காவில் ஐம்பதின் மேற்பட்டோரைக் கொன்றவன் அறிவு முதிர்ச்சி இல்லாதவன்.  பைத்தியக்காரனோ அறியோம்,

அறிவு முதிர்வின்மையின்  அலைப்பட்ட இவ்வுலகு  பைம்மைத்தாய் இயங்கும்  பைத்திய உலகமே  அன்றோ.....?











கருத்துகள் இல்லை: