வெள்ளி, 8 அக்டோபர், 2021

வீடு, அகம், இல். அறியவேண்டியவை

மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லும் தோன்றுவதற்கு ஒரு நிலைக்களனும் உரிய காரணிகளும் இருக்கவேண்டும்.  இதுதவிர சொல்லாக்கத்திற்கு  வேண்டிய மூல அல்லது அடிச்சொல்லும்,   ஒட்டுக்களும் ( முன்னொட்டு, பின்னொட்டு முதலியவை )  தேவைப்படும்.  இவை எல்லாம் கிட்டாதபொழுது,  குறிக்கவேண்டிய பொருளுக்கு  அடுத்து வாழும் மற்ற இன மக்களிடையே  ஒரு பெயர் இருக்கிறதா என்று பார்த்து, நம்மிடம் இல்லையாதலால் அம்மக்கள் சொல்லைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  எடுத்துக்காட்டாக,  கடலிற் செல்லும் கலத்திற்குப் பெயரே இல்லாதவர்களாக நாம் இருந்தால் "ஶிப்" என்பதை ஆங்கிலரிடமிருந்து பெற்று வழங்கலாம்.  இதற்கு காசு எதுவும் கொடுக்கவேண்டியதில்லை; திருப்பித்தா என்று கேட்கவும் மாட்டார்கள். அவர்கள் நிலத்தை நாம் எடுத்துக்கொண்டால் தகராறு வந்துவிடும்;  பெரும்பாலும் சொல்லுக்கு அப்படி வருவதில்லை.

சில சொற்கள் நம் முன்னோரே படைத்திருந்தாலும்,  அவற்றுள் திரிபு ஏற்பட்டு  ,  ஒரு சொல்‌ என்ன சொல் என்று தெரியாமற் போய்விடலாம். நாம் பயன்படுத்தும் சொல் ஒவ்வொன்றையும் கேட்பவர் எவ்வாறு அமைந்தது என்று கேட்பதில்லை ஆதலினால்,  இவ்வாறு தெரியாமற் போனதில் ஏதும் சங்கடம்  ஏற்படுவதில்லை. தாம் கடந்து  செல்லற்குக் கடினமான நிலையே தம்கடம் . அது பின் சங்கடம் என்று திரிந்துவிட்டதிலிருந்து இந்நிலையை நீங்கள் உணர்ந்துகொள்ளலாம். இங்கே சொடுக்கி அறியவும்:  https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post_20.html 

நல்லவேளையாக,  ஷிப் என்பதற்குத் தமிழில் பல சொற்கள் உள்ளன.  இவற்றுள் கப்பல் என்பதும் ஒன்றாகும்.  இது ஓர் இடைக்குறைச் சொல்.  கடப்பல் என்பது கப்பல் என்று திரிந்துவிட்டது. கடலை அல்லது நீர்நிலையைக் கடப்பதற்கு உதவுவது கடப்பல் >  க(ட)ப்பல்> கப்பல்..  டகரம் இடைக்குறைந்தது.  பலர் தங்கி இருந்து பேசுவதற்கோ பாடுவதற்கோ எதற்குமோ உள்ள இடம்,  தங்கு> சங்கு> சங்கம் ஆனது.  இது தகர சகரப் போலிச் சொல் ஆகும். இவை திரிசொற்கள். தொல்காப்பிய னா ரி ன்  காலத்திலே திரிசொற்கள் இருந்தன. ஒருசொல்லைக் கண்ட  மாத்திரத்தில் அதன் பொருளும் காரணமும் தெ ரி ந் து,  விடாது அவரே சொல்லியிருக்கிறார்.

நம் மொழியில் சில சொற்கள் மிக்கப் பழங்காலத்திலே அமைந்தது என்பது நாம் ஆய்வில் நமக்குத் தெரிகிறது.  நாம் எங்குச் சென்றாலும் திரும்பி வீட்டுக்குச் சென்று விடுகிறோம்.  இவ்வாறு ஒரு குறித்த நேரத்திற்கப்பால் விட்டுச்சென்று நாம் சேருமிடம்தான் வீடு.   இது விடு என்ற வினைச்சொல்லிலிருந்து அமைகிறது.  படு > பாடு,  சுடு> சூடு  என்பனபோல்  விடு>  வீடு  ஆயிற்று, எதையும் விட்டுச் சென்று தங்குவதால்.  இப்படி விட்டுச் செல்லும் வழக்கம்,  பண்டை நாளிலே ஏற்பட்டது.  இது எல்லா நாடுகளிலும் காணப்படுகிறது.  விலங்குகட்கும் பறவைகட்கும்  ஊர்வனவற்றுக்கும்  கூட "வீடு" இருத்தல் அறியமுடிகிறது.

வீடு என்ற சொல்,  வீட்டிலிருந்து தொலைவில் இருக்குங்கால் ஏற்பட்ட விட்டுச்செல்லுதல் கருத்தில் விளைந்தது ஆகும்.  வீட்டைக் குறிக்கவேண்டிய தேவை பலருக்கும் வெளியில் எங்காவது போயிருக்கும்போதுதான் ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் சிந்தித்து அறியமுடிகிறது. இறந்தபின் செல்வதும் வீடு என்றே சொல்லப்படும்.

இதைப்போலவே,  அகம் என்ற வீடு குறிக்கும் சொல்லும்,  வீடு   "அ ,"  அதாவது அங்கு இருப்பதாகவே உணரப்பட்டு அமைந்த சொல்லாகும்.   அ என்ற படர்க்கை அல்லது சேய்மைச் சுட்டு, இங்கில்லை என்பதையே தெரிவிக்கிறது.  சென்று சேர்வதற்கு உரியது என்பதைக்  "கு"  என்ற  சிறுசொல் குறிக்கிறது. இது உருபாகவும் வரும் பழங்காலச் சொல்.  அ+கு+அம் என, இறுதியில் அமைவு குறிக்கும் அம் விகுதி வந்துள்ளது.  இதுபோலவே அமைந்த இன்னொரு சொல், மு+கு+அம் > முகம் என்பதாகும். மு  முன்மை குறிக்கும்.

அகமென்பதும் வீடு என்பதும் ஒப்புமையான சூழலில் விளைந்த சொற்கள்.

வீடு சென்று அடைந்துவிட்டால்,  அப்புறம்  அகரச் சுட்டு தேவையில்லை. இகரம் தான் வேண்டும்.  அவ்வாறே,  இ என்ற இங்கு என்ற  சுட்டிலிருந்தும் இல் என்ற சொல் அமைகின்றது. இல்லமே இருப்பிடம்.   லகரம் ரகரமாய்த் திரியும் ஆதலால்,  இல் இரு  ஆகும்.  இல் என்பது உருபாக அமைந்து, இருத்தலைக் குறிக்கும்.  கண்ணில் என்றால் கண்ணாகிய இடத்தினது என்று பொருள். இவ்வாறே விரித்துக்கொள்க.  ஆகவே இல் என்பதில் இருத்தல் கருத்து அமைந்திருத்தலைக் காணலாம்.

இவ்விடுகை நெடிதாவது கருதி இத்துடன் சிலகூறி நிறுத்துவோம். 

கடு  > கட்டு  > கட்டுமரம்

கடு  > கட > க(ட)ப்பல் > கப்பல்

இரண்டுக்கும் அடி ஒன்றுதான்.

பண்டைத் தமிழன் வழவழப்பான வீதிகளும் வளாகங்களும் இருந்த சூழலில் வாழவில்லை. மரத்தில் கட்டிய கூட்டிலும் மலைக்குகையிலும் இருந்தவன்.  எதையும் கடப்பது  கடினம். பள்ளம், படுகுழிகள், ஆறு, மலை, காடு!  ஆகவே கடு என்ற கடுமைச் சொல்லி லி ருந்து சில சொற்களப் படைத்தளிததுச் சென்றிருக்கிறான் என்பதை ஆய்வாளன் மூளைக்குள் முன்னிறுத்தி உண்மை காணவேண்டும்.

அறிக மகிழ்க.

௷ய்ப்பு:  பின்.


குறிப்புகள்:

இவற்றையும் வாசித்தறிக:

இராசி, பாவகம்:  https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_16.html

அகம் - மனம்:  https://sivamaalaa.blogspot.com/2017/07/blog-post_14.html

சங்கடம்:  https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post_20.html

மெய்ப்பு பின்.


கருத்துகள் இல்லை: