புதன், 20 அக்டோபர், 2021

கோவிட் காலத்தில் திருமணம் செய்யலாமா?

முன்னுரை:

திருமணம் என்பது அறிவியற் படி ஓர் இயற்கை நிகழ்வன்று. உயிரினங்களிடை மணவினை நிகழ்வுகள் இல்லை என்றே தெரிகிறது. ஆயினும் கடவுள்தான் மணமக்களை ஒன்றாக இணைத்தார் என்று கிறித்துவ வேதாகமம் சொல்கிறது. 

விலக்கிவைக்கலாமோ?
 அவ்வாறு இணைத்ததை விலக்கி வைக்க மனிதர்கட்கு அதிகாரமில்லை அல்லது ஆளுமை இல்லை என்று இயேசு பிரான் சொன்னார் என்று கூறப்படுகிறது. " What God hath put together, let no man put asunder" என்பது அவர்தம் திருவாக்கு என்று கூறப்படும். ஆனால் இங்கிலாந்து மன்னர்கள் தாங்கள் கத்தோலிக்கர்களாய் இருந்த அஞ் ஞான்று, இந்தக் கட்டுப்பாட்டை மறுத்து மணவிலக்குப் பெற்று, மறுமணம் செய்துகொண்டனர். இதனால் "ஆங்கிலிக்கன்" திருச்சபை பிரிவதாயிற்று என்பது மதவரலாறு ஆகும். இதனால் இந்தத் திருச்சபை போப்பாண்டவரின் ஆட்சியின் கீழ் வருவதில்லை. இதனால் மணவிலக்கு மறுப்புக் கொள்கை நெகிழ்தலுற்றுத் தளர்ந்தது.

இந்துக்களுக்குப் புனிதச் சடங்கே!

ஆயினும் இந்துக்களிடை அல்லது சனாதன தருமத்தில், இறைவர்க ளிடையிலும் திருமணங்கள் நடைபெற்றனவாகத் தொன்மங்கள் கூறுவதால், திருமணம் என்பது இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட நிகழ்வு என்றே விதிகள் அறியப்படுதல் வேண்டும். வேறு நூல்களும் உள. ஆனால் எந்த இந்துக்கடவுளும் மணவிலக்கு நிகழ்த்தியதாகத் தொன்மங்கள் கூறவில்லை ஆதாலால், மணவிலக்கு என்பது இந்துக்கள் அறிந்திராத ஒன்று ஆகும். 1955 ஆண்டுக்குப்பின் சட்டங்கள் வந்தன. ( Hindu Marriage Act, 1955, இந்தியா). ஆனால், ஆங்கிலச் சட்டங்களின்படி மணவிலக்கினை இந்துக்கள் பெற்றுக்கொள்ளும் வசதி இருந்தது.

திருமணம் என்பது வாழ்க்கை ஒப்பந்தம் என்று இஸ்லாம் சரியாகக் கருதியது.

தொற்றுநோய்க் காலம்

தற்போது மகுடமுகி என்னும் நோய்த்தொற்றுக் காலமாதலால், இந்துத் திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டுதாம் உள்ளன. ஆயினும் கட்டுவிதிகளுக்கு உட்பட்டு இப்போது நடைபெறுகின்றன. நோய்க்காலம் ஆதலால் திருமண விழாவைத் தள்ளிவைப்பதா வேண்டாமா என்பது பெற்றோருக்குப் பெரியதோர் இடர்ப்பாட்டினைத் தருகிறது. இவற்றையும் தாண்டிச் சில மணவிழாக்கள் நடைபெறுகின்றன. முகக் கவசம் அணிந்து. இடைத்தொலைவு கடைப்பிடித்து உணவினைப் பைக்கட்டுகளில் விழாவில் பகிர்வு செய்து தாலிகட்டி ஒருவாறு இவ்விழாக்கள் முடிவுறுகின்றன. மணமக்கள் இரக்கத்துக் குரியவர்களாகி விடுகின்றனர். கூடுதலான விருந்தினரைக் கூப்பிட முடியவில்லையே என்று கவலை ஏற்படுகின்றது.

நடத்துவதா நிறுத்துவதா?

இதுபற்றி ஒரு சிறு கவிதை:


நோய்த்தொற்றே என்றாலும் வாய்த்தடையே என்றாலும்

மன்றலும் நின்றிடாதே!

காய்கனியாய் ஆவதையே காசினியில் யாராலும்

போய்த்தடை உய்த்தலெளிதோ?

மன்றல் - திருமணம்
காசினி -  உலகம் 
உய்த்தல் - உண்டாக்குதல்

பாலொடு பழமுன்பது மேலும் நிறுத்திவைத்தே

யாரும் அதைக்கொண்டுதான்,

சால நலமொன்று கோலும் நெறிகண்டு

ஞாலம் வளர்தலுண்டோ?


பால் பழம் - திருமணத் தம்பதியர் ஒன்றித்து உண்ணும் ஒரு  நிகழ்வு
கோலும் -  உண்டுபண்ணும்


முற்றுரை:

நோய்த்தொற்றுக் காகத் திருமண வைபவத்தை நிறுத்தலாகாது என்பதே இப்போது மக்களின் கருத்தாக உள்ளது. பெற்றோர் முதுமையில் முந்திக் கொண்ட நோய்த் தொற்றினால் இறந்துவிட்டாலும் மணமக்கள் - இளந் தலைமுறையினர் - பிழைத்துக் கொள்ளலாமே! அதை ஏன் நிறுத்திவைக்கவேண்டும் என்பதே பின்புலத்துச் சிந்தனை ஆகும்.

மெய்ப்பு - பின்பு







கருத்துகள் இல்லை: