புதன், 14 மார்ச், 2018

தீரம் தீவு கரை



தீர் (வினை):  தீரம், தீவு முதலிய.

நிலத்தின் வழியாக ஒரு கடற்கரைக்குப் புறப்பட்ட ஒருவன்  அங்கு போய்ச் சேர்ந்தவுடன்,  நிலம் தீர்ந்து கடல் தொடங்குதலைக் காண்கிறான். கடல் கரையிலிருந்தே தொடங்குவதாக அவனுக்குத் தெரிகிறது. கடல் தொடங்கிய இடத்தில்தான் நிலமும் முடிகிறது.  ஆகவே  கரையை அவன் “தீரம்” என்பது மிக்கப் பொருத்தமான சொல்லமைப்பு ஆகும்.

உலகில் முன்னாளில் கடலைப் பார்க்காமலே செத்துப்போனவர்கள் பலர்.  கடலை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று போய்க் கடலைக் கண்டு இறும்பூது எய்தியோரும் பலர். அந்த நீரில் கொஞ்சம் குளித்துவிடலாம் என்று இறங்கி மூழ்கி இறந்தோர் பலர். கடல் கரையை அரித்து நிலப்பகுதியைக் குறுக்குகிறது என்பதைச் சிங்கப்பூரில் அறிந்துகொண்டு  கடலுக்கு நல்ல கரையை அமைத்து,  கரைக்குக் காரையிட்டுக் கரையையும் பாதுகாத்தனர்.  கரை, கரை, கரை!  கரைந்து குறைந்து போவதை உடையதே கரை ஆயிற்று.
ஆற்றின் நிலப்பகுதி தீருமிடம் தீரம்.
அது கரையுமிடம் கரை.

  தீரம் என்பது தீரும் இடமால்
தீராக் கரையாய்த் தீர்ப்பது கடனே.

சுற்றிலும் கரையாய், தீரமாய் இருந்துவிட்டால்,  நிலம் அத்துடன் தீர்ந்துவிட்டது என்று பொருள். கடலடியிலும் நிலம் இருந்தாலும் அதை நிலமென்று வாங்க யாரும் எனக்குத் தெரிந்தவர்கள் அடித்துக்கொள்ளவில்லை.  சீனா எனின் தென்சீனக் கடலிலும் ஒரு தீவினை உண்டாக்கும் வல்லமை படைத்த நாடாம்.

சுற்றிலும் முற்றிலும் நிலம்  தீர்ந்துவிட்ட ஓரிடத்தைத்  தீர்வு என்று குறித்தது தீர புத்தியே ஆகும்.  அது இயற்கைத் தீர்வு.  பின் இடைக்குறைந்து தீவு ஆயினது தீர்வே ஆகும் தில்லுமுல்லு அன்று.

தீர்  > தீர்வு > தீவு.  (   இடைக்குறை).

தீரம் ஓர் அழகிய சொல்லே.  இல்லாவிட்டால்  கபீர்தாஸ் ஏன் அதை இட்டுப்
பாடுகிறார்:

“மந்தஸ மீரே ஏ ஜமுனா தீரே!!”

மனிதர்களில் சிலர் உலகச்சேவை செய்கிறார்கள். சிலர் நாட்டுச் சேவை புரிகிறார்கள். இன்னும் சிலரோவெனின் வீட்டுச்சேவையில் வியன் திறன் விளைக்கின்றனர்.  சொற்களும் விலக்கல்லவே விதி இதற்கு.

Please do not pronounce thIram and thIvu as dhIram and
dhIvu when speaking Tamil. 




கருத்துகள் இல்லை: