ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

அம்மனுக்குப் பூசையிலே கட்டுங்கள்-

அம்மனுக்குப்  பூசையிலே கட்டுங்கள்--- என்றே
ஆயிரத் தைந்நூறு வெள்ளிக்கே,
செம் மனத்தில் ஆர்வம்தான் மட்டின்றி ---சேலை,
குள்ளைய  ரிடம் தந்தேன் துள்ளித்தான்.

பூசையே முடிந்ததும் சேலைதான் ‍‍-- போற்றும்
பூவாமென்  கைகளுக்கு வரவேண்டும்;
நேசர்கள் எவரிடமும் போகாமல் ‍--- நான்
நேர்ந்தபடி என்னிடமே தரவேண்டும்:

என்றவர்க்குக் கூறிவிட்டேன் மறுநாளே---  ‍‍நானும்
எதிர்கொண்டேன்  ஐயரிடம் கேட்குங்கால்,
நன்றவர்தான் சொன்னபதில் வெகுநீளம் ‍--- "காணோம்,
நானதனை மீட்டிடுவேன் பார்க்குங்கால்."

சில நாட்கள் சென்றபின்பு வருகின்றாள் --- ஒருபெண்
சேலைதனை அழகாக அணிந்தபடி!
"குலமாதே! அழகிதுவே" என்கின்றேன் ‍--- சேலை
"குட்டையர்" விற்றதென்றாள் பணிந்தபடி!

அந்த ஐயர் செய்ததென்ன? கோலமிதே--- ‍‍அவரை
அடுத்தமாதம் அனுப்புகிறார் ஊர்ப்பக்கம்!
இந்தவிடை ஏற்காத ஆலயத்தின்--- மேலோர்;
இஃதவர்க்கே ஏற்றதொரு நேர்ப்பக்கம்.

A friend told me of this event, which I have retold in the above stanzas.

மட்டின்றி =  எல்லை இல்லாமல்.  சேலை = சேலையை  
.குள்ளையர் = குள்ளமான ஐயர் .  இவரைக் "குட்டையர் "  (குட்டை ஐயர் "  ) என்பதும் உண்டு.
இந்த விடை :  சேலையைக் காணவில்லை  என்ற விடை.
மேலோர் என்றது ஆலயத்  தலைவர் செயற் குழுவினரை . 

கருத்துகள் இல்லை: