திங்கள், 4 ஏப்ரல், 2016

சிவஞா, போ. 8: உவமை நயம்.

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த விட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.   சி  போ . 8

 சிவஞான போத ஆசிரியர், ஐம்புலன்களையும் வேடர்களுடன் ஒப்பிடுகிறார். நாவிற் புலால் சுவை நுகர்வான் வேண்டி, காட்டு விலங்குகளை ஒளிந்திருந்து கண்ணி வைத்தோ பொறிகளைப்  பொருத்தியோ பிடித்து அடித்து அறுத்து நெருப்பில் வாட்டியும் கறிசமைத்தும் உண்டு மகிழ்ந்து கூத்தாடுபவர்கள் இந்த வேடர்கள்.

மா மிசையக் கிட்டாத ஒவ்வொரு நாளையும் வழுக்கினுள் வைத்து வருந்துவதுடன் விலங்குகளைச் சிக்குவிக்க மிகுந்த பெருமுயற்சியும் மேற்கொள்வர்.  மா=விலங்கு; மிசைதல்: உண்ணுதல். அவர்களின் மனைவிமாரும் குழந்தைகளும் விலங்குணவை வேண்டிக்கிடப்பர்.

நம் ஐம்புலன்களும் இங்ஙனமே நுகர்வினைத் தேடி அலைந்து கிட்டின போதெல்லாம் முழுவதும் அதிலாழ்ந்து  இறைவனை மற‌ந்து
வாழ் நாளை வீணாளாக்கிவிடுகின்றன .

ஐபுலன்களையும் வேடரென்றது எத்துணைப் பொருத்தம் காண்பீர்!

வேடன் விலங்கு கிட்டும்வரை தன்னை மறைத்துக்கொள்கிறான்.
ஐம்புலன்களும் இத்தன்மையையே வெளிப்படுத்துகின்றன. சிலர் புலனுணர்வு இன்பம் பெற எப்படியெல்லாம் தம்மை மறைத்துக்கொள்கின்றனர். கிட்டினகாலை முழுமையாகப் புகுந்துவிடுகின்றனர்.

ஆசிரியரின் கவித்திறம் பெரிதும் இன்புறற்பாலதே.

கருத்துகள் இல்லை: