வெள்ளி, 22 ஏப்ரல், 2016

கடல் குடித்த மாமுனிவர்!


http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_21.html

தொடர்வோம்:

பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடு யாவும்
கடல் கொண்டது.    கடல்கோள் நிகழ்ந்ததாகவே தமிழ் நூல்களும் சங்கத நூல்களும் குறிப்பிடுகின்றன. அண்மையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமொன்று தென்கடலில் கண்டுபிடிக்கப்பட்டது. நாம் குறிப்பிடுவது, ஏறத்தாழ் 5000 ஆண்டுகட்குமுன் நடந்த கடல்கோள். பின்னும் நிலத்தை விழுங்கிய கடல்கோள்கள் நிகழ்ந்தன என்பதையே பின்னாள் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.

இரண்டாம் சங்கமும் தமிழ் நூல்களும் அழிந்தபின், தொல்காப்பியர்
தம் இலக்கண நூலை இயற்றினார். தொன்மையைக் காக்க இயற்றினதால் அது தொல்+ காப்பு+  இயம்  = தொல்காப்பியம் என்று பெயரிடப்பெற்றது.
அப்போது அகத்திய முனி எங்கிருந்தார் என்பதற்குத்   தொல்காப்பியத்தில் ஆதாரமில்லை. அதாவது ,பாயிரமோ எந்த நூற்பாவுமோ  அகத்தியரைக் குறிப்பிடவில்லை. இருந்தாலும்
அகத்தியர் தொல்காப்பியரின் ஆசிரியர் என்றும் அவர் அப்போது அங்கிருந்தார் என்றும் வைத்துக்கொள்வோம்.  தமிழ் என்ற சொல்லும் அமிழ் என்ற சொல்லினின்று அமைந்தது என்றும் வைத்துக்கொள்வோம். தொல்காப்பியம் இயற்றப்பட்டபின் வெகுகாலத்துக்குக்  குறிப்பிடத் தக்க  கடல்கோள் யாதுமில்லை.

 அப்போது மீண்டும் கடல் பொங்கும் என்று எதிர்பார்த்திருந்த தமிழ் மக்கள், அது பொங்கவில்லை என்று கண்டனர்     பொங்காதது ஏன்
என்று வியந்திருக்கலாம்.  அகத்தியர் கடலைக் குடித்துவிட்டதால்
பொங்கவில்லை என்று எண்ணி, அவருக்குக் கடல் குடித்த மாமுனி
என்று பெயரிட்டிருக்கலாம் என்று  சொன்னால்  அது நம்பிக்கையினால் சொன்னதென்று விடல் தகும். நாளடைவில் இதைச்சுற்றித் தொன்மக் கதைகள் புனைவுற்றிருக்கலாம்.

அங்ஙனமாயின் கடல்குடித்தமைக்கு ஒரு காரணம் கிட்டுகிறது.
ஆனால் முன் இடுகைக் கருத்துக்களுக்கு அது இசைவாகுமா என்பதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை: