செவ்வாய், 4 ஜூன், 2019

இனாம் என்ற சொல்லும் காரணமும்


இனி இனாம் என்ற சொல்லினை ஆய்வு செய்வோம்.

உலகின் மிக மூத்த மொழி என்று ஒன்றை எந்த ஆய்வாளன் கூறினாலும் அந்த மொழியில் கூட பிற மொழி வழக்குச் சொற்கள் என்று கருதத் தக்கவை காணக் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, தமிழர் கார் என்ற ஆங்கிலச்சொல்லைப் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துகின்றனர். தமிழில் கார் என்ற ஒரு சொல் இருந்தாலும் அதன் பொருள் வேறு. இவ்வாறு கலப்புகள் நேர்ந்துவிட்ட நிலையில் அகரவரிசைக்காரர் ஒருவர் அச்சொல்லையும் தம் நூலில் பதிவுசெய்து பொருள்கூற முனையலாம். அதன் காரணமாக அது தமிழ்ச் சொல் ஆகிவிடுவதில்லை. அது அயலே. ஆகவே சொல்லின் மூலம் யாது என்றுஅறிதல் மிக்க முன்மையானதாகின்றது.

ஒரு சொல் எந்த மொழிக்குரியதாய் இருப்பினும் அது தேவை என்றால் அதை வழங்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சரியாக வழங்குவதற்கும் சொல் வரலாற்றை அறிந்துகொள்வதற்கும் சொல் மூலக் கண்டுபிடிப்பு உறுதுணை செய்கிறது.
எடுத்துக்காட்டாக முகாம் என்ற சொல்லின் உண்மையான பொருள் என்ன என்று அறிந்துகொண்டோம் - சென்ற இடுகையில். சில வேளைகளில் சொற்பிறப்புப் பொருளும் அதன் இற்றை வழக்குப் பொருளும் வேறுபடுதலையும் அறிந்து, அச்சொல்லை வழங்குவதா வேண்டாமா என்று முடிவுசெய்யவும் இத்தகு ஆய்வுகள் துணைபுரிகின்றன.


இனி இனாம் என்ற சொல்லைக்
காண்போம்.

இது இரு துண்டுச் சொற்களால் ஆனது. இவற்றுள் முன்னது : இன் என்பதாம். ஒட்டி விகுதியாய் நிற்பது ஆம் என்பதே.

இன் என்னும் சொல் உரிமை குறிக்கும். இது வேற்றுமை உருபாகவும் இலங்குகிறது. எடுத்துக்காட்டுகள்:

கந்தனின் மனைவி வள்ளி.
தமிழரின் வீரம் ஒரு மரபு.

இவ்வாக்கியத்தில் கந்தனின் மனைவி என்பது வள்ளி அவளுக்கு உரிமையானவள் என்பதைக் காட்டுகிறது. பிறவும் அன்ன.

இனம் என்ற சொல்லும் இன் என்பதனடிப் பிறந்ததே. நீங்கள் எந்த மக்கள் கூட்டத்துக்கு உரிமையானவரோ அந்தக் கூட்டமே உங்கள் இனம். இன் + அம் = இனம்.

பிச்சை போட்டவர்கள் பாத்திரம் அறிந்தே பிச்சை போட்டனர். கேட்பவன் இனாம் வேண்டுமென்றால் அதற்கு அவன் உரியவனாய் இருத்தல் வேண்டும். உரியவனுக்கு விலையின்றிக் கொடுக்கப்பட்டது. அத்தைக்கு நெல் கொடுத்தால் எப்படிக் காசு கேட்பது? அவள் நம்மைச் சேர்ந்தவள் ஆதலின் - இனம் ஆதலின் - இனாமாய்த் தரப்பட்டது.

இன் என்ற அடியிலிருந்தே இரு சொற்களும் தோன்றின. இன்றும் சிற்றூரில் " எனமாய்க் கொடுத்துவிட்டேன்" என்றுதன் பேசுகின்றனர்.
இனாம் என்பதைப் படித்தவர்கள் கையாள்கின்றனர். அல்லாதருக்கு இனம் அல்லது எனமே அது. பெறுதற்கு இனமல்லார் இனாம் பெறார். அறிமுகம் இல்லாதவராயின் ஏழ்மையினால் உரிமை பெறுகிறார்.

அதாவது பெறுதற்கு உரிமை உள்ளவருக்கே இனாம் வழங்கப்பட்டது. இனாம் என்பதன் சொல்லமைப்புப் பொருள்: இன்= உரிமை; ஆம் = ஆகும், என்பதே. விலையின்றிப் பெறுவதற்கும் ஒரு தகுதியை மன்பதையோர் கண்டறிந்திருந்தனர் என்பதையே இச்சொல் விளக்குகின்றது. இனிதாய் அமைந்த சொற்களில் இதுவுமொன்றாகும்.

திங்கள், 3 ஜூன், 2019

முகம். , முகாம், முகமை

முகமும் முகாமும்.

முகமென்ற சொல்லில் அடியாக விருப்பது மு என்ற ஓரெழுத்து ஒரு சொல்லே ஆகும், அதாவது ஒரே எழுத்தால் ஆன சொல்.

முகமென்பதைப் பிரித்தால் மு+ கு + அம் எனப் பிரியும். இம் மூன்று எழுத்துக்களையும் பொருளுணர்ந்து வாக்கியமாக்க வேண்டின் " முன்னுக்கு அமைந்திருப்பது " என்று சொல்வது சரி. எனவே இது காரண இடுகுறியாகிறது.

மு என்பதும் முல் என்பதும் ஒரு பொருளனவே. முலை என்ற சொல் இதிற் பிறந்தது. முல் என்பது முதல் நீளும், மூல் ஆகும். இம் மூலென்னும் வடிவத்திலிருந்து மூலம், மூலியம், மூலிகை முதலிய சொற்கள் அமைந்தன. மு என்பது து விகுதி பெற்று முது என்றாகி ' 'முந்திய" என்றாகும். காலத்தால் முன்னிருப்பதும் இதிலடங்கும்.

இவற்றை அறிந்தபின் முகாமென்பது எளிதாகிவிடுகிறது. படைஞர் தம் படைக்கு ஒரு முகாம் அமைக்கின்றனர். முகாமென்பது ஒரு முன்னணிப் படைவீடு ஆகும். அதிற் படையணியுடன் இன்னும் என்னென்ன வைத்துக்கொள்ள வேண்டுமென்பதை படைத்தலைமை தீர்மானிக்கும். படையினர்க்கல்லாத பிற முகாமும் ஒப்புமை பற்றி முகாமென்றே குறிக்கத் தகும். மு+ கு + ஆம் = முகாம். அதாவது முன்னிருக்கும்படி ஆகும் இடம் அல்லது கட்டிடம், இதற்கு ஆம் ( ஆகும் ) என்பதையே விகுதியாக்கியது ஒரு திறமை என்றே சொல்க. இதில் கு என்பதை இரண்டாவது முறை வராமல் விலக்கியது ஒலிநயம் விளைக்கவே ஆம், இல்லையேல் முகாகும் என்பது இன்னா ஓசைத்தாகிவிடும். இவ்வாறு விலக்குதல் பல சொற்களில் வருதல் காணலாம். பழைய இடுகைகளைப் படித்து அறிக.

இவ்வழியில் முகமை என்ற சொல்லும் இனிதாகவே அமைந்துள்ளது.

உருது மொழிக்குப் பல சொற்களை அமைத்துக் கொடுத்தவர்கள் தமிழர்களே. இனாம் என்பதுபோல முகாமென்பதையும் அவர்களே அமைத்தார்கள். இனாமென்பது இன்னொரு நாள் காண்போம்.. பின்னர் உருவமைத்த மொழி உருது. உரு + து.

ஞாயிறு, 2 ஜூன், 2019

வயிறு என்னும் முதன்மைச் சொல்.

இன்று வயிறு என்ற தமிழ்ச் சொல் எவ்வாறு அமைந்தது என்ற கதையை அறிந்துகொள்வோம்.

நாம் பல சொல்லமைப்புகளையும் சில ஆண்டுகளாகவே ஒவ்வொன்றாக அறிந்துகொண்டுவருகிறோம். இவற்றையெல்லாம் ஒருசேர நோக்கி, இதிலிருந்து ஒரு தெரிவியலை ( தியரி - ஆங்கிலம் ) உருவாக்குவது எம் நோக்கமன்று. அத்தெரிவியல் அல்லது எத் தெரிவியலும் தானே முன்வந்துறுமாயின் சில வேளைகளில் யாம் அதனைக் குறிப்பிடுவதுண்டு. யாம் எழுதுவது சொல்லமைப்பை வெளிப்படுத்தவே ஆகும்.

வாயிலிருந்து தொடங்குகிற உணவு உட்கொள்ளும் வழியானது உடம்பின் உள்ளில் சென்று முடிகிறது அல்லது இறுகின்றது. இறு என்ற அடியினின்றே இறுதி என்ற சொல்லும் அமைகின்றது. ஆகவே இறுகின்றது என்ற வினைமுற்றை எளிதில் பொருளுணர்ந்து கொள்ளலாம்.

வாயிலிருந்து தொடங்கி உணவு செல்வழியானது குதத்தில் முடிவதாகச் சிலர் சொல்வதுண்டு எனினும் வயிறு என்ற சொல்லமைப்பில் இக்கருத்து கொள்ளப்படவில்லை. குதம் கழிவு வழியாதலின் போலும். குந்து > குது > குது + அம் = குதம். எனின் குந்தும் உடற்பகுதி.

வாய் தொடங்கி அது முடியும் இறுதியே வயிறு ஆகும். சொல் அமைந்தது இவ்வாறு:
வாய் + இறு = வாயிறு ( இங்கு முதல் குறுகி) > வயிறு ஆயிற்று. எனவே இது முதனிலை குறுகித் திரிந்த ஒரு சொல்லாக்க மாகும்.


இவ்வாறு திரிந்து அமைந்த சொற்கள் பல. உதாரணத்துக்கு:

சா + வு + அம் = சவம்
தோண்டு + = தொண்டை.

எனவே உணவு ஏற்கும் பகுதியின் இறுதியே வயிறு ஆகும்.

வியாழன், 30 மே, 2019

பாரியை : சொல்லின் திறப்பொருள்.

பாரியை எனற்பால சொல்லை ஈண்டு கண்டு மகிழ்வோம்.

பெரும்பாலும் இல்லத்தில் தங்கி வீட்டுக் காரியங்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்பவள் இல்லாள். அவள் தங்கி இருப்பது பெரிதும் அவள்தன் மனையில். அங்கு செய்தற்குரிய அனைத்தும் அவள் செய்கிறாள். ஆகவே
அவள் " மனைவி". கணவனின் இவ்வுலகச் செலவுக்கு ( பயணத்திற்கு) அவளே துணை ஆவாள். ஆதலின் அவள் "வாழ்க்கைத்துணை". இதைச் சுருக்கித் "துணைவி" என்றும் சொல்வர். இவ்வுலகத்தில் கணவனுக்கு வேண்டிய துணைமை அனைத்தும் தருபவள் ஆதலின் அவள் தாரம் ஆகிறாள். தரு+ அம் = தாரம். வாழை தரும் பழக்குலை "தார்". பிள்ளைப்பேறு தருபவள் ஆதலின் "தாரம்" எனப் பட்டாள் என்றும் கூறுவதுண்டு.

இவற்றுள் பலவும் வீடு என்னும் வட்டத்தின் குறுக்கத்தில் எழுந்த சொல்லமைப்புகளே. ஆனால் உலகில் அனைத்திலும் கணவனுடன் அவள் இணைந்தே பயணிக்கிறாள். பாரில் இயைந்திருப்பவள் ஆதலின் அவள் "பாரியை" ஆகிறாள். இது பாரியா, பாரியாள் என்றெல்லாம் ஆனமை உலகவழக்குத் திரிபுகள். இவற்றுள் பொருளொன்றும் சிறப்பு எய்திற்றிலது.

ஞாயிறு, 26 மே, 2019

இதர என்ற சொல்


இதர என்ற சொல்லை இன்று கண்டு மகிழ்வோம்.

பதறுமனத்துடன் யானிருக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ

என்ற வாக்கியத்தில் இதர என்ற சொல் வந்திருப்பதைக் காணலாம்.

இதர என்பது இங்கு மற்ற என்னும் பொருளில் வந்திருப்பதைக் காணலாம்.

இதர என்ற சொல்லின் அமைப்பு:

இது+ அற = இதர.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

இங்கு தகரம் இரட்டிக்கவில்லை. அதாவது: இதர என்பது இத்தர என்று வரவில்லை. இது + உடன் என்று இத்துடன் என்று இரட்டித்ததுபோல் இரட்டிக்கவில்லை.

இச்சொல்லில் வந்த றகரம் ரகரமாக மாறியுள்ளது. பல சொற்களில் இவ்வாறு மாற்றம் நிகழ்ந்திருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டு:

தம் + திறம் = தந்திரம். இதில் திறம் என்பது திரமானது.

இங்கு திறம் என்பது தனிச்சொல்லாக இல்லாமல் ஒரு சொல்லின் விகுதியாக வருங்கால் அல்லது ஒரு கூட்டுச்சொல்லின் இறுதியாகவருங்கால் இவ்வாறு நிகழ்தல் காணலாம். இதர என்பது ஒரு கூட்டுச்சொல்லின் அல்லது சொற்றொடரின் திரிபு.

மன் + திறம் = மந்திரம். (மன்னுதல்: நிலைபெறுதல் நன்மைகளை

நிலைபெறுவித்தல் நோக்கமாகச் சொல்லப்படுவது மன்னும் திறத்ததான மந்திரம். )


இதர என்றால் இது அற, எனில் மற்ற என்பதாம். அறிந்து மகிழ்க.

தட்டச்சுப் பிழைத் திருத்தம் பின்.





புதன், 22 மே, 2019

நக்க சாரணர் என்போர் யார்?

அணுகுதல் என்பது அடுத்துச் செல்லுதல் அல்லது அணிமையிற் போதல் என்று விளக்கலாம்.  அணுக்கம் என்ற சொல்லும் அணுகு+ அம் =  அணுக்கம் என்று அமையும். இதில் ககரம் இரட்டித்தது.  "க்+ க் + அ"  என்று சேர்த்தால் க்க என்று  வருகையில்,  அது சேருமுன் இரண்டு ககர ஒற்றுக்கள் ( அதாவது இரண்டு ககர மெய்கள் ) வருதலை அறியலாம். இதைத்தான் இரட்டித்தல் என்று சொல்கிறோம்.  அணுகு என்பதில் கு என்பது வினையாக்க விகுதியாகும்.  அணு என்பதே இதிற் பகுதி என்றாலும்  அதை இன்னும் பிரித்து அண்+  உ என்னலாம்.  அப்போது உ என்பது வெறும் சாரியையே  ஆகும்.  ஆனால் அணு என்பது அதனினும் சிறுமை இல்லாத ஒரு பொருளைக் குறிக்க வருங்கால் ஈற்றில் நின்ற உகரத்தை ஒரு விகுதி எனல் வேண்டும்.

அணுகு என்பது உகரத்துக்குச் சுட்டடிப் பொருள் கூறுவதானால் அடுத்து முன் செல்லுதல் என்று கூறல் வேண்டும்.  இங்கு அடிச்சொல்லான அண் என்பதிலிருந்தே  அணம் என்ற தொழிற்பெயர் விகுதி அமைந்தது.  இவ்விகுதி வரும் சொல் :  கட்டணம்.  இன்னொன்று உட்டணம். மற்றொன்று பட்டணம். பல பட்டுகளுக்கு அருகில் அமைந்த சிறுநகரே பட்டணம் ஆகும்.  1930 வாக்கில் எழுதப்பட்ட தமிழ் நூல்களில் சென்னை,  பட்டணம் என்று குறிக்கப்பெறுதல் காணலாம்.  பெரிதும் நாகர்கள் வாழ்ந்த பட்டணம் நாகப் பட்டணம் எனப்பட்டது.  நாகப்பட்டணம், நாகூர், நாகர்கோயில் முதலான இடங்களில் நாகர் மிக்கிருந்தனர் என்று தெரிகிறது.   கடற்கரை ஓரப் பட்டணம் பட்டினம் எனப்பட்டது.  போன்மைச்  சொல்லாக்கமே இதுவும் ஆகும்.   பேச்சு வழக்கில் பலர் பட்டணம் என்றே பட்டினத்தையும் சொல்வர்.  பட்டினம் என்ற சொல் நன்`கு பதிவுபெற்ற வழக்குகள்:  பட்டினப்பாலை;  பட்டினத்துப் பிள்ளையார், காவிப்பூம்பட்டினம்.  இவற்றுள் அண்+அம் என்ற விகுதிகள் வராமல் இன்+ அம் என்பன அமைவுற்றன.  நாகர் யார் என்பதில் ஒருமித்த கருத்து ஆய்வாளரிடை இல்லை.  நாகர் என்போர் நாகத்தை வணங்கியோர் என்று சிலரும்  நாகர் என்போர் ஓரினத்தினர் என்று வேறுசிலரும் கருத்துரைத்துள்ளனர்.  எவ்வாறு ஆயினும் ஒரு சோழ மன்னன் ஒரு நாகக் கன்னிகையை  மணந்துகொண்ட பின் அவர்கள் தமிழரசர்களின் பாங்கில் மிகுந்த பற்றன்பு   (விசுவாசம் )  உடையோராய் மாறிவிட்டனர் என்ப.  நாகர் எங்கும் பரவி இருந்தனர். வட இந்தியாவில் நாகபுரி  ( நக்புர் ) ~ யிலும் இருந்தனர்.  இவற்றை நீங்கள் ஆய்வு செய்வீர்களாக.

இவை நிற்க,  அணம் என்ற விகுதி உணர்க.   ஓரிடத்தைச் சார்ந்து  அணுக்கமாக வாழ்ந்த அவர்கள் சாரணர் என்று குறிக்கப்பட்டனர்.   சார் + அணம் + அர் =  சாரணர்.  இதில் மகர ஒற்று வீழ்ந்தது.   இவர்கள் உடலில் நல்ல நிறமுடையோராய் இருந்தனர்.   ஆதலால்   " நக்க சாரணர் "  எனப்பட்டனர்.  நகுதல் :  ஒளி வீசுதல்.  Gregarious people with good skin colour என்பதே நக்க சாரணர் என்பதற்குச் சரியான மொழிபெயர்ப்பு.  ஒளிவீசும் நட்சத்திரங்கள் உண்மையில் நக்கத்திரங்களே.  இருளில் நகுவன அவை.  புகு >  புக்க; நகு > நக்க; தகு > தக்க; பகு > பக்க.

பலர் ஒக்க இருக்குமிடமே ஒக்கம்:  மாறோக்கத்து நப்பசலையார் என்ற சங்கப் புலவர் பெயர் காண்க.   ஒகுதல் என்ற சொல் வழக்கிறந்தது.  ஒக்குதல் என்ற பிறவினையும் ஒக்குவித்தல் என்ற பிறவினையின் பிறவினையும் இருக்கின்றன.

  ஒக்கம் = கிராமம்     கிராமமமா?   இது கமம் என்ற பழந்தமிழ் சொல்லின் திரிபு.

எகு ( இது இப்போது இல்லை) > எகுதல் >  எக்குதல்..  எக்கி ஒன்றை எடுத்தல்.
தன்னை நீட்சி  செய்துகொள்ளுதல்.  எகு > எக்க..

அணுக்கமாக நின்று  அல்லது அணவி நின்று தொண்டு செய்வோரைச் சாரணர் என்றது மிக்கப் பொருத்தம்தான்.

இன்று ஓர் எல்லைக்குள் நின்று சிந்திக்காமல் விடுதலைப் பறவைபோலும் எண்ணியவிடத்துப் பறந்து கருத்துக்களை வீசியுள்ளேன். எனக்கு ஆனந்தம்; உங்களுக்குச் சற்று கடினமானாலும் கூடுமானவரை தமிழைச் சுவைப்பீராக. கடினத்தை மறப்பீராக.

மீள்பார்வை பின்

செவ்வாய், 21 மே, 2019

மொழிச்சிக்கல் : உண்டு என்ற வடிவம்.


தமிழ்மொழிச் சிக்கல்கள்

ஈ என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு.

இந்த வாக்கியத்தைப் படித்தீர்களே. இதில் உண்டு என்பது ஒரு தவறான சொற்பயன்பாடு என்பதை அறிந்தீர்களோ?

உண்டு என்றால் இது ஒருமைச் சொல். து என்னும் அஃறிணை ஒருமை தெரிவிக்கின்றது. பல பொருள் என்று பன்மையில் சொன்னபடியால் உள அல்லது உள்ளன என்றே முடித்திருக்கவேண்டும்.

உள்+ து = உண்டு.

உண்டு என்ற சொல்லைக் கற்றோரும் மற்றோரும் ஒருமை பன்மை என்று பகுத்துப் பார்க்காமல் பயன்படுத்தி மகிழ்வதால், இப்போது இவ்விலக்கண விதி வீழ்ச்சி உற்றது.

இலக்கணம் எத்தனையோ கூறுகிறது. எல்லாமும் ஒட்டிச்செல்கை உடையவாய் இல்லை. பல பின்பற்றுகிறோம். நாமறியாமலே பல வீழ்ந்துவிடுகின்றன. வீழ்ந்த விதிகளில் இதுவும் ஒன்று. உண்டு என்பது திணை பால் எண் இடம் என்ற வேறுபாடு இன்றி வழங்குகிறது.

அவன் உண்டு : ஆண்பாலில் வந்தது.
அவள் உண்டு: பெண்பாலில் வந்தது.
அது உண்டு : அஃறிணை ஒருமையில் வந்தது.
அவை உண்டு: அஃறிணைப் பன்மையில் வந்தது.
நீ உண்டு : முன்னிலையில் வந்தது.
நான் உண்டு: தன்மையில் வந்தது.

இன்னும் பொருந்துமிடத்தெல்லாம் பொருத்தி உணர்க.

உண்டு என்பதை சொற்படியே பார்த்தால் ஒருமையில் அஃறிணையில் மட்டும் வழங்கியிருத்தல் வேண்டும். அவ்விதி தவிடுபொடியாகி வெகுகாலம் ஆகிவிட்டதைச் சொல்லாய்வு மூலம் அறிஞர் உணர்ந்து உண்டு என்பதை வழுவமைதி என்று கொள்வர். ஒழிந்துபோன இலக்கண விதிகளை மீள்நிலைப் படுத்துவதில் பயனொன்றும் இலது.


மோடியே வெல்வாரே முன்வந்த வாக்கினும்...(வெண்பா).

மோடியே வெல்வாரே முன்வந்த வாக்கினும்
கூடி வருமிது கொள்வீரே ----- நாடிவரும்
மக்கள் அனைவருக்கும் மாண்பு மிகச்சேரும்
தக்கநல் ஆட்சியால் தான்.


இந்த வெண்பாவை இந்தியத் தேர்தலுக்கு முன்னரே
எனது கைப்பேசியில் பதிவு செய்திருந்தேன். வெளியிட வேண்டுமென்று அப்போது ஆவலாய் இருந்தது. ஒரு கணிப்புமின்றி வெறுமனே எழுதியதால் வெளியிடவில்லை.

இப்போது கருத்துக்கணிப்புகள் அவர் வெல்வார் என்`கின்றன. என் கவியும் அதையே சொல்வதால் ஏன் வெளியிடவேண்டுமென்று ஓர் எண்ணம் தோன்றியது. அதை ஒருவாறு மீறிக்கொண்டு இப்போது இதைப் பதிவு செய்துள்ளேன். ஓர் எளிமையான பாடல்தான்.

ஊழலின் சொர்க்கமாக இருப்பது இந்தியா. அங்குபோய் கள்ளப்பணம் என்பதை ஒழிக்க முனைந்தால் பலரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். பலர் வரியே செலுத்துவதில்லை. ஜி எஸ் டி என்னும் வரியை அங்கு புகுத்தினால் பலர் வெகுண்டு எழுவர். ஊழலால் பலருக்கு ஊதியமுண்டு. அதை இல்லாமலடித்தால் சினவாரோ என்ன? இந்திய வரலாற்றில் இவரைப் போல இழித்துப் பேசப்பட்டவர் யாருமில்லை என்றுதான் தோன்றுகிறது. எதிர்க்கட்சிகள் நாள்தோறும் ஏசுகின்றன. குற்றங்கள் பலவற்றைச் சாட்டுகின்றன. பாவம்! மக்கள் ஆதரவால் வென்றால் அது உண்மையை மறைக்க முடியாதென்பதை உலகுக்கு உணர்த்துவதாகும்.

சனி, 18 மே, 2019

ஆம்பலரி - சூரியனுக்கு இன்னொரு பெயர்.

சூரியனைக் கண்ட தாமரை மலர்கிறது. இதை நேரடியாகப் பார்த்திராவிட்டாலும் நூல்கள் வாயிலாக அறிந்திருக்கலாம்.   நகர வாழ்நர் பெரும்பாலும் தாமரைக் குளங்களை  ஆங்காங்கு கண்டிருந்தாலும் மலர்கின்ற காட்சியினைச் சென்று காண முனைவதில்லை.

சூடு தருவோன் சூரியன்.

சூடு > சூடியன் > சூரியன்  (  ட - ர திரிபு வகை).  இப்படித் திரிந்த இன்னொரு சொல் வேண்டுமானால்:

மடி >  மரி.

இன்னொன்றையும் கவனிக்கவேண்டும்.  மடிதல் என்பது சாதல் என்ற பொருளில் தன்வினை வடிவம் கொள்கிறது.  மடித்தல் என்ற பிறவினை வடிவோ  இப்பொருளுடன் எந்தத் தொடர்பும் இலாது நிற்கிறது.  சாகடித்தல் என்ற பொருள் இல்லை.  எனவே மடிதல் என்ற சொல்லுக்குச் சாதல் என்பது பிற்காலத்து எழுந்த பொருளாகும்.   புழு பூச்சி முதலியவை சாகும்போது இரண்டாக மடிந்து சாவதால் மடிதல் என்பதற்குச் சாதல் என்ற பொருள் ஏற்பட்டது. இதனைத் தமிழ் ஆசிரியர் கண்டு விளக்கியுள்ளனர். இதுவே உண்மையுமாகும். 

டகர ரகரத் திரிபு:

இதுபோன்ற திரிபினை நுணுக்கமாக நாடினால் பல வழிகளில் அறியலாம்.
" அடுத்தல் " என்பதும்   " அருகுதல் "   என்பதும் பொருள் தொடர்பு உடைய சொற்கள்.

அடு  :  அரு    ( ட - ர திரிபு காண்க ).

பல பேச்சுவழக்குச் சொற்கள் அயலில் புகுந்து உயர்வு பெற்றுள்ளமையால்
சூடியன் > சூரியன் என்பதும் அங்கனம் உயர்வுபெற்றதறிக. சூடு > சூடு இ அன் > சூட்டியன் என்று இரட்டிக்காமல் சூடியன் என்றே நின்று சூரியன் என்றானது. இரட்டிப்பது சொல்லாக்கத்தில் கட்டாயமில்லை:  எ-டு:  அறு+ அம் =  அறம்,  இரட்டிக்காமல் தருமம் முதலியன குறித்தது.  இரட்டித்துப் பொருள் வேறுபடும்.  அறு + அம் = அற்றம்,  தருணம்.

சூடு என்பது விகுதிகள் ஏற்குமுன் சூர் என்று திரிந்துவிட்டாலும் சூட்டியன்  என்ற வடிவத்துக்குக் காரணம் கூறல் தேவையில்லை.  சூடி >  சூரி எனினும் ஆம். அன் வந்தது பின்னரே.

சூரி =  பகலவன்.

 சூரியனை அவ்வாறு ஆண்பாலில் கூறுவது தமிழர் வழக்கு.  அதற்குப்  பால் ஒன்றும் இல்லை. சூடம் சூடன் என்பன வேறு பொருளுக்குப் பெயராய் இருப்பதால் அதற்கு நீங்கள் வேண்டுமானல் சூட்டன் என்ற இன்னொரு பெயரைக் கொடுத்து மகிழ்ந்துகொள்ளுங்கள். உண்மையில் உலகில் வெம்மைக்கு அதுவே காரணம்:  அது வெய்யோன்.  வெய்> வெயில்.  இதிலும் யகர் ஒற்று வரவில்லை.  ( இரட்டிக்கவில்லை).

இனி ஆம்பலரி.

தாமரை சூரியனால் மலர்கிறது.  ஆம்பலோ குவிகிறது.   அருகுதல் என்பது குவிதல் குறிக்கும்.  அரு > அருகு.  அரு + இ =  அரி  ( சுருக்கம் ).  இப்பொருள் அரு என்ற அடிச்சொல்லில் இருந்து கிடைக்கிறது.  இலைச் சோற்றுக்கும் வாய்க்கும் உள்ள இடைவெளி சுருங்கவே,   அரு > அருந்துதல் ஏற்படுகின்றதென்பதும் கவனிக்க.  வேறு வகையிலும் இதை விளக்கலாம் எனினும் தொடர்பு காண்க.

அரி என்பது சுருங்குதல் எனவே  இதைச் சுருக்குவது சூரியனே.  அவன் ஆம்பல் அரி ஆகிறான்.  இது சூரியற்கு இன்னொரு பெயர்.




வெள்ளி, 17 மே, 2019

எச்ச வினை இடைநிலை

உட்டணம் என்பதே இறுதியில்  "உட்ணம்" " உஷ்ணம்" என்று திரிந்து வழங்கிவருகிற தென்பதை முன் கூறியிருந்தோம்.  இதை நீங்கள் மறந்திருத்தல் கூடும்.

உள் தணல் >  உட்டணல் > உட்டணம்  என்று ஆனதே மூலமாகும்.

https://sivamaalaa.blogspot.com/2012/09/blog-post.html

இன்று  இன்னொரு சொல்லைத் தெரிந்துகொள்வோம்.

இன்று நாம் காண்பது இலாயம் என்ற சொல்.

இல் =  வீடு.
ஆய :  இது இங்கு "போன்றது" என்ற பொருள் உடையது.
அம்  என்பது விகுதி.

இலாயம்:  இல்லம் போன்றது.  எடுத்துக்காட்டு: குதிரை இலாயம்.

சொல்லமைப்பில் எச்சவினைகளும் இடைநிலைகளாய்ப் பயன்பட்டிருக்கின்றன என்பதை இதன்மூலம் அறியலாம்,

இலாயம் லாயம் என்பவை சங்கத அகரவரிசையில் காணப்படவில்லை..




புதன், 15 மே, 2019

விண்ணு கண்ணன் கிருஷ்ணசாமி

விண்ணு என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து அமைந்ததே விஷ்ணு என்ற சங்கதச் சொல் என்பதைச் சில ஆசிரியர்கள் முன் உரைத்ததுண்டு.  இந்த ஆய்வு சொல்லும் நூல் இப்போது கிட்டவில்லை

ஆனால்:

விண் > விண்ணு > விஷ்ணு.

ஓர் எழுத்து மாற்றம் தான்.  அழகான இன்னொரு சொல் அமைந்துவிட்டது. மொழி ஆக்கம் என்றால் இதுவே மொழியாக்கமாகும்.

விண்ணனுக்கு நீலமேகன் என்ற பெயரும் உள்ளது.  நீலம் என்பது விண்ணின் நிறமே.  இதைக் கருமை என்று சொல்வதுண்டு.

"வானக் கருமை கொல்லோ?"  என்று வரும் பாரதி பாடலைக் கண்டு இதை உணர்ந்து இன்புறலாம்.

கரு என்ற தமிழ் அடிச் சொல் அயல்திரிபானால் கிரு என்று வரும்.  இவ்வாறே
"கிருஷ்ணபட்சம்"  என்ற சொற்றொடர் உண்டாயிற்று. நிலவு இருள் அடைந்த பக்கமே கிருஷ்ணபட்சம்.   பச்சம் > பட்சம் > பக்கம் எல்லாம் ஒன்றே.

கரு > கருப்புசாமி :  இச்சாமியே கிருஷ்ணசாமி. கிருஷ்ண  என்றால் கருத்த என்று பொருள்.

ரகர றகர வேறுபாடின்றித் தமிழில் வரும் சொற்களில் கரு> கறு என்பதும் ஒன்று.

கரு > கன் > கண் என்றும் திரியும்.

கரு:  கன்னங்கரேர் என்ற தொடரை நோக்கின் கரு கன் என்று திரிதல் அறியலாம்.

கரு > கண்ணன் என்பதில் கண் என்று திரிதல் காணலாம்.  எனினும் கண் என்ற விழி குறிக்கும் சொல் வேறு.

கரு என்பது கார் என்று திரியும்.  கார்மேகம்,  காரிருள் என்பன காண்க.

விண்ணு என்பதை முதலில் வணங்கியோர் மீனவர்களாகவே இருக்கவேண்டும்.  கண்ணன் என்பது ஆயர் கடவுளாக உள்ளது.  இவ்விரண்டும் பிற்காலத்து ஒன்றுபடுத்தப்பட்டு இன்று இரண்டும் கருமை நிறமென்றும் நீலம் என்றும் சொல்லப்படுகிறது.   தெய்வங்கள் இணைப்பு பற்றி மேனாட்டு ஆய்வாளர்களும் கூறியுள்ளனர்.

திங்கள், 13 மே, 2019

நட்டமும் குந்தகமும்



குந்தகமும் நட்டுநிற்றலும்


சொற்களிலிருந்து அவற்றின் கருத்துக்களை ஆய்ந்து அவற்றின் இயைபு காண்போமாக.

ஏதேனும் ஒன்றைத் தொடக்கி நடைபெறுவித்துக்கொண்டிருந்தால் அது நன்றாக : “ ஓடிக்கொண்டிருக்கின்றது " என்று சொல்வது வழக்கம். இந்தக் கருத்தைத் தழுவி " வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது" என்ற கருத்துவழக்கும் எழுந்தது.


நீங்கள் தொடங்கிய கடை எப்படி என்றால் " ஓடிக்கொண்டிருக்கிறது, அந்தப் பையன`கள் ஒரு மாதிரி பார்த்துகொள்கிறார்கள் " என்ற பதில் வருகிறது.

குந்துவது என்பது உட்காருவது ஆகும். முதலில் குந்துவது என்ற சொல்லைப் பார்ப்போம்.

அடிச்சொல்: குல் > …

குல் > குன் : ஓர் அடியினின்று இன்னோர் அடி தோன்றியது.

இப்படித் திரிந்தவை ஆயிரக் கணக்கில் இருந்தாலும், இன்னோர் எடுத்துக்காட்டு வேண்டின் தருதும்:

திறல் > திறன்.


குன் து > குன்று. ( சிறிய மலை). இது அம் விகுதி பெற்று நீண்டு, குன்றம் என்றாகும். குன்றமென்பது குன்று என்பதனுடன் சொற்போலி. அம் விகுதி வெறும் அழகுபடுத்தவே அமைந்தது. குன்றம்: வழக்குகள்: திருப்பரங்குன்றம், குன்றத்திலே குமரன். குன்றத்தின் உச்சி: கோடு. -டு: திருச்செங்கோடு; கசரக்கோடு.

குன் து > குந்து. ( உட்காருதல் ).


மனிதன் குந்தும்போதும் ஒரு விலங்கு குந்தும்போதும் ஒரு பறவை குந்தும்போதும் உடலின் விரிவு அகலமெல்லாம் குன்றிவிடுகிறது. கால் கைகளைக் குறுக்கிக்கொண்டுதான் அமைதல் காணலாம். இதனால்தான் குந்துதல் என்ற சொல் குறுக்கிக்கொள்ளுதல் என்னும் பொருளில் உட்காருதலைக் குறித்தது. ஆனால் ஆய்வாலன்றி இப்பொருளை அறியமுடியாமைக்குக் காரணம் சொல்தோற்றக் காலத்தின் பொருளமைதி இன்று இழக்கப்பட்டமையே ஆகும். இவ்வாறு அமைப்புப் பொருளும் வழக்குப் பொருளும் வேறுபடுதல் மொழியியல்பு; மாறாமையே வியத்தகுவது ஆகும்.


இனிக் குந்தகத்துக்கு வருவோம். நல்லபடி ஓடிக்கொண்டிருந்தது குந்திப்போனால் அதுவே குந்தகம் ஆய்விடும்.


ஓடிக்கொண்டிருப்பது நட்டு நிற்றலே நட்டம்; நடு + அம் = நட்டம். டகரம் இரட்டித்தது. இதுவும் கருத்தில் குந்தகத்துக்கு ஒப்புமையான கருத்தே ஆகும். குந்திவிடுவது என்ன? அப்புறம் ஓரிடத்து நட்டு நின்றுவிடுதல் என்ன?


https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_23.html

தொடர்ந்து வாசியுங்கள்.




ஞாயிறு, 12 மே, 2019

நிற்சயம்

நிற்சையம் என்ற சொல் நினைவுக்கு வருகிறது. வேறு சில இங்கு விளக்கவேண்டுமென்று எண்ணும்போது ஓடிவந்த இச்சொல்லை அலசிவிட்டு அடுத்தமுறை எண்ணியவற்றுக்குச் செல்வோம்.

இதுபற்றிய ஓரிடுகை ஈண்டு இருந்ததாகவே நினைவு.  அதைக் காண்டற்கியலவில்லை.

உலகில் சில நிற்பவை;  சில மாறி மறைபவை.   நிற்சையம் என்பது மாறாதது ஆகும்.  அதையே உறுதியானது என்று சொல்கிறோம்.

நில் + சை >  நிற்சை;   இதில் சை என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி. இதுபோலும் சை விகுதி பெற்ற இன்னொரு சொல் நேர்ச்சை என்பதாகும்.  பச்சை என்பதில் சை இறுதி இருந்தாலும் இதில் வரும் சை என்பது சை விகுதியன்று.  பசு+ ஐ = பச்சை என்பதே.  இங்கு சை என்பது முன் உள்ள சு என்பதனுடன் ஐ விகுதி கலந்து வருவதாம். சகர இரட்டிப்பு கற்க.

இனி நிற்சை என்பதில்  அம் இறுதியைக் கொண்டு இணைக்க,  அது நிற்சையம் ஆகிறது.  இதிலிருந்து திரிந்த நிச்சயம் என்ற வடிவமே இன்று ள்ளது.    நிற்சையம் என்ற சரியான வடிவம் மீட்டுருவாக்கத்திற் கிட்டியதே  ஆகும்.

நிற்சையம் >  நிற்சயம்  ( இது ஐகாரக் குறுக்கம்).
நிற்சயம் >  நிச்சயம். ( இது பேச்சுவடிவச் சொல் ).

இது தமிழன்றிப் பிறிதில்லை.  ஆனால் அயலில் சென்று வழங்குதல் உடையது. இந்தோ ஐரோப்பியச் சொல் அன்று,

நில் என்பதும் விகுதிகளும் தமிழ்.  அயல் வழக்கு ஐயமூட்டக்கூடும். மலைவு தீர்தல் கடனே.

வெள்ளி, 10 மே, 2019

ஆனந்தம் மற்றொரு முடிபு

 
ஒரு பசு தமது ஆயின் அதுதான் ஆனந்தம். பழங்காலத் தமிழனின் தேவை, தலைக்கு மேல் ஒரு கூரை; வீட்டினருகில் காலையில் குடிப்பதற்குப் பால்தரும் ஒரு "பாலம்மை" --- சிவபெருமான் கிருபை வேண்டும்; மற்றென்ன வேண்டும்? அருந்தத் தருமொரு பாலம்மை வேண்டும்.

தமிழறிவாளர் வேலூர் க.. மகிழ்நன் ( 1935 வாக்கில் ) , பசுவைப் பாலம்மை என்றே பெயரிட்டு வழங்கினார். அவரே சங்க இலக்கியம் என்று திரு வி.க அவர்களால் புகழப்பட்டவர் அவர். சுண்டி இழுக்கும் தமிழ் நடை அவரது என்பதை அறிந்தோர் அறிவார்.

பாலம்மை ஒன்றிருந்தால் ----- இந்தப்
பாரினில் ஆமோர் ஆனந்தமே

என்று சிந்துபாடத் தோன்றுகிறது எமக்கு.

சொல்லாய்விலோ மொழி ஆய்விலோ ஈடுபடுவோன் உணர்ச்சி வயப்படுதல் ஏற்கத் தக்கதன்று என்பர் ஆய்வுகட்கு இலக்கணம் வகுத்தோர். உண்மைதான். ஆய்வு என்று வந்துவிட்டால் யாதொரு பாலும் கோடாமையும் நடுநிற்றலுமே ஆய்நெறி ஆமென்பதே பேருண்மை ஆம்.

இதனைக் கருத்தில் இருத்தியபடி ஆனந்தம் என்ற சொல்லின்பால் ஒரு மறுபார்வையைச் செலுத்துவோம்.

முன் வரைந்த இடுகையில் ஆனந்தம்:

ஆன் + அம் + தம்.

ஆன் = பசு. அம் = அழகே ஆகும்; தம் = தமதானால்.

தம் : து அம் விகுதிகள் எனினுமாம்.

ஆனென்பது அடுத்தவீட்டிலிருந்தால் கேட்டு வாங்கிப் பால் குடிப்பது அவ்வளவு பெருமைக் குரியதாகாது. தமக்கென்று ஆனொன்று இருப்பதே ஆனந்தம்.

இறையுணர்வினால் தோன்றும் உள்ளானந்தம் என்பது பிற்கால வளர்நிலை ஆகும்.


இனி ஆனந்தம் என்பது வேரொரு வழியிலும் அறிதற்குரித்தாகிறது:

+ நன்று + அம் > + நந்து + அம் = ஆனந்தம்.

ஆக நன்றான நிலைமை ஆனந்தம்.

இதில் வரும் ஆ என்ற முன்னொட்டு ஆகாயம் என்பதில் போல வந்தது.

காயம் என்பது பழைய தமிழ்ச் சொல். நிலா சூரியன் முதலிய காய்கின்ற வான்வெளி என்பது பொருள். காய் > காயம். இது காசமென்றும் திரிவது.

இது ஆக்கம் குறிக்கும் ஆ என்ற முன்னொட்டுப் பெற்றது. ஆகாயம் ஆனது போல் இங்கும் ஆனந்தம் வந்தது.

இனி :

நன்று என்பது நந்து ஆனது எப்படி? 0ன் து > ந்து.

பின் + து = பிந்து; பிந்துதல்.
முன் + து = முந்து; முந்துதல்.

மன் + திறம் = மன் + திரம் = மந்திரம் ( மன்னுதல் = நிலைபெறுதல் ). நன்மையை நிலைபெறச் செய்தல் மந்திரத்தில் நோக்கம்).

இயல் + திறம் > இயன் திரம் > இயந்திரம். { 0ன் + தி = ந்தி }

இம்முறை பின்பற்றி :

நன்று > நன் + து > நந்து.

நன்று என்பது உண்மையில் நல் து என்பதுதான் எனினும் இங்கு நல் என்ற அடியை எடுத்துக்கொள்ளாமல் நன் என்ற புணர்வடிவையே மேற்கொண்டனர் என்று அறிக.

நல் > நன் என்பது திரிபிலும் வரும் : எடுத்துக்காட்டு: திறல் > திறன்.

நன் என்பது திரிபு வடிவமும் ஆகும்.


இயல் திறன் என்பதை இயற்றிரம் என்று வல்லெழுத்துப் புணர்த்துக் சொல்லமைத்தல் கைவிடப்பட்ட உத்தி. அது எப்படியும் பேச்சு வழக்கில் இயத்திரம் என்றே வரும். அதை மெலிக்கும் வழி மெலித்து இயந்திரம் என்றதே மொழியில் ஆற்றொழுக்கு மென்னடைக்கு ஏற்றதென்பதை இப்புலவர்கள் அறிந்திருந்தனர். இலக்கணம் செவியினிமைக்கு வழிவிடுதல் இன்றியமையாதது காண்க.

முன் எழுதிய இடுகை காண்க.

https://sivamaalaa.blogspot.com/2014/03/blog-post_16.html







வியாழன், 9 மே, 2019

அயற்சொற்களும் அகச் சொற்களும்.

காம்,  ஏம், தீம், வேம் என்ற வடிவங்களில்  தமிழ்ச் சொற்கள் உள்ளன.   ஆய், மாய், காய் என்று யகர ஒற்று வந்து முடிந்த சொற்கள் இன்னும் வழக்கில் உள்ளன.  நாய் என்பதை மறத்தல் கூடுமோ?

நாய் என்பதற்கு எதுகையாய் வரும் கூய்   ஆய் என்பன  பெயர்ச் சொற்களாய் இல்லாமல் எச்ச வினைகளாய் உள்ளன.  எனினும் கவி எழுதுங்கால் கருத்தோட்டத்தினாலும் பொருட்புனைவினாலும் இவற்றை எதுகையாம் படி அமைத்துக்கொள்வதில் மெத்தக் கடினமொன்றும் தென்படுவதில்லை. ஆய் என்ற வள்ளலின் பெயர் பெயர்ச்சொல் என்றாலும் இச்சொல்லை அவ்வாறு பெயர்ச்சொல்லாகக் கவியினுள் பதிய ஆய் ஆண்டிரனையும்  இழுத்துப் போடவேண்டும். இப்படித் திறமையாகச் செய்யப்பட்ட கவிதை அல்லது பாடலே:   " கரிகாலன் கட்டிவைத்தான் கல்லணை" என்ற பாடலாகும்  ." கண்களுக்குள் என் கண்ணனைக் கட்டிவைத்தேன் " என்ற அடுத்த அடியோ ஒப்பீட்டு முறையில் இணைக்கப்பட்டதாகும்.  இன்றேல் கரிகால் மன்னற்கும் காதலிக்கும் உள்ள தொடர்பு,  அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள தொடர்பைப் போன்றதே. செயலுவமையால் பொருள் ஒன்றின.

சொல்லாய்வில் றகர ரகர வேறுபாட்டினைக் கருத்தில் வைத்து அதற்குத் தேவைக்கு மேம்பட்ட முன்மை வழங்கி  உண்மை உணராது  இழிதல் காத்துக்கொள்ளுதல் வேண்டும்.  மொழியில் சொற்கள் பல்கிப் பெருகிய ஞான்று பொருட் குழப்பம் தவிர்க்க இவ்  வேறுபாடுகளின் தேவை மிகுந்தன. எனினும் உண்மை காண்டற்கு இவ்வேறு பாட்டினைக் களைந்துவிட்டு உற்றுணர்தல் என்பதே அறிவுடன் கூடிய உத்தி ஆகுமென்பதைப் புரிந்துகொளல் இன்றியமையாமை நோக்குக.

பிரச்சினை,  பிரேமை முதலிய சொற்களை ஆய்கையில் இத்தகு உத்தியே கைக்கொள்ளப் பட்டது. பிரச்சினை என்பதன் பொருண்மையில் " பிற சினை" உட்புகுந்து கலாம் விளைத்தலே கருத்தாகும். சினை என்றால் உறுப்பு,  அல்லது ஒரு பொருளமைப்பின் இயல்பான பகுதி.  இயல்பினது பொருத்தாமல் முரண்பட்டதொன்றைப் பொருத்தினால் அது பிற சினை பொருத்துதலாம். பிற சினை உட்புகவில் ஏற்படும் குழப்பமே  பிறச்சினை >  பிரச்சினை ஆனது.

மகிழுந்து ஒன்றில் பேருந்தின் உருளையைப் பொருத்திடில்  பிற சினையால் (பாகமல்லாதது  பாகமானதால் )  பிரச்சினையே. பிரச்சினை என்பதை பிரச்னை, பிரச்சனை, பிரச்சினை, பெறச்சென,  பிரஸ்னம் என்று எப்படி முகத்திரை இட்டு எழுதி மயக்கினாலும் சொல்லின் பிறப்பினில் மறப்பினையும் மறைப்பினையும் உள்ளுறுத்தல் இயல்வதில்லை. சீனியை ஜீனி எனினும் அதன் சீனத்தொடர்பினை அறுத்தல் கூடாமை போலுமே இஃதாம். சில்> சின்> சீனி என்று மாற்றுரையும் மாற்றுடையும் வழங்கி மயக்கின் அது ஓர் இருபிறப்பிச் சொல்லென அமைதி கண்டு ஒதுக்கிக்கொள்ளலாம்.  இத்தகு மாற்றுரைகளில் வரும் விளக்கவிரி ஒரு கருத்துக்குவை உருவாக்குதற்கும் நலமே செய்யும்.

ஏம் என்பது காத்தல் அல்லது காவலாய் இருத்தல் என்பதைக் குறிக்கும் ஒரு பழந்தமிழ்ச்சொல்.  இன்னொரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணினை விரும்பி அவளைத் தனக்கெனக் காத்து ஒதுக்கம் செய்ய முற்படுதலே பிற ஏமை ஆகும்.  இதுவே பின் பிரேமை ஆயிற்று.  ஒரு சொல் இயல்பில் திரிபு கொள்ளாமல் ஆவியழுத்தப் பானையில் இட்டுச் சமைத்ததுபோலச் செயற்கையில் திரிபுறுத்தப்படுதலைச் செந்தமிழ் நூலோர்  பெரிதும் விரும்பவில்லை போலும்.  மேலும் அச்சொல் முன்னரே உள்ள ஒரு பொருட்கு அல்லது கருத்துக்கு இடப்பட்ட கூடுதல் பெயரே ஆனது. காதல் காமம் போலும் சொற்கள் இருக்கையில் பிற ஏமை என்பதால் விளந்ததொரு புதுமை இலதென்று கருதினர் எனலாம். இவற்றைப் புறத்தினில் இட்டுச் செந்தமிழ் நலம் காத்தல் மேற்கொண்டோராயத் தம்மைப் பாராட்டிக் கொண்டனர் தமிழ்ப் புலவோர். பிரஞ்சு அறிஞர்  இலகோவரி ஆய்வில் இத்தகு சொற்களில் அயன்மொழியில் காணப்படும் சொற்றொகை மூன்றிலொன்றாம்.

உலகில் தமிழ்ச் சொற்கள் யாண்டும் காணக்கிடக்கின்றன.  சங்க நூல்கள் என்று நம்மிடை நிலவுவன சிலவே.  ஒரு மொழியில் எல்லாச் சொற்களையும் இவை உட்பொதிந்து இலங்குவன என்று எண்ணுதல் பேதைமையே. விடுபாட்டாலும் பிற்புனைவாலும் அவற்றுள் இலாதன மிகப்பல. ஒரு சொல் அதன் சொற்பிறப்பினால்  அல்லது சொல்வழக்கினால் தமிழென்று கண்டுகொள்ளப் படலாம்.  இத்தகு சொல்லைப் பயன்படுத்துதலும் படுத்தாமையும் புழங்குவோனின் விருப்பும் உரிமையும் ஆகும்.






செவ்வாய், 7 மே, 2019

சொல்லிக் கட்டுவது சொக்கட்டான்


இன்று சொக்கட்டான் என்ற சொல்லின் அமைப்பினை அறிந்துகொள்வோம்.

இதைச் சுருக்கமாகவே சொல்லிவிடலாம்.

இந்த ஆட்டத்தில் ஒரு தொகையையோ பொருளையோ சொல்லி முன்வைத்து பகடைகளை உருட்டத் தொடங்குவர்.

ஆகவே சொல்லிப் பணம் கட்டுவது அல்லது பொருளைக் கட்டுவது தான் சொல்+ கட்டான் = சொற்கட்டான் ஆனது.

நாளடைவில் இது திரிந்து சொக்கட்டான் ஆயிற்று. ஆகவே தொல்காப்பியரின் சொல்லியலின்படி இது ஒரு திரிசொல் ஆகும்.

சொற்கட்டான் > சொக்கட்டான்.

இதுபோன்று அமைந்த இன்னொரு சொல்: சிக்கட்டான் என்பது ஆகும். சிக்கட்டான் என்பது ஒரு பேச்சுமொழிச் சொல். எழுத்துத் தமிழில் இது காணக் கிட்டிற்றிலது.

சில் + கட்டான் = சிற்கட்டான் > சிக்கட்டான்.

இச்சொல்லும் ஒரு முன் இடுகையில் விளக்கப்பட்டுள்ளது.

சிறு + கட்டு + ஆன் = சிக்கட்டான் எனினும் அது. இதில் றுகரம் வீழ்ந்தது.

காரணம்: சில் = சிறு. எண்ணிக்கைச் சிறுமையும் உருவச் சிறுமையும் எனச் சிறுமை இருவகை.

உருட்டும் பகடையைச் சொக்கட்டான் எனின் அது ஆகுபெயர்.

எனவே சொக்கட்டான் என்பதை அறிந்து மகிழ்க.

மீள்பார்வை பின் நிகழும்.



ஞாயிறு, 5 மே, 2019

கொப்பரைகள் இரண்டு - எவை எவை?

இன்று கொப்பரை என்ற சொல்லைப் பார்ப்போம்.

நாம் இங்கு கொப்பரை என்று நோக்கப்போவது காய்ந்த தேங்காயின் உள்ளீடு ஆகும்.

தேங்காயின் மட்டை நார் முதலிய நீக்கப்பட்டால் அதன் கொழுவிய பகுதி உள்ளிருப்பதே.

அக்கொழுவிய பகுதி  காய்ந்து இறுகியே கொப்பரை ஆகிறது.

கொழுவிய மெல்லீடு காய்ந்து சுருங்கிவிடும். கெட்டியாகும்.

கொழுப்பு+ அரு(வு) + ஐ.

அருவுதல் :  உருவில் அல்லது அளவில் குறைதல்.

கொழுப்பரை >  கொப்பரை என்பது இடைக்குறை.

 இது விழுபுலம் என்பது விபுலம் என்றானது போல்வது   ஆகும்.

கொப்பரை என்பது கொதி கொள்கலத்திற்கும் பெயராய் உள்ளது.  ஆயின்  இது  கொதிப்பரை   ( கொதித்து அருவுதல் கொள்வது ) என்பதன் இடைக்குறை ஆகும்.

இரு சொல்லமைப்புகள் ஓர் முடிபு கொள்ளுதலின் காரணம்,  அவற்றை வேறுபடுத்திய எழுத்துகள் இடைக்குறை ஆனமையே ஆகும். ஒன்றில் தி என்பதும் இன்னொன்றில் ழு என்பதும் மறைந்தன.

கொழுப்பு அருவுதலும் கொதிப்பினால் அருவுதலும்  என இவ்விரண்டில் கொதித்து அருவுதல் கொள்கலத்தில் இடுபொருளே. பின்னது கொள்கலத்தைக் குறித்தல் ஆகுபெயராகும்.

தமிழில் இடைக்குறைச் சொற்கள் பல.  அவற்றுள் சில ஈண்டு விளக்கப்பட்டன

மீள்பார்வை பின்

சிக்கட்டான் குழந்தை / பிள்ளை (வழக்கு)

சிலருக்கு உடலில் ஒரு "கட்டு" ( கட்டுதல், கட்டப்பட்டதுபோன்ற உடல் ) இருப்பதாகப்  பேச்சில் வழங்குகிறது.  கட்டான அளவு,  கட்டான உருவம் என்று சொல்வதுண்டு.

பிறந்து ஓர் அகவை கடந்த குழந்தைகளில் சில உடல் "கொழகொழ" என்று சற்றுப் பருமனாக இருப்பதுமுண்டு. சில இன்னும் மென்மை மாறாவிடினும் இந்தக் கொழகொழப்பு இல்லாமல் அல்லது குறைவாக இருப்பதுபோல் காணப்படுதலும் உண்டு. இதுபோலும் குழந்தைகட்குக் "கட்டு" இருப்பதாகக் கூறுவதுண்டு.

சிறிதாகவும் கட்டாகவும் இருக்கும் குழந்தையைச் சிக்கட்டான் குழந்தை என்பர்.

" ஒரு சிக்கட்டான் குழந்தையுடன் அவள் பூசைக்கு வந்திருந்தாள்" என்று கூறும்போது இந்தச் சொல் நினைவு கூர முன்னிற்கின்றது.  இச்சொல் எப்படி வந்தது என்று பார்ப்போம்.

சிறு + கட்டு +  ஆன்
=  சிறுகட்டான்
=  சிக்கட்டான்.

இந்தத் திரிபில் று எனற ஓர் எழுத்து மட்டும் கெட்டது அல்லது மறைந்தது.

சிறு >  சி > சி+ கட்டான் = சிக்கட்டான்  என்றாகும்.  இலக்கணத்தில் இது இடைக்குறை எனப்படும்.

சிறு என்பதன் மூலம் சில் என்பதே.

சில் > சிறு.

ஆகையால் சிறு என்பதிலிருந்து புறப்படாமல் சில் என்பதிலிருந்து தொடங்கலாம்.

சில்  > சி.  (  இது கடைக்குறை ).
சி + கட்டு + ஆன் = சிக்கட்டான்

என்று விளக்கினும் இதிலோர் கருதத் தக்க வேற்றுமை இல்லை என்பதறிக.

மீள்பார்வை பின்னர் நிகழும்.

சனி, 4 மே, 2019

சீக்காது, சீத்தலை, வாத்தியம், சூத்திரம் மற்றும் சீக்காட்டுதல்.

காதில் சீழ் வைக்கும் ஒரு வீக்க நோய் உள்ளது.   தற்கால நடையில் இதற்குக் காது அழற்சி என்று கூறுவர். இதன் பழைய பெயர் : " சீக்காது " என்பது ஆகும்.

இப்பெயரை மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் சீக்கு + ஆது  என்று பிரிவதற்குரிய சொல்போல் தோன்றும்.  அது சரியன்று.  இதனை ஆய்வோம்.

இந்நோயில் காதில் சீழ் வைத்து வீங்கும்.  ஆகவே  சீழ் அல்லது சலம் என்று பொருள் படும் சொல்லும் காது என்ற உறுப்பின் பெயரும் இணைப்புற்று உள்ளது. இணையவே,  சீழ்க்காது என்று ஆகி,    ழகர ஒற்று மறைந்து சீக்காது ஆயிற்று.

இப்படி ழகர ஒற்று மறைந்த இன்னொரு சொல் வேண்டுமெனின்:

வாழ்த்தியம்  >  வாத்தியம் என்பது காண்க.  ழகர ஒற்று மறைந்ததால் இஃது ஒரு திரிசொல் ஆகும்,

இயம்  என்பது பல ஒலிக்கருவிகளுடன் இயங்கும் ஒரு கூட்டம்.  வாழ்த்து என்பது தான் வாத்து ஆகிவிட்டது.   வாத்து என்ற பறவை வேறு.

சூழ்+ திறம் >  சூழ்த்திறம் >  சூத்திறம் >  சூத்திரம் என்பதும் காண்க.

எதையும் ஆலோசித்துத் திறனுடன் செய்தவனே சூத்திரன்.  பண்டைக் குமுகம் கைத்திறன் உடையவனை மதிக்கத் தவறினமையால்  சூழ்ந்து திறம்பட ஒன்றைச் செய்வோன் மதிப்புப் பெறாதொழிந்தான்.  திறமுடன் அமைக்கப்பட்ட நூற்பாவே  சூத்திரம்.  இது உண்மையில் சூழ் திறம் கொண்ட நூலின் பாடல் ஆகும்.

சீக்காட்டுதல் என்ற இன்னொரு சொல்லும் உளது, இதுவும் உண்மையில் சீழ்க் காட்டுதல் தான்,  ழகர ஒற்று மறைந்தது.  சீக்காட்டுதல் என்றால் சீழ் அல்லது சலம் வைத்தல்.

சீத்தலைச் சாத்தனார் என்ற சங்கப் புலவரின் பெயரின் சீத்தலை என்பது  சீழ் பிடித்த தலை என்று பொருள்பாடாமல்  குளித்தலை என்ற ஊர்ப்பெயர் போலும் அமைந்ததே என்று உணரற்பாலது.  சீர்த்தலை >  சீத்தலை.  தலையென்பது இடம்.  சீரமைந்த இடம் என்பது பொருளாகும்.

தலை > தலம்,    இது அம் விகுதி பெற்ற சொல்.

அறிந்து மகிழ்வோம்,

வெள்ளி, 3 மே, 2019

அருள்மிகு துர்க்கையம்மன்




 



அருள்மிகு துர்க்கையம்மன்


பொருளல்ல வற்றைப் பொருளென் றயராதீர்  பூவுலகில்
அருளென்று  தந்தவர்  ஆரு மிலைகாணீர்  அன்னையல்லால்;
இருளென்று வந்திடில் மாற்றி இயற்றுவள் வாழ்க்கைதன்னில்;
உருளென்று துன்பில் உருண்டோர் தமக்கும் விடுதல்தந்தாள்.


இலக்கணம்:

இந்தவகைப் பாடலில் மெய் எழுத்துக்களை நீக்கி எண்ணினால்  அிக்ு 17
எழுத்துக்கள் இருக்கவேண்டும். இதில் தவறினால் வேறுபாடல் ஆகிவிடும்.


வியாழன், 2 மே, 2019

பிடரி

இன்று பிடரி என்ற சொல்லைக் கவனிப்போம்.

இது இரு சொற்களால்   அமைந்த ஒரு கூட்டுச்சொல். அந்த இருசொற்களாவன:  பிடு என்பதும் அரி என்பதுமாம்.

பிடு என்பது ஒரு வினைச்சொல்.  இதன் பொருள் வேறாக்கி எடுப்பது என்பதே.

"கோயிலில் கிட்டிய வடையைப் பிட்டு  அவளுடன் பகிர்ந்துகொண்டேன்" என்ற வாக்கியத்தில் பிட்டு என்ற வினை எச்சம் பிடு என்ற வினையினின்று வந்தது ஆகும்.

பிடு > பிட்டு ;  இது கெடு > கெட்டு,   விடு > விட்டு என்பவை போல.

சில விலங்குகட்குப் பிடரி என்பது உடலினின்று பிட்டுத் தூக்கியது போல எழுந்து நிற்பது ஆகும் . இது கழுத்தின் பின்புறம்.  இவ்வாறு மேலெழுச்சி இல்லாத  விலங்குகட்கும் மனிதனுக்கும் இந்தச் சொல் பயன்பட்டது.  இதற்குக் காரணம் சிறப்புப் பொருளில் அமைவு கண்ட இச்சொல் பிற்காலத்து தன் சிறப்பை இழந்து பொதுப் பொருளில் வழங்கியதே  ஆகும்.

கழுத்து என்பது உடல்போலும் அகலமின்றி அருகிய பகுதியே ஆகும்.  இது நன்றாகத் தோன்றுமாறு  அருகுதல்:   அரு >  அரி ( அரு + இ )   என்ற சொல்லும் இணைக்கப்பட்டது.

பிடு +  அரி =  பிடரி.

பீடம் என்ற சொல்லும் இவ்வாறு ஒரு மேலெழுந்த பகுதியைக் குறிப்பதுவே  ஆகும்,   பிடு+ அம் = பீடம்,  இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.  பீடு என்பதும் இவ்வாறு பிட்டெழுந்த நிலையையே குறிக்கும்,






செவ்வாய், 30 ஏப்ரல், 2019

சிங்குதல் என்ற சொல் அமைதல்.

சிங்கிவரும் விலங்கு சிங்கு+அம் = சிங்கம் என்பது கண்டோம்.  இச் சிங்குதல் என்னும் கருத்து அரிமா என்பதிலும் உள்ளுறைந்து அமைந்து கிடக்கின்றதென்பது ஓர் இடுகைக்கு முன் தானே கண்டோம். அதனால் நம் நேயர்கள் இதனை மறந்திருத்தலுக்கான வாய்ப்பு மிகவும் குறைவே ஆகும்.

சிங்குதல் என்ற வினைச்சொல் இன்னும் நம் அகரவரிசைகளில் காணப்படுகின்றது.  சொல்விளைந்த வினைச்சொல் எந்த மொழியில் இருக்கிறதோ அந்த மொழிக்குரியதே அதனின்று பிறந்ததாக அறியப்படும் பெயர்ச்சொல்லும் என்பது பிற ஆய்வாளர்களாலும் ஒப்பப் பட்டதே  ஆகும்.  அரிமா என்பதும் அதே பொருளுடைத்தாதல் அறிக.  அதற்கு இன்னொரு சொல் தேவைப்பட்ட ஞான்று அதே பொருளில் அதனை அமைத்தது ஒரு சிந்தனைச் சிக்கனமே ஆகுமென்பதை அறிந்தின்புறுவீர்.

இனிச் சிங்குதல் என்ற வினைச்சொல்லை ஆய்வோம்.

சிறுகுதல் > (சிகுதல்) > சிங்குதல் என்றமைந்ததே இச்சொல் ஆகும்.

இவ்வாய்வில் வழக்கொழிந்த வடிவங்களையும் கண்டெடுக்கலாம்.  அவை சிகுதல், சிறுங்குதல்.

ஒன்று இன்னொன்றில் மாட்டிக்கொண்டு ( எ-டு: நூல், தைக்கும்போது ) இரண்டு ஒன்றாகி எண்ணிக்கை குறைதலும் சிங்குதலே ஆம்.  இது சிக்குதல் என்ற சொல்லினைப் பிறப்பித்தது.

இதனை அறியத் தொடங்கு என்ற சொல்லைப் பார்ப்போம்.

தொடு >  தொடர்.
தொடு > தொடகு ( கன்னடம் ) > தொடங்கு (தமிழ்).

இதனுடன் இலகு> இலங்கு என்ற தமிழ் வடிவங்களையும் ஒப்பீடு செய்யுங்கள்.

நடுவில் ஒரு ஙகர ஒற்றினைப் பெற்றுச் சொல் விரிதல் தமிழிலும் ஏனைத் திராவிட மொழிகளிலும் காணப்படுதாகும்.

பகு என்ற வினைச்சொல் ஒரு ஙகர ஒற்று ப் பெற்று விரிந்து பெயராதலும் அறிக.  பகு> பங்கு.  பகுக்கப்பட்ட ஒரு பகுதியே பங்கு.

தகுதி உடையாரே தங்குவர்; தகுதி இல்லார் வெளியேறுவர். இது உலக இயல்பு.

தகு > தங்கு  என்ற சொற்களின் தொடர்பும் அறிக.

அ என்ற சுட்டடி ஓரெழுத்து ஒருசொல் கு என்ற சேர்விடம் குறிக்கும் உருபினை இறுதிநிலையாகப் பெற்று,  அ+ கு =  அங்கு என்று புணர்ச்சித் திரிபு அடைதலும் இதன் இயல்பைக் கோடிகாட்டுவதே.  கு என்பது ஈண்டு உருபாக வராமல் ஒரு விகுதியாய் நின்றது.

சொல் மிகுதற்குத் துணையாவதே விகுதி:  மிகுதி> விகுதி. இது இறுதிநிலை எனவும் படும்.

சிறு > சிறுகு ( வினை)
சிறு > சிறுகு > சிறுங்கு ( இது இடைமிகை).
சிறுங்கு > சிங்கு   ( இது இடைக்குறை).

இத்தகைய திரிபுகளும் வழக்கொழிவும் நடைபெறக் காலம் சென்றிருக்கும். சில இடைவடிவங்கள் இல்லாதொழிதலும் இயல்பே.

பிழை காணின் பின் திருத்தம்,
சில திருத்தமும் சில சேர்க்கையும் செய்யப்பட்டன:  1.5.2019

நிலைபெற்றவை: நிலம் முதல் நிறம் வரை

நிலம், நிலவு என்ற சொற்கள்  "நில்" என்ற சொல்லினடியாகப் பிறந்தவை என்பதை முன் சில அறிஞர்கள்  அறிவித்திருந்தனர்.  நிலம் என்பது மனிதனும் ஏனைப் பொருட்களும் "நிற்பதற்குரிய இடம்" என்பதே பொதிந்த பொருளாம்.  பண்டைத் தமிழனோ நிலவும் நிலம்போல நிற்கும் கோள் என்றே கருதினான்.  அதனால் அதையும் நில்> நிலா என்று அறிந்து சொல்லை அமைத்தான்.  அதாவது வானத்தில் நிலை கொண்டிருக்கும்  கோள்களான   சூரியன், நிலவு  ஆகும் இவை ஏன் " உதயம்" ஆகின்றன,  ஏன் மறைகின்றன என்பவற்றை  அவர்கள் முழுமையாக அறிந்திருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. இவை எல்லாவற்றையும் விளக்க இன்னும் ஒரு கலிலியோ பிறந்துவிடவில்லை.

நில் > நில் + அம் > நிலம்    நிற்பதாகிய நிலம். மண்.

நில் > நிலா.  இதில் ஆ என்ற இறுதி ஒரு விகுதி ஆகும்.

ஆ என்ற விகுதி பெற்ற வேறு சொற்கள்:

பல் > பலா  :   பல சுளைகள் உள்ள ஒரு பெரிய பழம் ,  அதைத் தரும் ஒரு மரம் அதன் உறுப்புகள்.

கல் >  கலா  .  இதன் பொருள் கலை.  இது ஒரு தமிழ்ச் சொல் என்பதை அறிந்து கூறினார் பேராசிரியர் அனவரத விநாயம்பிள்ளை.  கல்லுதல் :  தோண்டுதல். கல் = கற்றுக்கொள்ளுதல்.  இளமையில் கல் என்றார் ஒளவைப்பாட்டி.

இனி இன்னொரு முடிபையும் சொல்லக்கடவது.  அதாவது:

மன் :   நிலைபெற்றது.

மன் >  மண் என்பது திரிந்தமைந்தது.  இரு சுழி எழுத்து முச்சுழி எழுத்தினும் முந்தியது ஆகும்.  இவற்றின் பொருளமைதி ஒப்புமை காண்க.

இனி இன்னொன்றையும் அறிந்து இன்புறுவோம்.  இப்புவியில் நிலையான பொருள்களில் நீரும் ஒன்றாகும்.   இதுவும் நில் என்ற வினையடிப் பிறந்த சொல்லே.

நில் > நீல் > நீர்.   முதனிலை என்ற முதலெழுத்து நீண்டது. லகரம் ரகரமாவது தமிழில் மட்டுமன்று பிற சில மொழிகளிலும் காணக்கிடைக்கும் ஒரு திரிபு ஆகும்.  இத்தகு திரிபு விளைந்த சொற்களைப் பழ இடுகைகளில் காண்க.

நில் > நீல் > நீலம்.  வானத்தின் கருமையே நிலையானது ஆகும்.  அது நிற்பது என்று சொன்னால் அது மாறாதது ஆகும்.   மாறாத இந்த நிறம் நீலம், ஓர் அடிப்படை நிறம்.

நில் > நிறு > நிறம்.   நிறம் என்னும் வண்ணம் நிற்பது.  அது பொருளில் நிற்கின்றது,  இலையில் பச்சை நிறம் போலும்.

இங்கு காணப்பட்ட சில பொருள்கள் வேறு இடுகைகளில் விளக்கமும் ஒப்புமையும் தெளிவுறுத்துவன  ஆகும்.  அறிந்து மகிழ்க.


 இது மீள்பார்வை பெறும்.


வெள்ளி, 26 ஏப்ரல், 2019

கூகிள் கூடுதலால் பெற்ற கடந்தகாலப் பயன்`கள்

கூகிள் நிறுவனம் கூடுதல் அச்சேவை
பாகினது பாத்திரம் ஆங்குதர ---- ஆகினவே
உட்புகுந்  துள்ளன ஓங்க நுகர்தலும்
கட்பகிர்ந்  தன்ன கருத்துகள்---- கொட்புறலும்
நற்பயன் பெற்றோமந் நாள்.

பெற்ற பயன் நினைவு கொள்ளுதல் பற்றிய கவி.
வெண்பா. நேரிசை.


பொருள் ( உரை)


கூகிள் நிறுவனம் கூடுதல் சேவை -  கூகிள் ப்ளஸ்
என்ற மென்பொருட் சேவை;
பாகினது -  காய்ச்சின பாகினுடைய
பாத்திரம் -  உண்கலம்
ஆங்கு தர -  விரைவாகத் தேடிக் கொணர்ந்து கொடுக்க;
உட்புகுந்து -  வலைத் தளத்தினுள் நுழைந்து;
உள்ளன ஓங்க நுகர்தலும் -  இருக்கும் இடுகைகளை
விரிவாக அனுபவித்தலும்;
கட் பகிர்ந்தன்ன  --  கண்களே பாகுபடுத்தி எடுத்துக்கொள்ளுதல்
போலவே;
கருத்துகள்:  எண்ணி எழுதிய பலவும்;
கொட்பு உறலும் -   மேற்கொள்ளுதல் மிகுதலும் ஆன;
நற்பயன் -  நன்மைகள் விளைந்திடுதலை;
பெற்றோம் அந்நாள்:  முன்னாளில் பெற்றும் மகிழ்ந்தோம் அல்லோமோ?
பெற்றோம் என்றபடி.

கூகிள் சேவை,  பாகுப் பாத்திரம் கொணர்ந்தளித்தலுக்கு உவமையாக
இங்கு சொல்லப்பட்டது.

மறுபார்வை செய்யப்பெறும்.



அரிமா சிங்கம் குறைந்துவருதல் பொருண்மை

அரிமா சிங்கம் என்ற இரு சொற்களையும் இன்று நுணுக்கமாக நோக்குவோம்.

அரிமா என்ற சொல்லின்  பொருள் அரிதல் - அரித்தல் ( தன்வினை - பிறவினை ) என்ற வினையடிப்படையில் தோன்றிய தென்று அறிஞர் கூறியதுண்டு.  சிற்றுயிர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து இல்லாதனவாக்கும் கொடிய வலிமை பொருந்திய விலங்கு என்பது இதன் பொருள் என்பர்.

இஃது சரியான சொல்லாய்வு என்று ஒப்புவோம்.  நீருள் பாசியைச் சிறிது சிறிதாக அரித்தெடுத்தல் போல உயிர்களை அது  ஒழித்துவிடுகிறது  என்பது அருமையான கருத்தே.

அரி என்ற வினைக்கும் அப்பால் சென்று அதனடியைக் காணின்,  அது அரு என்ற வடிவமே என்பது புலப்படும்.

அரு >  அருமை.
அரு >  அருகு >  அருகுதல்.   எண்ணிக்கையில் குறைவாதல் இதன் பொருள்.
அரு > அரி  ( அரியது;  குறைந்த எண்ணிக்கையே உடையது )

ஓர் இடத்திற்கும், இன்னோர் இடத்திற்கும் உள்ள இடைத் தொலைவு சுருங்குதலும் அருகுதலே ஆதலின்,   " அருகில் ( உள்ளது)" என்ற வழக்கு உண்டாயிற்று.

காணற்கு அரியனவான இவ்விலங்குகளை அரிமாக்கள் என்று பெயரிட்டது
அற்றை நிலையுடன் மிகப் பொருந்தியதாகும்.  இன்று அருகிவரும் விலங்குகளைக் காப்பதற்குப் பல நடவடிக்கைகளை  ஐக்கிய நாடுகள் நிறுவனமும் பல அரசுகளும் எடுத்துள்ளன என்பது நீங்கள் அறிந்ததே.  அரிமாக்கள் என்னும் சிங்கங்கள் அருகிவிட்டன என்று தமிழன் அன்றே கவலைப் பட்டிருக்கின்றான். 

சிங்குதல் என்பதும் அழிதல், தேய்தல் , மீந்துபோதல் என்பன போலும் பல பொருளுடைய சொல்லே.  சிங்கம் பல நாடுகளில் இல்லை. ஆகவே அழிந்துவரும் ஓர் விலங்கினம் அது.  மனிதனால் பாதுகாக்கப்படவேண்டிய இரங்கத்தக்க நிலையில் இருக்கின்றது.  அதன் எண்ணிக்கை தேய்ந்துகொண்டு உள்ளது.  

அருகிவரும் விலங்கு. அழிந்துவிடுமோ என்ற அஞ்சத் தக்க விலங்கு. சிங்கிக் கொண்டு வரும்  விலங்கு சிங்கம்.

அரு+ இ = அரி > அரிமா.
சிங்கு + அம் =  சிங்கம்.

விலங்குகளின் அரசனுக்கு இந்தக் கதியா? 

சிங்கம் என்பது அன்றாட வழக்கிலுள்ள சொல்.  சிங்கு என்ற வினையின் அடியாகத் தோன்றிய பெயர்.  மேலும் எங்கும் பரவித் தமிழுக்கும் பெருமை சேர்த்த சொல்.

சிங்கிப்போன சிங்கத்தையும் அருகிப்போன அரிமாவையும் கண்டு சொல்லுக்கு இன்புற்றோம், கருத்தடிப்படை கண்டு கவலைகொண்டோம், பொருளடிப்படை ஒன்றுதான்.


பழமொழி:  பன்றி பத்துக்குட்டி சிங்கம் ஒற்றைக் குட்டி. குறைவுக்கு இதுவும் காரணமாகுமோ?

வியாழன், 25 ஏப்ரல், 2019

பிராந்தியம்

இன்று பிராந்தியம் என்ற சொல்லை ஆய்வோம்.

இந்தத் திரிசொல் தமிழ்ச் சொல் போல் தெரிகிறதா என்றால் இல்லை. செந்தமிழ் ஒலிமரபை இச்சொல் வெளிப்படுத்தவில்லை.

ஒரு மன்னனின் ஆளுகைக்கு உட்பட்டது அவனுடைய  நாடு எனப்படும். அவனுடைய நாட்டைச் சுற்றியுள்ளனவும் பதிலரையர்களை  ஆட்சியர்களாகக் கொண்டவையுமான மற்ற நிலப்பகுதிகள் "பிராந்தியங்கள்" எனப்பட்டன.

இந்தச் சுற்றுவட்ட நிலப்பகுதிகளை இந்த மன்னன் கைப்பற்றி அவற்றினின்று நீங்கியவனாய் அந்த ஆட்சியர்களிடமிருந்து இவன் பொருளைப் பெற்றுக்கொண்டபடியால் அவையும் இவனின் நேரல்லாத ஆளுகைக்கு உட்பட்டவையே ஆயின.

இந்த மன்னனின் மக்கள் அந்தச் சுற்றுவட்டங்களை " பிறவாம் தேயம்" என்றுதான் சொல்லமுடிந்தது.  பிரிட்டீஷ் மக்கள் இந்தியா முதலிய நாடுகளைக் "காலனி"கள்  ( குடியேற்றங்கள் )  என்று கூறியது போலவே யாம்.

பிறவாம்தேயம் >  பிறாந்தீயம் >  பிராந்தியம்.

பிறவாம் :   பிராந்   ( ற  - ர;   வா: கெட்டது;   அல்லது விலகிற்று.    ம் >ந்  புணர்ச்சித் திரிபு. )
தேயம் :  தீயம் > தியம். >  த்யம்   ஏகார ஈகார மாற்றம்.

எலாம் திரிபுமயமே.

சங்க காலத்தில் தேயம் என்ற சொல் தேம் என்று இருந்தது.

தேம் >  தேயம் ( ய என்பது எழுத்துப்பேறு )  >  தேசம்  ( ய ச போலி ) > தேஷ்.

பிற என்பது சொல்லில் பிரா என்று மாறுவது:  எடுத்துக்காட்டுகள்:

பிற அணி >  பிறாணி > பிராணி. ( மனிதரல்லாத மற்ற அணி உயிர்கள் ).
பிராணியின் உள்ளிருப்பது:  பிராணன்  > பிராணா.

பிறகு ஆர் அம் =  பிரகாரம்.
பின்புறத்தில் அல்லது வெளிப்புறத்தில்  சுற்றியுள்ள இடம்.  ஆர்தல்: சுற்றியிருத்தல். மூலத்தானத்தின் பின்னர் சுற்றுவட்டம் முதன்மையான இடம்.
ஒரு பூசாரி கோவிலின் மூலத்தானத்திலிருந்து வெளிப்பட்டுப் பின் பிரகாரத்துக்கு வந்து அப்புறம் வெளியிற் செல்லுகின்றனன்.

புறக்கட்டு:    புற + கு + ஆர் + அம் = புறகாரம் > பிரகாரம் எனினுமாம்.

புறம் : புற (எச்சச்சொல்.)

இவ்வளவுதான். மீண்டும் கண்டுரையாடுவோம்.







செவ்வாய், 23 ஏப்ரல், 2019

மா உனம் மௌனம்

சில இடுகைகளை வாசிக்குமுன் முன்வந்த இடுகைகளயும் வாசித்தல் நலமாகும். அப்போது சற்று விரிவாக அறிந்துகொள்ளுதல் இயலும், இங்கு எழுதப்பட்டவை ஒரு நூல்போல இல்லாமல் தனித்தனிச் சுளைத்தன்மை உடையனவாய் இருத்தலால் முன்னிடுகை வாசிப்பு நலம்பயக்கும்.

முன் இடுகை இது:-

https://sivamaalaa.blogspot.com/2018/05/blog-post_47.html



(முனிவரும் மௌனமும்)


முன்னுதல் என்ற வினைச்சொல்லே முனிவர் என்பதன் அடியாகும்.

அடி என்பது அடுத்து முன்னிற்பது:   அடு > அடி ( அடு+ இ ).

உன்னுதல் என்பதும் முன்னுதல் என்பதும்  ஒன்றுக்கொன்று பிறப்புத் தொடர்பினவாம்.   ஆகையால்  உன்னுதல் என்பதினின்று சொல்லமைப்பைக் காட்டினும் வேறுபாடு ஒன்றுமில்லை.

இப்போது மௌனம் எனற்பாலதை உன்னுதல் என்னும் சொல்லினடிப்படையில் அறிவோம்.

மா = பெரிய, நீண்ட

உன்னு(தல்) >  உன்னு > உன்னம் > உனம்.     ஆழ்ந்து சிந்தித்தல். முன்வைத்து எண்ணுதல்.

மா+ உனம் >  மாவுனம் > மவுனம் > மௌனம்.

ஒன்றைத் தீர எண்ணுகின்றகாலை,  பேச்சுக்கு வேலை இல்லையாகின்றது. பேசாமை மௌனமென்று பொருள் எழுவதாகுதல் காண்க.

இவ்வாறு உரைப்பினும் இழுக்காதென்ப தறிக.

சிவனாகிய ஆதிப்பரம்பொருள் எப்போதும் பேசுதல் இல்லை, எப்போதாவது மொழிந்ததாகச் சொல்லப்படுதல் உண்டு.

இலக்கணம்:

மா உ என்பது மௌ என்றும் மவு என்றும் திரிந்தது.  இது நெடிற் குறுக்கம்.

தலை எழுத்துக்கள் நீளுதலும் குறுகுதலும் நீரோடைபோலும் மிக்க இயல்பான நிகழ்வாகும்.

தோண்டு >  தொண்டை  ( ஐ விகுதி ).
மா உ  > மவு (குறுக்கம் )  >  மௌ ( திரிபு).
முனி+ அம் = மோனம் ( திரிபு - முதனிலை திரிதலும் மு> மூ என்று  தன்னீட்சியாக இன்றி  மு> மூ >  மோ என்று இனமாகத் திரிதலுமாம்.

பண்டு ( பழமை ) என்ற குறில் தொடக்கக் குடிப்பெயரில் பகரம் பாகாரமானது தன்னீட்சி ஆடும்.

பண்டு > பாண்டு> பாண்டியன்.  மூவேந்தருள்ளும் பண்டு தோன்றியோன்.

காலம் செல்லச் செல்லவே எதுவும் பண் அடைகிறது,

பண் > பண்டு > பாண்டு > பாண்டியன் -  பண்பட்டவன் என்று பொருள் கூறினும் ஏற்கலாம்.

சொற்கள் தோன்றித் திரிவுறுகையில் நாம் பார்த்துக்கொண்டோ கேட்டுக்கொண்டோ இருக்கவில்லை. நாம் பிறந்தது இந்நூற்றாண்டில்.    ஆய்வு நெறிகளால் அதில் கிட்டிய அளவைகள் சிலவற்றால்தான் நாம் இதைக் கூறலானோம். ஈரளவைகளும் பொருந்துங்கால் சொல்லை இருபிறப்பி என்று ஏற்றல் அறிவுடைமை என்று முடிக்க. ஒன்றைச் சரி என்று தொங்கிக்கொண்டிருக்கலாகாது.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

ஐயப்ப சாமி பாடல்

ஒரு சிறிய பாடல். இது ஐயப்ப சாமியைப் புகழ்வது:


ஐயப்பனின் மகிமைதனைப் புகழும் வாய்களே  -- இந்த
அகிலமதில் இனியவாழ்வு பெறுவ துண்மையே.

கொய்தணிந்த உனதுமாலை மணமும் வாழ்விலே -- இங்கு
கூடிவரும் நாடிவந்த பத்தர் காணவே.

காலையிலே கருதியவை மாலை நேரமே --- ஒரு
சோலைமலர்ச் சோபனத்தில் மெய்விளங்குமே.

சபரிமலை மகிபன் தனைப்  புகலும் வாய்களே ---ஒரு
தணிந்திடாத ஒளியைச் சேர்க்கும் தரணி போற்றவே.


பொருள்:

புகலும் =  சொல்லும்.  புகுமாறு தெளியச் சொல்லுதல்.
மெய் = உண்மை
சோபனம் :  அழகு.
காணவே = இங்கு மனத்தால் உணர்தல்.


 





நரிக்கு ஓர் ஆடு : ரகர டகர ஒலியணுக்கம்

டகர ரகரங்கள் ஒன்று பிறிதொன்றாய் நிற்கத் தக்கன என்பதைச் சில இடுகைகளில் குறித்திருந்தேம்; எடுத்துக்காட்டுக்கு ஒன்று:-

மடி ( இறந்துபோ)

மரி  ( இறந்து போ)


மடி > மரி  (போலி  என்பதுமாம்).

இதுபோலும் ஒலிப்போலி உண்மைகள் ஒலிநூலின் பாற்பட்டவை.

இப்போது இந்தப் பழமொழியைப் பாருங்கள்:

"நரிக்கு ஓர் இடம் கொடுத்தால்
கிடைக்கு ஓர்  ஆடு கேட்கும்."


நரிக்கு  -  இதில் இரண்டாமெழுத்து  ரகர வருக்கத்தினது.   ர -  ரா - ரி......

கிடைக்கு  -  இதில் இரண்டாமெழுத்து டகர வருக்கத்தினது,  ட டா டி டீ டு டூ டெ டே டை......

இப் பழமொழியில் வரிமுதல்களில் இரண்டாம் எழுத்து ரகர டகர மாக ஒன்றுபட அல்லது வேறுபட,  ஏனை இரண்டெழுத்துகளும் ஒன்றிவந்து எதுகை நன்`கு அமைந்துள்ளது காண்பீர்.

சில சொற்களில் வெறும் எழுத்துப் போலியாக மட்டுமின்றி, நுண்பொருண்மை வேறுபடுதலும் கொள்ளப்படும்.

கடி -  கடினப் பொருளைக் பல்லால் பற்றுதல் (பற்றி உடைத்தல்.)
கறி -சற்றுக் கடினக் குறைவான பொருளைப் பல் பற்றுதல்.

டி றி இரண்டும் வல்லெழுத்துக்களெனினும் றகரம் சற்று வன்மை தாழ்ந்தது.
இத் தாழ்வன்மை இலக்கண நூல்களிற் கூறப்படுவதில்லை.  நுகர்வில் உணரப்படுதல் உடைத்து.  ( சுருதி, யுக்தி, அனுபவம்!)

கவிதையில் நாம் இவ் வொலியணுக்கங்களைப் பெய்து நயமுடைத்தாக்கலாம் என்பதறிக



 

வியாழன், 18 ஏப்ரல், 2019

காத்தாலே என்னும் பேச்சுமொழிச் சொல்

"காத்தாலே பார்த்தேன் --- கடைக்குப் போய்க்கொண்டிருந்தார்;  எங்கே போனாரென்று தெரியவில்லை"

என்பதுபோலும் வாக்கியங்களைப் பேச்சில்  கேட்டிருக்கலாம்.   காத்தாலே என்பது எழுத்துமொழியில் வருவதில்லை.

காத்தாலே என்பது பெரும்பாலும் ஏழை மக்களிடையே வழங்கும் சொல் என்பதுண்டு.

இச்சொல் வந்த விதம் அறிவோம்.

காலை என்பது விடியற்பொழுதையும் அதற்கடுத்த இரண்டு மூன்று மணிக்கூறுகளையும் உள்ளடக்கிய காலப்பகுதி என்றால் அது சரியாக இருக்கும். நண்பகல் வருவதற்கு முன்னுள்ள நேரத்தை "முற்பகல்" என்பர்.

காலை என்ற சொல்லும் காலம் என்ற நீள்பொழுதைக் குறிக்கும் சொல்லும் ஓரடியினின்று வருவதாம்.

கால் > கால்+ அம் = காலம்.
கால் + ஐ =  காலை.

காலம்+ காலம் என்று சொற்புணர்ச்சி  காலாகாலம் என்றும் காலங்காலம் (காலங்காலமாய் ...)   என்று இருவகையில் வந்து பயன்பாடு காணுதலை நாமறிவோம்.

கால் என்பது நீட்சி என்று பொருள்படும் சொல்.

நடக்கும் நம் கால்கள் நீட்சியின் காரணமாகவே அப்பெயர் பெற்றன. பொழுதுநீட்சியும் கால்+அம் என்று போந்தது அது காரணமாகவேயாம்.

வந்தக்கால், செய்தக்கால் என்ற தொடர்களில் கால் என்பது  காலம் என்று பொருள்படும்.  அம் என்பது பெரும்பாலும் அமைவு குறிக்கும் ஒரு விகுதி.

அம் > அம்+ ஐ > அமை > அமைதல்.  ஐ இங்கு வினையாக்க விகுதியாகும்.

காலம் என்ற சொல்லுக்குக் காலை நேரம் என்றும்  பொருள் உள்ளபடியால் மலையாள மொழியில் "காலத்து" என்றால் காலையில் என்று அர்த்தமாகும்.

காலத்து வந்நு   (  ம  ) =   காலையில் வந்தான். (த)

காலையில் வந்தான் என்பதை காலத்தாலே வந்தான் என்பது பேச்சு மொழி.

காலத்தாலே என்பது இடைக்குறைந்து காத்தாலே என்று வந்தது.

காலத்தாலே  >  காத்தாலே.

ஒரு லகரம் வீழ்ந்தது அல்லது கெட்டது.


இதற்கும் காத்தல் என்ற வினைப்பெயருக்கும் தொடர்பொன்றும் இல்லை.