ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

நரிக்கு ஓர் ஆடு : ரகர டகர ஒலியணுக்கம்

டகர ரகரங்கள் ஒன்று பிறிதொன்றாய் நிற்கத் தக்கன என்பதைச் சில இடுகைகளில் குறித்திருந்தேம்; எடுத்துக்காட்டுக்கு ஒன்று:-

மடி ( இறந்துபோ)

மரி  ( இறந்து போ)


மடி > மரி  (போலி  என்பதுமாம்).

இதுபோலும் ஒலிப்போலி உண்மைகள் ஒலிநூலின் பாற்பட்டவை.

இப்போது இந்தப் பழமொழியைப் பாருங்கள்:

"நரிக்கு ஓர் இடம் கொடுத்தால்
கிடைக்கு ஓர்  ஆடு கேட்கும்."


நரிக்கு  -  இதில் இரண்டாமெழுத்து  ரகர வருக்கத்தினது.   ர -  ரா - ரி......

கிடைக்கு  -  இதில் இரண்டாமெழுத்து டகர வருக்கத்தினது,  ட டா டி டீ டு டூ டெ டே டை......

இப் பழமொழியில் வரிமுதல்களில் இரண்டாம் எழுத்து ரகர டகர மாக ஒன்றுபட அல்லது வேறுபட,  ஏனை இரண்டெழுத்துகளும் ஒன்றிவந்து எதுகை நன்`கு அமைந்துள்ளது காண்பீர்.

சில சொற்களில் வெறும் எழுத்துப் போலியாக மட்டுமின்றி, நுண்பொருண்மை வேறுபடுதலும் கொள்ளப்படும்.

கடி -  கடினப் பொருளைக் பல்லால் பற்றுதல் (பற்றி உடைத்தல்.)
கறி -சற்றுக் கடினக் குறைவான பொருளைப் பல் பற்றுதல்.

டி றி இரண்டும் வல்லெழுத்துக்களெனினும் றகரம் சற்று வன்மை தாழ்ந்தது.
இத் தாழ்வன்மை இலக்கண நூல்களிற் கூறப்படுவதில்லை.  நுகர்வில் உணரப்படுதல் உடைத்து.  ( சுருதி, யுக்தி, அனுபவம்!)

கவிதையில் நாம் இவ் வொலியணுக்கங்களைப் பெய்து நயமுடைத்தாக்கலாம் என்பதறிக



 

கருத்துகள் இல்லை: