செவ்வாய், 16 ஏப்ரல், 2019

விகுதிப்பொருத்தம்.

ஒரு புதிய சொல்லைப் படைப்பதென்றால் பல திறமைகள் தேவைப்படுகின்றன.  தகுதியுடைய ஒரு பகுதியை ( நிலைக்கூறு ஆவதைத்  ) தெரிந்தெடுப்பது மட்டுமின்றி,  விகுதி என்னும் வருகூறும் பொருத்தமாக இருத்தல் இன்றியமையாதது என்று அறியவேண்டும்.

இதனைச் சேனை என்ற சொல்லின்மூலமாக விளக்கலாம்.

பலர்  சேர்ந்து செல்வதே சேனை.  சேமிப்பு என்ற சொல்லில் எப்படி சேர் என்பதன் இறுதி ரகர ஒற்று மறைந்து சேர்மிப்பு என்பது சேமிப்பு என்று ஆனதோ அப்படியே சேர்நை என்று வரவேண்டியது சேர்னை > சேனை என்றானது.  நகர வருக்கம்  0னகர வருக்கமாக மாறுதலுடையது என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள்.  அண்மைய எடுத்துக்காட்டு ஒன்று:

ஓட்டுநர் >  ஓட்டுனர் ( நகரம் 0னகர மானது )
இயக்குநர் > இயக்குனர்.(மேற்படியே)

சேனை என்ற சொல்லைப் படைப்பதன் முன் மனிதனின் மூளையில் உருவான அடிப்படைக் கருத்து:  சேர்ந்து அனைவரும் செல்வது என்பதே.

இதன் பகுதிகளை மட்டும் எடுத்து:

சேர் + அனை >  சேரனை >  சேனை.  அல்லது  சே+னை.>  சேனை.

அனைவரும் பாடுவது பஜனை.

பாடு+ அனை > படனை > பஜனை. இங்கு முதலெழுத்தைக் குறுக்கிப் பாடு என்பதில் உள்ள சொல்லும் பொருளும் மறைக்கப்பட்டது.

இதுபோலும் குறுகிய இன்னொரு சொல்:  தோண்டு > தொண்டை.
காண் > கண்.

பெயர் நீண்டு வினையாதலும் கொள்ளப்படும்.

அனை என்பதே விகுதியாக்கப்பட்டு, பின் அகரம் களையப்பட்டு  0னை மட்டுமே தேய்ந்த விகுதியாய் நின்றது.

ஐகார இறுதி பிற பேச்சுக்களில்  ஆகாரமாக மாறும்.  சேனை> சேனா.

சோடனை என்னும் சொல்லும் இங்கனமே  வேண்டிய இடங்களிலெல்லாம் சோடித்தல் என்ற பொருள்வர,  சோடி+ அனை =  சோடனை என்றானது. வேண்டிய  அனைத்தையும் அழகுபடுத்தல். அனைத்தும் சோடித்தல். அழகற்ற அனைத்தையும் அழகுபடுத்தாவிடில் சோடனையில் புண்ணியமில்லை என்பதை உணரவேண்டும்.  இச்சொல்லுக்கும் அனை என்ற விகுதி பொருத்தமே.

கொள்வனை கொடுப்பனை என்ற  சொற்களில் மணமக்கள் சார்பினர் தங்கள் தங்கள் உறவினர்களையும் ஏற்றுக்கொள்ளுதலால் அனைவரும் உட்படுத்தப்படுகின்றனர் என்பதையும் கவனிக்கவும்.

இவை "அனை" என்ற விகுதி பொருந்திய சொற்களாம்,

எழுத்துப்பிழைகள் பின் திருத்தப்பெறும்.

கருத்துகள் இல்லை: