செவ்வாய், 30 ஏப்ரல், 2019

நிலைபெற்றவை: நிலம் முதல் நிறம் வரை

நிலம், நிலவு என்ற சொற்கள்  "நில்" என்ற சொல்லினடியாகப் பிறந்தவை என்பதை முன் சில அறிஞர்கள்  அறிவித்திருந்தனர்.  நிலம் என்பது மனிதனும் ஏனைப் பொருட்களும் "நிற்பதற்குரிய இடம்" என்பதே பொதிந்த பொருளாம்.  பண்டைத் தமிழனோ நிலவும் நிலம்போல நிற்கும் கோள் என்றே கருதினான்.  அதனால் அதையும் நில்> நிலா என்று அறிந்து சொல்லை அமைத்தான்.  அதாவது வானத்தில் நிலை கொண்டிருக்கும்  கோள்களான   சூரியன், நிலவு  ஆகும் இவை ஏன் " உதயம்" ஆகின்றன,  ஏன் மறைகின்றன என்பவற்றை  அவர்கள் முழுமையாக அறிந்திருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. இவை எல்லாவற்றையும் விளக்க இன்னும் ஒரு கலிலியோ பிறந்துவிடவில்லை.

நில் > நில் + அம் > நிலம்    நிற்பதாகிய நிலம். மண்.

நில் > நிலா.  இதில் ஆ என்ற இறுதி ஒரு விகுதி ஆகும்.

ஆ என்ற விகுதி பெற்ற வேறு சொற்கள்:

பல் > பலா  :   பல சுளைகள் உள்ள ஒரு பெரிய பழம் ,  அதைத் தரும் ஒரு மரம் அதன் உறுப்புகள்.

கல் >  கலா  .  இதன் பொருள் கலை.  இது ஒரு தமிழ்ச் சொல் என்பதை அறிந்து கூறினார் பேராசிரியர் அனவரத விநாயம்பிள்ளை.  கல்லுதல் :  தோண்டுதல். கல் = கற்றுக்கொள்ளுதல்.  இளமையில் கல் என்றார் ஒளவைப்பாட்டி.

இனி இன்னொரு முடிபையும் சொல்லக்கடவது.  அதாவது:

மன் :   நிலைபெற்றது.

மன் >  மண் என்பது திரிந்தமைந்தது.  இரு சுழி எழுத்து முச்சுழி எழுத்தினும் முந்தியது ஆகும்.  இவற்றின் பொருளமைதி ஒப்புமை காண்க.

இனி இன்னொன்றையும் அறிந்து இன்புறுவோம்.  இப்புவியில் நிலையான பொருள்களில் நீரும் ஒன்றாகும்.   இதுவும் நில் என்ற வினையடிப் பிறந்த சொல்லே.

நில் > நீல் > நீர்.   முதனிலை என்ற முதலெழுத்து நீண்டது. லகரம் ரகரமாவது தமிழில் மட்டுமன்று பிற சில மொழிகளிலும் காணக்கிடைக்கும் ஒரு திரிபு ஆகும்.  இத்தகு திரிபு விளைந்த சொற்களைப் பழ இடுகைகளில் காண்க.

நில் > நீல் > நீலம்.  வானத்தின் கருமையே நிலையானது ஆகும்.  அது நிற்பது என்று சொன்னால் அது மாறாதது ஆகும்.   மாறாத இந்த நிறம் நீலம், ஓர் அடிப்படை நிறம்.

நில் > நிறு > நிறம்.   நிறம் என்னும் வண்ணம் நிற்பது.  அது பொருளில் நிற்கின்றது,  இலையில் பச்சை நிறம் போலும்.

இங்கு காணப்பட்ட சில பொருள்கள் வேறு இடுகைகளில் விளக்கமும் ஒப்புமையும் தெளிவுறுத்துவன  ஆகும்.  அறிந்து மகிழ்க.


 இது மீள்பார்வை பெறும்.


கருத்துகள் இல்லை: