புதன், 17 ஏப்ரல், 2019

கண்டித்தல் துண்டித்தல்

தலையில் துண்டு கட்டிக்கொள்வது சிலரிடத்துக் காணப்படுகிறது. மலேசியா இந்தியா முதலிய நாடுகளில் காணலாம்.

துண்டு என்பது  துண்+து,
இதில் ஈற்றுத்  து என்பது விகுதி.
ஒரு நீளமான நெசவிலிருந்து துணிக்கப்பட்ட அல்லது வெட்டப்பட்டதுதான்
துண்டு. பிறபொருளெனினும் இஃதொக்கும்.  எடுத்துக்காட்டு: மரத்துண்டு.

துணி என்பதும் ( க்ளோத் ) துணிக்கப்பட்டதனால் வந்த பெயரே.

அடிச்சொல் துண்.
துண்+ இ=  துணி.

வீடு கட்டுகையில் நெடுஞ்சுவர் எழுப்புவதுடன், இடையில் உள்ள மாடித்தரை அல்லது  உத்தரங்கள் முதலியவை விழாமல் இருக்கத் தூண் வைக்கப்படுகிறது. தூண்கள் கற்றூண், இருப்புத் தூண் என வகைபல.  இவை சுவர்போல் அடைத்த நெடியனவாய் இல்லாமல் மரங்கள் போல் மேல் கூரை அல்லது தரையினைத் தாங்கி நிற்கும்.

பண்டை மனிதன் தூண்கள் அமைக்கக் கற்றுக்கொண்டது மரங்களைப் பார்த்துத்தான்.  மரங்கள்மேல் வீடுகட்டி வாழ்ந்தவன் மனிதன்.

துண் என்ற அடியிலிருந்தே தூண் என்பதும் வந்தது.

துண் > தூண். (  முதனிலை திரிந்த பெயர்)

தூணுக்கு  ஸ்தம்பம் என்பர்.   தானே அல்லது தனியே தனியே நிற்பதுதான் தூண்.   ஆகையால்  தன்> தன்பு அம் > தம்பம் > ஸ்தம்பம் ஆனது.  பு அம் விகுதிகள்.  ஸ் என்பது தலைமெருகு.  திறம் > ஸ்திரம் என்பதுபோல.  ர- ற
மாற்றீடுகள்.

ஒ.நோ:  பின் > பின் + பு + அம் = பின்பம் > பிம்பம், ( பின் தோன்று நிழல்).

துண்டு என்ற சொல்லினடி  துண் > துணி என்றும் பின் துணித்தல் என்றும் ஆனது.  துண்டு ஆக்குதல் என்பதற்கு  துண்டு > துண்டித்தல் என்று சொல் அமைந்தது.

ஆனால் கண்டித்தல் என்பது  கடிதல் (  சினந்துகொள்ளுதல் )  என்பதன் இடைமிகை ஆகும்.   கடு>  கடி> கடிதல்.  கடுமையாக நடந்துகொள்ளுதல், 

கடி> கண்டி > கண்டித்தல்,  கண்டனை  கண்டனம்  ( அனம் அனை விகுதிகள்).
கண்டி என்ற சொல்லில் 0ணகர ஒற்றுத் தோன்றியது.

கண்டு என்பது ஒரு துண்டு என்று பொருள்படும்,  பூச்சி கடித்துக் கண்டு கண்டாகத் தடித்திருக்கிறது என்ற வழக்கை நோக்குக.  நூல்கண்டு என்ற வழக்கையும் காண்க.

எனவே கண்டு > கண்டித்தல் என்ற விளக்கம் அத்துணைப் பொருத்தமன்று,

அறிஞர் சிலரும் இதை விளக்கியதுண்டு.

தட்டச்சுத் திருத்தங்கள்  பின்.





கருத்துகள் இல்லை: