வியாழன், 18 ஏப்ரல், 2019

காத்தாலே என்னும் பேச்சுமொழிச் சொல்

"காத்தாலே பார்த்தேன் --- கடைக்குப் போய்க்கொண்டிருந்தார்;  எங்கே போனாரென்று தெரியவில்லை"

என்பதுபோலும் வாக்கியங்களைப் பேச்சில்  கேட்டிருக்கலாம்.   காத்தாலே என்பது எழுத்துமொழியில் வருவதில்லை.

காத்தாலே என்பது பெரும்பாலும் ஏழை மக்களிடையே வழங்கும் சொல் என்பதுண்டு.

இச்சொல் வந்த விதம் அறிவோம்.

காலை என்பது விடியற்பொழுதையும் அதற்கடுத்த இரண்டு மூன்று மணிக்கூறுகளையும் உள்ளடக்கிய காலப்பகுதி என்றால் அது சரியாக இருக்கும். நண்பகல் வருவதற்கு முன்னுள்ள நேரத்தை "முற்பகல்" என்பர்.

காலை என்ற சொல்லும் காலம் என்ற நீள்பொழுதைக் குறிக்கும் சொல்லும் ஓரடியினின்று வருவதாம்.

கால் > கால்+ அம் = காலம்.
கால் + ஐ =  காலை.

காலம்+ காலம் என்று சொற்புணர்ச்சி  காலாகாலம் என்றும் காலங்காலம் (காலங்காலமாய் ...)   என்று இருவகையில் வந்து பயன்பாடு காணுதலை நாமறிவோம்.

கால் என்பது நீட்சி என்று பொருள்படும் சொல்.

நடக்கும் நம் கால்கள் நீட்சியின் காரணமாகவே அப்பெயர் பெற்றன. பொழுதுநீட்சியும் கால்+அம் என்று போந்தது அது காரணமாகவேயாம்.

வந்தக்கால், செய்தக்கால் என்ற தொடர்களில் கால் என்பது  காலம் என்று பொருள்படும்.  அம் என்பது பெரும்பாலும் அமைவு குறிக்கும் ஒரு விகுதி.

அம் > அம்+ ஐ > அமை > அமைதல்.  ஐ இங்கு வினையாக்க விகுதியாகும்.

காலம் என்ற சொல்லுக்குக் காலை நேரம் என்றும்  பொருள் உள்ளபடியால் மலையாள மொழியில் "காலத்து" என்றால் காலையில் என்று அர்த்தமாகும்.

காலத்து வந்நு   (  ம  ) =   காலையில் வந்தான். (த)

காலையில் வந்தான் என்பதை காலத்தாலே வந்தான் என்பது பேச்சு மொழி.

காலத்தாலே என்பது இடைக்குறைந்து காத்தாலே என்று வந்தது.

காலத்தாலே  >  காத்தாலே.

ஒரு லகரம் வீழ்ந்தது அல்லது கெட்டது.


இதற்கும் காத்தல் என்ற வினைப்பெயருக்கும் தொடர்பொன்றும் இல்லை.

கருத்துகள் இல்லை: