திங்கள், 13 மே, 2019

நட்டமும் குந்தகமும்



குந்தகமும் நட்டுநிற்றலும்


சொற்களிலிருந்து அவற்றின் கருத்துக்களை ஆய்ந்து அவற்றின் இயைபு காண்போமாக.

ஏதேனும் ஒன்றைத் தொடக்கி நடைபெறுவித்துக்கொண்டிருந்தால் அது நன்றாக : “ ஓடிக்கொண்டிருக்கின்றது " என்று சொல்வது வழக்கம். இந்தக் கருத்தைத் தழுவி " வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது" என்ற கருத்துவழக்கும் எழுந்தது.


நீங்கள் தொடங்கிய கடை எப்படி என்றால் " ஓடிக்கொண்டிருக்கிறது, அந்தப் பையன`கள் ஒரு மாதிரி பார்த்துகொள்கிறார்கள் " என்ற பதில் வருகிறது.

குந்துவது என்பது உட்காருவது ஆகும். முதலில் குந்துவது என்ற சொல்லைப் பார்ப்போம்.

அடிச்சொல்: குல் > …

குல் > குன் : ஓர் அடியினின்று இன்னோர் அடி தோன்றியது.

இப்படித் திரிந்தவை ஆயிரக் கணக்கில் இருந்தாலும், இன்னோர் எடுத்துக்காட்டு வேண்டின் தருதும்:

திறல் > திறன்.


குன் து > குன்று. ( சிறிய மலை). இது அம் விகுதி பெற்று நீண்டு, குன்றம் என்றாகும். குன்றமென்பது குன்று என்பதனுடன் சொற்போலி. அம் விகுதி வெறும் அழகுபடுத்தவே அமைந்தது. குன்றம்: வழக்குகள்: திருப்பரங்குன்றம், குன்றத்திலே குமரன். குன்றத்தின் உச்சி: கோடு. -டு: திருச்செங்கோடு; கசரக்கோடு.

குன் து > குந்து. ( உட்காருதல் ).


மனிதன் குந்தும்போதும் ஒரு விலங்கு குந்தும்போதும் ஒரு பறவை குந்தும்போதும் உடலின் விரிவு அகலமெல்லாம் குன்றிவிடுகிறது. கால் கைகளைக் குறுக்கிக்கொண்டுதான் அமைதல் காணலாம். இதனால்தான் குந்துதல் என்ற சொல் குறுக்கிக்கொள்ளுதல் என்னும் பொருளில் உட்காருதலைக் குறித்தது. ஆனால் ஆய்வாலன்றி இப்பொருளை அறியமுடியாமைக்குக் காரணம் சொல்தோற்றக் காலத்தின் பொருளமைதி இன்று இழக்கப்பட்டமையே ஆகும். இவ்வாறு அமைப்புப் பொருளும் வழக்குப் பொருளும் வேறுபடுதல் மொழியியல்பு; மாறாமையே வியத்தகுவது ஆகும்.


இனிக் குந்தகத்துக்கு வருவோம். நல்லபடி ஓடிக்கொண்டிருந்தது குந்திப்போனால் அதுவே குந்தகம் ஆய்விடும்.


ஓடிக்கொண்டிருப்பது நட்டு நிற்றலே நட்டம்; நடு + அம் = நட்டம். டகரம் இரட்டித்தது. இதுவும் கருத்தில் குந்தகத்துக்கு ஒப்புமையான கருத்தே ஆகும். குந்திவிடுவது என்ன? அப்புறம் ஓரிடத்து நட்டு நின்றுவிடுதல் என்ன?


https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_23.html

தொடர்ந்து வாசியுங்கள்.




கருத்துகள் இல்லை: