சனி, 9 பிப்ரவரி, 2019

Sivamala's comment in Times of India

MoD's Rafale note: Top developments and reactions

Sivamala wrote:

What this Pappu has brought up is an internal procedure between the various ministries that when one is negotiating the other should stay away. Such procedures are for good management and they are not laws. If a superior non-negotiator interfered, it does not become a criminal offence. Neither does it point to something mala fide. But a higher authority in the know would and should interfere where there is a necessity to lead any talk to a successful conclusion. That in any situation is common sense. Furthermore if the procedures were put in place by a subordinate command it would not bind a superior authority in any case, unless Pappu will in his office allow his clerk to overrule him. A High Court cannot make a rule for the Supreme Court. Neither can a grandson give orders to his grandpa..Even when a subordinate has violated the management procedure as the one referred it is just a procedural error and not a violation of law.Assuming Modiji had interfered in consequence of which Ambani got something out of it, it is good: otherwise it would have gone to a foreign company. Ambani is a local employer and he can employ more Indians in his homeland. The local HAL would take a century to complete the given work and by then India would have lost out in defence to its neighbours. Warning: HAL should cease sleeping on projects.Pappu is just wasting everyone''s time by dwelling on peripheral matters, which are non-issues. Modi is a prime minister and not a clerk in the Defence Ministry. Pappu is making noise as through an absolute offence has been committed. So stupid. No case.Pappu has previously said that the current government is completing the various projects left unstarted or unfinished by the congies and he was displeased with that. His displeasure has become a phobia now. Pappu was waiting to crop the benefits when he can lay his hands on it in future. Now sensing the day might never come, he is badly agitated.

 

comments:   read in Times of India

வியாழன், 7 பிப்ரவரி, 2019

விசாரணை சொல்

விசாரணை என்ற சொல்லை இன்று சிந்திப்போம்.

ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு  விசாரணை செய்தலை "கைந்நாற்காலி விசாரணை"  ( armchair investigation  )   என்று சொல்வதுண்டு.  விசாரணை என்றால் விசாரிப்போன் அல்லது விசாரிப்போர் விரிந்து சொல்லுதல் வேண்டும். பரவலாகச் சென்று பல இடங்களிலும் கேட்டறியவேண்டும்.  இது விசாரணை என்ற சொல்லின்  மூலமாக நாமறிவதாகும்.  இன்று அலுவலகங்கள் கொள்ளும் பொருள்:  சான்றுகளைத் தேடிப் பிடித்துப் பதிவிடுதல் என்பதாகும்.  இந்தப் பொருள் சொல்லமைப்பில் இல்லை.  வழக்கில் உணர்ந்துகொள்ளப்படுவதாம்.

விரி > விய > வியா > விசா.

விர் > விரி  ஆதலின்,  விர் > விய் என்பதுணுர்க. பண்டைக் காலத்தில் விற்பனை செய்தோர் பொருளைத் தொலைவில் கொண்டு சென்று பரவச் செய்து அதற்கு மாற்றுப் பண்டங்களைப் பெற்றதனால்  விய் என்பது பரவற் கருத்துடன் தொடர்புற்றதே.  வில் என்பது எழுத்தளவில் உள்ள அடிச்சொல் என்றாலும் விய் என்பதே இன்னும் பேச்சில் உள்ளது. " காசுக்கு விய்யி" என்று பேசுவதைக் கேட்டிருப்பீர்.   விய் என்ற அடிச்சொல்லை அகர ஆதிகள் தனியாகப் பதிந்து பாதுகாக்கவில்லை என்றாலும் அது பல சொற்களில் அடியாகவே உள்ளது.

விர்> வில்:  ரகர லகரப் போலித் திரிபு.
விர் > விய் என்பது சொல்லியலில் இயல்பான திரிபு..

எழுதி வைக்காமல் போனது பேச்சில் வாழக்கூடும்.  அதை ஒதுக்குவது மடமை.  ஒதுக்கி  வைத்தாலும் சொல்லாய்வில் அது மீட்டுருவாக்கம் பெறும்.

வியன் என்பது தமிழில் விரிவு என்று பொருள்படுவது.

விரிநீர் வியனுலகு.

கடலால் சூழப்பட்ட விரிந்த உலகம்.

வியத்தல்  :  விய.   ஒரு காணாத பொருளைக் கண்டவுடன் கண்ணிமைகள் விரிந்துவிடுகின்றன.  மனமும் விரிவு கொள்கிறது.  அதனால் வியத்தல் என்பதோர் அருமையான சொல்லாகும்.

விய(ப்பு) > வியப்பித்தல் :  அதிசயிக்கும்படி செய்தல்.

வியப்பு என்பது மனத்துள் விரிவுகாண்பதைக் குறிக்கிறது.

பி என்பது பிறவினை விகுதியாகும்.

ஒருவனை வேலை ஏவுகையில் குரல்  ஒலி விரிந்து சென்று  அவனை எட்டுகிறது.

வியம்  >  வியங்கோள்.    அழைத்தல்.

வியம் > வியமம் :  துக்கம் ( நிகழ்வு கேட்டு  அதனால் துயர் பரவுகிறது ).  பொறாமை:  பொறாமையும் இவ்வாறு பரவலாகக் கூடியது.  பாராட்டு:  ஒருவர் இன்னொருவரைப் பாராட்டுவதும் இவ்வாறு பரவத் தக்கது.

வியர்வை என்பதும் பரவலாக உடலில் வெளிப்படும் தணிப்பு நீர்.

வியல் =  அகலம்.

விரிந்து செல்வது சிலவேளைகளில் வேறுபடும். ஆகையால் :

விய > வியவு:  வேறுபாடு.

விய > விய + ஆய + அம் =  வியாயம் >வியாசம்.  விரிந்து வரையப்படும் கட்டுரை.

விய + ஆக்கிய +  ஆன + அம் =  வியாக்கியானம் :  விரித்துரை.  அதாவது விரிவாக்கி ஆனது.    இச்சொல்லில் ஆக்குதல் என்ற வினையின் எச்சம் இருமுறை வந்து சொல் நீண்டது.


இன்னும் பல.

இப்போது விசாரணைக்கு வருவோம்.

விய > விச + ஆர் + அணை =  விசாரணை.  ( விரிந்து சென்றறிதல் ).

"விரிந்தறிதல் "   அல்லது  "விரிந்தெடை " என்றொரு சொல்லைப் படைக்கலாம்.  எடு ஐ =  எடை .எது நன்று என்பது நீங்கள்  கூற வேண்டும்.

 (விர் )  > (விய்).

பிழைகள் புகின்  திருத்தம் பின்.
Reviewed : 12.2.2019

புதன், 6 பிப்ரவரி, 2019

சுவையான தகவல்கள். சிங்கப்பூரில் முதல் தமிழ்ப் பள்ளி. இன்னும் பல

சிங்கப்பூரில் முதல் தமிழ்ப் பள்ளி:

1834ம்  ஆண்டு சிங்கப்பூரில் முதன்முதலாகத் தமிழ் வகுப்பு  சிங்கப்பூர் ஃபிரீ ஸ்கூல் எனப்பட்ட  சிங்கை இலவசப் பள்ளியில் துவங்கப்பட்டதென்று கூறுவர்.  இதை ஆராய்ந்து கண்டுபிடித்த தமிழன்பர் யாரென்று தெரியாவிட்டாலும் அவர்க்கு நாம் நன்றி சொல்வோம்.


பாரதியார் பலகலைக் கழகப் பேராசிரியர் பதவி -  ரூ. 30  இலக்கம்.

இப்படிக் காசு கைமாறியதாக ஒரு புகார் உள்ளது.  ஆனால் காவல்துறை விசாரணையில்  இது தொங்கிக்கொண்டு இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராமதாசு தெரிவித்திருந்தார்.  மற்ற விவரங்கள் தெரியவில்லை.
30 இலக்கம் (  லட்சம் ) தானே!.  பேசாமல் கொடுத்துவிட்டு  அப்  பதவியில் அமர்ந்துவிடலாம் என்று மற்றவர்களிடையிலும் பேச்சு அடிபடுகிறதாம்.

உயரமான கொடிக்கம்பம்:

இந்தியாவிலே மிக்க உயரமான கொடிக்கம்பம்  தி.மு.க வுக்குத் தான் உள்ளதாம். இதன் உயரம் 144 அடியாகும்.   இது அண்ணா அறிவாலயம் என்ற தலைமை நிலையத்தில் உள்ளது.  கொடியை மேலே ஏற்றுவதற்கு ஒரு  மின்பொறி  உள்ளது.  கொடிக்கம்பம் நாட்டிய தேதி:  16.12.2018.

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

நெய்யும் நேசமும் நட்பும் நடுப்பகுதியும். பொருந்துமா?

நெய்யிலிருந்து பல பலகாரங்களைச் செய்ய அறிந்துள்ளோம்.  நெய்யிலிருந்து என்றால் அதில் தொடங்கி,  அடுத்து மாவைப் போட்டு, அடுத்து உப்பை இட்டு, அடுத்து இனிப்பினை இட்டு........ ஆகவே இருந்து என்ற சொல் தொடக்கத்தையே காட்டும்.  இருந்து என்பது அசைவற்று வைகிய நிலை; அசைவு தொடங்கியவுடன்  வரை என்பது எல்லை அல்லது முடிவு ஆகும்.

நேசம் என்றும் திரிந்துலவும் நேயம் என்பது, மிக்க அருமையாக அமைந்த சொல்.  நெய் + அம்  =  நேயம் ஆகும். இங்கு முதனிலை என்னும் முதலெழுத்து  நெடிலாகி நீண்டது  ஆதலின் முதனிலை திரிந்த பெயராகும். இப்பொழுது நெய் என்பது வினைச்சொல்லாகவும் இன்றளவும் உள்ளது.   துணி நெய்கிறார்கள் என்`கிற  வழக்கை நோக்கி இதை உணரலாம்.  நெயவில் நூல்கள்  நெருங்கிப் பிணைந்து பின்னித்தான் துணி  அமைகிறது. இதுவும் நேயம் என்ற சொல்லின் தன்மையை நன்`கு உணர்த்துவதாகும்.பிற்காலத்தில்  நேயம் என்ற சொல் நேகம் என்று திரிபுண்டு ஒரு ஸகர முன்னொட்டைப் பெற்று ஸ்னேகம் அல்லது ஸ்நேகம் என்று மாப்பூசி மயக்கிற்று.   காலத்தால் பிந்திய சொல் இதுவாகும்.  மசாலையை நல்லபடியாக நேகாக அரைக்கவேண்டும் என்று அம்மா பணிப்பெண்ணிடம் சொல்வார்.   நேகாக அரைத்தால் பிணைப்பு அதில் கூடுதல் ஆகிறது. நக்கரை புக்கரையாக அரைத்தால் துகள்கள் பெரியனவாய்ப் பிணைப்புக் குறைந்து காணப்படுமென்பர்.  நேகு > நேகம் >ஸ்நேகம் எனினும் அதுவாம்.

நீரும் மண்ணும் நெருங்கிய நிலப்பகுதியே நெய்தல்.  வெம்மையும் குளிரும் ஒன்றை ஒன்று தொட்டு நிற்கும் நிலப்பகுதியே நெய்தல். மக்களும் நெருக்கமாக வாழுமிடம் நெய்தல். கடல் பல செல்வங்களும் தருவது:  அவை கடல் பஃறாரம்  என்ப.   கடல் பலவும் தருவது என்று பொருள்தரும்.

நெய்தல் என்பதில் தல் ஒரு விகுதி;  அது பெரிதும் தொழிற்பெயர் விகுதியாய் வரக் காணலாம்.

பஃது என்பது  பத்து  ஆகும்.   பல்+ து =  பத்து அல்லது பஃது.  அகர முதலாய் 0னகர இறுவாய் முப்பஃது என்ப என்ற தொல்காப்பியத் தொடரை உன்னுக.

இரண்டு மாடுகளை ஒரு கயிற்றினால் கட்டி  இரண்டும் இருபக்கமாக இழுத்துக்கொண்டு போனால்  அவை பிரிந்து நிற்பவை என்பது சொல்ல வேண்டியதில்லை.  இரண்டும் நடுப்பகுதிக்கு வந்து ஒன்றாக நின்றால் நட்பு டையவை ஆகின்றன.

நள் >  நடு.

நள்ளிரவு;  நடு இரவு,   நள்ளாறு -  நடு ஆறு -  நட்டாறு.

இதுபோலும் அமைப்பு:   கள் -  கடு;  பள் - படு;  சுள் - சுடு என்று மொழியெங்கணும் பரந்துபட்டுள்ளன.

நடு >  நட்டல்  இது நடு+  அல்.   நாடாது நட்டலிற் கேடில்லை. நட்டபின் வீடில்லை.  ( வீட்டுக்கு வராமல் சுற்றித் திரிவான் என்பதன்று;  விட்டு விலகலாகது என்பது.)

நள் + பு  =  நட்பு.

நள் என்பதும் நெருக்கமுணர்த்து பதமே.  பொருள் பதிவு பெற்றதே  பதி + அம் = பதம்.  நன் கு வார்க்கப்பட்டதே வார்த்தை.    இனி வாய்த்தை > வார்த்தை.  எனினும் அதுவே.  இரு உதடுகள் நெருக்கமுற்றதே  வாய்.  பொருள் வருவிக்கப் படுவதே வார்த்தை.  வரு > வார்.  வருவான் -  வாரான்  என்பவற்றில் வரு என்பது வார் எனத் திரிதலுணர்க.  சொல்லின் ஒலி மட்டுமே உண்டு;  பொருளானது ஊட்டப்படுகிறது.  பொருள் அருத்தப்படுகிறது:  அருந்து > அருத்து என்பது பிறவினை.   அர் என்பது அரவம் என்று ஒலியுமாம்.
 இப் பிரிசெலவு நிற்க.

சந்திப்போம்.

நிலைப்பிசகுகளும் வருபிழைகளும் திருத்தம் பின்

ஒவ்வொரு முறையும் மீளேற்றுகையில் செலவு கூடும்.


 



CHANGES TO BLOGS AND AFFECTED SIVAMALA BLOG.

Some changes are being made to the blogs at large by Google and Google plus and some other features may not be available soon.
If you are follower on Google then re register as a follower on the blog itself.

Your comments on Google + ,may have been seldom read by the Author.  Please make your comments on the post itself.  If not e mail them to bisivamala@gmail.com. Worthy comments stand abundant chance to be noticed and replied.

We hope it continues to be easy to reach this blog though we do not know how things will work out.

பன்றி வருடமே வருக!

சந்தங்கள் மாறி மாறி வரும் தனிச்சொல் பெறாத சிந்து .


சீனப் புத்தாண்டு தினம்
சீருடன் வாழ்கபல் லினம்
வானை முத்தமே இடும்
வரையாய் வளர்அரத் தினம்.

செல்வம் தருவது பன்றி
சேர்ந்தே வந்திடும் வென்றி
வெல்வ தெலாமுடன் ஒன்றி
பன்றி தருவதும் நன்றி.

பன்றி  வருடமே வருக!
பல்கலை நற்புகழ் தருக.
தொன்று தொட்டவை தொடர்க
தொல்லை இலாப்பொருள் பெருக.

பன்னிரு விலங்குகள் தம்மில்
பின்னிலை எய்திய பன்றி
பின்நிறை உழைப்பதில் விம்மி
பெற்றவை  இல்லையே கம்மி .

போற்றியே ஏற் றிடும்  குணம்
போதும் எனும் நல்  மனம்
ஆற்றலில் தானடங் கெனும்
ஆவன தாம்பூ வனம்

புத்தாண்டில் மனம் மகிழ்
புன்மை அனைத்தையும்  இகழ்
எத்திசையும் மேல் திகழ்
இப்பெரு  நாள் தனைப் புகழ் .


 வரையாய் -  மலையாய்
வென்றி-   வெற்றி
நன்றி  -  நன்மை
தொன்று தொட்டவை = பாரம்பரியம்

பின் நிறை -  பின்பு முழுமை  பெற்ற
விம்மி  - கூடுதல் ஆகி
கம்மி  -  குறைவு
புன்மை -  தாழ்வானவை
எத்திசையும் -  எங்கிருந்தாலும்
மேல் திகழ்  -  உயர்வாய் இரு


ஆவன -  ஆகியவை
பூவனம் -  மலர்த் தோட்டம் போல் ஏற்புடையவை








ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

டகர ரகரத் திரிபுகள்

பல இடுகைகளில் டகரம் ரகரமாகவும் இம்முறை மறுதலையாகவும் வருமென்பதைக்  கண்டு உணர்ந்திருக்கலாம்.

எடுத்துக்காட்டுகள்:

மடி > மரி.

இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான்.

அவன்  மடிந்தான்.
 அவன்  மரித்தான்.

மரித்தவர் உயிர்த்தெழுந்தார்.

இறந்தாருடன் பற்றுதல் ஏதுமில்லாத போது மடிந்தார் எனல் ஏற்புடையது.

அவர்பால் பற்றுதல்  இருந்தால்  மரித்தார் என்பதே நன்று.  மற்றும் நடுநிலையான சூழ்நிலைகளில் மரித்தார் என்பதே நன்று.


மேலும் டகர ரகரத் திரிபு:

குடம்பை -   குரம்பை.

" குடம்பை தனித்தொழிய ........"

"மாயக் குரம்பை "  என்பன காண்க.

குடம்பையாவது உள்ளீடுகளை மேற்போர்த்தியிருப்பது. :  அங்கம்.

பலலுறுப்புகள் அடங்கியது அங்கம்.    அடங்கு >  அ(ட)ங்கம் >  அங்கம் . இடைக்குறை.

குடம்பையும் ஏறத்தாழ அப்பொருளினதே.

உட்டுளை (   உள் துளை)  -   உள்வளைவு , உள்வழியுடைமை )

குடு > குடை
குடு>  குடைவு
குடவு என்றும் சொல்வர்.

குடு > குடம்.  குடம்> கடம்


குடு -   குடல்.  ( உணவை உள்வைத்து சத்துகளை உறிஞ்சும் உறுப்பு)
குடல் >  குடர்    ல -  ர  போலி.
குடு -   குடலை.  ( கடலை போலும் பொருளை உள்வைக்க உதவும்  கூடு)
குடு -   குடம்பை. ( உறுப்புகளை உள் வைத்திருப்பது).
குடு -   குடும்பம். (  ஆடவர் பெண்டிர் பிள்ளைகளை உள்வைத்திருப்பதாகிய சேர்க்கை )

இவை இத்தகு திரிபுகளில் சில.

ஏனை மொழிகளில்:

சோப்டா > சோப்ரா.
ஒடிசா > ஒரிஸா.

பிழைகள் காணின் அல்லது புகின் பின் திருத்தம் பெறும்.

சனி, 2 பிப்ரவரி, 2019

சங்கட ஹற சதுர்த்தியும் தமிழ்த் தொடரும்.

எல்லோருடைய வாழ்க்கையிலும்  செயல் தடைகள் தாமதங்கள் ஏற்படுகின்றன.  தடை என்பது  நாம் முன்செல்வதைத் தடுப்பது போன்ற நிகழ்வுத் தடைகள்.  தாமதமென்பது:

தாழ்  + மதி +  அம் =  தாழ்மதம் >  தாமதம்.

பத்து நாட்களில் முற்றுப் பெற்றுவிடும் ஒரு செயல் திட்டத்தை ஐந்து நாட்களில் முடிப்பதாக நீங்கள் வாக்குறுதி கொடுத்தீர்கள்.   ஆனால் ஐந்து நாளில் முடியவில்லை.  ஆறு ஏழு என்று நீண்டு செல்கிறது.  இது நீள்வதற்குக் காரணம் குறைத்து மதிப்பட்டதுதான் என்று நமது முன்னோர் கண்டுபிடித்தனர்.  அது உங்களுக்குக் கால நீட்டிப்பு என்றாலும் அடுத்த குழுவினர்க்குத் தாமதம் தான்.  இந்தத் திட்டத்தில் ஐந்து நாட்களில் பயனை எதிர்பார்த்து  அது முடியாமல் பத்து நாள்வரைகூடக் காத்திருக்கவேண்டியுள்ளதே.   அது தாழ்மதிப்பீட்டினால் வந்த தாழ்மதம் > தாமதம்.

இங்கு மதம் என்பது மதி + அம் = மதம்.. இதேபோல் அமைந்த இன்னொரு சொல்: பதி + அம் =  பதம்.  அம் என்பதுபோலும் விகுதி வர,  சொல்லிறுதியில் நின்ற உயிர்கள் கெடும்.   எ-டு:  அறு + அம் =  அறம் (  அறம் பொருள் இன்பம் ).
இகரம் இறுதி கெடும்; உகரம் இறுதியும் கெடும்  -  அம் அல்லது உயிர்முதலாகிய எந்த விகுதி வரினும்.

தடை தாமதம் முதலியவை கடந்து செல்லற்குரியவை; கடினமானவை.  ஆகவே  இவை கடங்கள்.  வெம்மை மிக்கக் கடின வழிகளையுடைய மலை வேங்கட மலை.   வேகும் > வேம்;    கடு + அம் =  கடம்.   கடமாவது கடினமானது;  கடத்தற்குரியது.   கட + அம் =  கடம்  எனவும் ஆகும்.  முதனிலைச் சொல்லீற்று உகர அகரங்கள் கெடும்,  உயிர் வரின்.

தனக்கு வந்த கடின நிலையே கடம்;  மற்றவனுக்கு வருவது அவனுக்குக் கடம்.  ஆகவே ஒவ்வொருவரும்  தம் கடத்தை நினைந்தே துயர் கொள்வர் அல்லது  தாண்டிச் செல்ல முயல்வர்.

தம் கடம் > சம் கடம் >  சங்கடம்.   ( தகரம்   சகரமாகும் ).




இதுபோலும் த > ச திரிபுகள் முன்னர் விளக்கப்பட்டன:

தனி >  சனி.  ( சனிக் கோள் )
தங்கு > சங்கு   ( ஓட்டினுள் வாழும் உயிரி )
தங்கு >  சங்கு > சங்கம்.

த + தி >  தத்தி > சத்தி >   சக்தி.    தன் > த:  கடைக்குறை.  தி: விகுதி.

இனிச் சங்கட ஹர சதுர்த்தி என்பதில்  ஹர என்பது:

அற > ஹர.

தங்கடம் அறுபடச் செய்யும் பூசை அதாவது சங்கடம் அறச் செய்யும் பூசை.  


கடு + அம் =  கட்டம்  ( கடின நிலை).
கட்டு + அம் = கட்டம்.  குறுக்கு நெடுக்காக கோடுகளால் அமைந்த வரைவு.
நிலை.  டகரம் இரட்டித்தது.

கட + அம் =  கடம் (  கடத்தற்குரிய இடம் அல்லது நிலை ).

கடம்  > கஷ்டம் ( மெருகூட்டல்)
கட்டம் > கஷ்டம் ( மெருகூட்டல் ).

கஷ்டம் என்பதில்  ஷ் என்பது அயல் ஒலி. அதை விலக்க:

கஷ்டம் >  க(ஷ்)டம் > கடம்.  ( சொல் பழைய நிலைக்கு வந்துவிட்டது).

தமிழிலிருந்து அமைந்த வடசொற்கிளவி  கஷ்டம்.
வடவெழுத்து ஒரீஇ  :  ஒருவி;  அதாவது விலக்கி:
பழைய கடம்  என வந்துவிட்டது.

கடு  கட என்ற அடிச்சொற்கள் இந்தோ ஐரோப்பியச் சொற்கள் அல்ல.

பின் தோற்றப் பிழைகள் திருத்தம் பெறும்.



பிரித்தியங்கரா தேவி

பிரித்தியங்கரா தேவி

பிரித்தியங்கரா தேவி என்ற  பெயர் எவ்வாறு அமைந்தது? இதனை  நாடுவோம்!

 பிரித்தியங்கரா தேவி என்பதை பிரித்து+ இயங்க + அறா+ தேவி என்று பிரிக்கவும்.

இத் தொடர்மொழிப் பெயரில், பிரித்து என்பது உண்மையில் பிரிந்து என்பதன் வலித்தல் ஆகும்.  வலித்தல் எனின் "ந்து" என்பது "த்து"  என்று வல்லெழுத்துப் பெற்றது என்பதாகும். இது புதியதன்று. விகுதி சேரும்போது வலித்தல் போன்றதே இது. வருந்து > வருத்தம், பொருந்து> பொருத்தம் முதலியன உங்களுக்குத் தெரிந்த எடுத்துக்காட்டுக்கள்.

பெருமானிடமிருந்து பிரிந்து என்று பொருள்கூறாமல், பெருமானிடமிருந்து தன்னைப் பிரித்து, அல்லது பிரித்துக்கொண்டு என்னின், இதன்பொருள் இன்னும் எளிதாகிவிடும்.

பிரிந்த பின், அல்லது பிரித்துக்கொண்ட பின், இயங்க = தனித்து அமர்ந்து அருள்பாலிக்க, அறா = அறாத, தேவி = தெய்வம் என்பது பொருள்.

தனித்து அவள் நிற்க, பற்றாளன் அவளைத் தாழ்ந்து பணிந்தாலும், அவனுக்குப்  பெருமானின் அருளும் தானே வந்துறும் என்பது தெளிவாகும்படி "அறா" என்ற பதம் உள்பதியப் பட்டுள்ளது கண்டு இன்புறலாம்.  இது பின் பெயரில் "அரா" என்று மாறியுள்ளது.

இயங்க அறா > இயங்கறா:  இங்கு ஓர் அகரம் கெட்டது.

வீறு என்பது அம் விகுதி பெற்று வீரம் என்று திரிந்துள்ளது நோக்குக.
விறுவிறு என்று போனான். விர்ரென்று போனான் என்ற வழக்குகளை நோக்குக. ரகர றகர எழுத்துமாற்றங்கள் தமிழுக்குப் புதியவை அல்ல.



பைத்தியம் சொல்.

பைத்தியம் என்ற சொல்லை முன்பு விளக்கியதுண்டு.  அதற்கான பழைய இடுகை இங்கில்லை  யாதலின் அதிலடங்கியிருந்த கருத்துகளை நோக்கி இப்போது  மறுசெலவு மேற்கொள்வோம்.

பைந்தமிழ் என்பது  இளமை வாய்ந்த தமிழ் என்று பொருள்படும்.  தமிழ் என்ற சொல்லை எடுத்துவிட்டால் இதில் மீதமிருப்பது பை என்பதே.  பசுமையே பைம்மை.

பசுந்தமிழ் என்பதே பைந்தமிழ்.

பைந்தமிழ் போற்றும் பாகேசுவரி பாலன்  என்ற சொற்றொடரில் இச்சொல் பதிவாகி இருப்பதனைக் காண்க.

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெளிந்து ஆய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்

என்ற திருவிளையாடற் புராணப் பாடலிலும் பசுந்தமிழ் என்பதைக் காண்க.  பைந்தமிழ்  பசுந்தமிழ் எல்லாம் ஒன்றுதான்.  முதிராமை என்பதே பசுமை.

முதிர்தல் என்பது பல்வகைப்படும்.  அறிவு முதிர்ச்சி,  உடல்முதிர்ச்சி,  என இரண்டைக் குறிப்பிடலாம்.  இவை மனித வளர்ச்சியின்பாற் பட்டவை,

பைத்தியக் காரன் என்பவன் அறிவு வளர்ச்சி பெறாதவன் என்பதே இச்சொல்லமைப்பிலிருந்து நாம் தெரிந்துகொள்வது  ஆகும். பைத்தியம் என்றால் என்ன என்பதற்கு மருத்துவ நூல் ஒரு விளக்கம் தரலாம்;  சட்டம் ஒரு விளக்கம் தரலாம்; இன்னுமுள்ள அறிவியல் மற்றும் ஆய்வுகள் இன்னொரு விளக்கம் தரலாம்.   அவை தம்முள் வேறுவேறு கோணங்களில் அதனை அலசலாம்.  அவைகளில் எதுவுமன்று நாம் சொல்வது.  சொல்லில் பெறப்படும் பொருளே நாம் கருதற்குரித்து ஆகும்,

பை  =  பசுமை,  பொருள்:  முதிராமை.
து  =  உரியது, உடையது என்ற பொருள் தரும் இடைச்சொல்.
இயம் என்பது ஒரு விகுதி.  இது இ,  அம் என்ற  இருவிகுதிகள் இணைந்த கூட்டு விகுதி ஆகும்,  இந்த விகுதி இ மற்றும் அ என்ற சுட்டுச்சொற்களின் வளர்ச்சியிலிருந்து போதருவது ஆகும்.

பை + து + இயம் =  பைத்தியம்,   முதிராமை காரணமான ஒரு மனநோய்.

பைத்தியம் என்ற சொல்லின் உள்ளுறைவை அறிவாளிகளும் மக்களும் மறந்துபோய்ப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே இன்று நோக்குவார்க்கு அது ஒன்றும் தெற்றெனப் புலப்படப் போவதில்லை.  ஆய்வு செய்தாலே அது புலப்படும்.  முன்னரே முடிவுசெய்துவிட்ட கருத்தினடிப் படையில் அதை அணுகுவோன் அதன் பொருளை அறியப்போவதில்லை.  அது அவனை ஏமாற்றிவிடும். அவன் தொடங்கிய இடத்திற்கே வந்து  கருத்துக் காணாமையில் உழல்பவன்.

நாம் இன்று இச்சொல்லை அமைப்புப் பொருளில் பயன்படுத்தவேண்டியதில்லை.  அதன் வழக்குப் பொருளிலே அதனைப் பயன்படுத்தலாம்.  அமைப்புப் பொருள் அது தமிழ் என்பதை உணர்த்துவதற்காகச் சொல்லப்பட்டது,  அறிந்தபின் வழக்கில் என்ன பொருளோ  அதற்கே திரும்பிவிடுக.

பிழைகள் பின் தோன்றக்கூடும். அவை உரியவாறு
திருத்தமுறும். கள்ளப்புகவர்கள் நடமாடுவதால்.


வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

திரிபும் கால ஓட்டமும்

இன்று திரிபு அடைவதற்கு ஒவ்வொரு சொல்லுக்கும் எத்துணை ஆண்டுகள் கழிந்திருக்கும் என்று பார்ப்போம்.

கா என்பது காத்தல் என்று பொருள்படும் ஒரு மிக்கப் பழைய தமிழ்ச்சொல். ஒரு பழம் அழுகிவிடாமல் காக்கவேண்டும்.  அதற்கு என்ன செய்யவேண்டுமென்றால் அதை உரிய முறையில் பத்திரப் படுத்தவேண்டும் . பத்திரப் படுத்துவது என்பது ஒரு பேச்சுமொழிச் சொல்.   எழுதும்போது பலரும் பழம் கெட்டுவிடாமல் காக்க வேண்டும் என்று எழுதுவர்.

காத்துச் சூட்சிக்கணம், கஸ்தூரி மாம்பழம்

என்று ஒரு மலையாளப் பாட்டு இருக்கிறது.   பழம் கெட்டுவிடாமல் காக்க வேண்டும் என்பதே அங்கும் வழக்கு ஆகும்.

கா அல்லது காத்தல் என்பதிலிருந்து  காதல் என்ற சொல் அமைந்தது.  இந்தச் சொல்லின் பிறவினை வடிவமே காத்தல் என்பது.  ஆனால் இப்படி எந்த வாத்தியாரும் சொல்லிக்கொடுப்பதில்லை.  இதற்குக் காரணம் காதல் என்பதற்கும் காத்தல் என்பதற்கு மிடையில் உண்டான பொருள் வேறுபாடுதான்.

ஓர்  இளைஞன் ஒரு பெண்ணை விரும்புகிறான்.  தான் விரும்பிய அந்தப் பெண்ணைப் பிறர் அணுகிவிடாத படி  அவன் பாதுகாப்பான். அப்படி அவன் பாதுகாப்பதே காதல் ஆகிறது. அப்பெண்ணுடன் தான் தொடர்பு வைத்துக்கொள்வதையும் பிறர் காணாமலும் பிறரும் செய்யாமலும் காப்பான்.  அதுவே காம்  ஆகிறது.

கா என்பது காம் என்று திரிவதற்கு அல்லது நீள்வதற்கு எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும்?  இது உடனே நிகழும் திரிபு அன்று.  காலம் செல்லவேண்டும்.

கா  >  காம் :  காம் என்பது கா என்பதை நோக்க ஒரு புதிய அமைப்பு ஆகும்.

காம் என்பதே போதுமானது.  உடல்வேட்கையைக் குறித்தது.  பின் அது காமம் என்று திரிய ஒரு தலைமுறையாவது சென்றிருக்கவேண்டும்.  அம் சேர்த்தபடியால் சொல்லில் என்ன புதுமை விளைந்தது.  என் கருத்து ஒன்றுமில்லை என்பதுதான்.  காம் என்று மட்டும் குறிப்பிடுவது நிறைவு அளிப்பதாய் இருக்கவில்லை போலும்.  ஓர் அம் சேர்த்து காமம் என்ற சொல் அமைந்தது.

காம் என்ற அடிச்சொல்லும் இருந்தது.  அது நிறைவு அளிக்காமையினால் காமம் என்று சொல் அமைத்

தவர்கள்  பின்னர் காமம் என்ற அந்த உணர்வுக்குரிய பெண்ணைக் காமி  என்றனர்.  அதாவது காம் அல்லது காமம் உடையவள் காமி.

காமி சத்தியபாமா கதவைத் திற வா

என்பது ஒரு பழம்பாடல்.  நாடகப் பாட்டு.

பின் காமத்தை ஆட்சி செய்வதாகக் கருதப்பட்ட கண்ணறியாத ஒருவன்  காமன் எனப்பட்டான்.  இதிலும் காம் என்ற அடிச்சொல் பயன்பட்டது.

காமத்துக்கு எல்லோரும் உரிமை உடையவர்கள் ஆகமாட்டார்கள் ஒரு குறிப்பிட்ட பெண்ணுக்கு!  உரிமை உடையவளைக் குறிக்க  ,   காமினி என்ற சொல் உண்டானது.  இதில் இன் என்னும் உரிமை குறிக்கும் உருபு இடைநிலையாகி உள்ளது.  காம் + இன் + இ =  காமினி.

கந்தனின் கருணை  என்ற தொடரில் கந்தனினின்றும் வெளிப்படும் கருணை என்ற பொருள் கிட்டுகிறதன்றோ.  இதில் இன் என்ற உருபு செய்யும் தொழிலைக் கண்டு பொருளைப் புரிந்துகொள்ளலாம்.

காமத்தை ஆட்சி செய்யும் தேவதை காமாட்சி எனப்பட்டாள். அப்படி ஒரு தேவதை இருப்பதாக மக்கள் எண்ணி இச்சொல்லைப் படைத்தனர்.  கா என்பதிலிருந்து காமாட்சி என்ற சொல்லை உண்டாக்க எத்தனை நூற்றாண்டுகளும் கருத்துவளர்ச்சிகளும் தோன்றியிருக்கவேண்டும்?

காம் தன் அடிப்படைப் பொருளை இழக்கவில்லை என்றாலும் பேச்சில் தனிச்சொல்லாய்ப் பயன்படவில்லை என்றாலும் அதற்குப் பதிலாகக் காமம் என்ற சொல் அமைந்துவிட்ட போதிலும்  அது அடிச்சொல்லாக நின்று மொழியை வளப்படுத்தியது.   அது தாய்ச்சொல் ஆகிவிட்டது.  இந்த மாற்றத்தை அடைய ஒரு தலைமுறையிலிருந்து பல தலைமுறைகள் சென்றிருக்கலாம்.

சொல் திரிபில் அடங்கியிருப்பது கால ஓட்டமாகும்.

அடிக்குறிப்புகள்.

பிழைகள் காணின் திருத்தம் பின்.  `1.2.19

Errors not found in our original:
சில பிழைகள் காணப்பட்டுத் திருத்தம் பெற்றன.  கள்ளப்  புகவர்களால்   இவை புகுத்தப்  பட்டவை. மேலும் வரக்கூடும். எமக்குத் தெரிவிக்கலாம்  அல்லது திருத்தம் செய்யப்படும் வரை பொறுமை காக்கவும்.     2.2.19

சாமி என்பது எப்படி அமைந்த சொல்.

சாய்தல் என்பது பலவகைகளில் செயலாக்கம் படத்தக்கது  என்பதைச் சிந்தித்து உணரலாம்.  இவ் வகைகளையெல்லாம் தொகுத்து நால்வகையில் சாய்தல் கூடுமென்று கூறின் அது  சரியாகும். முன்னாகச் சாய்தல், பின்பக்கம் சாய்தல், பக்கவாட்டில் வலமாகச் சாய்தல்;  அவ்வாறே இடமாகச் சாய்தல் என்று நான்`கு அவையாம்.

சாம் என்றொரு சொல் முற்காலத்தில் வழங்கியது என்று அறிஞர் கூறியுள்ளனர். இச்சொல் பின்னர் இகர விகுதிபெற்று சாமி என்று நீண்டது.
விகுதி என்பதே  சொல்லின் மிகுதிதான்.   விஞ்சுதல் - மிஞ்சுதல் என்ற சொல் போலவே மிகுதி > விகுதி என்பதும் ஆம்.

சாமியைப் பண்டையர் முன்பக்கமாகச் சாய்ந்து தரையில் படிந்தவாறு கும்பிட்டனர்.  கும்பு இடுதல் என்பது கைகள் குவித்தலைக் குறிப்பது.  இச்சொல் கூம்பு என்பதனோடு தொடர்புடைய சொல்.   கும்பு > கூம்பு.  கூம்பு என்பது வல்லெழுத்துப் பெற்றுக் கூப்பு என்றாகும்.  கூப்பு > கூப்புதல்.

சாய்ந்து கும்பிடப் படுவது  சாய் > சாய்ம்  > சாம்  ஆனது.   சாம் என்ற சொல் பின் இகர விகுதி பெற்று சாமி ஆனது.   சாய் > சாய்ங்காலம் என்பது போன்றதே.  உகரத்தை உள்ளிடும்போது  சாயுங்காலம் என விரியும்.  சாயும் என்பது எச்சவினையின்பாற் படும்.  சாமி என்பதில் வரும் ஈற்று இகரத்தை வெறும் விகுதியாக விட்டுவிடாமல் இங்கு என்று சுட்டுப்பொருள் காண்போமாயின் சாயும் இங்கே என்று அது விரிதல் காணலாம்.   சாமி இருக்குமிடத்தில் சாய்வது பண்டை நாட்களிலிருந்தே வணங்குவதன் குறிப்பானது.

சாய்தல்  வினைச்சொல்.
சாயும் என்பது இடைக்குறைந்து  சாம்  ஆனது  எனினுமாம்.

சாய் > சாய்ம் > சாம்  எனினும்  அதுவேதான்.

சாயும் இ  >  சாம்  இ  >  சாமி என்பதும்  அமைப்பை விளக்கப் போதுமானது.

இன்னொரு சொல்லை ஒப்பிடுவோம்.

காண் > காண்பி என்பது பிறவினை வடிவம்.

இது பேச்சில் இப்படி வருவதில்லை.  காண் > காண்மி > காமி என்று ஒலிக்கப்படுவது கேட்டிருப்பீர்.

பாம்பு என்ற சொல்லிலும் பாய் > பாய்ம்பு > பாம்பு என்றாவதைக் காண்க.
வேகமாக முன்  வந்து  தீண்டுதல் அல்லது  விரைந்து நகர்தல் குறிக்கவே பாய்தல் என்ற சொல் இங்கு வருகிறது.

செத்துப்போனவன் சாய்ந்துவிடுகிறான்.  சாய் என்பதும் சா என்பதும் தொடர்புடைய சொற்கள்.

சா >  சாய் > சாய்தல்.
அல்லது   சாய் > சா > சாதல்.  இவற்றில் எப்படிப் பார்த்தாலும் தொடர்பு தெரிகிறது.

இதிலிருந்து  சா என்ற பழந்தமிழ்ச் சொல்  சாய்தலையும் சாதலையும் ஒருங்கு குறித்த பல்பொருளொரு சொல் என்பது புலப்படும்.

ஆக,   சாமி என்பதன் அடைவுப் பொருள் கும்பிடப் படுவது என்பதுதான் என்பதை உணரலாம்.  வணக்கம் என்ற சொல்  வளைவு குறித்தது முன்.
இன்று இப்பொருள் மறைவாக இருப்பதுபோலவே  சாமி என்பதும் சாய்தல் கருத்தை மறைவாகக் கொண்டுள்ளது.

 ஸ்வாமின் என்னும் சமஸ்கிருதச் சொல் வேறு.  இச்சொல் பல பொருள் உடைய சொல்.

வியாழன், 31 ஜனவரி, 2019

மாளப் பல வழிகள்.

மனிதனையும் நீபடைத்தாய் மாளப் பலவே
வழிகளையும் கூடப் படைத்தாய் ---- புனிதரா
அன்றிப்புன் மையோரா என்றிவற்றை நோக்கிப்பின்
கொன்றிடுவாய் அல்லையே  நீ,


 

புதன், 30 ஜனவரி, 2019

தமிழ் நேசன் நாளிதழ் நிறுத்தம் மலேசியாவில்

தமிழ் நேசன் என்பது மலேசியாவில் ( முன்னர் மலாயா என்று அறியப்பட்ட பகுதியில் )  வெளிவந்து கொண்டிருந்த நாளிதழ்.  பிப்ரவரி ஒன்று முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக செய்தி வந்துள்ளது.

தமிழ்த் தொண்டு புரிந்துவந்த நேசன் இதழ் நிறுத்தப்படுவது கவலைக்குரியதுதான். நேசனால் எழுத்தாளர் நிலைக்குச் சென்றவர்களும் கவிஞர் தகுதி பெற்றவர்களும் செய்திகள் அறிந்து இன்புற்றவர்களும் பலர் ஆவர். சட்டத்துறையில் பட்டம்பெற்ற நம் நண்பர் திரு. அ. மாசிலாமணி அவர்கள் கூட ஒரு கட்டுரையை அதில் வெளியிட்டிருந்தார்.  அது ஒரு குமுக அமைப்பைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை.  அதைத் தொடர்ந்து  பல ஆய்வுகள் வெளிவந்தன. தமிழ் நேசனின் இவ்வாறு நேயம் பெற்ற அறிவாளிகள் பலர் ஆவர்.

இப்போது மலேசியாவில் பல தமிழ்ப் பத்திரிகைகள் இருப்பதாகத் தெரிகிறது. இப்போது பத்திரிகைகள் நாளிதழ்கள் முதலியவை அவ்வளவு சிறப்பாக ஓடவில்லை.  எல்லாச் செய்திகளும் கணினி மூலமாகவும் கைப்பேசி மூலமாகவும் வந்துவிடுகின்றன.  உலகம் மாறிவிட்டது.

சிங்கப்பூரில் " தி இன்டிபென்டன்ட்"  முதலிய கணினி வழி இதழ்கள் இப்போது சக்கை போடு போடுகின்றன.  நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும்   இவ் விதழ்களைப் ப் படிக்கமுடியும்.  தாளிதழ்கள் இவ்வாறு பயன் காணக் கூடியவை அல்ல. விற்பனை வீழ்ச்சிக்கு இதுவும் காரணங்களில் ஒன்றாகலாம்.

கவிதை:

முப்பாட்டன் காலமுதல் முத்தமிழைச் சுமந்துகொண்டு
தப்பாமல் தவழ்ந்துவந்த  தமிழ்நேசற் கோநிறுத்தம் ?
எப்பாலா ரும்புகழ இனிக்குநகை யுடன்வருவாய்
எப்போது ம் இனிக்காணா எழிலெண்ணிக் கவல்கின்றோம்.

நாளைமுதல் கோளில்பொறி நயவாநிலை எய்திடினும்
நீளும்பல  நல்லாண்டுகள் நீஇயற்று  தமிழ்த்தொண்டை
நாளும்யாங்  களெல்லாமே  நன்னினைவில்   தாளிகைகள்
பாளையத்துள் அரசெனவே பண்புடனே புகழ்வோமே.
 

செவ்வாய், 29 ஜனவரி, 2019

தமிழ் என்ன மலையாளம் எந்து

இன்று இரண்டு சொற்களைப் பற்றிச் சிந்திப்போம்.

எவனாவது சொல்லிக்கொடுப்பான் என்று காத்திருக்கக் கூடாது.  ஒரு வாத்தியார்  அவருக்கு அவர்தம் ஆசிரியர் கற்றுக்கொடுத்ததையும் தாமே உணர்ந்த சிலவற்றையும் சொல்லிக்கொடுப்பார்.  ஆசிரியர் சிலர் அதிகமாகப் பேசாமல்  மேலீட்டு ஒளிச்செலுத்தியின் ( overhead projector) மூலமாகத் தம்  வரைவுகளைத் திரையில் காட்டி எழுதிக்கொள்ளுங்கள், இவையெல்லாம் தேர்வுக்கு வரும் என்று சொல்லிவிடுவார்.   அதுவும் கற்பிப்பதுதான்.  ஒரு பாடநூலில் உள்ளதைச் சுருக்கிவரைந்து  உதவுவதும் கற்பிப்பு என்றே சொல்வோம்.  இரண்டாயிரம் பக்கங்கள் உள்ள ஒரு பாடநூலை முமுமையாகப் படித்து முடிக்க மாணவன் கரணம் அன்றோ போடவேண்டும்?
விரிவுரையாளர் பேசுகையில் குறிப்புகள் எடுத்துக்கொள்வது நல்ல பழக்கம்.

இனிச் சொற்களைக் கவனிப்போம்.

என்ன என்பது பன்மை வடிவில் உள்ளது.  என்ன என்ற சொல்லில்  இறுதி அகரம் பன்மைப் பொருள் உடையது.  ஓடுகிறது என்னாமல் ஓடுகின்றன எனின் பலவற்றைக் குறிக்கும் காண்க.  து: ஒருமை; அ : பன்மை..

என் +  அ  =  என்ன.

இப்படிப் பார்த்தல்  இது  என்ன?  என்று கேட்பது தவறு என்பது புலப்படும்.  இது என்பது ஒருமை.  என்ன என்பது பன்மை.  ஆகவே பொருந்தவில்லை.  இதை நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?

என் என்பதே அடிச்சொல்.  என்ன என்பது அகரம் சேர்ந்த பன்மை வடிவம்.

வாழ்ந்தாலும் செத்தாலும் என்?  என்று பண்டைத் தமிழில் கேட்பதே இலக்கணப்படி சரியானது. இந்த இரண்டு செயல்களுக்கும் ஒருமை பன்மை தேவையற்றதாகும்.

ஒருமை பன்மை என்பது பெரும்பாலும் எண்ணிக்கைக்குரியவற்றுக்கே பொருந்துவது.

ஆனால் மலையாளத்தில் எந்து  என்ற சொல்லே வழங்குகிறது.  என்ன என்பது வழங்கவில்லை.  எந்து என்பது ஒருமை வடிவம்.  என் + து  = எந்து.    வாக்கியத்தில் வரும் சொற்றொடர்ப் புணரியலின்படி  என் து  என்பதை இணைக்க அது "என்று" என வந்து காலக் கேள்வியாகும்.  ஆகவே அப்படிப் புணர்த்தாமல் என் து > எந்து  என்றே முடிக்கவேண்டும்.  அந்தச் சொற்றொடர்ப் புணரியல் இலக்கணம் ( என் து > என்று  எனவாதல் ) இங்குப் பொருந்தாது.  பல சொற்கள் இப்படிப் புணர்வன. சில காண்போம்.

பின் >  பின் தி >  பிந்தி
மன் >  மன்  தி >  மந்தி.
ஆதி  + மன் + தி  =  ஆதிமந்தி  (  சோழன் கரிகாலன் மகள் )
மன் + திறம் >  மந்திரம்  (  நிலையாகும் தன்மை பெற்ற வாயொலி வெளிப்பாடு)

அன் து >  அன்று > அன்றுதல்  (முடிதல் ) 1
அன் தி  >  அந்தி  ( பகலின் ஈற்றுக்  காலம் ) 2
முதலாவது  என்று என்ற பாணியிலும்  இரண்டாவது  எந்து என்ற பாணியிலும் இற்றன காண்பீர்

இரண்டிலும் வருமீறு தகர வருக்கமே .  அடிச்சொல்  அன் . சுட்டு : அ .

இது எந்து?  இது எலி.   ( சரி.  காரணம்: ஒருமை )
இவை என்ன?  இவை எலிகள்  (  சரி.  காரணம் பன்மை)

தமிழில் ஒருமைப் பொருளை என்ன என்று பன்மையில் கேட்பது தவறானாலும் மரபில் வந்துவிட்ட படியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழுவமைதி ஆகிறது என்பதை உணரவும்.  ஒன்று தவறாக இருக்கலாம்; இலக்கணத்துக்குப் பொருந்தாததாகவும் இருக்கலாம்,  பரவலாக வழக்கில் உள்ளதாலும் எந்து என்ற வடிவம் தமிழில் வழக்கிறந்துவிட்ட படியினாலும் அதை மலையாளக் கரையிலிருந்து மீட்டுவந்துவிடலாம் என்றாலும் குழப்படி ஆகுமென்பதால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழுவமைதி ஆகிறது,

சரியில்லை என்றாலும் ஏற்றுக்கொள்வோம் என்று கூறுகிறது நம் இலக்கணம்.  ஐந்து பத்து நூற்றாண்டுகள் பின்னால் போய் இத்தகைய தவறுகளைத் திருத்திக்கொண் டிருக்க முடியாதல்லவா?

எழுத்துப் பிழைகள் திருத்தம் பின்

சிவப்பு விளக்கம்

வரலாற்றுக் காலத்துக்கு முந்தியிலிருந்து சிவப்பு என்பது ஓர் அடிப்படை நிறமாகத் திகழ்ந்துவருகிறது.  தமிழரிடை மட்டுமன்று பிற இன்ங்களிடமும் ஒரு பண்பாட்டுக் கூறாக இது நிலவுதல் காணலாம்.   திருமணம் முன்மையான சடங்காகக் கருதப்பட்டமையால்,  சீனா முதலான தேயங்களில் மணப்பெண் முழுமையாகச் சிவப்பினால் அலங்காரம் செய்யப்பட்டுக்  கூடி யிருப்போர்முன் கொண்டுவரப்படுகிறாள்.   அங்கு சிவப்பே மங்கல நிறமாகும்.  இதேபோன்று ஏனைப் பண்பாட்டு நாடுகளிலும் சிவப்பு கோலோச்சியுள்ளது.  
 நாம் சிவப்பு(குங்கும)ப்பொட்டு இடுவதன் காரணமும் மங்கலம் எனற் பொருட்டே. கும் என்பது ஒரு தமிழ் அடிக்சொல். இதற்குச் சேர்த்துவைத்தல் என்று பொருள்.  இதை அறிந்துகொள்ள குமித்தல் என்ற சொல்லைப் பாருங்கள். கும்> குமி. நெல்லைக் குமித்து வைத்தார்கள் என்பார். குமி பின் குவி என்று திரிந்தது, மகர வகரப் போலி.
 மிஞ்சு > விஞ்சு,  மகர வகரப் போலி. நாம் குங்குமம்  இடுவது இந்தக் கூட்டுறவைக் குறிப்பதே. ஆண் பெண் இணைந்த இல்லற வாழ்க்கை.  கும் என்ற அடிச்சொல் இரட்டி வந்து அம் விகுதி பெற்றது: கும்+கும்+அம் = குங்குமம். கும்முதல்:  குமுக்குதல்;  கும்> கும்மி;  கும்> கும்மாளம். இவை இணைந்து செய்தல் அடிப்படைக் கருத்து. 
நாளடைவில் சில குவிதல் = கூடுதற் கருத்தில் சற்று நீங்கி நிற்கலாம். பிற்காலத்து கும் என்பது சிவப்பு என்ற பொருள்டைவு கொண்டது. குமரி என்பதும் திரட்சிக்கருத்து ஆகும்.  இளமையில் உடல் திரட்சியே பெரும்பான்மை.
முழுமுதல் கடவுளான சிவனை,  எடுத்துரைக்கும் நிறம் சிவப்பே ஆகும்.  சொல்லமைப்பும் சிவ> சிவப்பு;   சிவ> சிவ+அம் =  சிவம் என்றிருத்தலை அறியலாம். செங்கதிரோன் என்பதே சூரியனுக்குத் தமிழில் பெயர். வெண்கதிரெனற்பாலது நிலவு குறிப்பதே.  பெண்ணுக்கும் கவிகள் சிறப்பாக ஓதுவன செவ்விதழும் புன்சிரிப்புமாகும்.   
சிவனிலிருந்து தோன்றிய முருகப் பெருமானும் செவ்வேள் என்றே தமிழ் நூல்கள் ஓதுகின்றன. தீமை ஏதுமிலாத அடிகள் செவ்வடிகள்:  இது செ+ அடி =  சே+அடி =  சேவடி ஆகிறது.  செக்கல் செக்கம் என்பனவும் செம்மை நிறமே.   செய்ய தாமரை என்பதென்ன?
நீரால் கழுவப்படும் மலர் கழுமலர்.   இது பின் தன் ழுகரத்தை இழந்து கமலம் என்று ஆனது.  இது அயற்றிரிபில் கமல என்று மாறிற்று;.  இத்தகைய சொற்றிரிபுகள் தமிழின் வளத்தைக் காட்டுகின்றன.
செந்தமிழ் என்பது பிறமொழி விரவாத நல்ல தமிழ்.  செம்மை நிறம் எதைக் குறிக்கிறது கண்டீரோ?  செந்தமிழியற்கை சிவணிய நிலம் என்கிறார் பனம்பாரனார்.  சிவணுதல் என்றால் பொருந்துதல்;  அதுவும் செம்மையாகப் பொருந்தி நிற்றல்.  சி:   செம்மை;  அண் =  அண்மி நிற்றல்.  சி+ அண் =  சிவண் >  சிவணுதல்.   சிறப்பாகப் பொருந்துதல் என்பது சொல்லமைப்புப் பொருள்.
இவற்றையும் படித்து சிவப்பைப் பற்றிய புரிதல்களை விரித்துக்கொள்ளுங்கள்:

மரங்கள் ஆடியது நாட்டியமா உடல்பயிற்சியா?

ஒளிமங்கிய மாலையிலே களிபொங்கிய ஆட்டம்
ஒவ்வொன்றாய் இலைகொம்பு கிளையெல்லாம் கூட்டும்
வளியெங்கும் புகுந்தோடி வழைச்சுறுத்தும்,   சீன
வளைநீரில் மேலெழுந்து வந்தடைந்த  வற்கே;

கலைகளிலே நாட்டியமோ கிளைகளுமே மேவிக்
காட்சியிதைப் படைத்தனவே கைகால்கள் போல
இலைகிளைகள் அசைவும்தான் மரங்களுமே செய்யும்
ஏற்றதொரு உடல்பயிற்சி எனப்புகலல் சாலும்.

அசைவில்லா மரங்களவை உடற்பயிற்சி  கொள்ளும்
அணியில்லை என்பதெலாம் அறியாரின் சொல்லோ?
இசைவெல்லும் மெல்லொலியும் எழுகின்ற தம்மா
இயற்கையழ கிதனையான் என்னென்று சொல்வேன்.


அரும்பொருள்

களி -  மகிழ்வு
வழைச்சு -  புதுமை  fresh
"வழைச்சற விளைந்த" (பெரும்பாணாற்றுப்படை 280)
வழைச்சுற  ( எதிர்ச்சொல்)  வழைச்சற.
கூட்டும் -  நடத்தும்
சீன வளைநீர் -(   தென்)   சீனக் கடல்
வற்கு -   அழகு   (வல்+கு,  வன்மையான அழகு)
ஒரு  -  கவிதையில் ஓர்  எனற்பாலது
ஒரு என்று வரும்.
புகலல் -  சொல்லுதல்.
அணி -  வகை, பிரிவு

வல் + அழகு = வல்லழகு : இதில் லழ என்பது குறைய வல்கு என்றாகும்.
வல் கு என்பவை புணர்த்த வற்கு என்பது இறுதியாம்.  இது இடைக்குறைச் சொல்  ஆகும்.

நீரைக் கழுவிய படி (  தொட்டுக்கொண்டு)  மலர்ந்து நிற்பது  " கழுமலர்",  செந்தாமரை என்பது  செங்கழுமலர் அல்லது செங்கழுநீர்மலர்.  கழுமலர் என்பதில் ழு  மற்றும் ர் என்பவை நீங்க கமல என்றாகும்.  இடைக்குறையும் கடைக்குறையுமான சொல்.  இது பின் அம் விகுதி பெற்றுக் கமலம் ஆகி  தமிழன்று என்று குறிக்கப்பட்டது,  இதன் இடைக்குறை அமைப்பை அறியாமல்தான்.  கமலம் என்பது ஒருவாறு தனிச்சொல்லாக ஏற்றமுற்றுவிட்டது.

தாமரை என்பதும்  நீருடன் தாழ்ந்து அதை மருவி நிற்கும் மலர் எனப்பொருள் தரும் சொல்.  தா :  தாழ் என்பதன் கடைக்குறை.  மருவு என்பதில்  மரு + ஐ என்று சேர்க்க மரை ஆகிறது.  ஆக :   தாமரை.


திங்கள், 28 ஜனவரி, 2019

வேற்றுமை வித்தியாசமான கதை

வே என்ற எழுத்துக்கும் ( வேகாரம் )   வி என்ற எழுத்துக்கும்  (  விகரம் )  உள்ள ஓர் ஒலித்தொடர்பினை இப்போது கண்டு இன்புறுவோம்.

வேதம் என்ற சொல் வித் என்னும் சொல்  லடிப்படையில் தோன்றியதென்று  ஏறத்தாழ சில நூற்றாண்டுகட்கு முன் சொல்லியிருந்தனர்.  அதனை இன்றும் பலர் மகிழ்வுடன் சுட்டிக்காட்டுவதுண்டு.

வித் >  வேத்    :  வேத் + அம் = வேதம்  என்றனர்.

இவர்கள் இப்படிக் கூறக் காரணம் நாம் இங்குக் கூறியவாறு இவ்வொலிகள் திரிதொடர்புடையன என்பதே.

வேறு,  வேற்றுமை என்ற சொற்கள் தமிழில் உள்ளன.

அதே பொருளுடைய இன்னொரு சொல்:  வித்தியாசம் என்பது.

இங்கும்  வே > வி தொடர்பு நல்லபடியாகப் பளிச்சிடுகின்றது.  ஆதலின் திரிபு வகையை ஒரு விதி அல்லது முறைப்படியானது என்று சொல்வது சரியானதே.

திரிபுமுறை சரி என்றாலும் அடிச்சொல்லாகத் தரப்பட்டது சரிதானா என்பது இன்னொரு கேள்வி.  அதற்குள் நாம் இப்போது செல்லவில்லை.

வே < வி;  வே > வி. இரண்டும் முறைப்படியானவை.

வேறு > வேற்று >  வேத்து > வித்து

வேறு என்பது சொல்லின் உரு வேற்று என்று இரட்டிக்கும்: அதை வேற்றுமை என்ற சொல்லில் கண்டறிவது ஒன்றும்  கடினமில்லை.

வேற்று என்பது வேத்து என்று ஊர்ப்பேச்சில் திரியும்.  வேற்று ஆள் என்னாமல் வேத்தாள் என்று பேச்சில் சொல்வதால் இது தெரியக்கூடியதுதான். இதை அறியவும் பெரிய மூளை வேண்டியதில்லை.

வேத்து என்பது வித்து என்று மாறுவது  மேற்சொன்ன விதிமுறைகளுக்குள் அடங்கிய ஒன்றுதான்.  அதிலும் நமக்கு  ஒரு கருத்துவேற்றுமை இல்லை.

வித்தியாசம் என்பதில்   இ - யாசம் என்பவற்றைக் கவனிப்போம்.

ஆயது = ஆனது.

ஆய+  அம் =  ஆயம்   ( ஆனது )

வித்தி  என்ற முதற்படிச் சொல்பகுதியில்  வித்து என்பது வித்தி என்று மாறியது.

வித்து ஆயம் என்றால் நன்றாக இல்லை.   எச்சச் சொற்களில் வருவதுபோல அதை வித்தி  ஆயம் என்பது நன்று.   விரும்பு என்ற சொல் எச்சமாகும்போது விரும்பி என்பதுபோலும்   சொல்லு என்பது சொல்லி என்று வருவது போலும் ஓர் அமைப்பு இது.   ஆய என்பது வினைச்சார்பான அமைப்பு ஆதலின் இகரம்
பொருந்துகிறது.  வித்தி  ஆய  என்பது மிக்க நன்று.

இனி  யகரம்  சகரமாகும்.  எடுத்துக்காட்டு:  நேயம் >   நேசம்;  வாயில் > வாசல்.

இங்கு  வித்தி ஆய என்பது வித்தி ஆச என்று மாறுகிறது. அப்புறம் இவற்றைப் புணர்த்தினால் வித்தியாச என்றாகிறது.   அம் விகுதி சேர்த்தால்  வித்தியாசம் ஆகிறது.



திரிபு விதிகள் முழுமையாகப் பின்பற்றப் பட்டுள்ளன என்பதைக் கண்டு மகிழலாம். இதை முறையாக விளக்கியுள்ளோம்.


எழுத்துப்பிழைத் திருத்தம் பின். 

மற்றொரு விளக்கம்: பந்து பந்தி சிப்பந்தி.

சிப்பந்திகள் முற்காலத்தில் தனியாய்ச் செயல்படாமல் தம் வேலைத்தலைவரைப் பற்றியவாறே சென்றுள்ளனர் என்பது சொல்லாய்வின் மூலம் அறிந்ததாகும்.  எடுபிடி என்பார் போலவேதாம்.  எடுபிடிகள் ஏவுவாரை ஒட்டியவாறே நின்று உத்தரவுகளைப் பெற்றுச் செயலாற்றவேண்டும். சிப்பந்தியரும் அன்னவரே ஆவர்.

இதில் நாம் உணர்தற்கு முன்மையான சொல் பந்தி என்பதே.

பலர் இருந்து உண்பதே பந்தி.

பல் > பன் > பன் தி > பந்தி ஆம்.

முந்தி பிந்தி என்ற சொற்கள் போலவே இதுவும்.   முன் தி  : முந்தி;  பின் தி:  பிந்தி.

 மந்தி என்பதும்  அன்னதாம்.

மன் -  மனிதன் என்பதன் அடிச்சொல்.
மன் தி  >  மந்தி.   மனிதன் போன்ற விலங்கு.

பல் என்பதில் இறுதி லகர ஒற்று   -னகர ஒற்றாக மாறும்.

பல் > பன்.    இவ்வாறு சொற்புணர்ச்சியிலன்றி  சொல்லும் தனியாய் மாறும்.

எடுத்துக்காட்டு:  திறல் > திறன்.

ஆகப் பல் என்ற பன்மைக் கருத்தினின்றே பந்தி வந்துள்ளதென்பது மெய்ப்பிக்கப்பட்டது.

பண்டை நாட்களில் பந்துகள் பல கயிற்றுப் பிடிப்புகளால் உருவானவை ஆம்.
பல் >  பன் > பந்து.  இப்போது தேய்வையால் பந்துகள் உருவாகின்றன.

பல் என்பது பிடித்துக்கொள்ளுதலையும் குறிக்கும்.

பல் > பன் > பன் து  அம் =  பந்தம்.  மணவுறவுகளால் பற்றுடையராதல்.  உறவால் பலராதல்.   ஒன்றை இன்னொன்று பற்றுவதானால் அது ஒருமையில் நடவாது;  பன்மை வேண்டுமாதலின்  பந்தம் போலும் சொற்களில் பன்மைக் கருத்து உள்ளிலங்குவதாகும்.

சிப்பந்தி என்பதில் சில் பல் இரண்டுமுண்டு.  சில் என்பது சி என்று கடைக்குறை   ஆனதென்றும் கொள்ளலாம்;  அன்றிச்  சில் + பந்தி > சிற்பந்தி > சிப்பந்தி என்று திரிபென்றும் கொள்ளலாம்.  இருவழிகளும் நன்றே.

இவை முன் சற்று வேறு விதமாக விளக்கப்படினும் ஒன்றென்றே அறிக.

எழுத்துப் பிழைத்திருத்தம் பின்.

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

விகுதி இல்லாத சொல்லுருக்கள்.

சொற்களின் அமைப்பில் பகுதி விகுதி சந்தி இடைநிலை சாரியை என்று பல சொல்வர்.  இப்போது நாம் இவற்றில் எவையுமற்ற சொல்லமைப்புகள் சிலவற்றைக் கண்டு இன்புறலாமே.

எடுபிடி என்ற சொல்லைக் கவனியுங்கள்.   ஒரு சீமானுக்கு வேண்டியவற்றை அவ்வப்போது எடுத்துக் கொடுத்துக்கொண்டிருக்கும் சிப்பந்தியைத் தான் எடுபிடி என்`கின்றோம்.  எடு என்பது ஒரு வினைச்சொல். பிடி என்பதும் ஒரு வினைச்சொல். இரண்டும் சேர்ந்து ஒரு கூட்டுச்சொல்லாகி இது அமைந்துள்ளது.

கெடுபிடி என்ற சொல்லும் அன்னது.  கெடுதல், பிடித்தல் என்பனவே  இணைந்து ஒரு சொல்லாகிவிட்டது.

வருமானம் என்பதற்கு ஈடாக வரும்படி என்ற சொல்லும் வழங்குகிறது.  இதில் படி என்பது சிறு வகையினவான வரத்துகளைக் குறித்ததுபோலும்.  வரும் என்பது எச்சவினையாகும்.

இரு தொழிற்பெயர்கள் இணைப்பில் அமைந்ததே பேச்சுவார்த்தை என்ற சொல் வழக்கு ஆகும்.  பேச்சு வார்த்தை என்பன ஒரு பொருளன போல் தோன்றிடினும் அவை குறிப்பது ஒரு அலுவலகப் பூர்வமான ஓர் உடையாடலையே  ஆகும்.

பேச்சு என்பதில் விகுதி இல்லை.  பேசு > பேச்சு;  இங்கு சகரம் இரட்டித்துச் சொல் அமைந்தது, வார்த்தை என்பதில் ஐ விகுதியாகும். தகர ஒற்று இடைநிலை என்று சொல்க.  இரும்பு ஈயம் போலவே வார்த்தைகளும் வார்த்து எடுக்கப்படுகின்றன என்பதை  அறிந்துகொள்க.  வார் என்பது ஏவல் வினை. வார்த்தை :   இது வார்த்தல் என்பதன் சார்பில் அமைந்த சொல்லாகும்.

சனி, 26 ஜனவரி, 2019

அடிச்சொற்கள் மூலங்கள் வேறுபாடு.

சென்ற இடுகையில் பேதி,  பேதா என்ற சொற்களைப் பற்றி உரையாடினோம்.

இவற்றின் அடிச்சொல் பெய்தல் ( உடலிலிருந்து வெளியேற்றுதல்,  அல்லது வானிலிருந்து பொழிதல் ) எனற்பாலது உணர்விக்கப்பட்டது.

இதன் தொடர்பில் வேறு சில சொற்களையும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

பேதம் (  அதாவது  வேறுபாடு ) குறிக்கும் சொல்லும் உள்ளது.  இதுவும் பே என்ற சொல்லினின்றுதான் வருகிறது என்றாலும்  இவற்றின் மூலச் சொற்கள் வேறுபட்டவை என்பதை இப்போது புரிந்துகொள்வோம்.

பெய்தல் (  அடிச்சொல் .)

இது பெய் > பே  என்று திரிந்து பேதி, பேதா முதலிய சொற்களைத் தோற்றுவித்தது.

பெய் > பே > பேதி:  உடலினின்றும் வெளியேற்றுகை.

பெய் > பே >  பேதா :   கண்டவுடன் கழிச்சலாகிய அச்சத்தைத் தருபவன்.

இவற்றுள் இரண்டாவது குறித்த சொல் போலும் இன்னொரு சொல் "வாய்தா" என்பதாகும்.

வருவாய் தா என்பதன் சுருக்கச் சொல்லே வாய்தா.  விளைச்சலிலிருந்து அரசனுக்கு ஒரு பகுதி ஒதுக்கப்படும்.  அதைத் தருவதுதான் வாய்தா. தா என்பது ஓரெழுத்து ஒருசொல் ஆதலின் அதில் சுருக்கம் ஒன்றுமில்லை. வருவாய் என்பதில் வரு என்பது வெட்டுண்டு, வாய் என்று நின்று தாவுடன் புணர்ந்து சொல்லமைந்தது காண்க.

பேதா என்பதில் தாவென்பது தருவோன் என்று உயர்திணைப் பொருளையும் வாய்தா என்பதில் தரப்படுவது என்று அஃறிணைப் பொருளையும் குறித்ததனால் சொல்லில் இல்லாத பொருட்களைத் தழுவிய தாவென்னும் ஈற்றுச்சொல் இந்தச் சொல்லமைப்பில் இயற்சொல்லாகாது.  திரிசொல்லே.  தா என்பது ஏவல் வினையாகிக் கொடு என்பதற் கீடாய் வருமிடத்து அது இயற்சொல் ஆகும்.  இத் திரிசொற்களின் ஒரு பாதி அடிச்சொல் பெய் என்பதன் திரிபாதலின் இயற்சொல்லன்று என்பதற்கு அதுவும் ஒரு கூடுதற்  காரணமும் ஆகும்.  முடிபு இவை திரிசொற்கள் என்பதேயாகும்.

தமிழிற் திரிசொற்கள் பலவாதலின் திரிசொற்களெல்லாம் தமிழன்று   என்ற வாதம் மடமை ஆகும்.

ஆனால் பேதம் என்பதன் அடிச்சொல் வேறு.  அது பெயர்தல் என்பதன் அடிப் பிறந்ததாகும்.   பெயர் என்பது பே என்று திரியும்.   பெயர் என்பது பேர்  ( எத்தனை பேர்?  உன் பேர் என்ன? ) என்பதாய் மாற்றம் கொள்ளுதல்  பேச்சு வழக்காதலின் இப்போது:

பெய் >  பே;
பெயர் > பே;    என

இருவாறு வருதல் அறிந்து கொள்க.

அடுத்த பேபே என்ற அச்சக்குறிப்புக் கிளவியும் அடிச்சொல்லாகிப் பிற சொற்களைப் பிறப்பிக்கும்.  இப்படி அமைந்தது பே> பேய் என்ற என்ற சொல்.

பேபே என்பது மழுப்பல் கருத்திலும் வரும்:  " உனக்கும் பேபே, ங்கொப்பனுக்கும்  பேபே "  என்ற சிற்றூர்த் தொடர் காண்க.


அறிந்து மகிழ்வீர்.

பிழைகள் பின் திருத்தம்பெறும்.


கழிச்சலைத் தந்த பேதா.

தமிழ் நாட்டில் சிற்றூரில் வாழும் மக்கள்  பெரும்பாலும் அரசு அதிகாரிகளுக்கு அஞ்சி நடுங்கினோர்தாம். சங்க இலக்கியங்களில் எந்தக் குழுவினரும் எங்கேயும் போராட்டங்கள் செய்ததனைக் குறிக்கும் பாடல் எவையும் யாம் படித்ததாக நினைவில் இல்லை.  இருந்தனவெனின் அவற்றைப் பின்னூட்டம் செய்து உதவவும்.  இல்லை என்றே நினைக்கின்றோம்.

கணவன் கள்வனல்லன் என்பதை மெய்ப்பிக்க மதுரைக்கு எழுந்த கண்ணகி ஒரு தனிப் போராளியே யன்றி  அவளுக்குப் பின் ஒரு பெரிய படை திரண்டு மன்னனை எதிர்த்தல் போன்ற செய்திகளை  யாமும் கேள்விப்படவில்லை.  அக்காலத் தமிழகத்தில் போராட்டங்கள் மிகக் குறைவு அல்லது இல என்றுதான் முடிக்கவேண்டும்.

போராட்டம் மறியல் கறுப்புக்கொடி காட்டுதல் எழுச்சிப் பேரணி எல்லாம் இற்றைத் தமிழில் ஏற்பட்டுள்ள தொடர்கள்.

தமிழர்கள் பெரும்பாலும் அச்சவுணர்ச்சி கூடுதலாக உள்ளவர்கள். சாதிச் சண்டைகளை வைத்து அவர்களில் எத்தரப்பினரும் வீறு உடையோர் என்று  கூறுதற்கில்லை.  இத்தகு அச்சவுணர்ச்சி உடையோர்க்குப் பயிற்சி அளித்துப் படைநடத்தி வெற்றிகள் பல பெற்ற இராச இராச சோழன் போன்றவர்கள் வரலாற்றில் போற்றப்பட வேண்டியவர்கள்.  ஒரு சிறந்த படைத்தளபதியின் கடமை திறமை என்பன வெல்லாம் கோழைகளை வீரர்களாக்கிப் படைநடத்துவதுதான். இப்படித் திறன்பல உள்ள மன்னர்கள் தமிழருள் ஏராளமாக இருந்துள்ளனர் என்பதைப் புறம்,  சிலம்பு முதலியவை மிக்க  நன்றாக எடுத்துக்காட்டுகின்றன.

உடல்நலத்துறையினர் ஊசிபோட வந்துவிட்டால் ஓடி ஒளிந்துகொள்வோர் இன்னும் நாட்டில் உள்ளனர் என்று தெரிகிறது.

ஒரு போலிஸ்கரன் அல்லது காவல்துறைஞன் ஊருக்குள் வந்துவிட்டால் ஓடி ஓளிந்துகொள்வது இவர்கள் இயல்பு. கொஞ்ச காலத்துக்கு முன் காவல்துறைஞனுக்குப் பேதா தாணாக்காரன் என்ற பெயர்களெல்லாம் இருந்தன.  இன்று கோவிலில் நடப்பது பேதாமார் உபயம்,  நேற்று தாணாக்காரன் வந்தான் என்பன போலும் உரையாடல்கள் அந்தக் காலத்தில் மிகுதி.

அவன் வந்தவுடன் சிலருக்குக் கழிச்சல் வந்துவிடும்.  அல்லது சிறுநீரை அடக்கிக்கொள்ள முடியாமல் போய்விடும்.  அப்படிப் பட்ட அவனுக்குத்தான் பேதா என்பது பெயர்.

பெய் + தா >  பெய்தா > பேதா.  (  பெய்தலை அல்லது பேதியைத் தருபவன் )

பெய் என்பதிலிருந்தே பேதி என்ற சொல்லும் அமைந்தது.  பெய்  தி >  பேதி.  இது முதனிலை நீண்ட தொழிற்பெயர்.  பேதியாவது கழிச்சல்.

செய்தி என்பது சேதி என்று திரிந்தன்ன மாற்றமே  பெய்தி எனற்பாலது பேதி என்று திரிந்தமையும் என்று உணர்க.

தட்டச்சுப்பிழைகள் காணின் பின் திருத்தம் பெறும்.




வெள்ளி, 25 ஜனவரி, 2019

நாளைத் தமிழ் மணம்

நித்தலும்  வளரும் கருத்துகளை
நிறுத்தம் இலவாய் எழுதிடுவேன்
மெத்தவும் மகிழ்வு தருமிதனை
உத்தமம் செய்பொழு தின்றிலதே;

நேற்றும் தருணம் வாய்த்திலது
நினைப்பு மட்டும் உறுத்தியது;
காற்று வாங்கும் படிநேர்ந்த
கரிசில் பயணம்  பொருத்தமுற.

இன்றும் ஓய்ந்த வாறிருந்து
நாளைக் கருத்துகள் தந்திடுவேன்;
பொன்றாப் புகழ்சேர் தமிழ்மலரும்
பூத்துப் பொலிந்து மணம்தருமே.



செவ்வாய், 22 ஜனவரி, 2019

இல்லமொழி தமிழ்


வீதம் என்ற சொல்லைச் சிந்திப்போம்.

தமிழ் அதன் தொடக்க காலத்தில் பல குழுக்களால்பேசப்பட்டு வந்த மொழி என்றே ஒரு வரலாற்றாசிரியன் முடிவுக்கு வரவேண்டும். அந்த முடிவுக்கு அவன் வராமல் ஏதேனும் கூறுவானாகில் அவன் தேர்வில் பட்டங்கள் பெற்றிருக்கலாம்வேறுமொழிகளைக் கற்றிருக்கலாம், அவனுக்குத் தமிழ் வரலாறு  சரியாகத் தெரியவில்லை என்றுதான் பொருள்.

தமிழ் மொழியில் திரிபுச் சொற்கள் மிக்கிருந்தன என்பதே உண்மை. இதனாலன்றோ தொல்காப்பியனார் தம் சொல்லதிகாரத்தில் இயற்சொற்களுக்கு அடுத்தபடியாகத் திரிசொற்களைச் சொல்லுகிறார். அதற்கடுத்த நிலையையே வடசொல் என்று தமிழ் நாட்டு மரத்தடிகளில் வழங்கிய சொற்களைக் கூறுகிறார். வடம் என்பதற்கு உள்ள அர்த்தங்களைக் காணின் இது தெற்றெனப் புலப்படும். தொடார்பற்று வடக்குத் திசையில் வாழ்ந்த மக்களை அவர் குறிப்பிட்டார் என்று சொல்வதற்கில்லை.

தமிழ் என்பதற்குப் பற்பல சொல்மூலங்களை அறிஞர்கள் கூறியுள்ளனர். ஒரு நூற்றுக்கு மேற்பட்டவை கிட்டலாம். தமிழ் என்பது தனித்து நிற்கும் மொழி என்று கூறுவதும் உண்டு. இதற்குக் காரணம் : தமி என்பது தனி என்ற பொருளுடையதாக இருப்பதுதான். தன் என்பதிற் பிறந்த தனி என்று சிந்திப்பதைவிட தம் என்ற பன்மை வடிவிற் பிறந்த தமி என்றுதான் சிந்திக்கவேண்டும். தமி என்று எடுத்துக்கொண்டால் பன்மை வடிவானமையால் பல குழுக்களால் பேசப்பட்டு வந்த மொழி என்று கொள்ளுதல் வேண்டும். அதுவும் இக்குழுக்கள் தங்கள் இல்லத்தில் பேசிய மொழியாதல் வேண்டும். இப்படிச் சிந்தித்த கமில் சுவலபெல்லும் தேவநேயப் பாவாணரும் இதைத் தம் இல் மொழி என்று கூறினார்கள். தமில் ( தம் + இல் ) என்பதே தமிழ் என்று திருத்தமுற்றது என்'கின்றனர். இது உண்மையானால் இல்ல மொழியுடன் இல்லத்துக்கு வெளியில் வேறு மொழியும் வழங்கி வந்ததென்று பெறப்படும். அது அல்லது அவை எந்த மொழி(கள் ) என்று தெரியவில்லை, தம் என்று பன்மை வடிவிலிருந்து சொல் தோன்றியிருப்பதால் பல குழுக்களின் மொழி என்பது தானே பெறப்படுவதுடன், அவற்றுள் திரிபுகள் இருந்தன என்பதும் பெறப்படும். ஆகவே தொல்காப்பியர் திரிசொற்களை அடுத்துக் கூறியது ஏனென்பதுவும் பெறப்படும். இல்ல மொழி என்றாலே வேறுமொழிகளும் நடமாடின என்று பொருள்கொள்ள வழிவந்துவிடும்.

இதனாற்றான் விழுக்காடு குறிக்கும் வீதம் என்ற சொல் பலவாறு திரிந்தும் ஓர்முடிபு கொள்கின்றது என்பது நம் சிந்தனைக்குள் வருவதை அகற்ற முடியவில்லை. இன்னும் எண்ணிறந்த சொற்களும் இப்படியே ஆகும்.


கெடார் நாத் நகரும் கோவிலும்

கெடார்நாத் என்பது இந்தியாவில் உத்தரகாண்ட மாநிலத்தில் உள்ள ஒரு மலை நகரம் ஆகும்.  இங்குத்தான் கெடார்நாதன் கோவில் உள்ளதென்பது நீங்கள் அறிந்ததே.  இந்தக் கோவிலுக்கு யாம் சென்றதில்லை என்றாலும் சென்றுவந்த ஒரு பற்றரான நண்பரிடம் அக்கோவிலைப்பற்றிக் கேட்டறிந்திருக்கிறேன்.   தமிழ் நூல்கள்: "கற்றிலனாயினும்  கேட்க"  என்று சொல்கின்றபடியினால் போய் அறியாவிட்டாலும் இந்த சிவத்தலத்தை அறிந்துகொண்டதில்  மிக்க மகிழ்ச்சியே  ஆகும்.

கெடார் என்பது  பயிர்விளையும் நிலம் என்று பொருள்படும் என்று  கூறுகிறார்கள்.  ஆன்மிகப் பயிரை வளர்க்குமிடம் என்று இதற்குப் பொருள் கூறுவர்.  கெடார என்ற சங்கதச் சொல்லைச்  சுட்டிக்காட்டுவர்.  இச்சொல் சமத்கிருதத்துக்கு முந்திய பாகத ( பிராகிருத ) மொழிகளிலும் இருந்திருக்கவேண்டும்.  ஏனென்றால்  பாகதங்களிலிருந்தே சங்கதம்  திருத்தி அமைக்கப்பட்ட  மொழி ஆகும்.

2013ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த நகர் அழிந்து பல்லாயிரவர் மாண்டுவிட்டாலும்,  கோவில் மட்டும் அழிவின்றித் தப்பியது ஒரு வியப்பே ஆகும்.  இங்கு மந்தாகினி என்ற ஓர்   ஆறு ஓடுகிறது.  குளிர்காலத்தில் இங்கு வாழ்வோர் வேறிடங்களுக்கு  இடம்பெயர்ந்துவிடுவர்  என்று அறிகிறோம்.

கேட்டறிந்த செய்திகளைக் கொண்டு யாம் ஒரு கவிதை எழுதி வெளியிட்டோம்.  12 வரிகள் உள்ள அந்தக் கவிதையில் நான்'கு வரிகளே இப்போது நினைவில் உள்ளன.  பிற அழிந்தன.

இந்த சிவத்தலத்தைப் பற்றிய அந்த நான்'கு வரிகள் வருமாறு:

ஆதிசங்கரர் அமைகல் உடையது  கெடார்    நாத--நகர்;
ஓதி எங்கணும் பரந்தஒளிச்சிவம்   விடார்     மூத--றிஞர்
யாது வந்து  மந்தாகினி கரைப்புனல் அடாக்   கீழு---தலால்
மோதிச் சாயவும் முனைவர் அரன்'தனை    தொழார்  அமைந்திலரே

திங்கள், 21 ஜனவரி, 2019

இன்னொரு கணினியால் வரைந்த பாடல்.....

வழுக்கினுள்ளே  வைத்துவிட்டோம் வழக்கம் போலே
வண்டமிழில் இடுகைகளை எழுதும் கோலாய்
இழுக்கமிலாச் சேவைபுரி  கணினி  தானும்
எம்முன்னே  காட்டியதே வெண் தி   ரையே.
முழுக்கவதன் உள்சென்று  ஆய்ந்த போதும்
முயற்சியது பலிக்கவிலை மூளி யாமே.
இழுக்கவர மாட்டாத மாட்டைப் போலே
இன்னல்தந்த தாலிதுவே  இன்னொன் றம்மா.

சிலமணி நேரம் இணையத் தொடர்பும் கிட்டவில்லை. இனி
நல்ல நேரம்.....







ஞாயிறு, 20 ஜனவரி, 2019

வேடம்: டகரத்துக்கு ஷகரம்.

சில மொழிகளில் ட என்பதும் த என்பது ஷ என்றும் ஸ என்றும் ஒலிக்கும். இதை நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?

இதை நீங்கள் சில அன்றாடச்  சொல்வழக்குகளி   லிருந்து  அறிந்துகொள்ளலாம்.

ஒத்நீல் என்ற பெயர் ஒஸ்நீல் என்று ஒலிக்கப்பெறுகிறது.
ஒத்மான் என்று  எழுதிவைத்து விட்டு ஒஸ்மான் என்று அழைக்கிறார்கள்.

சில மொழிகளில் ஓர் எழுத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஒலிகள் இருக்கின்றன.  ஆனால் தமிழில் ஓர் எழுத்துக்கு ஓர் ஒலியே உள்ளது.  இது மொழிமரபு..

டி ஐ ஓ என் என்ற எழுத்துக்களைக் கொண்ட ஆங்கிலப் பின்னொட்டுக்கு ஷன் என்ற ஒலித்தரவு உள்ளது.  சிட்டுவேஷன் என்பதை எழுதிப் பார்த்தால் டி என்ற எழுத்துக்கு ஷ என்ற ஒலி வரும்.

வேடம் என்ற சொல் பின்  வேஷம் என்று மெருகு பெற்றுள்ளது. டவுக்கு ஷ வந்தது.   சரிதானே? சிற்றூரார் இதனை வேசம் என்று சொல்வர்.  தமிழிலும் டகரத்துக்கு  மெலித்த சகரமும்  அயல் ஒலி ஷகரமும் பயன்பாடு கண்டுள்ளன.   இது தமிழின் ஒலிமரபுக்கு ஒத்ததன்று என்பது நீங்கள் அறிந்ததே.  பிராமணரான தொல்காப்பியனாரே அதை ஒத்துக்கொள்ளவில்லை என்பர்.  வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ என்ற நூற்பாவை நோக்குக.

வேஷம் என்பது வடசொல்.  வேடம் என்பது தமிழ்ச்சொல்.  தமிழ் நாட்டில் இருக்கும்போது வேட்டி கட்டிக்கொண்டால் இங்கிலாந்துக்குப் போனவுடன் கால்சட்டை போட்டுக்கொள்ளலாம். மனிதன் அவன் தான்.  வேடம் வேறுவேறு.

சமஸ்கிருதம்  மேலைத்தரவு என்று நினைத்தால் வேடம் என்பதன் மூலம் வே என்ற தமிழே.   அது உள்நாட்டு மொழி என்பதனால் வே என்பது இரண்டுக்கும் பொதுவான அடிச்சொல் என்னலாம். ஏனென்றால் அடுத்தடுத்து வாழ்ந்த குகை மாந்தர்கள் இந்த ஒரே வே என்ற அடிச்சொல்லைப் பகிர்ந்து பேசி இருக்கலாம்.

வேடு என்பது பானையின் வாயில் கட்டப்படும் மூடுதுணி ஆகும்.  தயிர்ப்பானைக்கு வேடு கட்டிப் பூச்சி புழுக்கள் உள்ளே போய்விடாதபடி காப்பது பண்டை வழக்கம். இப்போதெல்லாம் ஒரு மூடியைப் போட்டு வைக்கின்றனர். தயிர் வந்துவிடுகின்றது.  உறைமோர் ஊற்றித்தான் அது வரும்.

வே என்பது மேல் துணியால் போர்த்துவதைக் குறிக்கும்.  அதுபின் வேய் என்று நீண்டு  வேய்தல் என்று வினைச்சொல் ஆகும்.   முடியை வேய்ந்து கொண்டவனே  வேய்ந்தன் >  வேந்தன் ஆனான். யகர ஒற்று விடப்பட்டதற்குக் காரணம் மூலச் சொல் வே என்பதுதான்.  வே என்ற அடி, சொற்களில் பதிவு பெற்றிருந்தாலும் தனிச்சொல்லாக இன்று வழங்கவில்லை. இறந்துவிட்ட பாட்டி மாதிரி ஆகிவிட்டது.

வே > வேள் என்பதும் அன்னது.  அவனுக்கு முடி இல்லை என்றாலும் ஒரு துணியைத் தலையில் கட்டிக்கொண்டுதான் அவையில் அமர்ந்தான். அதனால் வேள் ஆனான்.  வே என்ற அடிச்சொல் பல்பொருள் ஓரடிச் சொல் ஆகும்.  அதற்கு வெம்மை என்ற பொருளும் உள்ளதன்றோ?  வேளான்மை  வேட்டல் வேள்வி  வேட்பு என்பன பிற.

சீனமொழியில் ஓரெழுத்துக்கு ஒரு சொல் ஒரு பொருள். ஒரு சொல்லொலி எடுப்பிலும் படுப்பிலும் பொருள் வேறுபடும்.  ஆரோகணம் அவரோகணம் மாதிரி.   சில கூட்டுச் சொற்களும் உள.  அவ்யோங்க்  என்பது போல.  தமிழில் சொற்கள் விகுதி பெற்றுச் சமத்கிருதம்  ( குறிப்பு:   த் <> ஸ் )  போல் மிகும். இம்மிகுதியே விகுதி எனப்பட்டது.  மிஞ்சு >  விஞ்சு என்பதுபோலும் திரிபு.

வே > வேய்
வே >  வேள்
வே > வேள் > வேடு >

வேடு > வேடம்.

இன்னும் பல.  பிற பின். நன்றி.

பிழைகள் இருப்பினும் புகுத்தப்படினும் பின் திருத்தம் பெறும்.

கூஜா சொல்லமைப்பு

டகரம் அயற்றிரிபாய் ஜகரமாகு மென்பதை முன்னர் உணர்த்தியுள்ளோம்.

இது தமிழ் சங்கதத் தாவல்களில் மட்டுமின்றிப் பிற மொழிகளிலும் வரும்.

படி ( படித்தல் )   :   பஜி.

பாண்டுரங்க நாமம்
பஜி மனமே.  (பாடல்.)

இது படி அல்லது பாடு என்று பொருள்தரும்.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்:

கடை: கடைதல்.

கடை + அம் >   கடம்  > கஜம்.  (  கடைந்ததுபோலும் முகம்),   வழக்குப்பொருள்: யானை.

பிற மொழிகளில் இதுபோலும் திரிபு உண்டு.   எடுத்துக்காட்டு:

எஜ்  (  பொருள்:  நான் )  குர்திய மொழி.
எஜம் (  அவஸ்தான் )
அடம்  ( பழைய பாரசீக மொழி).   இது அகர எகரத் திரிபு,

ஆங்கிலத்தில் ஏ  ஆ இரண்டும் இடத்திற்கேற்ப மயங்கும்,

ஏப்  ( எழுத்துக்கூட்டலில் ஆப் ).

ஆ - ஏ தொடர்பு பல மொழிகளில் உண்டு.

மேஜர்  (  மெய்ஜ் அர்)    குரிதியம்
மேற்றத்  அல்லது மேட்டத்.       உருசிய மொழி.

ஹாட்யாய்  =  ஹாஜ்யாய்    தாய்லாந்து மொழி  ட் > ஜ்

இங்கு ஜ என்பது ட என்று  திரிந்தது. டவுக்கு அண்மிய ஒலிச்சொற்களும் மேலே காட்டப்பட்டன.

முன் காலத்தில் (  ஏறத்தாழ இருநூறு ஆண்டுகட்கு முன் வரை )  சிற்றூர் மக்கள் தொன்னைகளில் கஞ்சி உண்டனர்.  இவை ஓலைகளால் திறமையாகக் கைப்பின்னலாகச் செய்யப்பட்டவை.  தண்ணீர் கீழ் ஒழுகிவிடாமல் அழகாகப் பின்னப்பட்டிருக்கும்.  இவற்றைப் பொருட்காட்சி சாலைகளில் கிட்டினால் பாருங்கள்.  நமக்கு இப்படி ஏதும் பின்னத் தெரியவில்லை. காட்டுவாசிகட்கு நன்றாகத் தெரிகிறது.  பழங்காலத்தில் கூஜாக்களும் இப்படித்தான் ஓலைகளால் உருவமைக்கப்பட்டன.  கூடுபோல் பின்னினர்.  பின்னர் மண்ணாலும் பளிங்கினாலும் வெள்ளியினாலும் பொன்னாலும் செய்யப்பட்டன.  காலம் இடம் இவற்றைத் தீர்மானித்தன.

கூடு ( வினைச்சொல்)  கூடுதல். ஒன்றுசேர்த்துப் பின்னுதல்.

கூடு >  கூஜ் > கூஜா.  அல்லது கூடா  ( கூடு+ ஆ)  > கூஜா.

ஆ தொழிற்பெயர் விகுதி.   கூஜா என்பது அயலிலும் வழங்கும் சொல்.

திருத்தம் பின்
திருத்தம் பின் என்றால் எழுத்துப்பிழைத் திருத்தம்,  தன் திருத்த மென்பொருள் கோளாற்றினல்  பின்னர் வந்து சேரும் பிழைகள்,  வெளியார் தலையீட்டினால் புகுத்தப்படும் அனுமதி இல்லாத திருத்தம் என்பவைதாம்.   கருத்தில் திருத்தம் செய்யவேண்டிய நிலையைக் குறிக்கமாட்டாது.

குறிப்பு:

கோளாறு + இன் + ஆல் = கோளாற்றினால்.  கோளாறு எனில் அறிஞர் சரியென்று கொண்டதை (  கோள் ) (  அறு >) ஆறு -  அறுத்து முரண்படுத்துவது என்பது பொருள் .

மறுபார்வை:   21.11.2019ல் செய்யப்பட்டது.




சனி, 19 ஜனவரி, 2019

எமன் அமைப்பில் ( ஜனநாயகம்) மக்களாட்சிமை இல்லை!

ஒரு நாட்டில் எதிர்கட்சிகள் கூடி மக்களாட்சித் தன்மை அழிந்துவருகிறது என்று ஓலமிட்டனர்.

நாட்டில் ஒரே எமன்  இருந்தால்  அது சரியில்லை.  ஒரே எமன் எல்லாவற்றையும் முடிவு செய்வது போல இருப்பதால் மக்களாட்சி முறைக்கு அது எதிர்த்தன்மை உடையது என்று எதிர்க்கட்சிகள் முழங்கின.

எதற்கும் ஒரு மாற்று மருந்து இருக்கவேண்டுமே!

சரி, ஒரு குழுவை அமைத்து நாட்டை நடத்துவோம்.  ஒரே எமன் போய் ஒரு நாட்டை ஆளுவது போல் இல்லாமல்  எமக்குழு ஒன்று  ஆட்சியில் இருப்பதுபோல் இருந்தால் எந்த உயிரை எப்போது வாங்குவது என்று எளிதாகவே  முடிவு செய்து விடலாம்.  எல்லா உயிர்களும் மிகுந்த பாதுகாப்பாக இருக்கும்.

செய்தியாளர்களுக்கு இது மாறுபாடாகத் தோன்றியது.  ஒரே எமன் நடமாடுவதையே இப்போது  செரிமானம் செய்துகொள்ள முடியவில்லை. ஒரு குழு நடமாடினால்  எம நடமாட்டம் பல மடங்காக அல்லவோ கூடிப்போகும்?

இப்படி அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

குழு எமன்`களா  அல்லது ஒற்றை எமனா என்று பரிந்துரை செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருந்தார்கள்.

எமன் அமைப்பில் மக்களாட்சித் தன்மை இல்லைதான்.  என்ன செய்வது என்பதுதான் புரியவில்லை.  பல எமன்`கள் முறைக்கு  எப்படி வாக்களிப்பது என்று மக்களுக்கும் மருட்சியாகவே இருந்தது.

வெள்ளி, 18 ஜனவரி, 2019

சக்தி சத்தி என்பவை

இன்று   சக்தி  என்ற சொல்லின் அமைப்பை அறிந்துகொள்வோம்.

இச்சொல் தமிழில் பண்டைக் காலம் தொட்டு வழங்கி வந்தாலும்  சக்தி என்ற சொல்வடிவம்  சங்க இலக்கியங்களில் காணக் கிட்டுவதில்லை. பழந்தமிழில் சக்தி என்பது சத்தி என்றும் பக்தி என்பது பத்தி என்றும் முக்தி என்பது முத்தி என்றுமே வழங்கின.

பக்தி என்பது முன் பற்றி > பத்தி என்பதுதான்.

பற்று :  தெய்வப்பற்று.  பற்றி :  பற்றுடன் இருத்தல்.  இது பத்தி என்று திரிந்து
வழக்குப்பெற்ற போது பற்றி என்பது வழக்கிறந்தது.

பத்து  ( பற்று)  எனவே வழங்கியிருக்கலாம்  ஆனால் பத்து என்பது ஒருவிதச்
 சொறியையும் குறித்த காரணத்தால் வேறுபடுத்தப் பத்தி என்று திரியவேண்டியதாயிற்று.

முக்தி என்பது முற்று > முத்து > முத்தி > முக்தி என்பதே.
இது முது > முத்து >  முத்தி >  முக்தி  எனினுமாம்.

முத்தி என்பது  சிறுபிள்ளைகட்குப் பெரியோர் கொடுக்கும் முத்தத்தையும் குறித்ததால் முக்தி என்பது பின்னாளில் திரிந்து  இறைப்பற்று முதிர்வில் அடையும் வெற்றிநிலையைக் குறித்தது.

ஆனால் சக்தி என்பது சற்று வேறு விதமாக அமைந்தது.  எப்படி என்று பார்ப்போம்.

சக்தி என்பதன் முந்து வடிவு சத்தி என்பது.

முருகப் பெருமானுக்குச் சத்திவேல் என்றும் பெயருண்டு.

சத்தி என்பது முந்துவடிவில்  சத்து என்பது,

சத்து என்பதோ முன்வடிவில்  தத்து என்பதாம்.

தத்து என்பது தன்னுடையது என்று பொருள்படும்.

தன் து  >  தத் து > சத்து >  சத்தி >  சக்தி  ஆகும்.

தான் >  தன் :    தன் து.   அதாவது தன்னது, தன்னிலிருந்து வெளிப்படுவது.

து என்பது உடையதாதல் என்பதை உணர்த்துவது,

குழாம் > குழாத்து:   குழாமினுடையது.
உடை > உடைத்து :  உடையது.
முதல் >  முதற்று  முதலாக உடையது.   முதல் து என்பதே இது.

ஆகவே  தத் து என்பது தன்னில் இருப்பது;  ஒரு பொருளில் அல்லது உயிரியில் இருந்து வெளிப்படுவது.   உயிரி -  பிராணி.

தன் >  த  என்பது கடைக்குறை.

த + து =  தத்து > சத்து .

தகரம் சகராமாய்த் திரியும்.

தனி > சனி  (  தனித்தன்மை வாய்ந்த கிரகம்)
தம் >  சம்.    தம் என்பது பன்மை;  தம் என்பது இரண்டு அல்லது  அதற்கு மேற்பட்ட தன்-கள் சேர்ந்தது   ஆகும்.
தங்கு  >  சங்கு    (  ஓர் உயிரி தங்கி இருக்கும் கூடு)
இவ்வாறு பல உள.

தத்து சத்து என்பவற்றில் இடை வந்த தகர ஒற்று புணர்ச்சியினால் வந்தது.

அம்மனில் இருந்து வெளிப்படும் ஆற்றல் சத்தி  அல்லது சக்தி.
அதாவது அம்மன் தன்னிலிருந்து வெளிப்படுவது தன்னதாய்க் காட்டுவதும் ஆகும்.

இவ்வாறு  உணர்ந்துகொள்க.





வியாழன், 17 ஜனவரி, 2019

வன்மை பயில்வார்

நாயினைப் பூனையை வீட்டுள் பழக்கியவன்
பாய்புலி சிங்கம்பால் தோற்றானே-----சாய்வறிந்தான்
வாய்க்குச்சோ றிட்டாலும் வன்மை பயில்வாரைத்
தோய்க்குநட் பில்லை துணி. 

பாய்புலி -  வினைத்தொகை:  பாயும்புலி
சாய்வு - எப்பக்கம் எது என்னும் தன்மை
வன்மை -  வலக்காரம்  (பலத்தகாரம் )
தோய்க்கு -  தோய்க்கும். ஈடுபடுத்தும்.
அன்புத் தொடர்பில் ஈடுபடுத்தும்.
துணி -  துணிவுகொள்;  அல்லது வெட்டிவிடு
( இருவாறு பொருள் கொள்ளலாம்).
துணித்தல் :  வெட்டுதல்.

சிங்கம் :  அரிமா.
சிங்கம் பற்றிய சொல்லமைப்பு அறிய:
 https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_88.html


புதன், 16 ஜனவரி, 2019

ழகர ளகர லகரப் போலிச் சொல்

சில சொற்களில் எழுத்து மாறினாலும் பொருள் மாறுவதில்லை. இவற்றை இலக்கணியர் போலி என்று குறித்தனர். போலி எனின் போல இருப்பது என்பதே நாமறிவதாகும்.  தமிழில் போலிச் சொற்கள் போதுமான அளவில் கிடைக்கின்றன.

பழம் என்ற சொல் போலியாகப் பலம் என்று வரும்.  சென்னை நகரில் மாம்பழங்கள் மிகுதியாகக் கிடைத்த இடத்திற்கு  மாம்பழம் என்ற பெயரையே வைத்தனர்.  மாம்பழம் என்பது பழத்தைக் குறித்துப் பொருள்மாறாட்டம் ஏற்படுத்தியதால் அதை மாம்பலம் என்று மாற்றிச்சொல்லிப் பொருளில் ஏற்பட்ட குழப்படியைத் தவிர்த்தது ஒரு திறனே  ஆகும்.

பழம் என்பது பயம் என்று ஒலிக்கப்படுவதும் உண்டு.  இலந்தைப் பயம் என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள்.

மரத்தின் பயனே பழம் என்பதை உணர அதிகம் தெரியவேண்டியதில்லை. பயனாவது மரம் பயப்பது.  மரம் வெளிக்கொணரும் பொருள்.

பழம் பயம் பலம் பழன் பயன் பலன் என்று பல வடிவங்களில் இச்சொல் போதரும் என்றாலும் எழுத்தில் இப்போது பழம் என்பதே திருத்தமான வடிவம் என்று எழுதுவோரும் படிப்போரும் நினைத்துக்கொள்கிறார்கள்.  திருத்தமான வடிவம் என்று ஒன்று உலகில் இல்லை. பலராலும் இது சரி என்று ஒப்புக்கொள்ளப்படுவதே திருந்திய வடிவம்.  ஒரு சொல்லில் இருப்பதெல்லாம் வாயொலிதான்.  வாயினால் ஒன்றை உச்சரிப்பதன் தேவை பொருளைக் கேட்போனுக்கு உணர்த்துவதன்றி வேறில்லை. சொல்வதைச் சரியாக உணர்த்துவதே சொல்லின்  வேலை; அதையது செய்து வெற்றிபெறுமாயின் அது ஏற்றுக் கொள்வதற்  குரிய   தாகிவிடும்.

ழகர ஒலி இல்லாத மொழிக்குப் பழம் என்ற சொல் தாவிச் செல்லுமாயின் அது பலம் என்ற வடிவைத்தான் மேற்கொள்ளவேண்டும்.  சங்கத மொழியில் ( சமஸ்கிருதத்தில் )  ழகரம் இல்லை.  ஆகவே அங்குப் பலம் என்ற சொல்லே ஏற்றுக்கொள்ளப்படுவ தாயிற்று.  பலம் பின்னர் இந்திக்கும் அங்கிருந்து உருதுவிற்கும் சென்றது.  பலத்தின் பொருள் பழமே.

ஞானத்தை வழங்குபவன் முருகப்பெருமான்.

ஞானத்தைப் பயப்போன். 

ஞானத்தைப் பயனாகத் தருவோன்,  எனவே அவன்  ஞானப்பழம் எனப்பட்டான்.  அவனை வணங்கினால் ஞானமுண்டாம்.

அரக்கு என்பது முத்திரை இடுவதற்குப் பயன்படும் உருகுபொருள்.   அது  வெம்மையில் உருகிப் பின் குளிரில் கட்டியாகிவிடும்.  கட்டியான பின்   அது சற்றுக் கடினமான மேல்தோல்போல் காகிதம்  முதலியவற்றில் ஒட்டிக்கொள்வது.  அதனால் அது தோலி எனப்பட்டது. ----   அதன் தோலாம் தன்மையினால்.

தோலி என்பது பின் தோழி என்றும் திரிந்தது.  இந்தத் தோழி என்பது திரிபுச் சொல்.  தோழன் என்பதன் பெண்பால் அன்று,  வேறு சொல்.  இந்தத் தோலின் திரிபாகிய தோழி பின் தோளி என்றும் திரிந்தது.  ஆகவே இச்சொல்லும் முந்நிலையிலும்  தோலி -  தோழி - தோலி என்று வந்துள்ளது.  இவற்றில் எதுவும் இப்போது வழக்கில் இல்லை. பழைய நூல்களில் காணின் அறிந்து மகிழ்வீர்.

காவியம் சொல்

கவி என்ற சொல்லை முன் விளக்கியிருக்கிறோம்.

ஒரு பொருள்மேல் கருத்துகளையும் கற்பனைகளையும் கவித்துப் பாடப்படுவதே கவிதை.

-----------------------
விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்த தைப்போல்
கிளைதொறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதை எல்லாம்
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்

என்பது  கவிதை  ;  நூல்:  அழகின் சிரிப்பு.

அப்படியானால் செய்யுள் என்பதென்ன?   இதற்கு,  பவணந்தியார் கூறிய வரையறவு :  " வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்"  என்பது.  ஒளவையாரின் இந்தப் பாட்டு ஒரு செய்யுள்:

ஈதல்  அறன்;   தீவினைவிட்டு ஈட்டல் பொருள்;
காத லிருவர் கருத்தொருமித்து  -----  ஆதரவு
பட்டதே இன்பம்; பரனைநினைந்  திம்மூன்றும்  
விட்டதே பேரின்ப வீடு.

கவிதைகளால் ஆக்கப்பட்ட பெருநூல்  காவியம்.

கவி + இயம் =  காவியம்.   

முதனிலை திரிந்த தொழிற்பெயர்.  முதனிலை நீண்டது காண்க.

பாடம் என்பதும் முதனிலை நீண்ட சொல்:

படி + அம் =  பாடம்.  படி என்பது பாடி என்று திரிந்து,  இகரமிழந்து பாட் ஆகி, அம் சேர்ந்து பாடம் ஆனது.

முன் காலத்தில் பாடங்களெல்லாம் பெரும்பாலும் பாடல்களாக இருந்தன.  அவற்றை அவர்கள் இராகம் போட்டுப் பாடி ஒப்புவித்தார்கள்.  ஆசிரியர்களும் பாடியே சொல்லிக்கொடுத்தார்கள்.  திரு வி க அவர்களின் காலத்தில் இவ்வழக்கம் குறைந்தது,  தம் நூலில் அவர் பாடியே படிக்கவேண்டும் என்றார்.

படித்தல் என்றாலே பாடுதல் என்ற பொருளும் உண்டு.

உன்ன நெனச்சேன்
ஒரு பாட்டுப் படிச்சேன்

என்ற திரைப்பாடலில் படிச்சேன் என்ற சொற்பயன்பாடு காண்க.

பாடு+ அம் = பாடம் என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆகவே காவியம் என்ற சொல் முதனிலைத் திரிபு ஏற்ற சொல் என்பதுணர்க.






செவ்வாய், 15 ஜனவரி, 2019

சங்கத வரலாறும் சில சொற்களும்.

நீங்கள் தட்சிணாயனம் உத்தராயனம்  என்ற இருசொற்களையும் பற்றி  அறிந்திருப்பீர்கள். இவை செந்தமிழ்ச் சொற்கள் என்று எவரும் கூறார்.  சங்கதச் சொற்களே.  ஆனால் சங்கதத்தில் உள்ள சொற்றொகுதியை ஆய்வுசெய்த பிரஞ்சு ஆய்வாளர்களும் குழுவினரும் (டாக்டர் லகோவரி குழுவினர் )  மூன்றில் ஒருபகுதி திராவிடச் சொற்களை உடையது சங்கதம் ( சமஸ்கிருதம் ) என்றனர்.  இன்னொரு மூன்றிலொன்று வெளிநாட்டுச் சொற்கள்.  மீதமுள்ள மூன்றிலொன்று  அறிதற்கியலாத பிறப்புடையவை என்றனர். இந்த முடிபு மனத்துள் நிற்க, மேல் நாம் கண்ட சொற்களை அல்லது கிளவிகளை நுணுக்கி நோக்கினால் இவை தமிழ் மூலமுடையன என்பது தெற்றெனப் புலப்படும். சங்கதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்று வகைப்படுத்தப்பட்டிருப்பினும் வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பாரின் கூற்றுப்படி அதிலுள்ள வெளிச்சொற்கள் இந்தியாவில் வழங்கிச் சங்கதத்தினால் மேற்கொள்ளப்பட்டவை என்று முடிக்கின்றார்.  இவை அதனுள் இருத்தலினால் ஆரியர் என்போர் வந்தனரென்றோ சங்கதம் வெளிநாட்டினின்றும் கொணரப்பட்டதென்றோ கூறுதற்கில்லை என்று முடிவு செய்கின்றார்.இவை சரியான முடிவுகள் என்று யாம் உடன்படுவோம்.  ஆரியர் திராவிடர் என்ற சொற்களும் இனங்களைக் குறிப்பவை அல்ல. பல வெளிநாட்டினர் இந்தியாவிற்குப் பல காரணங்களால் வந்திருக்கலாம் எனினும் அவர்கள் ஆரியர் அல்லர்; மற்றும் ஆரியர் என்பதும் ஓர் இனப்பெயர் அன்று. ஆரியம் என்பது மொழிக்குடும்பத்தின் பெயர்; திராவிடம் என்பதும் ஒரு மொழிக்குடும்பத்தின் பெயரே.  சமஸ்கிருதம் என்னும் சங்கதத்தின் முன்னோடி மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் வழங்கின.  அவை பரவலாக மக்கள் பேசிய மொழிகள்.  அவற்றுக்குப் பாகதங்கள் ( பிராகிருதங்கள் )  என்று பெயர்.  சங்கத்தின் பிற்பட்ட மொழிகளும் பாகதங்கள் என்றே சொல்லப்படுகின்றன.  பிற்பட்ட பாகதங்கள் பல சங்கதச் சொற்களை உள்வாங்கியவை.

சங்கதம் வெளிநாட்டு மொழி என்பதற்கான ஆதாரங்கள் எவை?  ஒன்றிரண்டு கூறுவோம். யானைக்குப் பெயர் சங்கதத்தில் இல்லை.   கடைந்ததுபோன்ற முகமுடையது என்று அதற்கு ஒரு காரணப் பெயரைச் சங்கதம் கையாளுகிறது.  கடைதல் வினைச்சொல்.  கடை >  கட + அம் = கஜ + அம் = கஜ என்று சொல்லமைகிறது.  மயிலுக்குப் பெயர் சங்கத்தில் இல்லை:  அதற்கும் ஒரு காரணப் பெயர் அங்கு வழங்குகிறது   :   மயில் :  மயூர.    இதை மை போன்ற புள்ளிகள் ஊர்கின்ற இறகுகளை உடைய பறவை என்று தமிழில் சொல்லி,  மை ஊர என்று ஒலித்து,  மயூரம் என்று முடித்தால் அது எந்த மொழியின் மூலங்களை உடையது என்று தெரியாதவனுக்கும் தெரிந்துவிடும்.
ஆரியர் தோன்றிய இடம் என்று கருத்துரைக்கப் பட்ட உருசியப் பகுதிகளில் இந்த விலங்குகள் பறவைகள் இல்லை; ஆகவேதான்  சங்கதம் வெளிமொழி என்று ஐரோப்பிய அறிஞர்கள் முடிவுசெய்து அது வெளிநாட்டது என்றனர்.
சங்கதம் உள் நாட்டு மொழியாய் இருந்தாலும்   மயிலும் யானையும் பற்றிய கிளவிகளுக்குத்  தமிழ் போன்ற மொழியிலிருந்து சொற்களைப் பெற்றிருக்க முடியும்.  அல்லது தமிழுக்கு இவற்றைத் தந்திருக்க முடியும்.  ஆகையால் இதுபோலும் காரணங்கள் முடிவானவை அல்ல என்பதை உணர முடியும்.  சொற்றொகுதிப் பரிமாற்றம் என்பது உள்நாட்டு மொழிகளிலும் நடைபெறும்; வெளிநாட்டு மொழிகளிடையிலும் நடைபெறும்;  உள்ளிருக்கும் மொழிக்கும் வெளிமொழிக்கும் இடையிலும் நடைபெறும்.  இவற்றை வைத்து ஒரு தெரிவியலை ( தியரி )  உண்டுபண்ணுதல் பொருந்தாதது காண்க.

இனிச் சொற்களுக்கு வருவோம்:

உ :  முன் அல்லது மேல்.  தரம் :   தரு+ அம்.  அ:   அங்கு;   அன்: இடைநிலை; அம் :  விகுதி.  இவற்றைப் புணர்த்த,  உ + தர + அ + அன் + அம் = உத்தராயனம் ஆகிறது.  உத்தரம்:  காரணப்பெயர்.  உயர்ந்த திசையென்பது பொருள். காரணப் பெயர்.   ஒன்றிலிருந்து பெறப்படுவதே தரம்:  அது தரும் மதிப்பு நிலை: தரம்.
உத்தரமாவது உயர்ந்த திசை தருவது ஆகும்.  வடக்கு.

தெற்கணம் :  தெக்கணம் > தெட்சிணம்.>  தட்சிணம்.

தட்சிண +  அ + அன் + அம் =  தட்சிணாயனம்.

உத்தரம் தட்சிணம் என்பவை தமிழ் மூலங்கள்.

கண் என்பது இடம் என்றும் பொருள்படும்.  இதன் `கண்,  அதன்,கண் என்பவை இங்கு அங்கு என  இடப்பொருள் தருபவை.   கண் > கணம்:  இடம்.  தெற்கணம் : தென்திசை.  கண் என்பது ஓர் உருபுமாகும்.

மற்றவை பின்.  அறிக மகிழ்க.

திருத்தங்கள்;  பின்னர்.


Hackers

Dear Readers  Please note that hackers have entered the website and made changes to text in various posts.  This is being corrected but will take time.   Inconvenience caused is regretted.

வசதிக் குறைவுகள் ஏற்பட்டமைக்கு வருந்துகிறோம்.
கள்ளப் புகவர்கள் புகுந்து பல மாற்றங்களைச் செய்துள்ளனர் என்று அறிகிறோம்.

இவற்றை ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்துத் திருத்தவேண்டும்.

காலம் தேவை.

பிழை கண்டவிடத்துத் திருத்தி வாசித்துக்கொள்ளுங்கள்.

சனி, 12 ஜனவரி, 2019

உத்தரவும் உதையமும்.

உதயம் என்ற சொல் தமிழ் மூலமுடைத்து. எங்ஙனம் என்பது காண்குவம்.

உ  -  முன்பக்கத்தில் எழுதல்.  மேலெழுகை. இன்னும்   இதற்குப் பல பொருள்கள் உள என்பதை மறத்தலாகாது.

து  .  உடைமைப் பொருள் அல்லது உடையது என்று பொருள்படும் விகுதி.

தமிழ் இதனை உலகினுக்கே தந்துள்ளது. தமிழ் முன் தோன்றிய மூத்த குடியினர் மொழி.  அதனால்தான் உலகிற்கு அளிக்க முடிந்தது.  இது நம் பெருமைக்குரியது ஆகும்.

" இட் "  என்ற ஆங்கிலச்சொல்.  இட் என்ற இலத்தீன்,

It is    என்பது      id est   என்று இலத்தீனில் வரும்.  இதுதான் சுருங்கி  i.e.,  அதாவது என்பதற்கு ஈடாகப் பயன்பாடு காண்கிறது.

து >< த்.    து என்பதில் உகரம் சாரியை.  உண்மையில் சாரியை விலக்கி நோக்குவோமாயின் இது என்பது இத் என்பதே.    ஒரு சொல்லினைச் சார்ந்து இயைந்து வருமொலியே சாரியை.

இப்போது து என்னாமல் த் இட்டுக்கொள்வோம்.

உ + த் + அ +  அம். இதன் விளக்கம்:     முன்னிலையில் ( உ)    ;  த்   =  அது;     அ =  அங்கே;   அம் ( எழுகிறது )   என்று வாக்கியமாக்கி இன்புறுக.  அதுவே உதயம்.

பெரும்பாலும் ஒன்றை உதைக்கும் போது கால் முன் சென்று தொடும்.
உது > உதை:  தெரிகிறதன்றோ.    உ + த் + ஐ  என்றும் விளக்கலாம். ஐ:  கீழே காண்க.

ஊருதல் என்பதும் நகர்தலும் ஏறுதலும் குறிக்கும்.   ஊ என்பதும் அதன் குறுக்கமான முன்னிலைச் சுட்டு உ என்பதும்  முன் பக்கல் எனற்பொருட்டு.
பக்கல் = பக்கம்.   ஊ உறுதல்: ( இக்கால வழக்கில் சொல்கிறோம் ).   ஊ உறு > ஊரு(தல்).

சுட்டுக் கருத்துகளைக் குறித்துக்கொள்ளுங்கள்.

உதையம் என்பது சுருங்க,   உது + ஐ + அம் என்றும் விளக்கலாம்.  ஐ என்பது மேல் .  இது குறுகும் என்று தொல்காப்பியம்  உரைக்கிறது.  ஆகவே  ஐ > அ.
ஆகவே உதையம் உதயம் ஆகிறது.

இதில் ஐயமொன்றும் காணேன் ஐயனே.

இந்திய மொழியாகிய சங்கதத்தை இந்தோ ஐரோப்பியம் என்று கூறும் ஐரோப்பிய  ஆய்வாளர்கள் ஒருபுறம் நிற்க.   அதன் பல சொற்கள் ஐரோப்பியத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டன.  கடன் ஒன்றுமில்லை. திருப்பிக் கொடுக்கமாட்டார்கள்.

உ என்பது பலமுறை விளக்கப்பட்டுள்ளது.  உ = முன் (உள்ளவர்).  தரவு > தருவது.  படை நடத்துபவர் பெரும்பாலும் முன் செல்வர்.  அவர்கள் தருவது உத்தரவு.   சில வேளைகளில் பின்னிருந்து ஆணைகளைப் பிறப்பிக்கலாம் எனினும் முன்னின்று கட்டளை வழங்குவதே பெரும்பான்மை.  இந்தப் படைச் சொல் பின் பொதுவழக்கில் வந்துவிட்டது. என்றாலும் அதிகாரத் தரவையே குறிக்கிறது.

மேலிருப்பதற்குத் தாங்குதல் தருவது உத்தரம்.   தரு > தரம்.  உ என்பது மேல் என்றும் பொருள்படும்.

நீ  உன் என்பவற்றில் உ என்பதிலிருந்தே உன் வருகிறது.   இப்போது இது
தெளிவுபட்டிருக்கும்.

திருத்தம் பின். தட்டச்சுப் பிழைகள்:  தன் திருத்தப் பிழைகள்.
திருத்தம் செய்யும்வரை திருத்திக்கொண்டு வாசித்தல் -  நன்றி.