செவ்வாய், 30 நவம்பர், 2021

கருவி, கருத்து, கரு>கார், காரணம், காரியம்.

 இந்தச் சொற்களைப் பற்றிச் சிந்தித்துச் சிலவற்றைப் பெற்றுக்கொள்வோம்.

சிந்தனையிலிருந்து ஒன்றைப் பெற்றுக்கொண்டால், அதைச் சிந்தனைப் பேறு அல்லது சிந்தனைச் செல்வம் என்று குறிப்பிடலாம்.  ஒருவர் பெற்று மகிழத் தக்க பான்மைப் பொருளைத்தான் ( சிந்தனைச்) செல்வம் அல்லது (சிந்தனைப்) பேறு என்று சொல்கின்றோம்.  அரிசியை ஆக்கினால்தான் சோறு கிட்டுகிறது; அதைப் போலவே, சிந்தனை செய்தால்தான் அதிலிருந்து பெறத்தக்க நல்லது எதாவது கிடைக்கும்.

உலகின் பொருட்கள் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. வேறு எந்த நிறம் உடையதானாலும், அதை அடுப்பில் வைத்து எரித்தவுடன், அது சற்றுக் "கருவல்" நிறத்தை அடைந்துவிடுகிறது. கருமயிர், கருமணி, கருமுரல் முதலிய சொற்களிலும், கருப்பன் என்ற சொல்லிலும், கருமை நிறமே குறிக்கப்படுகிறது. ஆனால் கருவலி என்பது மிகுந்த வலிமை என்று பொருள்படுகிறது: ஆதலின் இங்கு கரு என்ற சொல் மிகுதி குறிக்கிறது. கருமான் என்பது கொல்லனைக் குறிப்பதுடன், கலைமான், பன்றி என்ற பொருள்களையும் தருகிறது. கருமாயம் என்றால் அதிகவிலை என்று பொருள். கருப்பூரம்   என்பது நீருக்கும் நெல்லுக்கும் பெயராதலுடன்  கற்பூரத்தையும் குறிக்கிறது.  எனவே,  "கரு" என்ற சொல் முன்னிணைந்துவிட்டால், அது கருப்பு நிறத்தைத்தான் குறிக்கவேண்டுமென்பதில்லை.

முன்னைய ஆய்வுகளின்படி, கள் என்பது கறு என்பதன் மூலம்.   கல் என்பது கரு என்பதன் மூலம். இதைப் பின்புலமாக வைத்துக்கொண்டே நாம் சொற்கள் பலவற்றுக்குள் புகுந்து வெளிப்பட்டிருக்கிறோம்.

கரு என்பது கார் என்று திரியும்.  கார்முகில் -  கருமுகில் அல்லது கருமேகம். இவை  நிறம் குறிப்பன.  ஆனால் கரு> கார்> காரியம் என்பதில் செயல் குறிக்கப்படுகிறது.  கரு> கார்> காரணம், காரணி என்பவற்றில்,  செயலே உள்ளுறைவு ஆகும். நன்னூலில் "கருவி காரியங் கருத்தன் "(நன். 290). என்ற  நூற்பாவில் அன் விகுதி பெற்ற வடிவம் வருகின்றது.  இது கருத்தா என்று பொருடருவதே. உந்துவன் (நல்லுந்துவன் ) என்ற வடிவில் அன் விகுதி வருதல் போலும் இக் கருத்தன்.  நிலா என்பது ஆ விகுதி பெற்றுவருதல் போலும் கருத்தா.  அர் விகுதிக் கருத்தர் என்ற வடிவும் உளது.  இக் கருத்தன் எனற்பாலதற்குச்  "செயலோன்"  எனற்பாலதே பொருளாகும்.

கருத்தல் என்ற வினை எங்கும் கிட்டவில்லை என்று ஆய்வாளர்கள் சொல்வர்.  இவர்கள் தேடிப்பார்த்தவர்கள்.  கரு + அணம் >  காரணம்,  இது எவ்வாறு எனில், ஒரு+ உயிர் > ஓருயிர் என்பதுபோலுமே திரிபன்றி வேறில்லை. ருகரத்தின்முன் உயிர்வர, முதனிலை நீண்டது காண்க.

கருவி என்பது எந்த நிறத்திலும் இருக்கலாம், கருத்துக்கு நிறம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. காரணம், காரியம் என்பவற்றில் கருமை ஏதுமில்லை.

கரி என்ற சொல்லும் உள்ளது.  இது எரிகையில் கருநிறம் அடைந்த மரக்கட்டையைக் குறிக்கும்.    கரு + இ = கரி என்பது சரியாக வருகிறது.  இங்கு கரு என்பது கருநிறம் குறிக்கிறது.

கரி என்பது கருமை நிறமுள்ள, முழுமையாய் எரிந்துவிடாத மரப்பொருளைக் குறிக்கிறது.  கருப்பாய் உள்ளமையால் பன்றிக்கும் யானைக்கும் கருமான் என்ற பெயர்.  கருமான் என்ற கொல்லன்பெயரில் மான் என்பது மகன் என்பதன் திரிபு.  யானை பன்றி என்பன குறிக்குங்கால் மா ( விலங்கு) என்ற சொல்லின் கடைமிகையே "மான்".  இதற்கு எடுத்துக்காட்டு:  கோ(த்தல்) >  கோர்(த்தல்).  கோர் என்பது மறுக்கப்பட்ட வடிவம்.

ஆனால் கரு என்பது சரு என்று திரியும்.  எடுத்துக்காட்டு: 

சருக்கம் என்பது படைப்பு என்று பொருள்படுகிறது.  அதாவது செய்யப்பட்டது.

சரு>  சார் > கார் என்று திரிதல் கூடும்.

ஆர்தல் என்ற வினை சார்தல் என்றும் திரியும்.  ஆர்தல் செய்தல், நிறைதல் என்ற பொருளில் வரும்.  அரு என்பதும் ஆர் என்று திரியத்தக்கது.

அரு> கரு>< சரு.

ஆர் > கார் >< சார்.

உயிருடன் இருந்த ஒருவன் மறைவு எய்திவிடினும் அவன் வாழ்ந்ததற்கான சான்றாக அவன் விட்டுச்சென்றவை இருத்தலேபோல்,  சரு, அரு, சார், ஆர் என்பன வாழ்கின்றன.  ஆதலின் முன் இருந்த ஆய்வாளர்கள் கரு என்பது மறைந்த வினைச்சொல் என்று மொழிந்தமையின் ஏற்புடைமை அறிந்து மகிழற் பாலதே.

எழுதருகை என்ற  மீட்டுருவாக்கத்திலிருந்து எச்சரிக்கை  என்ற தமிழ்ச்சொல் வந்ததாக முன்னர் மொழிநூலார் கூறியுள்ளனர்.  எழுதருகை போல,  கரு, என்ற மீட்புரு இனிய ஆய்வே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

 


கருத்துகள் இல்லை: