புதன், 24 நவம்பர், 2021

பிறக்கிணை - பிரக்ஞை

 நன்றாக இருந்த ஒருவன் மயக்கம் அடைந்துவிடுகிறான். மயக்கம் தெளிந்தவுடன், முன்னிருந்த இணையான நிலையை அடையும்போதுதான், "பிறக்கிணை"  திரும்பிவிட்டது என்று சொல்கிறோம். அதாவது,  பிறகு இணையான நிலை. 

இந்தப் பிறகு இணை என்ற தொடர் திரிந்து, பிறகு இணை > பிறக்கு இணை> பிறக்கிணை ஆயிற்று. பிறக்கிணை என்று சொல்லாமல் "பெறக்கண" என்போரும் உண்டு.

இது அயற் கற்பனை க்கு எட்டியவாறு, "பிரக்ஞை" எனப்பட்டது.  இதிலும் ஒரு திறமை இருக்கத்தான் செய்கிறது. இணை என்பது,  க் இணை > கிணை > ஞை ஆயிற்று.

எந்த மொழியாயினும், நிலைமைக்கு ஏற்றவாறு புதிய சொற்களைப்படைத்துக்கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் முன்னேற்றம் இல்லை. ஒரே சொல்லாக ஆக்க முடியவில்லை யென்றால், ஒரு சொற்றொடராகவாவது அமைக்கவேண்டியது கடமை.  "air filter" என்ற சொற்றொடர்போல. மொழிகளின்  மூலம் புதிய கருத்துகளுக்கு உருவம் கொடுப்பது அத்தகையது.

மயக்கத்துக்குப்பின், அல்லது மயக்கத்திலே இருக்கும்போது இன்னும் நலமாகத் திரும்பாத நிலையில் அவன் "பிறக்கிணை" இழந்துவிட்டான் என்பர். இதன்பின் உடன் நினைவிழந்த நிலையும் அதே சொல்லால் குறிக்கப்பட்டது. அதற்கு ஒரு தனிச்சொல் ஏற்படவில்லை.  ஒரே சொல் போதுமானதாகும்போது, இன்னொரு சொல் தேவைப்படாது.   சிறுசிறு மாற்ற நிலைகளுக்கும் அதே சொல் போதுமானதாக இருக்கும்.

பூசாரிகள் சேவைக்கு  இணையாக வழக்கப்படி ஏதேனும் வழங்குவதும் மக்களிடை காணப்படுவது ஆகும்.  அவர்களுக்கு மரியாதை அல்லது பணிவு தரும் வண்ணம் " தக்க இணை" வழங்கவேண்டும்.  இதுவே,  "தக்க இணை"  ஆகி,  தக்க இணை > தக்கிணை > தட்சிணை ஆனதும் காண்க.

பக்கம் >  பட்சம்,

பக்கி >  பட்சி 

ஆனவையும் காண்க.  இவைபோல்,  தக்கிணை > தட்சிணை ஆகும்.  ஆனால் பிறக்கிணை இவ்வாறு திரியவில்லை.

இலையில் இட்டதை உண்பதே " நாகரிகம்''  அல்லது ஏற்புடைய நெறி என்னலாம்.  நேராகச் சட்டியிலிருப்பதையே போய் எடுக்கக்கூடாது என்று அம்மா சொல்வார்கள். அதைப்போல "ஊரிய"  அல்லது கிராமத்து வழக்குகளை  ஒப்பிடலாகாது என்று நினைக்கலாம்,   இலையிலிருப்பது சட்டியிலிருந்துதான் வந்தது என்று மெய்ப்பிக்க வேண்டிய நிலை உருவாகும்போது சட்டியையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது ஆய்வோன் கடனாகிறது.  இதற்கு ஏன் கவலை கொள்வது?  சிலருக்கு "ஊரிய" வழக்குகளில் உண்மையைக் கண்டெடுக்க  முடியவில்லை போலும்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

கருத்துகள் இல்லை: