திங்கள், 8 நவம்பர், 2021

திரவநிலை

 நில் என்பது ஒரு வினைச்சொல்.  கால் இருக்கும் இடத்திலிருந்து நகராமல் அவ்வாறே (உட்காராமல் கிடக்காமல் ) இருபதைத்தான் நில் என்ற வினைச்சொல் குறிக்கிறது. நில் என்ற சொல்லைப் பல பொருட்சாயல்களில் பயன்படுத்தலாம்.  இதை  எழுத்துமொழியில் அவ்வளவு விரிவாகப் பல சாயல்களில் பயன்படுத்துவதில்லை.  " அவர்களின் வீட்டில் ஏழு பசு(க்கள்)  நிற்கின்றன"  என்பர்.  இவ்வாறு சொன்னால், " நின்றுகொண்டேதாம் இருக்கின்றனவோ., படுப்பது தூங்குவது எல்லாம் இல்லையோ?"  என்று சொல்வாருண்டு. (இதை ஒரு கேள்வி என்று கொள்வதற்கில்லை ). பசுக்கள்  நிற்கின்றன என்றால்,  அங்கு அவை வளர்க்கப்படுகின்றன என்று பொருள்.  எனவே, பேச்சுத்தமிழ் நில் என்ற சொல்லை குறுகிய பொருளில் எடுத்துக்கொள்ளவில்லை என்று இதன்மூலம்  அறியலாகும். பல்பொருளும் பல்பொருட் சாயல்களும் உள்ள ஒரு சொல்லை, குறுக்கிப் பொருள்கொள்வது தவறாகும்.  நிற்க என்று கடிதத்தில் எழுதினால் எழுந்து நிற்க வேண்டு மென்பது பொருளன்று.

எழுத்தில் உள்ளவையெல்லாம் சரியானவை என்றோ பேச்சில் உள்ளவை எல்லாம் தவறானவை என்றோ கொள்வதற்கில்லை.  ஒவ்வொன்றையும் ஆய்ந்துதான் முடிவுசெய்யவேண்டும்.

நிலை என்ற சொல்  நில் + ஐ என்று விகுதி பெற்று அமைந்த சொல்.  உலகிற்  பொருள்கள் காற்றுப்போலும் நிலையிலோ ( வாயு),  கட்டி போலும் நிலையிலோ ( திடப்பொருள் ) , திரவநிலையிலோ ( நீர்போலும் )  இருக்கும். இவற்றுள் 

திரவநிலை என்பதைப்  பார்ப்போம்.

இம்மூன்று வகைப்  பொருள்களில்  நீர்தான் திரண்டுவந்து அலையாகிக் கரையில் மோதுவதை மனிதன் முதன்முதல் அறிந்துகொண்டான்.  பின்பு காற்றும் இவ்வாறு திரண்டு புயலாவது கண்டுகொண்டான். தமிழில் அமைந்து கிடக்கும் திரட்சிக் கருத்துச் சொற்கள் பெரும்பாலும் நீர் பற்றியவையே ஆகும். இவற்றில் பலவும் நீரியன்மை தழுவிய சொற்கள்

திரள்,  திரள்தல்,  ( வினைச்சொற்கள் ).

திர என்பது அடிச்சொல்.  திர் எனினுமாம்.

திர + அள் =  திரள்.

திர + ஐ  =  திரை  (  அலைத்திரட்சி )

திர +  வ் + அம் = திரவம்  ( வகரமெய் --உடம்படு மெய்).

திர + ஆ + அகம்=  திராவகம். ( சில மருந்துச் சரக்குகள் திரட்சியாகிக் கரைந்து  உள்ளிருக்கும் நீர் ),  ஆ என்பது ஆகுதல் வினை.  வகர மெய்  -- உடம்படுமெய் ).

திரள்வு + அகம் > திரவகம் (  ள் கெட்டது) >  திராவகம் ( திரிபு)  என்றும் விளக்குவதுண்டு. எவ்வாறாயினும் ஒன்றுதான்.

திர -  திரு.  ( திரட்சி).  மதிப்புத் திரட்சியும் ஒப்புமையுடைய கருத்தே.

திர -  திரி  ( மாறுபட்டுத் திரளுதல் )

இன்னும் உளவெனினும் அடுத்துக் கிட்டும்  வாய்ப்புகளில் உரையாடுவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.








 

கருத்துகள் இல்லை: