புதன், 7 செப்டம்பர், 2016

பூக்காரியைச் சுட்டிய புறநானூற்றின் இனிமை

https://sivamaalaa.blogspot.my/2016/09/blog-post_7.html

குறித்த முன் இடுகையைத் தொடர்ந்து:

நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாணுடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மினும் பேரெழில் இழந்து வினை எனப்
பிறமனை புகுவள் கொல்லோ
அளியள் தானே பூவிலைப் பெண்டே.


இப்போது என்ன நடந்தது?   மறவர்களை நோக்கி ஓர் இனமானம் காக்கும்
ஏவலன்றோ வீசப்பட்டது?  பகை அழிக்கப் போருக்குப் புறப்படு என்ற ஆணையன்றோ அந்தத் தண்ணுமையால் எறியப்பட்டது? இது நன்கு வெளிப்படும்படியாக: 'குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை" என்று புலவர் இனிமை தோன்றத் தெளிவிக்கிறார்.  ஆகவே இதிலேதும் இரங்கலுக்கு இடமில்லை என்பது முன்வரு குறிப்பாயிற்று.  குறும்பர் -  மறவர் . குறு  என்ற இக் குறுமைச் சொல்  அடித்தளப் போர்மறவரைக் குறிக்கும் பொருள்பொதிந்த சொற் பயன்பாடு.  அவர்களே நாடு காவலர்கள் .


இந்தத் தண்ணுமைத் தட்டொலி இரக்கத்தையா வரவழைக்கிறது?  யாருக்கு
அந்த இரக்கம் வேண்டும்? போருக்கு அஞ்சியவர்களாய் வாழ்ந்து சாகும்
நாணுடை மாக்கட்கு அது வேண்டும்!  மக்கட்கு அன்று,  அந்த மாக்கட்கு!
அவர்கட்கு வேண்டுமானால் இது இரங்குதலைத் தரும்.  எமக்கன்று, யாம்
மறக்குலத்து மாது என்பது தோன்ற: " நாணுடை மக்கட்கு இரங்கும்" என்றார் புலவர்.


எப்போதும் பூச்சூடிக் கொள்பவள். இன்று அது சூடவில்லை. தன் அழகில்
கொஞ்சத்தை அவள் இழந்துவிட்டவள்தான்.அழகிய மலர்கள் சூடி மணச்சாந்துகள் இட்டுக் கணவன்முன் நின்றால் அழகு அழகுதான். ஆனாலும் என்ன? போருக்குப் புறப்பட்ட கணவனைக் கண்டு உள்ளம் பூரித்து அது முகத்திலும் கண்களிலும் வெளிப்பட்ட அந்த அழகு அந்த இழப்புக்கு ஈடு செய்யவில்லையோ?  "அதனால் யாம் இழந்தது சிறிதே. எம்மினும் மிகுதியாய் தன் பேரெழில் இழந்து, என்ன வினை ஆகிவிட்டது என்று நொந்துகொண்டு இன்னொரு வீட்டுக்குள் புகுந்து பூவிலை கூற முனைகிறாளே,,, அவள் இழந்தது அதிகம்; அதிகம். இன்று பிழைப்பே அவளுக்குக் கேள்விக்குறி ஆகிவிட்டதே! வினை ஆகிவிட்டதே. பாவம் பாவம் அவள்தான் பாவம் என்கிறாள் இம்மறவர் மாது. யான் இரும்பு வருக்கத்துப் பெண் என்கிறாள் இவள்.


 ஆயின்
எம்மினும் பேரெழில் இழந்து வினை எனப்
பிறமனை புகுவள் கொல்லோ
அளியள் தானே பூவிலைப் பெண்டே.

என்பதைப் பாடி இன்புறுக.






கருத்துகள் இல்லை: